Sunday, August 28, 2011

arika iyarpiyal













குளிர் காலக் கோளாறு
கார் வண்டிகளில் புதுப்பிக்கத் தக்க துணை மின்
கலங்கள் இருக்கும். இது காரில் ,உள்ள எஞ்சினின்
இயக்கத்தைத் தூண்டவும் ,எரிபொருளை எரிகலனில்
எரிக்கவும் பயன்படுகிறது. கோடை காலத்தை விட
குளிர் காலத்தில் காரின் என்ஜினை இயக்குவது சற்று
கடினமாக இருப்பதேன் ?

காரில் உள்ள மின் கலத்தின் அக மின்தடை ,வெப்ப
நிலை அதிகரிக்க குறைகிறது. அதனால் இந்த மின் கலம்
கோடை காலத்தில் அதிக மின்னோட்டத்தையும் ,குளிர்
காலத்தில் குறைந்த மின்னோட்டத்தையும் தருகிறது .
இதனால் குளிர் காலத்தில் காரின் என்ஜினை இயக்குவது
சற்று கடினமாக இருக்கிறது .

மின் கலத்தின் அக மின்தடை

ஒரே வகையான இரு மின் கலங்களின் அக மின்தடை
வேறு பட்டிருப்பதேன் ?

ஒரு மின் கலத்தின் அக மின்தடை ,செயல்படு நீர்மப்
பொருளின் தன்மை ,மின் முனைகளின் பரப்பு ,
அவைகளுக்கு இடைப்பட்ட தொலைவு இவற்றைப்
பொருத்தது. இந்தக் காரணிகள் ஒத்த வகை மின்
கலன்களாக இருப்பினும் வேறுபடுவதால் ஒவ்வொரு
மின் கலனும் வெவ்வேறு அளவு அக மின்தடையைக்
கொண்டுள்ளன

Wednesday, August 24, 2011

arika iyarpiyal

arika iyarpiyal
சூரியனின் சார்பு இயக்க வேகம்
சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் மிக வேகமாக நகர்வதாகத் தோன்றுகிறது. உச்சி வேளையில் அப்படி இல்லை. ஏன் ?

பூமியின் தற்சுழற்சி இயக்கமே சூரியன் கிழக்கு மேற்காக நகர்வதுபோலத் தோன்றச் செய்கிறது . பூமியின் தற்சுழற்சி இயக்கம் சீரானது,மாற்றம் பெறுவதில்லை என்பதால் சூரியன் ஒரு மாறாக் கோணத் திசை வேகத்துடன் கிழக்கு மேற்காக இயங்குகிறது எனலாம் . ஆனால் தூரத்தில் இயங்கும் சூரியனின் முப்பரிமாணத்தையும் அதன் வட்டப் பாதை இயக்கத்தையும் உணர முடிவதில்லை. நம் பார்வையில் சூரியனின் இயக்கம் என்பது அதன் உயர வேறுபாடே .இது காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியன் தொடு வானத்தில் இருக்கும் போது அதிகமாகவும் உச்சி வேளையில் குறைவாகவும் உள்ளதால் ,சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் மிக வேகமாக நகர்வது போலவும் உச்சி வேளையில் மெதுவாக நகர்வது போலவும் தோன்றுகிறது .

Monday, August 22, 2011

arika iyarpiyal

புதனும் வெள்ளியும்

சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களுள் முதலில் நெருக்கமாக இருப்பது புதன் (mercury ) அடுத்து வருவது வெள்ளி (venus ) .புதன் சூரியனுக்கு அருகாமையிலிருந்தும் அடுத்துள்ள வெள்ளியை விடப் பிரகாசம் குறைந்திருப்பதேன் ?

புதனும் வெள்ளியும் தன் மீது விழும் சூரிய ஒளியை எதிரொளிக்கின்றன. வெள்ளியை விட புதன் சூரிய ஒளியை மிகக் குறைவாகவே எதிரொளிக்கிறது. இதற்குக் காரணம் அவ்விரு கோள்களின் தளப் பரப்பின் மாறுபட்ட தன்மையே ஆகும்.

புதனின் தளப்பரப்பு இருண்ட எரிமலைப் படிவுப்பாறைகளால் ஆனதாக இருக்கிறது. தளப்பரப்பில் ஆயிரக்கணக்கான எரிமலை வாய்கள் காணப்படுகின்றன . எரிமலை முகடால் ஏற்படும் நிழலே இருளை ஏற்படுத்துகின்றது. கரடு முரடான இப்பாறைகள் முழுமையாகச் சூரிய ஒளியை எதிரொளிப்பதில்லை. உண்மையில் விழும் சூரிய ஒளியில் 6 சதவீதம் தான் புதன் எதிரொளிக்கிறது.



கார்பன்டை ஆக்சைடு அடங்கிய ஓர் அடர்த்தியான வளிமண்டலத்தை வெள்ளிக் கிரகம் பெற்றிருக்கிறது. கார்பன்டை ஆக்சைடு ஒரு மேகம் போல வெள்ளிக் கோளை மூடியுள்ளது. வெள்ளியில் விழும் ஒளி இந்த கார்பன்டைஆக்சைடு மேகத்தால் பெரும் பகுதி (76 %) எதிரொளிக்கப்படுகிறது. இதனால் வெள்ளி பிரகாசமாகத் தோன்றுகிறது .

Saturday, August 20, 2011

arika iyarpiyal

புவி வளிமண்டலத்தின் நிறை
பூமியைச் சுற்றி ஒரு போர்வை போல அதன் வளி மண்டலம் உள்ளது. இதில் நைட்ரஜன் (78 .08 %),ஆக்சிஜன் (20 .95 %) ஆர்கான் ( 0 .93 %) கார்பன்டை ஆக்சைடு (0 .033 %) உள்ளது. சொற்ப அளவில் நியான்,ஹீலியம் ,மீதேன் ,கிரப்பிட்டான் ,செனான், ஹைட்ரஜன் போன்ற வளிமங்கள் உள்ளன. புவி வளிமண்ட லத்திலுள்ள காற்றின் நிறையை மட்டும் அளவிட்டறிவது எப்படி ?

புவி ஈர்ப்பு விசை வளி மண்டலத்திலுள்ள ஒவ்வொரு துகளையும் கவர்ந்திழுப்பதால் பூமியில் ஊர் அழுத்தம் வளிமண்டலத்தால் ஏற்படுத்தப் படுகிறது .இயல்பான சூழலில் இது ஒரு வளி மண்டல அழுத்தம் எனப்படும் .இது வெற்றிட வெளியில் வைக்கப் பட்டுள்ள 13600 கிகி /கமீ அடர்த்தியுடைய பாதரசத்தை 760 மிமீ உயரம் உயர்த்தப் போதுமானதாக இருக்கிறது. இதன் எடை 0 . 76 x 13600 x 9 .8 என்பதால் இது 1 . 013 x 10 ^௫ நியூட்டன் விசைக்குச் சமம் . ஒவ்வொரு அலகு புவி பரப்பிலும் இவ் வழுத்தம் செயல்படுவதால் மொத்த விசை புவி பரப்பு மற்றும் வளி மண்டல் அழுத்தம் இவற்றின் பெருக்கல் பலனாகும். இது வளி மண்டலக் காற்றின் எடையாகும். பூமியின் ஆரம் 6371 கிமீ எனக் கொண்டு புவி வலிமைடலக் காற்றின் நிறையை 5 .3 x 10 ^18 கிகி என மதிப்பிடலாம் . பூமியின் நிறை மாறினால் ....
பூமி சூரியனைச் சுற்றி ஒரு சிறிய நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதோடு தன்னைத் தானே சுற்றிக் கொள்ளவும் செய்கிறது. ஒரு முறை சூரியனை வளம் வர ஓராண்டு காலமும் ,ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வர ஒரு நாளும் எடுத்துக் கொள்கிறது. பூமியின் நிறை இரு மடங்காக உயருமானால் இந்தக் காலங்கள் எப்படி மாறும் ?


அலை இயக்கத்தில் எப்படி ஊசலின் அலைவு நேரம் ஊசல் குண்டின் நிறையைச் சர்ந்திருப்பதில்லையோ ,அது போல வளைவியக்கத்தில் கோளின் சுற்றுக் காலம் அதன் நிறையைச் சார்ந்திருப்பதில்லை .கெப்ளரின் மூன்றாம் விதிப்படி ஒரு கோளின் வட்டப் பாதை ஆரத்தின் மும்மடி ,அதன் சுற்றுக் காலத்தின் இருமடிக்கு நேர் விகிதத் தொடர்பில் இருக்கிறது என்பதும் இவ் வுண்மையைக் கூறும். எனவே பூமியின் நிறை இரு மடங்கானாலும் அதன் சுற்றுக் காலம் அதே ஓராண்டாகவே இருக்கும்.
தற்சுழற்ச்சியில் அதன் கோண உந்தம் மாறுவதில்லை. நிறை இருமடங்காக அதிகரிக்கும் போது அதன் ஆரத்தின் மும்மடி இரு மடங்காக அதிகரிக்கிறது. கோண உந்தம் என்பது நேர்கோட்டு உந்தத்தின் திருப்பு திறனாகும். இதன் மாறாக் கோட்பாடு கோணத் திசை வேகம் மற்றும் ஆரத்தின் இருமடி இவற்றின் பேர்கள் பலன் மாறிலி எனத் தெரிவிக்கிறது. எனவே நிறை இரு மடங்கானால் பூமியின் தற்சுழற்ச்சி இயக்க வேகம் குறையும் .அதாவது ஒரு நாள் என்பது 24 மணி என்பதைவிடக் கூடுதலான நேரமாகும்

Friday, August 19, 2011

arika iyarpiyal

புதனில் வளி மடலம் இல்லாததேன் ?






புதனின் ஈர்ப்பு சக்தியானது ஒரு வளி மண்டலத்தை
இருத்திக் கொள்ளும் அளவு வலிமையானது .
எனினும் புதனுக்குச் சிறிதளவு கூட வளிமண்டலம்
இல்லை. இதற்க்கு என்ன காரணம் என்று
கூற முடியுமா ?
                             *************
புதனில் வளி மண்டலம் இல்லாததற்கு தப்புதல்
வேகத்தால் விளக்க முடியும் . புதனில் தப்புதல்
(escape velocity ) வேகம் 4 .5 கிமீ/வி ஆகும். புதனின்
ஈர்ப்பு விசையை மீறி ஒரு பொருள் அதை விட்டு
வெளியேறிச் செல்ல வேண்டுமானால் அது
பெற்றிருக்க வேண்டிய சிறும வேகத்தின் அளவு
4 .5 கிமீ/வி . வேகம் இதைவிடக் குறைவானால்
புதனுக்கு அது திரும்பவேண்டும் ( பூமியில்
தப்புதல் வேகம் 11 . 2 கிமீ/வி )

பூமியை நிலவு சுற்றுவதைப் போல ,சூரியனைப்
புதன் சுற்றுகிறது. அதாவது புதன் தன் ஒரே
முகத்தை சூரியனுக்குக் காட்டிக் கொண்டே
சுற்றுகிறது . சூரியனை ஒரு முறை வலம வர
புதன் 8 .8 நாட்களை எடுத்துக் கொள்கிறது.
எனவே புதன் தன் அச்சில் தன்னைத் தானே
சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமும் அதே 8 .8
நாட்கள் தாம். இதனால் சூரியனுக்குத் தெரியும்
பகுதியில் எப்போதும் தொடர்ந்து பகலாகவும் ,
தொடர்ச்சியான வெப்ப மிக்க நாட்களாகவும் ,
சூரியனுக்கு மறைவாய் இருக்கும் பகுதியில்
எப்போதும் இருட்டாகவும் தொடர்ச்சியான
குளிராகவும் இருக்கும்.

சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால்
செறிவுள்ள சூரியக் கதிர்வீச்சு, புதனின் ஒரு
பக்கத்தை மட்டும் தாக்க, அப்பகுதியில் வெப்பநிலை
600 K ஆகவும், சூரியனுக்கு மறைவாக உள்ள
எதிர் புறத்தில் வெப்ப நிலை 100 K ஆகவும்
இருக்கிறது. இந்த முரண்பாடான தட்ப வெப்ப
நிலை புதனின் வளிமண்டலத்திற்கு கேடாக உள்ளது .
அதிகக் குளிர்ச்சி காரணமாக வளிமண்டலத்திலுள்ள
வளிமங்கள் கோளின் இருண்ட பகுதியில் நீர்மமாகி
உறைந்து போய்விடுகின்றன . இதனால் ஏற்படும்
வளிமண்டல அழுத்தக் குறைவு பகல் பகுதியில்உள்ள

வளிமங்களையும் இருண்ட பகுதிக்கு எடுத்துச்
சென்று அங்கேயே உறைந்து போகச் செய்கிறது.

அழுத்தம் குறைவாக வளிமங்களின்
உறைநிலையும் குறையும். இதனால் கனமான
மூலக் கூறுகளை உடைய வளிமங்களும்
உறையும் வாய்ப்பைப் பெறுகின்றன.

பேரண்ட வெளியில் ஹைட்ரஜன் அதிகமாகச் செறிவுற்றிந்தாலும் ,பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் ,ஹைட்ரஜனைவிட அதிகமாகச்
செறிவுற்றிருப்பதையும் பொருள் தப்பிக்கும்
வேகத்தைக் கொண்டு விளக்க முடியும்





Thursday, August 18, 2011

creative thoughts

vanna vanna ennangal

ஓங்கார நாதம்

         
கருநிறக் காகம் கரைவதைக் கேளு

காட்டுக் குயில் கூவுவதைக் கேளு

கொஞ்சும் குருவியின் குரலைக் கேளு

பச்சைக் கிளியின் மொழியைக் கேளு



சுறுசுறுப்பான தேனியின் ரீங்காரம் கேளு

தலியாட்டும் பூவின் அசைவைக் கேளு

சின்னச்சிறு சிள்வண்டின் தொடரிசை கேளு

நாடி வரும் வௌவாளின் கேளாஒலி கேளு



தீண்டும் தென்றலின் ஏழிசை கேளு

துளிரும் இலையின் மெல்லிசை கேளு

ஓயாக் கடலின் ஆரவாரம் கேளு

கரையில் முத்தமிடும் சத்தம் கேளு



கொட்டும் மழையின் இன்னிசை கேளு

சொட்டும் துளியின் சுருதியைக் கேளு

ஓடும் நீரின் சலசலப்பைக் கேளு

மோதும் அருவியின் முரசொலி கேளு



கோயில் மணியின் அருளிசை கேளு

கூண்டுக் கடிகாரத்தின் ஒற்றையொலி கேளு

குழந்தை குளறும் மழலை கேளு

கூடி விளையாடும் கும்மி கேளு



படரும் நெருப்பின் வெம்மை யைக் கேளு

பாயும் ஒளியின் வேகத்தைக் கேளு

பிறந்த மண்ணின் மணத்தைக் கேளு

பிறவா வானத்தின் மௌனத்தைக் கேளு



உள்ளுக்குள்ளே ஒலிகள் ஒத்ததிரும்போது

இந்தச் சுரங்களும் புரியும் மொழியாகும்

தனியாய் ஒருவன் இருக்கும்போது

அமைதி கூட இனிய இசையாகும்

இயற்கையோடு உறவாடத் தெரிந்தால்

மௌனமும் உதவும் மொழியாகும்

எண்ணமும் இயற்கை போலாகும்

சொல்லும் சொற்களெல்லாம் சுத்தமாகும்

செய்யும் செயலெல்லாம் சுகமாகும்

வாழும் வாழ்க்கை வளமாகும்

உனக்கு மட்டுமல்ல

எனக்கும்

எல்லோருக்கும்

Monday, August 15, 2011

arika iyarpial

வெற்றிடமும் விண்ணுருப்பும்


 
இந்தப் பேரண்டம் எல்லையற்றது .இதில் பத்தாயிரம் கோடி அண்டங்கள் உள்ளன . ஒவ்வொரு அண்டத்திலும் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. பல விண்மீன்களுக்குச் சூரியனைப் போல குடும்பம்
இருக்கலாம் .இருப்பினும் அண்ட இடைவெளி ஏறக்குறைய வெற்றிடம் தான் .இந்த வெற்றிடத்தால் ஏன் துகள்களும் விண்ணுருப்புகளும் உறிஞ்சப்படுவதில்லை?

                                *****************
பூமி சூரியனைச் சுற்றி வர செய்யப்படும் வேலை




பூமி சூரியனைச் சுற்றி ஒரு வட்டப் பாதையில் இயங்கிச் செல்ல அதன் மீது ஒரு விசை செயல் படுகிறது .எனவே இவ் விசையால் பூமியின் மீது ஒரு வேலை செய்யப்படுகிறது எனலாம். அப்படிஎன்றால் பூமியின் நிலையாற்றல் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இது சரியா.?

                        ***************

வெற்றிடத்தால் ஒரு பொருள் உறிஞ்சப்படுவதற்கு முக்கியக் காரணம் அழுத்தச் சரிவாகும். தாழ்ந்த அழுத்தமுள்ள பகுதியை நோக்கி உயர் அழுத்தமுள்ள பகுதியிலுள்ள பொருள் இயங்கிச் செல்கிறது. வெற்றிடத்தில் அழுத்தம் சுழியாக இருப்பதால் பொருள்கள் அதை நோக்கிச் செல்கின்றன. அண்டவெளியில் அடர்த்தி மிகவும் சொற்பம். அனவே நீண்ட தொலைவிற்கு பெரிய அளவில் அழுத்தச் சரிவு இல்லை. அதனால் அதன் பொருட்டு பேரளவிலான விண்ணுருப்பின் இயக்கமும் இல்லை எனலாம். மேலும் இந்த அழுத்தச் சரிவும் எல்லாத் தேசைகளிலும் இருப்பதால்.உயர் மற்றும் தாழ்ந்த அழுத்தப் பகுதிகளிடையே இயக்கம் இருப்பதில்லை.


                              *************


மைய நோக்கு விசை காரணமாக வேலை ஏதும் செய்யப்படுவதில்லை. ஏனெனில் செயல்படும் விசை இயங்கு தெசைக்கு ஒவ்வொரு கணமும் செங்குத்தாக இருக்கிறது. மைய நோக்கு விசையும் அதற்குச் சமமாக இருக்கும். மைய விலகு விசையும் ஒரு பொருள் வட்டப் பாதையில் நிலையாக இயங்கிச் செல்ல தேவையாக இருக்கிறது .



Thursday, August 11, 2011

Vanna vanna Ennangal

உடன்கட்டை




என்னோடு நீ உன்னோடு நான்

என்றைக்கும் இணைபிரியாத் தோழர்கள்

நம் நட்புக்கு இல்லை

இன்னொரு எடுத்துக்காட்டு


நான் பிறந்தபோது நீயும் புகுந்தாய்

நீ வளரும் போது நானும் வாழ்ந்தேன்

பிறந்தநாள் மட்டுமின்றி

பிறந்த இடமும் நேரமும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் உண்டபோது நீயும் சுவைத்தாய்

நீ தாகமென்றபோது நானும் குடித்தேன்

நான் நீயாக நீ நானாக

பசிப்பதும் புசிப்பதும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் விளையாண்டபோது நீயும் ரசித்தாய்

நீ வென்றபோது நானும் மகிழ்தேன்

எனக்குள் நீவர உனக்குள் நான்வர

உருவமும் உணர்ச்சியும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் பாடியபோது நீயும் பரவசப்பட்டாய்

நீ ஆடியபோது நானும் பாராட்டினேன்

சிந்தையும் செயலும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் விழுந்தபோது நீயும் வீரிட்டாய்

நீ வாடியபோது நானும் வருந்தினேன்

என்கண்ணில் நீரவர உன்கண்ணில் இரத்தம்வர

இன்பமும் துன்பமும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் உறங்கியபோது நீயும் கனவுகண்டாய்

நீ விழித்தபோது நானும் எழுந்தேன்

நீ நானாக நான் நீயாக

எல்லா நிகழ்வுகளும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


என் ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும்

நீயே காரணமென்று

எல்லோரும் சொல்கிறார்கள்

இருந்தும் உன்னை

இன்னும் அறிந்துகொள்ளவே இல்லை


இறந்தபின்பு என்றால்

அன்பிற்கு களங்கமென்று

நான் இறக்கும்போதே நீயும்

உடன்கட்டை ஏறுவேனென்று

உறுதியாய் இருகிறாய்

நானே நீ நீயே நான்

என்பதைப் புரிந்து கொளவே

என்வாழ்க்கை முடிந்துவிட்டதே

நான் மீண்டும் வருவேன்

உன்னைப் புரிந்து கொளவதற்காக



Arika ariviyal

சூரியனின் வெப்பநிலை எந்த வெப்பமானியால் அளவிடப்பட்டது ?


           


சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர்
தொலைவில் இருக்கிறது . இதன் வெப்பநிலை இவ்வளவு
என்று எதை வைத்து அளவிட்டார்கள் ?
                                                     ***************

சாதரணமாக ஒரு பொருளின் வெப்பநிலையை
வெப்பமானிகளைக் கொண்டு அளவிடுகிறோம் .
இதில் உள்ள ஊடக அணுக்கள் வெப்ப நிலைக்கு
ஏற்ப இயக்கம் பெற்று விரிவடைவதால் ,அதில்
ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு வெப்பநிலை
மதிப்பிடப்படுகிறது .

சூரியன் மற்றும் விண்மீன்களில் அணுக்கள்,
அணுக்கருத் துகள்கள் எல்லாம் வெப்பஞ் சார்ந்த
இயக்கத்தைப் பெற்றுள்ளன . அதன் மூலம்
அவற்றின் வெப்பநிலையை அறியலாம். ஆனால்
சூரியனின் புறப்பரப்பில் இந்த இயக்கம்
அளவிட்டறியமுடியாதபடி தாழ்வாக இருக்கிறது .
துல்லியமான அளவீட்டிற்கு இது உகந்ததல்ல .

சூரியனின் புறப்பரப்பின் வெப்பநிலையை
கரும்பொருள் கதிர்வீச்சின் நிறமாலையைக்
கொண்டு மதிப்பிடலாம். ஸ்டீபன் விதியைக்
கொண்டும் மதிப்பிடலாம். வளி மண்டலத்திற்கு
அப்பால் ஒரு வினாடியில் ஒலிக்குச்
செங்குத்தாக உள்ள ஒரு சதுர மீட்டார் பரப்பில்
விழும் சூரிய ஆற்றல் சூரிய மாறிலி எனப்படும்.
 சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரித்
தொலைவிலிருந்து ஒரு வினாடியில் சூரியன்
உமிழும் ஆற்றலைக் கணக்கிடலாம். ஸ்டீபன்
விதிப்படி ஒரு கரும்பொருள் ஓரழுப் பரப்பின்
வழியாக ஒரு வினாடியில் உமிழும் ஆற்றல் ,
அப்பரப்பின் சார்பில வெப்பநிலையின் நான்கு
மடிக்கு நேர் விகிதத் தொடர்பில் இருக்கிறது.
சூரியனின் ஆரத்தைக் கொண்டு அதன் புறப்பரப்பை
அறிந்து அதை ஸ்டீபன் விதிக்கு உட்படுத்தி ,சூரியனின்
புறப் பரப்பின் வெப்பநிலையை அறியலாம். இது
சூரியனுக்கு 6000 கெல்வின் ஆக உள்ளது.

Vanna vanna Ennangal

ஊக்கம் தரும் ஆக்கம்
             
             



சின்ன ஓட்டை இருந்தால் போதும்

சிங்காரக் கப்பலும் அமிழ்ந்து போகும்

சீரிய ஊக்கம் இருந்தால் போதும்

சிகரம் எட்ட அழைத்துப் போகும்



நுண்ணிய ஓட்டை இருந்தால் போதும்

ஓயாத நுரையீரலும் ஓய்ந்து போகும்

திண்ணிய ஊக்கம் இருந்தால் போதும்

எண்ணியது எண்ணியவாறு நிகழ்ந்து போகும்



அற்பப் பழுதொன்று இருந்தால் போதும்

ஆற்றல்மிகு இயந்திரமும் நின்று போகும்

சிதறாது ஊக்கம் இருந்தால் போதும்

தவறாது வெற்றி வந்து சேரும்

Wednesday, August 10, 2011

Arika ariviyal

சந்திரனில் நீரை ஊற்றினால் ....


ஒரு விண்வெளி வீரர் நிலவுக்குச் சென்று ,அங்கு ஒரு சோதனை செய்கிறார் .தன்னுடைய வெப்பக் காப்பு செய்யப்பட்ட குடுவையிலிருந்து 20 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் உள்ள நீரை ஒரு பீக்கரில் ஊற்றுகிறார் .அப்போது என்ன நிகழும் ?

***************

பூமிக் கிரகணம்

சூரிய கிரகணம் என்பது நிலவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதால் நிலவு சூரியனை மறைக்க விளைவதாகும் .சந்திர கிரகணம் என்பது போமியின் நலளுக்குள் சந்திரன் நுழைய விளைவதாகும் .நிலவில் இருந்து கொண்டு பூமி சூரியனை மைக்கும் பூமிக் கிரகணத்தைக் காண முடியுமா ?



நிலவில் வளிமண்டலம் ஏதுமில்லை .எனவே வலி மண்டல அழுத்தம் சுழியாக இருக்கும். இச் சூழலில் நீர் தாழ்ந்த வெப்ப நிலையிலையே கொதித்து ஆவியாகும். அதற்குத் தேவையான உள்ளுறை வெப்பத்தை நீரிலிருந்தே எடுத்துக் கொள்வதால், நீரானது விரைந்து குளிர்சியுற்று பனிக் கட்டியாக உறைந்து விடுகிறது.



சூரிய கிரகணத்தை பூமியிலிருந்து நோக்கும் பொழுது நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும். அதே காலத்தில் நிலவிலிருந்து பூமிக் கிரகணத்தைப் பார்க்கலாம். அதாவது பூமி நிலவின் நிழலுக்குள் நுழைந்து மறைவதாகும். ஆனால் நிலவின் அளவு பூமியைக் காட்டிலும் ஓரளவு சிறியது. பூமியின் சராசரி ஆறாம் 6370 கிமீ ,நிலவின் ஆறாம் 1738 கிமீ . எனவே முழு மறைவு என்பது இல்லை. பூமிக் கிரகணம் சந்திரனின் கலைகள் போலத் தோன்றும்.

சந்திர கிரகணத்தை பூமியிலிருந்து பார்க்கும் பொது.நிலவிலிருந்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.அப்போது பூமி சொரியனுக்கும் நிலவிற்கும் இடையே இருக்கும். .



arika iyarpiyal

சூரியனும் நிலவும்

                     


பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நிலவு பூமியைச் சுற்றி வருகிறது .

சூரியனுக்கும் நிலவிற்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலவிற்கும்

பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசையைவிட அதிகம். அப்படி

இருக்கும் பொழுது நிலவு ஏன்

சூரியனால் கவர்ந்திழுக்கப் படாதிருக்கிறது ?



ஹைட்ரஜனின் செழுமை

பெரு வெடிப்பிற்கு(Big bang ) பிறகு பிரபஞ்சத்தில் முதன் முதலாக

 இயற்கையால் தொகுப்பாக்கம் செய்யப்பட்ட முதல் தனிமம்

ஹைட்ரஜன் .இதன் செழுமை பிரபஞ்சத்தில் 93 % .ஆனால் புவி

வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய இது 1 % தான்.

 ஹைட்ரஜனின் செழுமை பூமியின் வளி மண்டலத்தில் குறைவாய்

இருப்பதற்கு என்ன காரணம் ?

                                                      *****************

சூரியனின் நிறை பூமியின் நிறையைப்போல 330 000
மடங்கு உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு ,பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட
தொலைவைப் போல் 389 மடங்கு. அதாவது சூரியன்
சந்திரன் மீது செலுத்தும் கவர்ச்சி விசை, பூமி சந்திரன்
மீது செலுத்தும் கவர்ச்சி விசையை விட 2 . 1 மடங்கு
அதிகம். எனினும் சந்திரன், சூரியனின் கவர்ச்சி விசையால் கவரப்படுவதில்லை. இதற்குக் காரணம் பூமியும் சந்திரனும்
இரு உறுப்புகளால் ஆன ஓர் அமைப்பு . இதன் பொது
நிறை மையம் சூரியனை வட்ட வலையைப் பாதியில்
சுற்றி வருகிறது. எனவே நிலவு சூரியனை நோக்கிச்
செல்வதில்லை.

                                           ****************



பூமியின் சராசரி வெப்ப நிலையாக 303 K யைக் கொண்டு,
ஹைட்ரஜனின் வெப்பஞ் சார்ந்த இயக்க வேகத்தைக்
கணக்கிட்டால் 2 . 7 கிமீ /வி என்ற மதிப்பைப் பெறலாம்.
பூமியிலிருந்து ஒரு பொருள் தப்பித்து வெளியேறிச் செல்ல வேண்டுமானால் அதன் இயக்க வேகம் குறைந்தது
11 . 2 கிமீ/வி என்றிருக்கவேண்டும். அப்படி இல்லாததால்
ஹைட்ரஜன் அணு பூமியை விட்டு வெளியேறுவதில்லை.
எனினும் இது சராசரி இருமடி வர்க்கமூல வேகம்தான்
( root mean square velocity ) ஹைட்ரஜனின் வெப்பஞ் சார்ந்த
இயக்க வேகம் சுழி முதல் ஆனந்தம் (infinity ) வரை
(கொள்கை அளவில் ) இருக்கும். இந்த உயர் வேக அணுக்கள் சிறுபான்மையே . இவை வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
மேலும் 30 - 50 கிமீ உயரங்களில் உள்ள நீர் மூலக்கூறுகள் ,
சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்களின் ஆற்றலால்
பகுக்கப்பட்டு ஹைட்ரஜனாகவும் ,ஆக்சிஜனாகவும்
சிதைவுறும் போது, ஹைட்ரஜன் அணுக்கள் கூடுதலான
இயக்க வேகத்தையும்,ஆக்சிஜன் அணு குறைவான இயக்க
வேகத்தையும் பங்கிட்டுக் கொள்கின்றன. ஏனென்னில்
அவை பெறும் வேகம் அவற்றின் நிறைக்கு எதிர்விகிதப்
பொருத்தத்தில் இருக்கிறது. அதனால் ஹைட்ரஜன் அணு
வளி மண்டலத்திலிருந்து கசிந்து வெளியேறக்கூடிய
வாய்ப்பைப் பெறுகிறது.

Tuesday, August 9, 2011

Vanna vanna Ennangal

கீதை வழியில் ஒரு மொழி






பிறக்கும் போது யாரிடமாவது அனுமதி கேட்டாயா ?

இல்லைதானே .

வளரும்போது யாரிடமாவது அனுமதி கேட்கின்றாயா ?

இல்லைதானே .

உணர்சிகள் வெடித்தபோது யாரிடமாவது அனுமதி கேட்கின்றாயா ?

இல்லைதானே .

மடியும் போது யாரிடமாவது அனுமதி கேட்கப் போகின்றாயா ?

இல்லைதானே .



எல்லாம் நடக்கிறது

எல்லாம் தானாக நடக்கிறது

உனக்கு உன்மூலமாக

அவனுக்கு அவன்மூலமாக

எல்லோருக்கும் அவரவர்மூலமாக



எழுச்சியும் வீழ்ச்சியும் ஆண்மையும் அடிமையும்

வெற்றியும் தோல்வியும் இன்பமும் துன்பமும்

ஊக்கமும் உறக்கமும் உயர்வும் தாழ்வும்

வளமும் வறுமையும் சுகமும் சோகமும்



ஏற்பதும் நீதான் இகழ்வதும் நீதான்

அதுவும் நீதான் இதுவும் நீதான்

எல்லாவற்றிற்கும் நீயே காரணமெனில்

எதிரியைச் சுட்டிக்காட்ட என்ன இருக்கிறது ?

இயலாமைக்கு ஒரு காரணம் கிடைத்தது

என்பதைத் தவிர

Thursday, August 4, 2011

arika iyarpiyal

அறிக இயற்பியல்

கடல் ஏற்ற வற்றம்
  
சூரியன் மற்றும் சந்திரன் பூமியின் மீது செலுத்தும்
ஈர்ப்பு விசைகளை ஒப்பிட்டால் ,சூரியன் பூமியை
ஈர்க்கும் விசை ,சந்திரன் பூமியை ஈர்க்கும் விசையை
விட 170 மடங்கு வலுவானது என்பது தெரியவரும்.
எனவே சூரியனால் ஏற்படும் கடல் ஏற்றமே
சந்திரனால் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக
உயரமானதாக இருக்க வேண்டும் என
எதிர்பார்க்கலாம் .ஆனால் உண்மையில் சந்திரனால்
ஏற்படும் கடல் ஏற்றமே சூரியனால் ஏற்படுவதைக்
காட்டிலும் அதிக உயரமானதாக இருக்கிறது.
இதற்கு காரணம் என்ன ?

                                          ***************
சூரியனும் சந்திரனும் பூமி முழுவதையும் ஒரே அளவு
ஈர்ப்பு விசையுடன் இழுப்பதில்லை. ஏனெனில்
பெரிய கோள வடிவமான பூமியின் ஒவ்வொரு
பகுதியும் சூரியன் மற்றும் சந்திரனிலிருந்து
வெவ்வேறு தொலைவில் இருப்பதால் வெவ்வேறு
அளவு ஈர்ப்புக்கு உள்ளாகின்றன .பூமி முழுவதும்
உறுதியான திண்மப் பொருளாக இருந்தால்
இப்படிப்பட்ட வேறுபாடான ஈர்ப்பால் உருத்திரிபு
ஏற்படுவதில்லை.பூமியின் புறப்பரப்பில் உள்ள
கடல் பூமியின் உள்ளகத்தைப் போல உறுதியானதாக
இல்லை. அதனால் அது ஏற்ற வற்றங்களினால்
உருத்திரிபுக்கு ஆளாகின்றன.எனவே கடலில்
ஏற்படும் ஏற்ற வற்றத்தின் அளவு
சூரியன் மற்றும் சந்திரன் பூமியின் மையத்திலுள்ள
ஒரு பொருளை ஈர்க்கும் விசைக்கும் ,பூமியின்
புறப்பரப்பிலுள்ள அதே பொருளை ஈர்க்கும் விசைக்கும்
உள்ள வேறுபாட்டைப் பொருத்திருகிறது என்று கூறலாம்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு ,
பூமியின் ஆரத்தைவிட பல மடங்கு அதிகமானது,
வேறுபாட்டு ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதில்லை .
ஆனால் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு ,
பூமியின் ஆரத்தைப் போல சில மடங்கே அதிகமானது.
அதனால் வேறுபாட்டு ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறது.

Wednesday, August 3, 2011

arika iyarpiyal

அறிக இயற்பியல்


எரிகல்லும் விண்கலனும்


விண் வெளியிலிருந்து எரிகல் பூமியின் வளி மண்டலத்தை
ஊடுருவும் போது உராய்வின் காரணமாகப் பெருமளவு
வெப்பத்தைப் பெறுகிறது. இதனால் அது வளி
மண்டலத்தைக் கடக்கும் பொழுதே எரிந்து சாம்பலாகி
விடுகிறது. வளி மண்டலம் மட்டும் இல்லாது போனால்
இந்த விண் கற்கள் அங்குமிங்குமாகப் பூமியில் விழும்.
அவற்றின் இயக்க வேகம் மிக அதிகமாக இருப்பதால்
சிறிய கல் கூட பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.
எரிகல் போல வளி மண்டலத்தை ஊடுருவும் ஏவூர்தி
மற்றும் விண் கலன்கள் எரிந்து போய்விடுவதில்லையே
ஏன்?
                                    *******************
 
எரிகல் பூமியால் ஈர்க்கப்பட்டு வளி மண்டலத்தை
வேகமாக ஊடுருவும் போது ,உராய்வின் காரணமாக
அதன் வெப்பநிலை உயருகிறது. இதற்கு அதன்
புறப்பரப்பு பெற்றிருக்கும் கரடு முரடான பரப்பும்
காரணமாகும். எரி கல்லின் உயர் வெப்பம் தாங்கும்
தன்மை வரம்பிற்கு உட்பட்டிருப்பதால் அது எரிந்து
சாம்பலாகி விடுகிறது. ஆனால் ஏவூர்தி மற்றும்
விண்கலங்களில் மென்பரப்பினால் உராய்வு பெருமளவு தவிர்க்கப்படுவதுடன் ,உயர் வெப்பம் தாங்க வல்ல பூச்சுகளையும் ,பொருட்களையும் பயன்படுத்துவதினால்
எரிகல் போல அவை எரிந்து போவதில்லை .

Monday, August 1, 2011

vinveliyil ulaa

அறிக இயற்பியல்


பால்வெளியில் சூரியன்

            


பேரண்டத்தில் இருக்கும் பத்தாயிரம் கோடி அண்டங்களுள்
ஒன்று பால்வெளி மண்டலம் (Milky way ).ஒவ்வொரு
அண்டத்திலும் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன.
 பால் வெளி மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்மீன் நமது
சூரியன். பால் வெளி மண்டலம் ஒரு குவி வில்லை போல
ஏறக்குறைய தட்டையான வடிவத்தில் இருக்கிறது. இதன்
நீளம் சுமார் 90,000 ஒளி ஆண்டுகள்.நமது சூரியன்
அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 27,000 ஒளி ஆண்டுகள்
தொலைவில் இருக்கிறது. அண்டத்தின் தடிப்பு மையத்தில்
16000 ஒளி ஆண்டுகள், ஆனால் சூரியன் இருக்குமிடத்தில்
தடிப்பு 3000 ஒளி ஆண்டுகள்.பால் வெளி யில் சூரியனின்
அமைவிடத்தை எப்படிக் கண்டறிகின்றர்கள்?
                            *********************

சூரியன் பால் வெளி மண்டலத்தின் மையத் தளத்திற்கு
மிக நெருக்கமாக இருக்கிறது. மைய- விளிம்பு
இடைவெளியின் 3 ல் 2 பங்கு தொலைவில்
சூரியன் உள்ளது. பரந்த வெளி முழுவதையும் பல கோண இடைப்பகுதிகளாக வகுத்து ப் பார்த்த போது,பால் வெளி
ஒரு முழுமையான கோண வடிவமாகக் காட்சி அளித்தது.
இது பால் வெளி மண்டலத்திலுள்ள விண்மீன்கள்
எல்லாம் பழத்தினுள் பொதிந்திருக்கும் விதைகள போல
உள்ளன என்று தெரிவித்தது. இதை ஒவ்வொரு கோண
இடைப்பகுதியிலும் உள்ள விண்மீன்களைக்

கணக்கிட்டு உறுதி செய்துள்ளனர் .கோணத்தொலைவு
அதிகரிக்க விண்மீன்களின் எண்ணிக்கை
பெருமளவு குறைகிறது. பால் வெளி மண்டலத்தின்
மைய அச்சில் விண்மீன்களின் பங்கீட்டுத்தனத்தை
அளவிட்டறிந்த போது அது சக்கிட்டாரியஸ்
(Sagittarius ) என்ற விண்மீன் கூட்டம் அமைந்துள்ள
பக்கம் செறிவு பெருமமாகவும் ,அதற்கு 180 டிகிரி
கோணத்தில் உள்ள அக்ரியா (Augriya ) விண்மீன் கூட்டம்
அமைந்துள்ள பக்கம் செறிவு சிறுமமாகவும் உள்ளது.
இது சூரியன் அண்ட மையத்திலிருந்து ஓரளவு விலகி
உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

சக்கிட்டாரியஸ் உள்ள பக்கம் சூரியனுக்கும் அண்ட
மையத்திற்கும் உள்ள பகுதியையும் ,அக்ரியா உள்ள
பக்கம் வெளிப் பகுதியையும் குறிப்பிடுகிறது.