Monday, February 4, 2019

sonnathum Sollaathathum- Tagore

ரபீந்திர நாத் தாகூர்




ரபீந்திர நாத் தாகூர்  ( Rabindranath Tagore )  ( 7  மே 1861- 7  ஆகஸ்ட் 1941) இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கல்கத்தாவில்  தேவேந்திர நாத் தாகூர் - சாரதா தேவி தம்பதியினருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் இளையவராவார் . புனைப் பெயர் பானு சின் ஹா தாக்குர் (Bhanu Singha Thakur ) இவர் சிறந்த படைப்பாளர் . எழுத்தாளர் , கவிஞர், இசை அமைப்பாளர் , நாடக ஆசிரியர் , ஓவியர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். கீதாஞ்சலி என்ற கவிதை நூலைப் படைத்து 1913  ல் இலக்கியத்திற்காக  ஆசியாவின் முதல் நோபல் பரிசைப் பெற்றார் .நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே ஆவார்.  தாகூர் தனது 8 வது வயதிலிருந்தே  கவிதை எழுதத் தொடங்கினார். தனது 15 வது வயதில் பானு  சிம்ஹா (சூரிய சிங்கம் ) என்ற தலைப்பில் முதல் கவிதை நூலை வெளியிட்டார்   சாந்தி நிகேதன் மற்றும் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் .போன்றவற்றை நிறுவினார் .விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர்  பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார். அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

தாகூர் இளம் வயதிலேயே தாயாரை இழந்து விட்டார் . தந்தையர் பயணத்திலேயே அதிக நேரம் செலவிட்டதால் .வேலையாட்களின் கவனிப்பிலேயே  அதிகம் வளர்ந்தார்.பாரம்பரிய கல்விமுறைப் பிடிக்காததால், பல ஆசிரியர்களின் கீழ் வீட்டிலேயே படிக்கத் துவங்கினார். சிறுவயது முதற்கொண்டே இவருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வர் இருந்தது. ஒரு முறை ஓரு கவிதையை எழுதி தன தந்தையாரிடம் காண்பிக்க, அது நன்றாக இல்லாவிட்டாலும் மகன் உற்சாகத்தை இறந்துவிடுவான் என்று அந்தக் கவிதைக்காகப் பாராட்டி ஒரு கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார். .இதனால் தாகூர் மேலும் மேலும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு தன திறமையை வளர்த்துக் கொண்டார்.ஒவ்வொருவருவரும் தங்கள் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதாவதொரு  தூண்டற் காரணி யை இனமறித்து ஏற்படுக்கொள்ள வேண்டும் .இது அகத்  தூண்டுதலாகவோ அல்லது புறத் தூண்டுதலாகவோ இருக்கலாம் .



"ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு க் கவசம் வேண்டும் என்பதை விட ப் பயமின்றி அவற்றை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் மனம் தான் வேண்டும்"

பாதுகாப்பு என்பது புறச் சூழல்களை ஏற்படுத்திக் கொண்டு எதிர்ப்புக்களைத் தவிர்ப்பது. ஆனால் தற்காப்பு என்பது நமக்கு நாமே பாதுகாப்பாய் இருப்பது . பாதுகாப்பு வழி
 முறைகள் ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் பொய்த்துப் போகலாம் . ஆனால் தற்காப்பு தரும்  தைரியம் ஒருநாளும்  ஏமாற்றிவிடுவதில்லை. உடல் வலிமையையும் மன உறுதியும் இருந்தால் எதிர்ப்புக்களை எளிதாகச் சமாளிக்கலாம். மதி நுடபமும் சேர்ந்து கொண்டால் நம்மை விடாய் பலமானவர்களைக் கூட எதிர்த்துப் போராடலாம். தற்காப்பு என்பது இன்றைக்கு ஒரு வாழும் கலையாகவே மாறி வருகின்றது. கராத்தே, சிலம்பு , களரி  போன்றவற்றை  குறிப்பிட்டுச் சொல்லலாம் .
ஒரு செயலைத் தொடங்கு முன் மனதில் இனம்புரியாத ஒருவிதமான பயம் தோன்றுவதற்கு அடிப்படையான காரணம் அச் செயலைச் செய்யத் தொடங்கி வெற்றிகரமாக முடிக்கும் வரை நமக்கு நாமே முழு நம்பிக்கை உடையவர்களாக இருப்பதில்லை .குறைந்தபட்ச தகுதிகளையும் திறமைகளையும் கொண்டு அதிகபட்ச அனுகூலங்களை அடைய ஆசைப்படும் போது உள்ளுக்குள்ளே  ஊறும் இந்த அவநம்பிக்கை பயத்தின் அளவை அதிகரிக்கின்றது. சிறு குழந்தையாக இருந்த போது செயல் மற்றும் திறமை பற்றிய எந்த எண்ணமும் தோன்றி இல்லாததாலும், தனக்கு வேண்டியதையெல்லாம் தருவதற்குத் தன் பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை இருந்ததாலும் பயம் இல்லாதிருந்தது .கொஞ்சம் வளர்ந்த போது பெற்றோர்களின் தனிக் கவனிப்புக் குறைந்து தனக்கு வேண்டியதைப் பெறத் தானே வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ,திறமை போதிய அளவு இல்லாத நிலையில் பயம் மனதைச் சூழ்ந்துகொள்கின்றது.

ஒரு செயலைச் செய்யப் புகுமுன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன முதலாவது செயலைச் செய்யவேண்டியதன் அவசியம் ,விளை பயன் ,பயனுறு திறன் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் தேவையின்றி ஒரு வேலையில் ஈடுபடுவது கால விரயமாகும்.பயனுறு திறனை வெகுவாகத் தாழ்த்திவிடும். இரண்டாவது அதைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய தகுதிகளைப் பெற முயலவேண்டும்.வழிமுறைகள் மற்றும் கால வரம்பு முக்கியமானது .காலங் கடந்து ஒரு செயலை முடிப்பது நற்பயன் அளிப்பதில்லை .செயல்களைச் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் பலம் மற்றும் பலவீனங்களை அவ்வப்போது மதிப்பீடு செய்து தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். செயலைச் செய்து முடிப்பதற்கு முழுத் தகுதி யுடையவர்களாய் இருக்கும்போது அவநம்பிக்கையும் இருப்பதில்லை மனதில் பயமும் இருப்பதில்லை




"எவர் தேவைக்கு அதிகமாகச் சம்பாதித்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையை அச்சப்பட்டுக் கொண்டே வாழ வேண்டியிருக்கும்" .

ஒரு குறிக்கோளை நிறைவேற்ற அளவற்ற செலவம் ஒருவருக்குத் தேவைப்படாது .செல்வம் சேரச் சேர அதை ஆடம்பரமாகச் செலவு செய்ய ஆரம்பித்து தவறான முறையில் செலவு செய்வதில் முடியும்.சமுதாயத்தின் ஒழுக்கம் சீர்கெட்டுப்  போவதற்கு குறிக்கோள் இல்லாமல் பொருள் சேர்த்து அதை தவறான  வழிகளில் செலவிடுவோர்களே காரணம் .சமுதாய எதிரிகளாகிவிடுவதால் அவர்கள் எப்போது அச்சப்பட்டுக் கொண்டே வாழ வேண்டிய சூழ்நிலையே  இருக்கும் .அளவுக்கு மீறி சேர்த்த பொருளை களவு போய்விடாமல் ஒளிக்கவும் அச்சப்பட வேண்டியிருக்கும் 

"சிறந்த கல்வி என்பது தேவையான விவரங்களை நமக்கு நாமே பெறுவது இல்லை. அது நம் வாழ்க்கையைச் சுற்றுச் சூழலுடன் இணைந்து கடப்பதில் அடங்கியிருக்கின்றது "
"பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டால்  நம்மைச் சுற்றியுள்ள எல்லாம் நம்மைத் தேடி வரும்"

தற்போது இருக்கின்ற அறிவையும் திறமையையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் பயன்படுத்திக் கொள்ளப் படாத அந்த அறிவையும் திற மையையும்  வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் வருவதில்லை  .கல்விக்காக வாழ்க்கையில்லை . வாழ்க்கைக்காகத்தான் கல்வி . திட்டமிட்ட வாழ்க்கைக்கு ஏற்ப செய்துகொள்ளும் மூலதனமாக  கல்வி இருந்துவிட்டால் வாழ்க்கையை இனிமையாகக் கழிக்க முடியும் . எது உனக்கு மட்டுமின்றி சமுதாயம் முழுமைக்கும் பயனும் மகிழ்ச்சியும் தரக்கூடியதாக இருக்கின்றதோ அதுவே மிகச்  சிறந்த கல்வி 

"அன்பை எப்பொழுது  வேண்டுமானாலும்  வெளிப்படுத்திக் காட்ட புறத் தடைகள்  ஏதுமில்லை என்பதால்உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காதீர்கள்"
"உலகை நேசிக்கத் தொடங்கும் போதுதான் உண்மையாக வாழத் தொடங்குகின்றோம்"

உடல் உழைப்பை விட அறிவுக்கு ஆற்றல் அதிகம்  அறிவை விட அன்பிற்கு ஆற்றல் அதிகம். அன்பை விட ஆற்றலுள்ள ஒன்றை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அறிவால் சாதிக்க முடியாததை அன்பு மிக எளிதாகச் சாதித்து விடுகின்றது .ஒருவர் தனித்தே இந்த உலகில் வாழமுடியாது . இதற்கு காரணம் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் பிறர் உதவியின்றி நாமே செய்து கொள்ள முடியாது . நம்மை மற்றவர்களோடு இணைந்து வாழத் தூண்டுவது இந்த அன்பு மட்டுமே, மனதில் வளரும் அன்பினால் இந்த உலகிலுள்ள அனைவரும் ஒருவருக்குச் சொந்தக் காரர்களாகி விடுவார்கள்.  தனி மனிதனின் இனிய வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் சமுதாயத்தின் ஒத்துழைப்பு தேவை . சமுதாயத்தைப்  புறக்கணித்த எவரும் வாழ்க்கையில் வெற்றி        காண்பதில்லை. ஒவொரு மனிதனும் அவனுக்குள் இருக்கின்ற அன்பெனும் அளவற்ற செல்வத்தால் மிகவும் மதிப்புள்ளவனாக  இருக்கின்றான் . ஆனால் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மதிப்பை உணர்வதே இல்லை.


"முயற்சி என்பது இதயத்திற்குள் மூளும் உள்ளுணர்வு அல்ல அது உன் ஆற்றலை வெளிக்கொணரக்கூடிய ஒரு   நெம்புகோல் "

ஒரு சிறிய நெம்புகோல்  ஒரு பெரிய பாறாங்கல்லை நகற்றி விடும் அது போல ஒரு சின்ன முயற்சி  ஒரு பெரிய தடையையும் அகற்றிவிடும் . இடப்பெயர்வுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் தேவைப்படுவதைப்   போலச் செயல்களின் முடிவுகளை மாற்றக்கூடிய சக்தி செய்யும் முற்சிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பர் தமிழ்ச் சான்றோர்கள்  முயற்சி என்பது அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில்  மேற்கொள்ளும்  நடை பயணம் . இருந்த இடத்திலிருந்து கொண்டே செல்ல வேண்டிய இலக்கை யாரும்  அடைந்து விட முடியாது.


"சூரியன் காணாமற் போய்விட்டது என்று கதறி அழுதால் சிந்தும் கண்ணீர் மறைப்பதால் அந்த விண்மீன்களைக் கூட க் காண முடியாது போய்விடும் "

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை இல்லை ,தடைகளை எதிர்கொண்டு வெற்றிகண்டு வாழும்  வாழ்க்கையே அது சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல. கவலையை மறந்து வாழக் கற்றுக் கொண்டவர்கள்.செய்யும் செயல்கள் எல்லாம் நினைத்தபடி வெற்றியில் முடிவதில்லை. ஒரு பெரிய பலனுக்கானகச் செய்யும் முயற்சி யில்  தோல்வியும் வரலாம் . தோல்வியால் ஏற்பட்ட இழப்பைக்  கண்டு மனம் கலங்கினால்  சிறிய பலனைக்கூட ப் பெறமுடியாது  .