Showing posts with label letters. Show all posts
Showing posts with label letters. Show all posts

Wednesday, September 15, 2010

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்-


அன்பான இந்தியப் பெருங்குடி மக்களே,

கடவுள்,மதம்,மொழி போல ஜாதகமும் யாரால்,எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட
முடியாது .இது சமுதாய நலம் கருதிய மக்களின் கற்பனைப்
படைப்பே அன்றி அறிவியல் கலந்த கண்டுபிடிப்பில்லை.
பொய் என்று தெரிந்தும், பொய்யான ஒன்றை நம் முன்னோர்கள் வலுக்கட்டாயமாகப் போதித்து வந்திருக்கின்றார்கள் என்றால்
அந்தப் பொய்யில் எதோ ஒரு மெய் பொதிந்திருக்கவேண்டும் .
மெய்யை மறைத்துவிட்டு பொய்யை மெய்யாக்கி காட்டியதற்குக்
காரணம் சமுதாய நலனே .எண்ணங்களின் ஆதிக்கத்தினால்
சோர்வுற்ற உள்ளங்களின் உணர்வுகளைப் புதுப்பித்து மீண்டும்
இயல்பாக வாழத் தூண்டுவதற்காக நம் முன்னோர்கள்
கண்டுபிடித்த வழி முறைகளுள் ஒன்றே ஜாதகம் . சாப்பிட
அடம் பிடிக்கும் தன குழந்தைக்கு வான வீதியில் நீந்தி ஓடும்
நிலாவை ஒரு விளையாட்டுப் பொருளாகக் காட்டி ஊட்டும்
தாயின் அதே மனப்போக்குத்தான் இதிலும் வெளிப்படுகிறது..சின்ன அனுகூலம் கூட மலையளவு நம்பிக்கையும் ,மனதில் தைரியமும் ஏற்படுத்தும் என்ற உளவியல் கோட்பாடு
இது போன்ற அணுகுமுறைகளுக்கு அடிப்படையாக உள்ளது.

அறிவியல் கண்ணோட்டத்தில் ஜாதகம் என்பது வெறும்
புள்ளியியல் கொள்கைதான் . இது வாய்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டது . இதன்படி ஜாதகக் கணிப்பு நூற்றுக்கு நூறு உண்மையாக அல்லது பொய்யாக இருக்கமுடியாது .
வாய்ப்புக்களைப் பாதிக்கக்கூடிய காரணிகளை அறியாதிருந்தால் ஜாதகத்தில் சரிபாதி மெய்யாகவும் மீதிப்பாதி பொய்யாகவும்
இருக்கும் எனலாம் . ஜாதகத்தில் உண்மையான காரணிகள்
ஏதுமில்லை என்பதால் அதன் உண்மை நிலையும் அதுதான்.

இது ஏறக்குறைய ஒற்றையா ,இரட்டையா விளையாட்டைப்
போலத்தான் . எவ்வளவு முறை விளையாடினாலும்
வெற்றியும் ,தோல்வியும் சரி பாதிதான். ஒருவர் பெறக்கூடிய
சில கூடுதல் வெற்றிகளும் ,தோல்விகளும்
தற்செயலானவைகளே அன்றி அதற்கோர் அறிவியல்
விளக்கம் கற்பிக்க முடியாது. அப்படியிருக்க பூமியில்
நெருக்கமாக கூடி வாழும் மக்களின் எதிகாலத்தை அறிந்து
கூறும் திறன் வெகு தொலைவுகளில் உள்ள சூரியக்
கோள்களுக்கு உள்ளது என்று கூறினால் அது எப்படி
ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையாகும் ?பூமியின் எதிகாலத்தையே
தீர்மானிக்கமுடியாத கோள்கள் ,பூமியில் வாழும் பல கோடிக்கோடி உயிரினங்களின் எதிகாலத்தை எப்படி வேறுபடுத்திப் புலப்படுத்திக்
காட்ட இயலும் ?

நாம் ஏமாறத் தயாராக இருந்தால் , ஏமாற்றுபவர்களுக்கு அவர்கள்
பணி வெகு சுலபமாகிவிடும் .சிந்திக்கவேண்டியது நாம்தானே
ஒழிய அவர்கள் இல்லை.

நம் சிந்தனைக்கு எவை முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன
என்பதை முதலில் சிந்தியுங்கள் ,ஒரு தெளிவு பிறக்கும்
என்று நம்புகிறேன் .

அன்புள்ள

காவேரி

Sunday, August 15, 2010

Eluthatha kaditham-5

எழுதாத கடிதம் - 5

பழம் பெருமைக்குரிய இந்தியத் திருநாட்டை ஆளும் அரசியல்
தலைவர்களே

நான் பல முறை சிந்தித்து சரியான விடை கிடைக்காமல் மனதை
வருத்திய ஒரு கேள்வி உண்டென்றால் அது இதுதான்.
இந்தியாவில் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே
வருவதேன் ? நேர்மையற்ற வாழ்க்கை வழி முறையை
இந்தியர்கள் ஏன் அதிகம் நாடுகின்றார்கள் ? நேர்மையாக வாழும்
இந்தியர்கள் சிறுபான்மையாகிக் கொண்டே வரும் நிலையால் ஒரு பாதுகாப்பற்ற சூழல் உருவாகித் திடமாக நிலை பெற்று
வருகின்றது . ஒரு விதமான பயம் ,ஏமாற்றப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் , போன்றவற்றால் அவர்களும் தடம் புரண்டு வாழத் துணிந்து வருகின்றார்கள் .இன்றைக்குக் கிடைக்கும் புள்ளி விவரங்களை
வரைபடத்திலிட்டு இந்த நிலையின் போக்கு எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்கும் போது அதன் முடிவுகள்
என்னை நிலை குலையச் செய்கின்றன . இந்த முரட்டுத் தனமான
போக்கிற்கு மக்களால் ஒரு தீர்வைத் தரவே முடியாது .ஏனெனில்
இதைப் பொறுத்தமட்டில் மக்கள் நோயாளிகள் .மருத்துவர்களாக
விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட நீங்களே இதற்கு
சரியான மருந்து கொடுத்து ஒரு முற்றுப் புள்ளி வைக்கமுடியும் .

இந்தியாவில் குற்றங்கள் பல விதமாக இருக்கின்றது.உலகில் எங்குதான் குற்றங்கள் நடைபெறவில்லை, என்று நம்மை நாமே சமாதனப் படுத்திக்கொண்டு இன்னும் சும்மா இருப்பதில்
அர்த்தமில்லை எதிர்காலச் சந்ததியினர் நம்மை விடவும்
சிறப்பாக வாழ்வதற்கு வழி ஏற்படுதிக்கொடுக்காவிட்டாலும்
குறைந்தபட்சம் நம்மைப் போலவாவது வாழ்வதற்கான
சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும் .

சட்டத்திற்கு புறம்பாக மருந்து,உணவுப் பண்டங்கள்
மற்றும் கலப்பட பொருள்கள் போன்றவற்றை எந்தத் தடையுமின்றி விற்பது,கள்ளநோட்டு அடித்து விநியோகிப்பது ,கள்ளச் சாராயம்
காய்ச்சி விற்பனை செய்வது ,நிதிநிறுவனம் மூலம் மோசடி செய்வது மாமூல் ,லஞ்சம் வாங்குவது ,வேலை தருவதாகக் கூறி
ஏமாற்றுவது ,சிறுவர்களைக் கடத்தி பணம் பறிப்பது அல்லது
விற்றுவிடுவது ,குவாரிகளில் உழைப்பை வாங்கிக்கொண்டு
அடிமையாக வைத்திருப்பது ,பொய்க்கையெழுத்து பத்திரம்
போன்றவற்றால் ஏமாற்றுவது ,மற்றவர்களின் உடைமைகளைத்
திருடுவது ,ஆசைவார்த்தைகளைக் கூறி மோசம் செய்வது ,பெற்ற குழந்தையைத் தேவையில்லை என்று அனாதரவாய்
விட்டுவிடுதல் கொலை செய்தல் அல்லது விற்று விடுதல்
போதைப் பொருள் விற்பனை , வீடு,கடை ,பேங்க் புகுந்து கொள்ளை அடித்தல், கழுத்துச்சங்கிலியை அத்துக் கொண்டு ஓடுதல், ஜேப்படி செய்தல் ,கார்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றை
திருடுதல் ,மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுதல்
அல்லது ஒரு விதமாக நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றுதல்
,நிறுவனத்தின் நிதியை தவறாகப் பயன் படுத்துதல் ,
அதிகாரம்,செல்வாக்கு, பண பலம் போன்றவற்றைப் பயன் படுத்தியும் ,மக்களைப் பயமுறுத்தியும் ஏமாற்றுதல் , மக்களிடையே வன்முறையைத் தூண்டி ஆதாயம் தேடுதல் ,
மக்களின் கவனத்தை திசை திருப்பி ஆதாயம் பெறுதல் , சின்னச் சின்னக் காரணக்களுக்கெல்லாம் பொதுச் சொத்துக்களை
அழித்தல்,பாதுகாப்பற்ற பெண்களைக் கற்பழித்தல் ,இன்னும்
இன்னும்........ இந்தப் பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகின்றது .புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்க வீதத்தைவிட இந்த குற்றங்களின் வீதம் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன . பெரும்பாலான குற்றங்கள் முறையாகப் பதிவு
செய்யப்படுவதில்லை என்பதால் இது இன்னும் கூட இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.இது நமக்குப் பெரும் அச்சத்தைத் தருவதாக இருக்கின்றது

மக்களை ஆண்டது போதும் ,மக்களின் மனதை ஆளப் பாருங்கள் .
உங்கள் காலத்தில் செய்யவேண்டியது உங்கள் காலத்திலேயே
செய்யப்படவேண்டும் . இல்லாவிட்டால் அது செய்யப்படாமலேயே
போய்விடலாம் . ஏனெனில் பிற்பாடு அதைச் செய்வதற்கு
இன்னும் கடிய,கூடுதலான முயற்சி எடுக்கவேண்டியிருக்கும்.
குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றால் அதற்கு இருக்கும் தடை போதுமானதாக இல்லை என்று பொருள். மொழியோடு
இவை எல்லாம் இங்கே வளர்ந்தால் மொழிதான் வளருமா
இந்தியர்களின் நிலைதான் வளருமா ?

இதில் இருக்கக்கூடிய ஒரு பொதுவான குற்றச்சாட்டு
பெரும்பாலான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து
விடுகின்றர்கள் என்று சொல்லப்படுவதுதான். இதற்கு அரசியல் தலையீடே காரணம் என்று மக்கள் நினைக்கின்றார்கள் .
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் தவறாது தண்டிக்கப் படவேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் அடிப்படைக்கொள்கையாக இருக்கவேண்டும் .
அரபு நாடுகளைப் போல இல்லாவிட்டாலும் முறையான
தண்டனைகள் மூலமே ஒரு சமூக ஒழுங்கை இங்கே
நிலைப்படுத்த முடியும்.

மக்களோடு நீங்களும் சிந்திக்க வேண்டுகின்றேன்.

அன்புடன்,

காவேரி

Friday, July 23, 2010

eluthatha kadithangal-1

எழுதாத கடிதம்

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,

பலமுறை காப்பி குடிங்க,பரவாயில்லை.ஆனால் ' காப்பி குடிக்காமல் என்னால் இருக்கமுடியாது ' என்று மட்டும் சொல்லாதிங்க. அது போன்ற அடிமைத்தனமான எண்ணத்தை நமக்கு நாமே ஊக்குவித்துக்துக் கொள்ளக்கூடாது. காப்பிக்கு நீங்க என்ன அடிமையா? அடிமையின்னு சொல்லிக் கொள்வதில் உண்மையிலேயே பெருமைப் படுகின்றீர்களா?
ஒன்றுக்கு அடிமை ஆகிவிட்டால்,அதே பலவீனம் நம்மைப்
பலவற்றிற்கு அடிமைப்படுத்தி விடுகின்றது . இந்த அடிமைத்தனம் சற்று வித்தியாசமானது.சுதந்திரம் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு நம்மைநாமே அடிமைஆக்கிக்கொள்வதால்அதை நாம் சிறிது கூட
உணர்வதில்லை .சுதந்திரம் என்ற சட்டை போட்டுக்கொண்ட
அடிமை பெறும் மகிழ்ச்சியே நாம் அடையும் மகிழ்ச்சி. நாம் சுதந்திரமாகப் பிறந்தோம் சுதந்திரமாகவே இறக்கப் போகின்றோம் .அப்படி இருக்கையில் வாழும் போது மட்டும் ஏன் அடிமையாக நடிக்க வேண்டும்.இந்தப் பழக்கம் எப்படியெல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றது பாருங்கள்.டிவி யில் சீரியல் பார்க்காமல் தூங்க முடியாமல் பலர் ,சாராயம் போடாமல் இருக்க முடியாதுன்னு பலர், புகைப் பழக்கத்தை விடமுடியாமல் பலர், இவர் தான் என் அரசியல் தலைவர்,இவர்தான் எனக்குப் பிடித்த ஹிரோ, இவங்களுக்காக  உயிரையே கொடுப்பேன்னு பெற்ற தாயைக் கூட மறக்கத் துணியும் பலர் . காலப் போக்கில் இவர்கள் பல நல்ல குணங்களை இழந்து விடுகின்றர்கள் . செய்ய வேண்டிய காரியங்களுக்கான நேரத்தை வீணாய்க் கழித்து விடுகின்றார்கள்.அலட்சியப் போக்கு,மூர்க்க குணம் ,வெட்டிப் பேச்சு ,வீண் விவாதம் போன்ற குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு தானும் சீரழிந்து மற்றவர்களையும் சீரழிக்கின்றார்கள்.எல்லோரும் பட்டுத்தான் திருந்த வேணும் என்றால்,இந்த உலகம் பட்டுப் போய்விடுமே. கொஞ்சம் சிந்தியுங்க.

அன்புடன்

காவேரி