Sunday, September 30, 2012


வேதித் தனிமங்கள் - டைட்டானியம் (Titanium ) -கண்டுபிடிப்பு 1791 ல் இங்கிலாந்து நாட்டின் மத போதகரான கிரேகோர் (W.Gregor) என்பார் அந்நாட்டின் மெனாக்சின்(Menaccin) கணவாய்ப் பகுதியிலிருந்து கிடைத்த ஒரு வகையான கருப்பு மணலை பகுத்தாராய்ந்து அதில் ஒரு புதிய தனிமம் இருப்பதை அறிவித்தார். இப் புதிய தனிமத்திற்கு மெனாக்சின் என்றும் கனிமத்திற்கு மெனாக்கொனைட் என்றும் பெயர் சூட்டிவிட்டார். இன்றைக்கு அக் கனிமத்தை இல்மனைட் (ilmanite) என்றும் தனிமத்தை டைட்டானியம் என்றும் அழைக்கின்றார்கள் . மார்டின் கலாப்ரோத் என்ற ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் 1795 ல் ஹங்கேரி நாட்டிலிருந்து பெற்ற ரூட்டைல் என்ற கனிமத்திலிருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுத்தார்.டைட்டான் என்பது பூமியைக் குறிப்பிடும் காயியா (Gaea) என்ற கடவுளின் மகனாகும். சில ஆண்டுகளுக்குப் பிறகே கலாப்ரோத்தும் கிரேகோரும் கண்டுபிடித்தது ஒரே தனிமம் எனத் தெரிய வந்தது. 1895 ல் பிரான்சு நாட்டின் வேதியியல் அறிஞர் ஹென்றி மோய்சன் (Hendri Moissan) மின்வில் உலை (arc furnace) மூலம் டைட்டானியம் ஆக்சைடை ஹைட்ரஜனால் ஆக்சிஜனிறக்கம் செய்து ஏறக்குறைய தூய டைட்டானியத்தைப் பெற்றார். பண்புகள் இதன் வேதியியல் குறியீடு Ti ,அணுவெண் 22 ,அணு எடை 47.9 அடர்த்தி 4540 கிகி /கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1953 K ,3573 K ஆகும். டைட்டானியம் மிகச் சொற்ப அளவு தூய்மையற்று இருந்தாலும் அது உடைந்து நொறுங்கிப் பட்டறைப் பயன்களுக்கு உபயோகமாய் இருப்பதில்லை. தூய டைட்டானியம் குறைந்த அடர்த்தியும் மிகுந்த வலிமையையும் கொண்ட பிரகாசமான வெண்ணிற உலோகமாகும். பூமியில் அதிக அளவில் கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் இது 9 வது இடத்தைப் பெறுகிறது.செம்பு ,துத்தநாகம் ,ஈயம்,தங்கம் வெள்ளி, பிளாட்டினம்,மாலிப்பிடினம்,டங்க்ஸ்டன்,நிக்கல், டின் (வெள்ளீயம் ) இவற்றை விட பூமியின் புறவோட்டில் டைட்டானியம் அதிகமாகக் கிடைக்கிறது. அதைப் பிரித்தெடுக்கும் கடிய வழிமுறைகளினால் அது இன்றைக்கும் ஓர் அரிய உலோகமாகவே கருதப் படுகிறது . டைட்டானியம் அதிக அளவில் ஆஸ்திரேலியாவிலும் அடுத்தபடியாக அமெரிக்கா,இந்தியா ,பிரேசில் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது. நம் நாட்டில் கேரளக் கடற்கரை மணலில் இல்மனைட் என்ற கனிமமாகக் கிடைக்கிறது. பயன்கள் டைட்டானியம் டை ஆக்சைடு வெள்ளை நிறமியாகும் .இது ஈய வெள்ளையைக் காட்டிலும் சிறப்பானது. ,நச்சுத் தன்மை கொண்டதில்லை. கடல் நீரினால் ஏற்படும் உலோக அரிப்பை டைட்டானியம் பூச்சு தவிர்க்கிறது.இது தோல் மற்றும் துணிகளுக்குச் சாய மிடுதலிலும்,கண்ணாடி,பீங்கான்,செயற்கை ரத்தினங்கள் (போலி) இவற்றின் உற்பத்தி முறையிலும் பயன்படுகிறது. சிர்கோனியா மற்றும் ஸ்ட்ராண்டியம் டைட்டானேட் போலி வைரங்கள் தயாரிக்கப் பயன்தருகின்றன.ஸ்ட்ராண்டியம் டைட்டானேட் டின் ஒளி பகுப்புத் திறன் அதிகமாக இருப்பதால் பட்டை தீட்டப் பட்ட ஸ்ட்ராண்டியம் டைட்டானேட் அதிகமாகச் ஜொலிக்கிறது உயர் வெப்பநிலையிலும் டைட்டானியம் ஆக்சைடு நிலைப்புத் தன்மை மிக்கதாக இருக்கும் (உருகு நிலை 1800 C ) .மெதுவாக வேதி வினைகளில் ஈடுபடுவதற்குக் காரணம் நான்கு இணைதிறன் கொண்ட டைட்டானியம் அயனி இரண்டு இணைதிறன் கொண்ட ஆக்சிஜனுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதுதான். டைட்டானியம் ஆக்சைடு அடர் கந்தக அமிலம் ,அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ,காரக் கரைசல்கள், கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை.ஆனால் டைட்டானியம் மென் அரிப்பு மூலங்களை மட்டுமே எதிர்க்கிறது.அலுமினியம் போல ஒரு ஆக்சைடு படலத்தை காற்று வெளியில் ஏற்படுத்திக் கொள்வதே இதன் காரணம் பூமியை விடச் சந்திரனில் டைட்டானியம் ஆக்சைடு அதிகமாய் உள்ளது .உயர் வெப்ப நிலையில் டைட்டானியம் ,ஆக்சிஜன் ,நைட்ரஜன், குளோரின் மற்றும் பிற அலோகங்களுடன்வினையாற்றுகிறது. .நீர்த்த அமிலங்களில் கூட கரைந்து விடுகிறது

Kavithai


கவிதை

ஓர்ஊரில் ஓர் ஏழைக் குடியானவன்

அழகான ஆண்குதிரை இருந்தது அவனிடம்

அரசன் ஒருநாள் நகர்வலம் வந்தான்  

ஆசைப்பட்டான் அந்த அசுவம் கண்டு

குறைவின்றி பொருள் தருவதாய்ச் சொன்னான் .

குடியானவன் குதிரையைக் கொடுக்க  மறுக்க

கொற்றவன் காரணம் யாதென வினவினான்

இன்னொரு பிள்ளைபோல இந்தக் குதிரை

இதைவிட்டுப் பிரிய  மனமில்லை என்றான்

குடிசையில் வாழ்ந்தவன் குதிரையை விற்று

கோட்டையில் வாழும் வாய்ப்பை கோட்டைவிட்டான்

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

 

நாட்டியக் குதிரை தோட்டத்தில் மேய்ந்தபோது

நச்சுப் பாம்பொன்று மிதிபட்டு இறந்தது

குதிரையே குலக்கடவுள் போல வந்து

அவன் குடும்பத்தைக் காத்தது  என்றும்  

அன்றைக்கு அரசனிடம் விற்றிருந்தால் இன்றைக்கு

இல்லாதிருப்பான் என்றும் சொல்லக் கேட்டான்  

ஒருமாதம் ஓடிய பின் ஒருநாள்

ஓடி மறைந்தது  அந்தக் குதிரை

எங்கு தேடியும் கிடைக்கவில்லை  .

ஏமாளி இவனைப் போல எவனுமில்லை

என்று எல்லோரும் எள்ளி நகைத்தனர்

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

 

ஓடிப்போன குதிரை திரும்பி வந்தது.

இன்னொரு குதிரையையும் கூட்டிவந்தது  

அறிவிலி என்றோர் அப்பொழுது ஆய்ந்தோனென்றார்

புதிதாய் வந்த  குதிரையை அடக்க முயன்ற

புதல்வன் தவறி விழுந்து நொண்டியானான்

ஆன்றவன் என்றோர் அப்பொழுது  அறிவிலியென்றார்

நாட்டியக் குதிரையால் நாட்டில் வித்தைகாட்டி

நற்பொருள் ஈட்டி நாளும் உயர்ந்தபோது

அறிவிலி மீண்டும் அதிபுத்திசாலியானான்

உழைத்துக் களைத்த குதிரை உடன் இறந்தது

உலகம் அவனை  அதிருஷ்டமில்லாதவன் என்றது

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

 

அண்டை நாட்டான் போர் தொடுத்தான்

அகநகர் காக்க வீட்டுக்கு ஒருபிள்ளை கேட்டான்

முதியவர் நொண்டி குழந்தைகள் வேண்டாமென்ற

முடிவால் நொண்டி மகன் வீட்டில் இருந்தான்

பெற்ற பிள்ளைகளை மற்றவர் அனுப்பி வைத்து

பெயரன் திரும்பி வருவானா மாட்டானா

நாட்கணக்கில் மனம்மறுகித்  தவித்தபோது

அதிருஷ்டமில்லாதவன் என்றவன் அதிருஷ்டசாலியானான்

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்

சொல்லுவார் சொன்னதால் வெல்லுவார் ஒருநாளும்

வெல்லாமற் போனதில்லை என்பதே இயற்கை

Friday, September 28, 2012

Cartoon


 கார்ட்டூன்

மயன்மார் நாட்டின் புரட்சித் தலைவி சான் சூ (San Suu)அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உரை யாற்றிய போது,காந்தியடிகளின் போதனைகளை உலக மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .

தீவிரவாத அச்சுறுத்தல்கள் மிகுந்து வரும் இந்நாளில் காந்தியடிகளின் அகிம்சை வழிமுறை மட்டுமே உலகைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தது என்பதை நாம் அறிந்திருக்கின்றோமோ இல்லையோ  சான் சூ அதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.அதனால் தான் உலக மேடையில் உரக்கக் கூவியதோடு மட்டுமின்றி அரசியல் தலைவர்களை விட்டுவிட்டு உலகை இனி ஆளப் போகும் மாணவர்களின் எண்ணத்தில் இந்த விதையைத் தூவியிருக்கிறார் நம் நாட்டின் அப்துல் கலாம் போல.

இந்தியாவில் இனி ஆளப் போகும் மாணவர்களையும்                   இந்திய அரசியல்வாதிகளே ஆண்டு கொண்டிருப்பதால்,காந்தியடிகளின் போதனைகளை இங்கே மாணவர்களை விட அரசியல் தலைவர்களே முதலில் படித்துப் பின்பற்ற வேண்டும்.

Thursday, September 27, 2012

Micro aspects of developing inherent potentials


Micro aspects of developing inherent potentials

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் அதைப் பற்றி ஒருமுறையாவது முழுமையாகச் சிந்திக்க வேண்டும்.செல்லும் வழி தெரியாவிட்டால் இலக்கு இருந்தும் எவ்வளவு வேகமாக வண்டியைச் செலுத்தினாலும் செல்லுமிடத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது அந்தச் செயலை ஏன்,எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சரியாகத் தீர்மானம் செய்யுங்கள் இது பெரும்பாலும் அதனால் அவருக்கும் ,அவரைச் சார்ந்தவர்களுக்கும் ,பிறருக்கும் கிடைக்கும் பயன்களின் விகிதத்தையும் பயனைத் துய்க்கும் இடைக்காலத்தின் நெடுக்கையையையும் பொருத்திருக்கும்.பொதுவாக ஒருவர் நெடுங்காலத்திற்குப் பிறகு கிடைக்கும் பயனுக்காக ஒரு செயலில் இறங்குவதை அதிகம் விரும்புவதில்லை. செயலால் கிடைக்கக் கூடிய உடனடி மற்றும் பிற்பயன்கள் யாவை என்பதைத் தெரிந்து கொண்டால் செயலில் ஈடுபடக் கூடிய விருப்பம் தூண்டப்படும். நீங்கள் விரும்பிய செயலைச் செய்ய முயலும் போது அதை எந்தத் தடையுமின்றி செய்து முடித்துவிட முடியாது.ஒரு பொருளின் வேக மாற்றத்தால் ஏற்படும் நிலை மாற்றத்திற்கு அந்தப் பொருளின் நிறையே ஒரு தடையாக இருப்பது போல ஒவ்வொரு செயலுக்கும் தடைகள் இருக்கவே செய்கின்றன. சில புறத் தடைகள் -சில அகத் தடைகள். எல்லோரும் புறத் தடைகளைப் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்கு அகத் தடைகளைப் பற்றி புரிந்திருப்பதில்லை.உண்மையில் புறத்தடைகளை விட அகத்தடைகளே உள் எதிரியாக இருந்து கொண்டு அதிகப் பாதிப்பை ஏற்படுத்திகின்றன. தடைகளைக் கண்டு பயந்தால் செயலே செய்ய முடியாது   செய்யப் போகும் செயலுக்கு எவை எல்லாம் தடைகளாக இருக்கின்றன எவை எல்லாம் அனுகூலங்களாக இருக்கின்றன என்பதை நாம் முதலில் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தடைகளைச் சந்தித்து வெற்றிகொள்ள வழிகள் இருக்கின்றனவா என்பது பற்றியும், அனுகூலங்களை வீணாகப் போய்விடாமல் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளைப் பற்றியும் அலசி அறிந்து கொள்ள வேண்டும்.தடைகளே இல்லாமல் எந்தச் செயலும் இல்லை என்பதால் தடைகளை ஒருவர் சந்தித்தே ஆகவேண்டும்.அகத் தடைகள் செயலைச் செய்ய விடாது கால தாமதத்தை ஏற்படுத்தும்.தடைகள் இருப்பதை போல அனுகூலங்களும் இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஆற்றின் நீரோட்டத் திசையிலேயே நீச்சலிட்டது போல செயல் எளிதாக இருக்கும். பலவீனங்களை பலமாக மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதையுமே சாதிக்க முடியும். ஒரு தாய் தன்னுடைய 2 வயதுக் குழந்தையை ஆற்றின் எதிர் கரையிலேயே விட்டுவிட்டு இக்கரைக்கு வந்து விட்டாள். திரும்பவும் அக்கரைக்குப் போக பரிசல் இல்லை. அப்பொழுது ஆற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது மழை வேறு பெய்து கொண்டிருந்தது. குழந்தையைக் காப்பாற்ற உதவிக்கு அழைத்தாள். எல்லோரும் வெள்ளத்திற்கு பயந்து பின் வாங்கினார்கள். இருட்டி விட்டதால் அனைவரும் ஊருக்குள் சென்றுவிட்டனர். மறு நாள் காலையில் அந்தத் தாய் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டில் இருப்பதைப் பார்த்ததும் எல்லோரும் அவள் அருகில் வந்து எப்படிக் குழந்தையைக் காப்பாற்றினாய் என்று கேட்டனர். அதற்கு அவள் சொன்னாள் , "அது என் குழந்தை " என்று.காப்பாற்றியே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் இருக்கும் போது தடைகள் எவ்வளவு வலிமையானவைகளாக இருப்பினும் அவற்றை எதிர்கொள்ளும் மனதையிரியத்தை அந்தத் தாய் பெற்றாள்.அது போல ஒரு செயலைச் செய்து முடித்தே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தால் இடைத் தடைகள் ஒரு பொருட்டே அல்ல. அந்தத் தாய் அன்று இரவு ஆற்றின் கரையோரமாக நெடுந்தொலைவு சென்று ஆறு அகன்றிருக்கும் இடம் பார்த்து ஆற்றைக் கடந்து அக்கரை சென்று தன் குழந்தையை தானே மீட்டாள் . அந்தத் தாய் smart ஆகச் செயல் பட்டாள் ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அகன்றிருக்கும் இடத்தில் குறைவாக இருக்கும் என்பதைத் தனக்கு அனுகூலமாக்கிக் கொண்டாள்.