Saturday, April 6, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -26

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
பேசுவது என்பது ஒரு கலை. எல்லோரும் விரும்பும்படி பொருளோடும் ,நகைச் சுவையோடும் பேசுவது முறையான பயிற்சியால் மட்டுமே கைகூடும். .பேசும்   போது குரலில் ஏற்றத் தாழ்வு , உடல் அசைவுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு , நம்பகத் தன்மை எல்லாம் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும் .அப்போதுதான் அது மற்றவர்களிடம் ஒரு குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். பேசும் போது  உணர்ச்சிகளில் வேறுபாடு எப்படி இருக்க வேண்டும்  என்பது யாரிடம் பேசுகின்றோம் என்பதைப்  பொறுத்தது.      
                                                                                                                                                                                         தாயிடம்  அன்பாகப் பேசுங்கள்                                                                                                               தந்தையிடம்  பண்பாகப்  பேசுங்கள்                                                                                                   ஆசிரியரிடம்  அடக்கமாகப் பேசுங்கள்                                                                                 பெரியவர்களிடம் பணிவாகப் பேசுங்கள்                                                                                                                    சகோதரனுடன் அளவோடு பேசுங்கள்                                                                                           சகோதரியுடன் பாசத்தோடு பேசுங்கள்                                                                                 உறவினர்களுடன் பரிவோடு பேசுங்கள்                                                                                      நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்                                                                                                                   மனைவியிடம் உண்மையாகப் பேசுங்கள்                                                                            குழந்தைகளுடன் இனிமையாகப்  பேசுங்கள்                                                                              நிறுவனத்தில் பொறுப்போடு பேசுங்கள்                                                                                                                    அதிகாரிகளிடம்  திருத்தமாகப் பேசுங்கள்                                                                                  தொழிலாளிகளிடம்  மனித நேயத்தோடு பேசுங்கள்                                                      வியாபாரிகளிடம் கராறாகப் பேசுங்கள்                                                                 வாடிக்கையாளர்களிடம் நேர்மையாகப் பேசுங்கள்                                                                                             அரசியல்வாதிகளிடம் கவனமாகப் பேசுங்கள்                                                                                             ஏழையிடம் இரக்கமாகப் பேசுங்கள்                                                                                                 இறைவனிடம் மௌனமாகப் பேசுங்கள்                                                                                        மேடைகளில்  உரக்கப் பேசுங்கள்                                                                                                       போட்டிகளில் தைரியமாகப் பேசுங்கள்                                                                                                                     சமுதாயத்தில் நல்லதை  மட்டும்  பேசுங்கள்                                                                               எல்லோரிடமும் எப்போதும்                                                                                                                                     பிறர் மனம் புண்படாதவாறு  பேசுங்கள் 

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 25

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு நாள் சர்க்கஸ் காட்சிக்கு அரிசி ஆலை அதிபர் தன் குடும்பத்துடன் வந்திருந்தார் . காட்டு விலங்குகள் கீழ்படிந்து செய்த வேலைகள்,  ஆடவர்களும் அழகு மங்கையரும் அந்தரத்தில் செய்த வித்தைகள் என ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது , பலசாலியான ஒருவர் வந்து தன்திறமையைக் காட்டினார். தன் வயிற்றின் மீது ஒரு கார் ஏறிச்  செல்ல விட்டு  தூங்கி எழுவதைப் போல  எழுந்து நின்றார். பலத்த கரகோஷம் அவருக்கு உற்சாக மூட்டியது . அடுத்து அவர் பளுத்தூக்கிக் காட்டினார். 40  கிலோவில்  தொடங்கி  ஒவ்வொருமுறையும் 20 கிலோ அதிகரித்து 200 கிலோ வரை மிக எளிதாக தூக்கிக் காட்டினார். கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது . ஆலையில் வேலை செய்வோர் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை  ஒவ்வொரு மூட்டையாகத் தூக்குவதால் வேலையை முடிப்பதற்கு நேரமாகிறது. பிற வேலைகளைச் செய்ய அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை . அதனால் அந்த வேலைகளை ச்  செய்யாமலே விட்டுவிடுகிறார்கள்  .இந்த சர்க்கஸ் வித்தைக்காரனை வேலைக்கு அமர்த்தினால் , ஒரே சமயத்தில் இரண்டு மூட்டைகளை எளிதாகத் தூக்கி வேலையை முடிப்பான். மற்ற வேலைகளை செய்யவும் நேரம் கிடைக்கும் என்று ஆலை அதிபர் நினைத்து அந்த சர்க்கஸ் வித்தைக் காரனை வேலைக்கு அழைத்தார் . அவனும் ஒப்புக் கொண்டு வேலைக்குச் சேர்ந்தான் . சில நாட்கள் இரண்டு இரண்டு மூட்டைகளாகத் தூக்கி சுறுசுறுப்பாக வேலை செய்தான். அதன் பிறகு அவனிடம் உற்சாகம் குன்றிப்போய் , ஒரு மூட்டை தூக்குவதற்கே கஷ்டப்பட்டான் . இந்தக் கவனித்த அந்த ஆலை அதிபர்  அவனைக் கூப்பிட்டுக்  கேட்டார், " நீ சர்க்கஸில் வேலை செய்யும் போது 200  கிலோ வரை எளிதாகத் தூக்கிக் காட்டினாயே. இப்பொழுது 75  கிலோ மூட்டையை உன்னால் தூக்க முடிய விலையே . ஏன் உடல் நலமில்லையா" என்று கேட்டார். 
அதற்கு அந்த வித்தைக்காரன் " ஐயா , சர்க்கஸில் வேலை செய்யும் போது ஒவ்வொருமுறையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள் . அந்த உற்சாகம் என்னை மேலும்  கடின வேலைகளைச்  செய்யத் தூண்டும். அனால் இங்கே என்னை உற்சாகமூட்ட யாருமில்லை. " என்றான். உண்மைதான் . உடல் வலிமைகோடு மன வலிமையையும் இணையும் போதுதான் ஒன்றின் தகுதிக்கு மீறிய செயல்களை செய்ய முடிகின்றது .மாணவர்களின் மன வலிமைக்கு பாராட்டு என்பது இந்த வித்தைக்காரனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம் போன்றது .  நல்ல காரியங்களை ச் செய்யும் ஒவ்வொரு முறையும் அல்லது முயற்சிக்கும் போதும்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்த பாராட்டத்  தவறக்  கூடாது. பாராட்டு உண்மையானதாக இருக்கும் போது அது மனதிற்குள் ஏற்படுத்தும் மாற்றங்களும் உண்மையானதாவே இருக்கும் .    

Friday, April 5, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 24

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு மாணவன் தன்கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் , அதே நோக்கத்தில் முன்னேறிச் செல்ல ஒரு பாராட்டு  வேண்டும்.  பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , நண்பர்கள் அவ்வப்போது ஒரு நல்ல செயலுக்காக ஒருவரைப்  பாராட்ட பாராட்ட  அவர் தன் செயலில்  கொண்டுள்ள ஆர்வம் பல மடங்கு  விரிவடைகின்றது . மூன்றாவது நபர் செய்யத் தவறினால் அது போட்டி மனப்பான்மையினால் உள்ளுக்குள் வளரும் பொறாமையால் இருக்கலாம் , ஆசிரியர் செய்யத் தவறினால்  அது தனி நபர் மீது சிறப்பு அக்கறை காட்டுவதை விட அனைத்து மாணவர்கள் மீதும் காட்டப்படும் பொது அக்கறையோடு மனநிறைவு  பெறும் பழக்கத்தால் இருக்கலாம். ஆனால் தன் பிள்ளையின் முன்னேற்றத்தில் ஒரு பெற்றோர் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது . ஆனால் பல பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளைப்  பாராட்டுவதேயில்லை  , மாறாக தங்களுக்கு   உரிமை  இருக்கின்றது  என்ற  எண்ணத்தில்  திட்டித் தீர்ப்பார்கள் .  இது எதிர்மறையான ஓர் அணுகுமுறை என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள் . சாதனை படைத்தால்தான் பாராட்டவேண்டும் என்பதில்லை , சாதனை படைப்பதற்கான தகுதியைப் பெறுவதற்கு உற்சாகப்படுத்தும் ஒரு முயற்சியாகக் கூட இதைச் செய்யாலாம் . உத்தமமாக இருந்தால் உண்மையாகப்  பாராட்டுங்கள் , மத்திமமாக இருந்தால் உற்சாகமூட்டும் நம்பிக்கையோடு பாராட்டுங்கள் , அதமமாக இருந்தால்  பாராட்டுவதைத் தவிருங்கள் . அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் . பின்விளைவுகளாக ஏற்படும்  இழிவுகளையும் , முன்னேற்றத் தடைகளையும் எடுத்துரைத்து மனதில் ஒரு மாற்றம் ஏற்படும் படி அறிவுரை கூறுங்கள் . உண்மையில் பிள்ளையின் சுய விருப்பமின்றி  ஒரு பெற்றோர் தன் உரிமையால்  எதையும்   திணித்து அவன் ஏற்றுக்கொள்ளுமாறு செய்யவே முடியாது . மாணவர்களுக்குப் பாராட்டு  உற்சாகமூட்டி அவர்கள் மென்மேலும் சுயமாகக் கல்வியில் ஈடுபாடு கொள்ள வலுவாகத் தூண்டுகின்றது .
பாராட்டுதல் என்பது ஒருவருடைய உள்ளத்தை உணர்ச்சிப் பூர்வமாகத் தொடும் இயல்புள்ளதால் அது உள்ளுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களும் குறிப்பிடும்படியாகத்தான் இருக்கும் 
ஒருவரைப் பாராட்டுதல் என்பது ஒருவகையில் அவர் முன்னேற்றத்திற்காகச் செய்யும்  மனப்பூர்வமான பிரார்த்தனைதான் . ஒருவர் செய்யும் தவறான செயலுக்காகப் பலமுறை திட்டும் பலர் ஒருமுறை கூட ஒருவர் செய்யும் நல்ல செயலுக்காக ப் பாராட்டவேண்டும் என்று நினைப்பதேயில்லை . ஒரு சிறிய பாராட்டுக் கூட ஒரு உந்தர்காரணியாகி  ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ரபீந்திரநாத் தாகூரின் சுயசரித்திரம் சான்று கூறுகின்றது  .
ரபீந்திர நாத் தாகூர்  ( Rabindranath Tagore )  ( 7  மே 1861- 7  ஆகஸ்ட் 1941) இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கல்கத்தாவில்  தேவேந்திர நாத் தாகூர் - சாரதா தேவி தம்பதியினருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் இளையவராவார் . இவர் சிறந்த படைப்பாளர் . எழுத்தாளர் , கவிஞர், இசை அமைப்பாளர் , நாடக ஆசிரியர் , ஓவியர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். கீதாஞ்சலி என்ற கவிதை நூலைப் படைத்து 1913  ல் இலக்கியத்திற்காக  ஆசியாவின் முதல் நோபல் பரிசைப் பெற்றார் .நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே ஆவார்.  தாகூர் தனது 8 வது வயதிலிருந்தே  கவிதை எழுதத் தொடங்கினார். தனது 15 வது வயதில் பானு  சிம்ஹா (சூரிய சிங்கம் ) என்ற தலைப்பில் முதல் கவிதை நூலை வெளியிட்டார்   சாந்தி நிகேதன் மற்றும் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் .போன்றவற்றை நிறுவினார் . அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
 சிறுவயது முதற்கொண்டே தாகூர் கவிதை எழுதுவதில் ஆர்வர் கொண்டிருந்தார் . ஒரு முறை ஓரு கவிதையை எழுதி தன் தந்தையாரிடம் காண்பிக்க, அது நன்றாக இல்லாவிட்டாலும் மகன் உற்சாகத்தை இறந்துவிடுவான் என்று அந்தக் கவிதைக்காகப் பாராட்டி ஒரு கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார் .இதனால் தாகூர் மேலும் மேலும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு தன் திறமையை வளர்த்துக் கொண்டார். அவர் தன்னை ஒரு பெரிய கவிஞனாக வெளிப்படுத்திக் காட்ட இது ஒரு தூண்டற் காரணியாகியது .
ஒவ்வொருவருவரும் தங்கள் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதாவதொரு  தூண்டற் காரணியை இனமறித்து ஏற்படுக்கொள்ள வேண்டும் .இது அகத்  தூண்டுதலாகவோ அல்லது புறத் தூண்டுதலாகவோ இருக்கலாம் . பாராட்டுக்கள் நல்ல  தூண்டற் காரணியாகும்.

Thursday, April 4, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி?-23

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
திறமையை வளர்த்துக் கொள்வது என்பது படிப்பதும் , படிப்பதைப் புரிந்து கொள்வதோடு மட்டும் முடிந்து விடுவதில்லை .அதற்கும் அப்பாலிருக்கும் வழிமுறைகளில் ஏற்படுத்திக் கொள்ளும் நுட்பமான வேறுபாடுகளே சிறந்த மாணவர்களுக்குள்ளும் தர நிலையில் ஒரு வேறுபாடு  ஏற்படுவதற்கு   காரணமாக இருக்கின்றன. புரிதல் என்பது கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளும் திறத்தைப் பெறுவதாகும் . ஆனால் இயல்பு மீறிய புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள கல்வியில் உள்ள புரிதல் மட்டுமே  போதாது .  புரிதலோடு , புரிதலால் புதிய படைப்பாற்றலைப் பெறுவதற்கான  விரிதலும் 
வேண்டும் . இதை   மாற்றி யோசிக்கும்  சுய சிந்தனைகளாலும் , நுட்பமான மாறுபட்ட அணுகுமுறைகளினாலும் வளப்படுத்திக் கொள்ள முடியும் . புரிதலோடு விரித்தாலும் இணையும் போது , பிறருடைய உதவியின்றிப் புதிய வழிமுறையை க் கண்டறியும் திறமை மேம்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது .விஞ்ஞானிகள்  இப்படிப்பட்ட விரியும் சிந்தனைகளால் புதிய புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டறியும் திறமையை ப் பெறுகின்றார்கள் . வெறும் பாறையிலிருந்து அழகிய சிலைகளை சிற்பிகள் வடிக்கிறார்கள் . கல்லுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் உருவங்களை இந்தக் கலைஞர்கள் தான் முதன்முதலில் பார்க்கின்றார்கள் . அழகான நவீன அடுக்குமாடிக்  கட்டடங்களை கட்டும் திறமையை பொறிஞர்கள் பெறுகின்றார்கள் . உள்ளுக்குள் விரியும் அறிவே  மதிநுட்பம் எனலாம் . மதிநுட்பம் மிக்கவர்களால் மட்டுமே ஒரு சிக்கலை த் தீர்க்க முடியும் , ஒரு பிரச்சனையின் போக்கை  மாற்றி அமைக்கமுடியும் .விதியைக் கூட வென்று காட்டமுடியும்.
கல்வியைப் புரிதலோடு கற்றவர்கள் பலர் விதியை வெல்லும் திறமையுள்ளவர்களாக இருப்பதில்லை. இல்லாத விதிக்கு இருக்கும் மதியை அடகு வைத்துவிட்டு மனம் நொந்துகொள்வார்கள் .
வாய்ப்புக்களை த் தவறவிடுதல் என்பது விதி, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பது மதியின் ஒரு நிலை . மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்  வாய்ப்புதான் என்பதை மதியால் விதியை வென்று சாதனை படைத்தவர்கள்  மட்டுமே  சான்றாக இருக்கின்றார்கள் . விதியை மதியால் வெல்லலாம் என்பதை மனம்  நொந்துபோன  ஓர் ஏழைக்குச் சொல்லப்பட்ட  கதை புரியச் சொல்லுகின்றது.
ஓர் ஏழை தொடர்ந்து  வறுமையில் உழன்று வந்தான் . .அவனுக்கு உழைப்பின் மீது வெறுப்பு வளர்ந்தது. அதற்குக்  காரணம் அவனுடைய  பல  முயற்சிகள் தோல்வியில் முடிந்ததுதான் . எந்தக் காரியம் செய்தாலும் தோல்வியே கிடைக்கும்  என்று ஜாதகம் கூறியதை அப்படியே நம்பினான் . ஒருநாள்  ஒரு மகானைச் சந்திக்கும் வாய்ப்புக்  கிடைத்தது.  அவரிடம் போய் தான் கடந்துவந்த துயரங்களை விவரித்து எல்லாம் விதியின் திருவிளையாடல்  என்று வருத்தப்பட்டான் . அந்த மகான் விதியென்று ஏதுமில்லை , மதிக்கு முன்னால் விதி ஒரு விளையாட்டுப் பிள்ளை  என்பதை ஒரு செயல் விளக்கம் மூலமாகவே விவரித்தார்.  ஒரு கல்லை மேல்நோக்கி எறிந்து விட்டு  , இந்தக் கல்லில் விதி என்ன என்று அந்த ஏழையிடம் கேட்டார். "அந்தக் கல் கீழே விழும் " என்றான் . " நான் அந்த விதியை என் மதியால் மாற்றிக் காட்டுகின்றேன் பார்"  என்று சொல்லிவிட்டு ,அந்தக் கல்லைக் கீழே விழுவதற்கு முன்பு கையால் பிடித்துக் காட்டினார் .அதற்க்கு அந்த ஏழை " இதுவும் விதிதான் " என்றான் . மகான் மீண்டும் ஒரு கல்லை மேலே தூக்கி எறிந்து விட்டு , சட்டென மற்றொரு கல்லை வீசி , கல்லோடு கல்லை மோதச் செய்து அதை வேறொரு இடத்தில் விழுமாறு செய்தார்.  அது போல மற்றொருமுறை செய்து . இரண்டுகற்களையும்  சிதறிப்போகுமாறு செய்தார் . வேறொருமுறையில் முதலில் எறிந்த கல் ஒரு மரத்தின் மீது அடைக்கலம் ஆகுமாறு செய்து காட்டினார் . இவை எல்லாம் விதி தான் என்று அந்த ஏழை மறுத்தான் . அதற்கு மகான் " இருக்கலாம் , ஆனால் இது புதிய விதி.    அதாவது இந்த விதியை உன்னால் உன் விருப்பம்போல மாற்றி யமைத்துக் கொள்ள முடியும் . விதி என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவை அப்படியே ஏற்றுக் கொள்வது , மதி என்பது அந்தத் தீர்மானம்  எது என்று முடிவு செய்வது . ஒரு தீர்மானம் ,ஒரு முடிவு என்றால் அது விதி  வழிச் செல்வது . ஒரு தீர்மானத்திற்கு பல முடிவுகளும் . ஒரு முடிவுக்கு பல தீர்மானங்களும் இருக்கும். அவற்றைப்புரிந்து கொண்டால் அது மதி. அவர்கள்   மட்டுமே விதியைத் தன் மதியால் வெல்லும் ஆற்றலைப் பெறுகின்றார்கள்         

Wednesday, April 3, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 22

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
ஒரு மாணவன் தன் திறமைகளை அறியாவிட்டால்  முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகளை இழந்துவிடுவான் என்பதை கோழிக்குஞ்சோடு சேர்ந்து பொரி க்கப்பட்ட பருந்துக் குஞ்சின் நிலை எடுத்துக் காட்டுகின்றது . 
ஒரு கோழி 9  முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது.  ஆவலில் ஒரு சிறுவன் அந்த முட்டைகளோடு ஒரு பருந்து முட்டையையும் வைத்துவிட்டான் . கோழி 10 முட்டைகளையும் அடைகாத்து குஞ்சு பொரித்தது. பருந்துக் குஞ்சும் கோழிக் குஞ்சுகளுடன் சேர்த்து   குப்பைகளைக் கிளறி  தானியங்களை கொத்திக் கொத்தி தின்று   வளர்ந்து வந்தது. அதற்குத் தானொரு பருந்துக் குஞ்சு என்பதே தெரியவில்லை . தானும் ஒரு கோழிக் குஞ்சு என்றே நினைத்துக் கொண்டிருந்தது. பருந்துகள் கோழிக் குஞ்சுகளைக் கொத்தி எடுத்துச்செல்ல பறந்து வரும் போது தாய் கோழி  வீரமாய் விரட்டி அடிப்பதைப்  பார்த்துவிட்டு   பருந்துக் குஞ்சு தானும் அந்தப்  பருந்து போல உயரப் பறக்க ஆசைப்பட்டு கோழியிடம் போய் முறையிட்டது.  அதற்கு  "பருந்துகளால் மட்டுமே  அப்படி  உயரத்தில் பறக்க முடியும். கோழியாய்ப் பிறந்த நமக்கு பருந்து போலத் திறமையில்லை .நம்முடைய திறமை குப்பையைக் கிளறி உணவு தேடுவதுதான்"  என்று கோழி சொன்னது. பருந்துக் குஞ்சும் உயர பறக்கும்  பருந்தை ஏக்கமாகப் பார்த்து விட்டு மற்ற கோழிக் குஞ்சுகளோடு தத்தித் தந்திச் சென்றது. பருந்துக் குஞ்சு தானொரு  பருந்து என்பதை உணராமல் போனதால், அது கடைசிவரை கோழியாகவே வாழ்ந்து மறைந்தது .             
  திறமைகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான வாய்ப்புக்களை வெகு இயல்பாகப் பெறுவதற்கு உங்கள் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களின்   நட்பை   வளர்த்துக் கொள்ளவேண்டும். நல்லொழுக்கம் , நேர்மை , மனிதநேயம் , படைப்பாற்றல் போன்ற தனித்திறமைகளால் நல்லோர்களின் நட்பைப்  பெறமுடியும். காற்றடைக்கப்பட்ட பலூன் இதைத்தான் அறிவுறுத்திக் கூறுகின்றது .
ஒரு பலூன் மேலெழும்பிச் செல்வதற்கு  அந்த பலூனின் நிறம் காரணமாக இருப்பதில்லை . சிவப்பு நிறமாக இருந்தாலும், கருப்பு நிறமாக இருந்தாலும் . சிறியதாக இருந்தாலும் , பெரியதாக இருந்தாலும் , காற்றைக்கப்பட்டால் அவை எல்லாம் மேலெழும்பிச் செல்வதை போல , நிறம், மதம், மொழி , இனம் என்ற வேறுபாடுகளின்றி எல்லா மாணவர்களும் திறமையால் முன்னேறிச் செல்லலாம். பலூன் மேலெழும்பிச்  செல்வதற்கு அதனுள் அடைக்கப்பட்ட வளிமமே காரணம்..அது மிகுதியாக இருக்கும் போது ,மிதத்தல் விதி (Laws of floatation )காரணமாக , ஒரு மேல்நோக்கு விசையைப் ( upward bouyancy) பெற்று உயரச் செல்கின்றது  மாணவர்களின் முன்னேற்றமும்  இது போன்றதே . அவர்களின் திறமை என்பது பலூனில் அடைக்கப்பட்ட வளிமம் மற்றும் அதன் அளவைப்  போன்றது .  பலூன்   மேலெழும்ப கீழ் நோக்கிச் செயல்படும் எடையை  எதிர்த்துச் செயல்படவேண்டும் . அது போல ஒரு மாணவன் முன்னேற வேண்டுமானால் அதற்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளை திறமையால் எதிர்த்து சமாளிக்க வேண்டும் . கூடுதல் திறமை பிரச்சனைகளை எளிதில் தீர்வு செய்துவிடுகிறது . வளிமம் அடைக்கப்பட்டிருப்பதால் தான் பலூன் மேலெழும்பிச்  செல்ல த் தேவையான மேல் நோக்கு விசையைப் பெறுகின்றது . அதுபோல தனித் திறமைகள் இருந்தால் முன்னேறிச் செல்லத் தேவையான நம்பிக்கை மட்டுமில்லாது பிறருடைய உதவிகளும் தானாக வந்து சேரும் . 
ஒருவருடைய திறமைகள் அவருக்கே தெரியாவிட்டால் , அந்தத் திறமைகளால் அவருக்குப் பயன் ஏதுமில்லை . அவருக்கே பயன்படாத திறமைகள் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்த முடியாது .யாருக்கும்  பயனில்லாத ஒருவரை  சமுதாயம் மதிப்பதில்லை.  அதனால் திறமை இருந்தும் அதை வெளிப்படுத்திக் காட்டத் தெரியாத ஒருவர் , சமுதாயத்தோடு தொடர்ந்து தொடர்பு கொள்வதில் தயக்கம் காட்ட , இறுதியில்  அவருக்கு அவரே எதிரியாகி விடுகின்றார். 

Tuesday, April 2, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 21

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் காலத்தில் பிற வேலைகளில் ஈடுபட்டு ,திறமையை முழுமையூட்டுவதைத் தடை செய்யக்கூடாது . திறமை  முழுமையாக இருந்தால், அதனால் வெளிப்படும் பயன்களும் பயனுறு திறன்மிக்கதாக இருக்கும்.  இதற்கு பெரியவர்கள் வளரும் மரத்தைத்தான் எடுத்துக்காட்டாய்க் கூறுவார்கள். வளரும் ஒரு சிறிய மரம் வளர்ந்து காய்க்கும் மரத்தைப் பார்த்து தானும் அப்படிக் காய்க்கவேண்டும் என்று விரும்பி ,அதைப்போல காய்ப்பதில்லை. ஏனெனில் அப்படிக் காய்த்தால் , விளைபொருட்களைத்  தாங்கமுடியாமல் அந்தச் சிறிய மரம் ஒடிந்து விழுந்துவிடும். அதனால் அந்தச் சிறிய மரம் , அப்படிக் காய்த்து வழங்குவதற்கான தன் தகுதிப்பாட்டை முழுமையாக வளர்த்துக் கொண்ட பிறகே காய்க்கத் தொடங்குகின்றது  .அதுமட்டுமன்று , பின்னாளில் காய்த்து வழங்குவதற்காகவே ஒவ்வொரு மரமும் தன்னை வளர்த்துக் கொண்டு தகுதிப்பாட்டை மேம்படுத்திக் கொள்கின்றது. ஒரு மரத்தின் முதன்மை இலக்கு அது விதையாக இருக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது .ஒரு மாமரம்  மாம்பழங்களைக் கொடுக்கும் நினைப்புடன் மட்டுமே வளர்கின்றது . அது ஒருபோதும் அருகிலுள்ள பிலாமரத்தைப் பார்த்துவிட்டு  தானும்  பெருசா பிலாப்பழத்தைக்  காய்க்கவேண்டும் என்று இயற்கைக்குப் புறம்பாக விரும்பியதே இல்லை. மரங்களை போல மாணவர்களும் , இயற்கையைச் சிந்தனைகளுடன் விருப்பங்களைத்  தேர்வு செய்து , அதற்கான தகுதிப்பாட்டை முழுமையாகப்  பெறும்வரை  திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
 அப்படி முயன்று வளர்த்துக் கொண்ட திறமைகளை வெளிப்படுத்தி பயன்கொடுத்து பயனீட்டும் வாய்ப்புக்களைத் தேடவேண்டும். பொதுவாக வாய்ப்புக்கள் எல்லோருக்கும் தானாக  வருவதில்லை .தானாக வந்தாலும், முயன்று தேடி வந்தாலும், வாய்ப்புக்கள் வருமாறான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.நமக்கே தெரியாமல் பிறரால் நமக்கு அனுகூலமாக அமையும் வாய்ப்புக்கள் தானாக வந்தது போலத். தோன்றும்.  மற்றபடி வாய்ப்புக்களை நாம் தான் தேடிச் செல்லவேண்டும். தன் திறமைகளைச் சரியாக உணர்ந்தவனால் மட்டுமே சரியான வாய்ப்புக்களைத் தேடி வெற்றி பெறமுடியும். திறமைக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்களைத் தேடினால் அதன் பயன்பாடு யாருக்கும் பயனின்றிப் போகும் . கோயில் யானை இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றது
 யானை மிகவும் வலிமையானது . 50 பேர் சேர்ந்து தூக்கும் மரக்கட்டைகளை மிகச் சாதாரணமாகத் தூக்கிச் செல்லும் . ஆனால் கோயில் யானைக்குத் தன் வலிமை தெரியாது. ஒரு சிறிய சங்கிலியால் கட்டிப்போட்டால்  அறுத்துக் கொண்டு ஓடுவதில்லை .இதற்குக் காரணம் சுயதிறமையை உணராமையே. சிறிய யானையைக் கட்டிப்போடும் போது அது அறுத்துக் கொண்டு ஓட முயற்சிக்கும் . ஆனால் சிறிய யானையால் அது முடியாமல் போகும் .பல முறை முயற்சித்து முடியாமல் போனதால் அதையே நம்பிவிடும். அதன் பிறகு அது தன் உடல் வலிமையை வளர்த்துக் கொண்ட அளவிற்கு புத்தியை வளர்த்துக் கொள்வதில்லை . திறமையிருந்தும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத கோயில் யானையைப் போல மாணவர்கள் வளர்ந்து விடக் கூடாது.         

Monday, April 1, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 20

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
கற்றுக் கொள்ள வேண்டியதை கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ளும் போது , இஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ளக் கூடாதனவற்றையும் கற்றுக்  கொண்டுவிடுகின்றோம். இது கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதை மறக்கச் செய்து விடுகின்றது.கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டவை தனக்கும் சாகாத சமுதாயத்திற்கும் நற்பயன் வழங்கி குறைவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும்  ஆனால் இஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்ட தேவையற்றவை கணப்பொழுது மகிழ்ச்சியைக் கொடுத்து மனதை மயக்கி , மீளாத் துயரத்தை  வாழ்க்கை முழுதும் தந்துவிடும். 
  மனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால் மட்டுமே இப்பிரச்சனையை எளிதில் சமாளிக்க முடியும் . ஒரு நச்சுச் செடியின் விதை முளைத்துச் செடியாக வளரும் போதே அதன் பயனை முன்னுணர்ந்து பிடுங்கி எறிவது எளிது . மரமாக வளர்ந்த பின்பு அதை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல, வெட்ட வெட்ட அது மீண்டும் தழைத்து வளரும் . மனம் என்ற நிலத்தில் வளரும் தேவையில்லாத எண்ணங்களின் நிலைப்பாடும் இதுதான் .மனதில் தோன்றும் விகாரங்களை இளைமைக்காலத்திலேயே அழித்துவிடவேண்டும், இல்லையென்றால் தன்னுடைய வாழ்க்கையையும் கெடுத்து சமுதாய வாழ்க்கையையும் கெடுக்கும் நிலையே உருவாகும் . 
அதைப்போல கற்பதை விரைந்து கற்றுக் கொள்ள முடியாது..விரைந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நாம் நம்புவதற்குக் காரணம் புரிதல் இல்லாமல் தெரிந்து கொள்வதுதான் கற்பது என்று தவறாக நாம் முடிவு செய்வதுதான் 
ஒரு இளைஞன் தற்காப்புக்  கலையைக் கற்றுக்கொள்ள விரும்பி ஒரு குருவை  நாடினான்." ஐயா , இந்தக் கலையை முழுமையாகக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும் ? "  என்று கேட்டான் .அதற்கு " இரண்டு வருடங்கள் ஆகும் " என்று குரு கூற, இளைஞனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. " ஐயா, அடுத்த ஆண்டு நான் வெளிநாடு செல்ல வேண்டும் , அதற்குள் கற்றுகொள்ள ஆசைப்படுகின்றேன் . முக்கியமான வற்றை மட்டும்  கற்றுக் கொடுங்கள்" 
" அப்படிக் கற்றுக் கொண்டால் அதனால் பயனில்லை . அதற்குக் கற்றுக் கொள்ளாமலேயே  இருக்கலாம் " 
" அப்படியானால் நான் தினமும் கூடுதல் நேரம் கற்றுக் கொள்கின்றேன். வேகமாகக் கற்றுக்கொண்டால் விரைந்து முடிக்கலாமே " 
குரு மெல்லச் சிரித்துவிட்டு  " அப்படிக் கற்றுக் கொண்டால் , முடிப்பதற்கு நான்கு வருடங்கள் அல்லது அதற்கும் கூடுதல் காலம் ஆகலாம் " என்றார் 
கற்று பயன்படுத்த வேண்டியதை அவசரப்பட்டு கற்றுக் கொள்ள  முடியாது.அவசரம் புரிதலின்மைக்கு  அடிப்படை.  செய்முறையில் பிழைகள் ஏற்படுவதற்கும்  , சூழ்நிலைக்கு ஏற்ப செய்முறையில் தகுந்த மாற்றத்தை உடனடியாகச் செய்யமுடியாமல் போவதற்கும் இது காரணமாக அமைகின்றது.