Saturday, December 20, 2014

creative thoughts



இந்தியா முன்னேறுமா முன்னேறாதா ?

இந்தியா முன்னேறும் என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் இருப்பதைப் போல முன்னேற முடியாது என்று சொல்வதற்கு பல ஆயிரம் காரணங்கள் இருக்கவே செய்கின்றன.நாம் எப்போதும் நமக்கு அனுகூலமாக இருக்கும் காரணங்களை மட்டும் கருத்திற் கொள்கின்றோம்
ஏனெனில் எப்போதும் நமக்கு அனுகூலமாக இருக்கும் காரணங்கள் மட்டுமே  அரசியல் வாதிகளால் எடுத்துரைக்கப் படுவதால் அது மட்டுமே உண்மை என்று நாம் முழுமையாக நம்புகின்றோம். நாடு மற்றும் மக்கள் நலத்தின் மீது முழுமையான அக்கறை கொண்டுள்ள அரசியல் வாதிகளின் ஒரு கூட்டணியால்  அமையும் ஒரு அரசு அமையாத வரை எந்த நடவடைக்கையும் பயன் தருவதில்லை. மக்களைச் சுரண்டிப் பிழைக்க நினைக்கின்ற அரசு, அலுவலகங்கள் செழித்து வளரும் போது அங்கே உண்மையான, நேர்மையான  உழைப்புக்கும், முன்னேற்றத்திற்கும் ஒரு துளி கூட மதிப்பில்லை. உண்மையாக,நேர்மையாக   உழைத்து  முன்னேற முயன்றவர்கள் எல்லோரும் தங்கள் அப்பழுக்கில்லாத வாழ்க்கை நெறியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வருகின்றார்கள். அதர்மங்கள் எல்லாம் தர்மங்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு வருகின்றனவேடிக்கை பார்ப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாத சூழலே வளர்த்து வரும் நிலையில் ஒருவர் தம் வாழக்கையில் எப்படி தூய்மையான முன்னேற்றத்தைக் காண முடியும்.
ஊழலை ஒழித்துக் கட்ட அரசு முன் வரவேண்டும் .ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனமறிந்து தண்டனை வழங்க வேண்டும். வேண்டியவர்கள் என்றால் அவர்களைக் காப்பாற்ற அரசு முயற்சிக்கக் கூடாது.ஊழல் இன்றைக்கு  எல்லாத் துறைகளிலும் ஊடுருவியுள்ளது. அதைக் கண்காணிக்கவும்,களையவும் ஒரு வலிமையான ,விரிவான முயற்சி வேண்டும். அதில்  கொண்டுள்ள விருப்பமின்மை அரசியல் வாதிகளையும்,அதிகாரிகளையும் கட்டிப் போட்டு விட்டது. அவர்கள் பேசுவார்கள் பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் உருப்படியாக எதுவும் செய்யத் துணியமாட்டார்கள். அதனால் மக்களும் தவறான பாதையில் நடைப்போடத் தொடங்கி விட்டார்கள். இன்றைக்குப் பெருகிவரும் கொலைகளும் ,கொள்ளைகளும்,பாலியல் குற்றங்களும் அதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. எல்லாம் முன்பு செய்த, கண்டு கொள்ளப் படாத, அல்லது மறைமுகமாக ஊக்குவிக்கப்பட்ட  சின்னச் சின்னச் குற்றங்களின் பரிணாம வளர்ச்சிதான். ஆடையில் கிழிசல் இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அது இன்னும் அதிகமாகக் கிழிந்து போகத்தான் நேரிடும். முழுதும் கிழிந்த பிறகு அதைச் சரி செய்யவே முடியாது. புதிய ஆடை வாங்கினால்த்தான் உண்டு. ஆடைகளுக்குச் சரி அது நாட்டின் வளர்ச்சிக்குச் சரியாகுமா ?