Tuesday, July 29, 2025

   அரசியல் என்பது மக்களுக்கான ஒரு பொது நலச்சேவை. அரசியலுக்கு வந்துவிட்டால் பாகுபாடின்றி ஒருபாற்கோடாமையைப் பின்பற்றவேண்டும் . மக்கள் எல்லோரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. ஒரு கட்சியின் தலைவர் வேண்டியவர்களுக்கு மட்டுமே நன்மை செய்து வேண்டாதவர்களைப் புறக்கணிக்கக்கூடாது. ஆட்சியாளருக்கு எதிரி நாட்டுத் தலைவனே எதிரி ,தான் ஆளும் நாட்டுமக்களில் யாரும் எதிரியில்லை என்பதை உணர்ந்  துக்கொள்ளவேண்டும்.வேண்டாதவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருப்பது அரசியல் இலக்கணம். . அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி இன்றளவும் இந்தியாவில் என் கண்களுக்குத் தென்படவில்லை .

Sunday, July 27, 2025

 காரணமின்றி வெறும் காலத்தால் மட்டும் நம்முடைய வாழ்க்கை விலைவாசி உயர்வால் நலிவடைந்து வருகின்றது என்றால் அதற்குக் காரணம் சமுதாயத்தின் வளர்ச்சி உண்மையானதாகவும் உறுதியானதாகவும் இல்லை என்பதுதான் . ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய உழைப்பில் வாழவும் முன்னேற்றம் காணவும் முயலும்போது இது நிகழ்கின்றது . நேர்மையான கல்வி ,அனைவருக்குமான கல்வி , நேர்மையான ஆட்சிமுறை  மாறும் நிர்வாகம் மட்டுமே சமுதாயம் தழுவிய நேர்மையான மாற்றத்தை க் கொண்டுவரமுடியும் .

Tuesday, July 22, 2025

 ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகளாக இருக்கும்போது மக்கள் அறிவாளிகளாக இருப்பதை விரும்புவதில்லை. ஏனெனில் அப்போது அவர்கள் செய்யும் தீயசெயல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். .எனவே அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ,சமுதாயத்தின் நலனுக்கும் காரணமாக விளங்கும் அறிஞர்கள் மற்றும் திறமைசாலிகள் புறக்கணிக்கப்பட்டு , காலப்போக்கில் புலம்பெயர்ந்து காணாமற் போய்விடுகிறார்கள் . பலரை  ஆற்றுக்குள் தள்ளிவிட்டு ஒருவனைக் காப்பற்றுவதற்கா கையை நீட்டி எல்லோரையும் நம்பவைப்பதில் இந்த அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்      

Thursday, July 10, 2025

 நாடாக இருந்தாலும் சரி , தனிமனிதனாக இருந்தாலும் சரி , சமுதாயமாக இருந்தாலும் சரி  தடையில்லாத  முன்னேற்றத்திற்கு மனித உழைப்பு வேண்டும் . இந்த உழைப்பை த் தரக்கூடிய மனிதர்கள் மிகுதியாக இருக்கும் நம் நாட்டில் முன்னேற்றம் என்பது அரசியல்வாதிகளின் வாய்ப் பேச்சில் மட்டுமேயுள்ளது . ஒரு பக்கம் இந்தியாவில் உழைக்காமலேயே பெரும் செல்வம் சேர்க்கும் ஒரு கூட்டம் உள்ளது . இவர்கள் அரசியலை ஒரு பாதுகாப்புக் கவசமாகக் கொண்டுள்ளார்கள் . இவர்களே அதிகாரமிக்கவர்களாக இருப்பதால் இவர்களை கா வர்களாலோ , நீதிபதிகளினாலோ கட்டுப்படுத்த முடியவில்லை . மற்றொரு பக்கம் எங்கு நோக்கினும் பிச்சைக்காரர்கள் . கோயில்  வாசலில் ஒரு கூட்டம் ஐந்துக்கும் பத்துக்கும் அலைமோதுது . கோயில் உட்புறம் ஒரு கூட்டம் நூறுக்கும் இருநூறுக்கும்  இறைப்பணி யாற்றுகின்றது. கோயிலுக்கே வராமல்  ஒரு கூட்டம் லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கின்றது. தெருக்களில் , ஹோட்டல் வாசலில் , சிக்னல் நிறுத்தங்களில் , வர்த்தக மையங்களில்  பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உழைக்கும் தகுதியானவர்களை பயன் படுத்திக்கொள்ளாமல் , உழைப்பை ப் புறக்கணிப்பதால் நாம் நம்முடைய முன்னேற்றத்தை பெரிதும்  இழந்து வருகின்றோம். நாட்டிலுள்ள அரசியவாதிகள் மட்டுமே செல்வந்தர்களாக இருப்பது நாட்டின் முன்னேற்றத்தைக் குறிப்பதில்லை . அது நாட்டின் அவலம்      என்றுதான் நான் கூறுவேன் 

Wednesday, July 9, 2025

 இன்றைக்கு சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை ஆராயும் போது  சுயவருமானத்திற்காக அதிக குற்றங்களைச் செய்வது பொதுமக்களை  விட அவர்கள் நலனில் அக்கறைகொண்டவர்கள் போல நடிக்கும் அரசியல் வாதிகளே. இதை சாட்சியுடன் நிரூபிக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை . அதிகாரம் மிக்க அரசியல்வாதிகள் ,அதிகாரிகளின் துணையுடன் தங்களை எதிர்க்கும் மக்களை நசுக்கிவிடுகின்றார்கள் . இது பல ஆயிரம் முறை சமுதாயத்தில் அரங்கேறியிருக்கின்றது . என்றாலும் அதற்கான நிவாரணத்தை ப்பற்றி யாரும் சிந்திக்க மறுக்கின்றார்கள் . கருத்து சொல்வதற்கே அச்சப்படுகின்றார்கள் . பொது வாழ்வில் ஊழல் குற்றங்களே முதன்மையானது. அரசின் நிதி அங்கே அரசியல்வாதிகளாலும் ,அதிகாரிகளினால் சுரண்டப்படுகின்றது . இதைத் தடுப்பது அதற்கு  பொறுப்புள்ள ஆட்சியாளர்களால் முடியாமல் போனதற்கு காரணம் அவர்களே அதை விரும்பிச் செய்வதுதான்.. எனவே இதைத் தடுக்கும் பொறுப்பை  நீதிபதிகளின் கூட்டமைப்பே மேற்கொள்ளவேண்டும் .  

Tuesday, June 3, 2025

 நாம் நம்முடைய சமுதாயத்திற்குத் தேவையான வசதிகளை ச் செய்து கொடுப்பதற்கும் தீயவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் தான் வரி காட்டுகின்றோம். ஆட்சியாளர்கள் தங்களுடைய எண்ணங்களைத் திணிப்பதற்காக இல்லை. ஆட்சியாளர்கள் எல்லோரும் தானே அரசனாக இருந்து ஆட்சிபுரியவேண்டும் என்றும்  தனக்குப் பிறகு தன் வாரிசுகளே ஆட்சிபுரியவேண்டும் என்றும்  பேராசைப்படுகின்றார்கள். நேர்மையான ஆட்சியில் கட்சிகள் இல்லை. வாரிசு ஆட்சிமுறையும் இல்லை. அந்தக்காலத்தில் மன்னராட்சியில் வாரிசுமுறை தொடர்ந்தது என்றால் இளவரசர்களுக்குப்  போர் பயிற்சியும் ,நிர்வாகப் பயிற்சியும் கொடுக்கப்பட்டன. போர் என்பது மனித சமுதாயத்திற்கு அழிவை மட்டுமே தரக்கூடியது என்ற எண்ணம் பரவியபோது மன்னராட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டன . அது தன்னலம் மிக்கதாக அமைந்துவிட்டது 

 


     மக்களிடம் காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து சமுதாயத்தை பாழ் படுத்திவிடும் ..இதற்கு பொதுவாக மக்களே காரணமாக இருக்கின்றார்கள் . பொருளாதார ஏற்ற த் தாழ்வுகளை அகற்றி மக்கள் எல்லோரையும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க காவல் துறையும் சட்டத் துறையும் தேவையாக இருந்தன இவ்விரு துறைகளையும் நிர்வகிக்க மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே அரசியல்.அரசியல்வாதிகளுக்கு நிர்வாக உரிமையும் ,அதிகாரமும் வழங்கப்பட்டது.ஆனால் இன்றைக்கு நம் அரசியல்வாதிகள் தவறான செயல்களைச் செய்ய அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை த்   தவறாக ப்பயன்படுத்துவத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .ஏழைகளை முன்னேற்றுகின்றேன் என்று தகுதியில்லாதவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வேலையில் அமர்த்துகின்றார்கள் . தகுதி இல்லாதவனின் வேலை நாட்டை சீரழித்துவிடும் . பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்றுகின்றோம் என்று இலவசவங்களை அறிவிக்கின்றார்கள் . இந்த இலவசங்கள் அறிவித்தபடி உரியவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் இலவசங்களை பெறுவதற்கு தகுதியானவர்களை சரியாக வரையறுத்து இனமறித்து கொள்வதற்கு முறையான திட்டமில்லாமையே ஆகும். அரசியல்வாதிகள் ,மற்றும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அதிகாரிகள் மட்டுமே ஏழைகளை ச் சுரண்டி பணம் சம்பாதிக்கிறார்கள் . மற்றபடி நேர்மையாக உழைக்கும் வர்க்கத்தினர் முன்னேற்றமின்றி காலத்தை கழிக்கிறார்கள். ஏழைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் நெடுந் தொலைவு . அது பெரும்பாலும் அரசியல்வாதிகளின் மயக்கும் மொழிகளில் மட்டுமே நிறைந்திருக்கின்றது .இன்றைக்கு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு மக்களை விட அரசியல்வாதிகளே முதன்மைக்காரணமாக இருக்கின்றார்கள்.