Saturday, March 2, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -காலியம் -தொடர்ச்சி

சில்லுப் புரட்சியில் காலியம்

சிலிகான் மற்றும் ஜெர்மானியம் மட்டுமே பயன்பட்டு வந்த நிலைமாறி படிக உருவமற்ற காலியச் சேர்மங்களும் குறைக் கடத்தியாக வளர்ந்துள்ளன .காலியம் அதிக அளவில் குறைக் கடத்திகள் உற்பத்தித் துறையில் பயன்படுகின்றது .தூய சிலிகானில் சிறிதளவு அலுமினியம் ,இண்டியம் ,தாலியம் , வேற்றுப் பொருளாகச் சேர்க்கப்பட்டு நேர் வகைக் குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன .காலியச் சேர்மங்கள் சேர்மக் குறைகடத்திகளைச் செய்யப் பயன்படுகின்றன.இவற்றுள் காலியம் ஆர்சினைடு ,காலியம் பாஸ்பைடு போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .காலியம் -அலுமினியம் -பாஸ்பரஸ் ,காலியம்-அலுமினியம்-ஆர்செனிக் ,காலியம்-இன்டியம் -பாஸ்பரஸ் -ஆர்செனிக் போன்ற கூட்டுச் சேர்மங்களும் குறைக்கடத்திகளின் வளர்ச்சியில் பங்கேற்றுள்ளன . காலியம் ஆர்சினைடு ,கன் டையோடு ,உலோக ஆக்சைடு குறைகடத்தி புலவிளைவு ட்ரான் சிஸ்டர் (MOSFET ) போன்ற மின்னணுவியல் சாதனங்களுக்கு மூலப் பொருளாகப் பயன்படுகின்றது .

கணினி ,கணக்கிடும் பொறிகள் ,எண் ளவைக் காட்டும் மின்னணு சாதனைகள் ,விளம்பரத் தட்டிகள் ,அலங்கார விளங்குகள் ,சமிக்கை ஒளிகள் போன்றவற்றிற்கு ஒளி உமிழ் டையோடுகள் (Light emitting diode) பயன்படுகின்றன .காலியம் ஆர்சினைடை மூலப் பொருளாகக் கொண்டு அவற்றில் தக்க வேற்றுப் பொருளைக் கலந்து நேர் வகையையும் ,எதிர் வகையையும் உண்டாக்கி அவற்றை ஒன்றாக்கி ஒரு PN சந்திப்பை ஏற்படுத்தினால் அதுவே LED ஆகும் .உமிழப்படும் ஒளியின் செறிவு  சுற்றிலுள்ள மின்னோட்டத்தின் அளவைப் பொருத்தும்,நிறத்தின் வண்ணம் பயன்படுத்தப்படும் மூலப்பொருளைப் பொருத்தும் அமையும்.இன்றைக்கு வெவ்வேறு நிற ஒளிகளை உமிழக் கூடிய ஒளி உமிழ் டையோடுகளை உருவாக்கி இருக்கின்றாகள் .காலியம் ஆர்சினைடுடன் சிலிகானை வேற்றுப் பொருளாகச் சேர்க்க அகச் சிவப்பு ஒளியும் ,காலியம் பாஸ்பைடுடன் நைட்ரஜனை வேற்றுப் பொருளாகச் சேர்க்க பச்சை நிற ஒளியும் ,காலியம் ஆர்சினைடு பாஸ்பைடுடன் நைட்ரஜனைச் வேற்றுப் பொருளாகச் சேர்க்க மஞ்சள் நிற ஒளியும் ,சேர்க்கை விகிதத்தை மாற்றி ஆரஞ்சு நிற ஒளியையும் ,காலியம் பாஸ் பைடுடன் துத்தநாகம், ஆக்சிஜனை வேற்றுப் பொருளாகச் சேர்க்க சிவப்பு நிற ஒளியும் உமிழப் படுகின்றது

ஒளி உமிழ் டையோடுகள் தாழ்ந்த மின்னழுத்தம் ,மின்னோட்டச் செறிவில் செயல்படுவதால் எடுத்துக் கொள்ளும் மின்திறன் மிகவும் குறைவு .மேலும் விரைவாகச் செயல்படுகின்றன .ஒற்றை நிற ஒளியை உமிழ்கின்றது .சிறிய உருவம் ,எடையும் மிகக் குறைவு .எனவே எடுத்துச் செல்வது எளிது.இயக்க அதிர்வுகளால் பாதிக்கப் படுவதில்லை .உடைந்து நொறுக்கும் வாய்ப்பும் குறைவு என்பதால் நீண்ட காலப் பயனுக்கு வருகின்றது .

ஒளி உமிழ் டையோடு வழிச் செல்லும் மின்னோட்டத்தின் செறிவை பயன் தரு எல்லை வரை அதிகரித்தும் ,வேற்றுப் பொருளின் செறிவை சற்றே மிகைப்படுத்தியும் சந்திப்புத் தளங்களைத் துல்லியமாக ஒரு தளப் படுத்தியும் ,மெருகூட்டியும் அதை ஒரு குறைக் கடத்தி லேசராக்க முடியும் .இவற்றின் உற்பத்திச் செலவு மிகவும் குறைவு என்றாலும் வெளியீட்டுத் திறனின் அளவு மிகவும் குறைவு.

காலியம் ஆர்சினைடில் எலெக்ட்ரான்கள் சில்கானை விட 5 மடங்கு வேகமாக உடுருவுகின்றன .இதனால் விரைவான செயல்பாடுகளுக்கு சிலிகானை விடக் காலியம் ஆர்சினைடு குறைக்கடத்திகளே சிறந்தன எனலாம் .2000 மெகா ஹெர்ட்சில் இயங்க வல்ல காலியம் ஆர்சினைடு சில்லுகளை மிக எளிதாக உற்பத்தி செய்ய முடியும்.மேலும் சிலிகான் சில்லுகள் 150 டிகிரி C வெப்ப நிலை வரை தாக்குப் பிடிக்கின்றன .ஆனால் காலியம் ஆர்சினைடு சில்லுகள் 300 டிகிரி C வரை தாக்குப் பிடிக்கின்றன .

பயன்கள்

ஒளி இழையும் (Optical fibre ) குறைக் கடத்தி லேசரும் இணைந்து செய்திப் போக்கு வரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன .காலியம் ஆர்சினைடு குறைக் கடத்தி லேசரில் அகச் சிவப்பு ஒளியைப் பண்பேற்றம் செய்து ஒளி இழை மூலம் அனுப்பினால் ஒரே சமயத்தில் 20,000 தொலைபேசித் தொடர்புகளைச் செய்யமுடியும்.ஒளி வழித் தொலைத் தொடர்பு இன்றைக்கு அமெரிக்கா ,ஜப்பான் போன்ற ஒரு சில வளர்ந்த நாடுகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன .

நுண்ணலை அலைவிகள் ,உயர் வெப்ப நிலை மின் வகைத் திருத்திகள் ,சூரிய மின் கலன்கள்,விரைவியக்கத் தொகுப்புச் சுற்றுகள் (Fast switching integrated circuits ) போன்றவற்றில் ,காலியம் ஆர்சினைடு ,காலியம் பாஸ் பைடு ஆகியவை பயன்படுகின்றன .

கடோலினியம் காலியம் ஒரு திண்ம நிலைக் காந்தப் பொருளாகும் .இது கணினியின் நினைவாற்றலை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது .

காலியம் ,பீங்கான் ,கண்ணாடியை நனைக்கின்றது .கண்ணாடியில் பூச்சிட்டால் நேர்த்தியாக ஒளியை எதிரொளிக்கும் பண்பைப் பெறுகின்றது .காலியம் பல உலோகங்களுடன் இணைந்து தாழ்ந்த உருகு நிலை கொண்ட கலப்பு உலோகங்களைத் தருகின்றது .

Friday, March 1, 2013

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

பெரும்பாலான உலக நாடுகளின் முன்னேற்றத்தை ஒப்பிடும் போது இந்தியாவின் முன்னேற்றம் ஓர் உறுதியில்லா நிலையில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும் .நம்முடைய முன்னேற்றம் அரசியல் வாதிகள் உச்சரிக்கும் வார்த்தைகளில் மட்டுமே இருக்கின்றது .நிஜ உலகில் வெறும் மாயத் தோற்றம் போலத் தோன்றுகிறது .முன்னேற்றம் என்பது லாட்டரியில் முதல் பரிசு விழுந்தது போலத் திடீரென்று வந்துவிடுவதில்லை .மக்களுக்கு நம்பிக்கை தருமாறு அதன் முன்னறிகுறிகள் இல்லாத போது முன்னேற்றம்  வெறும் பேச்சுப் பொருளாகமட்டுமே இருக்கும்.பொதுவாக முன்னேற்றம் வரும் முன்னே அதன் அறிகுறிகள் மக்களுக்குத் தென்படும் .ஒரு சங்கிலித் தொடர் போல ஒவ்வொரு துறையாக எல்லாத் துறைகளிலும் குறிப்பிடும்படியான ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தும் போது அது மக்கள் இயக்கமாகவும் மாறும் .முன்னேற்ற நடவடிக்கைகள் யாவும் அரசின் மறைமுக இயக்கமாக இருப்பதால் அவை மக்களைச் சென்றடைவதும் இல்லை,சிந்தைனையைத் தீண்டுவதும் இல்லை.ஊழல் நடந்து முடியும் வரை ஏதும் நடக்காதது போல இருப்பார்கள்.ஒன்றும் தெரியாதவர்கள் போல அது தெரியவரும் போது மறுப்பார்கள் .யார் யாரோ அவர்களுக்குத் தெரியாமல் செய்து விட்டதாக வாதிடுவார்கள்.ஊழல் செய்வதற்கான வாய்ப்பு இருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமையும் உண்டு தாராளமாய் நிதி அனுமதியும் உண்டு.நம் முன்னேற்றத்திற்கு முதல் தடை அங்கேயே தொடங்கி விடுகின்றது. டி எஸ் பி ,மற்றும் டாக்டர் ஒரு கொலையை தற்கொலையாக மாற்ற முயன்றனர் -பரவி வரும் பாலியல் வன்கொடுமை - கோயில்,வங்கி நகைக் கடைகளில் கொள்ளை போன்ற இன்றையச் செய்திகள்- இப்படி ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் வரும் செய்திகள் நம்முடைய பின்னேற்றத்தைப் படம் பிடித்துக் காட்டும்போது முன்னேற்றம் வெறும் நிழலாகத்தான் காட்சியளிக்கின்றது. ஊழலைத் தடுக்க மக்களே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.மக்கள் விழிப்புணர்வோடுதான் இருக்கின்றார்கள் ஆனால் வலிமையான எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாததால் தங்களுடைய எதிர்ப்பை வெறும் சலசலப்போடு முடித்துக் கொண்டு விடுகின்றார்கள் . ஒரு சிலர் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாடே முன்னேற வேண்டும் என்பது எல்லோருடைய உண்மையான ,பொதுவான விருப்பமாக இருந்தால் ,இன்னும் இப்போது இருக்கும் அரசியல் வாதிகளை நம்புவதில் ஒரு பயனும் விளையப் போவதில்லை .அவர்களிடம் தன்னலச் சிந்தனைகளே மேலோங்கி இருக்கின்றது.தலைவர்களாக இருக்கும் தகுதிப்பாடும் இல்லை. எனவே மக்களே தங்களை ஆளப்போகும் நன்மக்களை இனமறிந்து, கட்சி இன்றி ,கொடியும் கோடியும் இன்றி,பணப் பரிவர்த்தனை இன்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து சுயேச்சையாகத்  தேர்வு செய்து ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினால் ஒருவேளை விடிவு காலம் வரலாம்.நாலு மாடுகள் ஒன்று சேர்ந்து விட்டால் வலிமையான சிங்கம் என்ன செய்யும் ? சின்ன குழந்தையில் கேட்ட கதை நினைவுக்கு வருகின்றது. அந்தக் கதையை ஏன் சொன்னார்கள் என்று இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது.

Philosophy


தத்துவம்

ஒன்றும் இல்லாதிருப்பதே ஒப்பற்ற இன்பம் என்ற உண்மையை மனம் பொதுவாக ஒப்புக் கொள்வதில்லை. எல்லாம் இருந்தாலும் இது தேடும் இன்பத்திற்குப் போதும் என்று இன்னும் பொருள் தேடுவதை விட்டுவிடுவதும் இல்லை .மனிதனைத் தவிர்த்த எல்லா உயிரினங்களும் ஒன்றும் இல்லாமலேயே ஒவ்வொருநாளும் இனிமையாக வாழ்கின்றன.இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருந்த இன்பம் எதோ ஒன்று கைக்கு வந்த பிறகு காணாமற் போய்விடுகின்றது என்பதை அறிந்தும் அறியாதவனாய் மனிதன் இன்னும் வாழ்கின்றான்.

ஒன்றும் இல்லாமல் பிறந்தோம் ஒன்றும் இல்லாமலேயே இந்த உலகை விட்டுப் போகப் போகின்றோம்.கையில் தங்காத பொருளைச் சேர்க்க ஏன் தான் ஆசைப்படுகின்றோம் ? உலகில் வாழ்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவும் ,மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கும் போதுதான் இதுபோன்ற மன நிலை ஏற்படும்.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை இந்த உலகில் என்பார்கள் .பொருள் சேர்ப்பது தவறில்லை. ஆனால் அதற்குக் காரணம் இல்லாமல் சேர்ப்பதுதான் தவறு . எல்லோரும் பொருள் சேர்க்கின்றார்கள் என்பதற்காகவா, இல்லை எதிர்காலத்திற்கு இந்தக் கூடுதல் பொருள் பாதுகாப்பு என்பதற்காகவா நாம் பொருள் சேர்க்க முயல்கின்றோம்.

ஒருநாள் பொருளைச் சேர்த்து வை,ஒருநாள் சேர்த்த பொருளை மற்றவர்களுக்காகச் செலவழித்துப் பார்.எதில் உனக்கு இன்பம் கிடைத்தது என்று நீயே சோதித்து தெரிந்து கொள்.நான் உனக்குச் சொல்வதைவிட நீயே உனக்குச் சொல்லிக் கொள்வதைத்தான் உன் மனம் ஏற்றுக்கொள்ளும்.

பகவத் கீதையின் பொன் வரிகள் காலங் காலமாய் இதைத்தான் போதிக்கின்றன.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகின்றாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு

எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு

எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது

எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது

எது இன்று உன்னுடையதோ அது நாளை மாற்றோருவருடையதாகின்றது

மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்

இந்த மாற்றம் உலக நியதியாகும் .