Thursday, April 30, 2020

கோபி ஆனன் பொன்மொழிகள்


கோபி ஆனன் பொன்மொழிகள்

“அறியாமையும் பொறாமையும் வதந்திகளைப் பரப்பும்  தோழர்கள். எனவே நம்முடைய குறிக்கோள் ,  கல்வியறிவைக் கொண்டு அறியாமையை யும், சகிப்புத்  தன்மையுட ன் வன்முறையாளர்களையும்  வெளிப்படையான பெருந்தன்மையுடன் தீண்டாமையையும்  இல்லாது ஒழித்துக் காட்டவேண்டும் ”  ,

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மன மகிழ்ச்சியடையும் கயவர்களால் வதந்தி தோற்றம் பெறுகின்றது . அதை முட்டாள்கள் பரப்புகிறார்கள் , சுய புத்தி இல்லாதவர்கள் நம்புகின்றார்கள். நேரிடையாக மோதுவதற்கு துணிவு இல்லாதவர்களின் அதர்ம யுத்தமே வதந்திகள், இவர்கள் புரளியைக் கிளப்பிவிடுவதோடு மறைந்துவிடுவார்கள் . மற்றவர்கள் தாம் வேலையை மறந்து நேரத்தை வீணாக்கி அதைப் பரப்பிக்கொண்டிருப்பார்கள். சிலரால் நம்பப்படும் போது அது வெகு இயல்பாக பலராலும் நம்பப்படும் வாய்ப்பைப் பெறுகின்றது. இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் இந்தப்பணியைச்  செய்துவருவது கவலைக்குரியது
 தங்களுக்கு வரும் எதிர் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சமுதாயத்தில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்த இந்த வதந்தியை ஒரு ஆயுதமாகப் கையாளுகிறார்கள். சில சமயங்களில் வதந்திகள் பெரிய கலவரத்தை ஏற்படுத்திவிடும்  அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரிய அளவில் நாடு இழப்பைச் சந்திக்க வேண்டிவரும். ஒவ்வொருவரும் அவரவர்களுடைய சொந்தக் கருத்துக்களை மட்டுமே சொல்வதை வழக்கமாக க்  கொண்டால் பிறருடைய வதந்தியை மீண்டும் மொழிவது தவிர்க்கப்படும் வதந்தியை ஒழித்துக் கட்டமுடியவில்லை என்றால் நம்முடைய கல்வி அறியாமையை முழுமையாக நீக்கப் போதுமானதாக இல்லை என்றே நினைக்கவேண்டியிருக்கின்றது.
.எதிர்காலம் உன்னுடையதுதான்  .ஆனால்  எதிர்காலம் உன்னுடையதாகவே  இருக்கவேண்டுமானால் அதில் நீ பங்கேற்பதும் ,பொறுப்புக் கொள்வதும் அவசியம்”   

உழைப்பவனுக்கும் . உழைக்காதவனுக்கும் முக்காலமுமுண்டு . ஏனெனில் காலம் தொடர்ந்து கடந்து கொண்டே செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. எல்லோருக்கும் எதிர்காலம் வரத்தான் செய்கின்றது . அனால் உழைப்பவனுக்கு வரும் எதிர்காலம் உழைக்காதவனுக்கு இருப்பதை விட மிகுந்த நன்மையைக் கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது. எதிர்காலத்திற்காக உழைக்காமல் அதன் பலனைமட்டுமே எதிர்பார்த்தால் அவருக்கு எதிர்காலம் இறந்துவிட்ட காலமாக இருக்கும்.

திருமணத்திற்கு வந்திருந்த பல நண்பர்கள் .உறவினர்கள் பரிசுப்பொருட்களைக் கொடுத்து வாழ்த்திச் சென்றனர். விருந்து என்று சில உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு தேன் நிலவுக்காக வெளியூர் சென்றுவிட்டனர் .வீட்டில் இருந்த வர்கள் பரிசுப்பொருட்களை ப் பிரித்துப் பார்க்காமல்  அலமாரியில் அடுக்கி வைத்து பூட்டிவிட்டார்கள் . தேன் நிலவிற்குச் சென்றவன் தன் புது மனைவிக்கு புதிய செல்போன் , கைக்கடிகாரம் , எல்லாம் டெபிட் கார்டில் வாங்கி கொடுத்தான் .லீவு முடிந்து வேலையில் சேரவேண்டிய கட்டாயம் இருந்ததால் சொந்த வீட்டில் தங்கும் வாய்ப்பு இல்லாதிருந்தது  தனிக் குடித்தனத்திற்காக பிரஷர் குக்கர், மின் தூண்டல்  அடுப்பு போன்ற வீட்டுப்  பயன் பொருட்களை டெபிட் கார்டில் வாங்கிக் கொடுத்தான் ..முதலாமாண்டு திருமண நினைவு நாள் வந்தது ..சொந்த ஊருக்கு வந்தவன் அலமாரியைத் திறந்து பார்த்தன். பரிசுப்பொருட்கள் இன்னும் பிரிக்கப்படாமலே இருப்பதை பார்த்து ,ஒவ்வொன்றாகப் பிரித்தான். .அதில் செல்போன் ,கைக்கடிஉகாரம், ,பிரஷர் குக்கர், மின் தூண்டல் அடுப்பு எல்லாம் இருந்தன . இருந்தும் இப்பொழுது அவன் டெபிட் கார்டில் வாங்கியதால் கடன்காரனாகவே இருக்கின்றான்.
பெரும்பாலும் எல்லோருடைய இயல் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கின்றது .பரிசாகத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் நிகழ்கால நொடிகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு வளமான எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றோம். அதற்கு கனவுகளே கடன் தருகின்றன

“எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாகவும் , சுதந்திரமாகவும், ஆரோக்கியத்துடனும் ஒரு பாதுகாப்பான சூழலில் வாழ்கிறார்களோ அந்த நாடே வளர்ச்சியடைந்த நாடாகும்”

பொருளாதாரத்தால் உலக நாடுகளை வளர்ந்த நாடுங்கள் . வளரும் நாடுகள் , வளரா நாடுகள் எனப் பிரிக்கலாம் .வளர்ந்த நாடுகள் தன்னிறைவால் சுயசார்புடன் இருப்பதோடு பிற நாடுகளுக்கும் உதவி செய்யும்மளவிற்கு வசதி கொண்டவை ..இந்த நிலையை இருவேறு வழிகளில் எட்டலாம். .முதலாவது நாட்டின் கனிம வளத்தையும் , மனித வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவது நாட்டின் நலத்தில் முழு அக்கறை யும் மனஉறுதியும்  கொண்ட  தலைவர்கள். அவர்களால் மட்டுமே சுற்றுலா , உற்பத்தியில்லாமலேயே பன்னாட்டு வர்த்தகம் , தொழிநுட்ப ஆலோசனைகள் மூலம் நாட்டின் வளத்தை மேம்படுத்த முடியும்.
சுதந்திரம் என்பது மனம் போன போக்கில் பேசுவதும் , செயலாற்றுவதுமில்லை . அது பொறுப்புடன் இணைந்தது..பல சொற்கள் இரட்டை அர்த்தத்தால் தவறான பொருள் கொள்வதை போல சுதந்திரமும் பயன்படுத்தப் படுத்தப்படுகின்றது . பொறுப்புடன் கூடிய சுதந்திரத்தை மக்களிடம் இல்லாவிட்டால் அதை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அதைச் செயல்படுத்தும் போது  மக்கள் சுதந்திரம் பறிக்கப்படுவதாகக் கருதக்கூடாது. அரசாங்கமும் அதை மக்கள் உணர்ந்து நடந்து கொள்ளுமாறு நடந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் போது மக்கள் சுதந்திரத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,கொள்ளை, திருட்டு , பாலியல் குற்றங்கள், ஒருவரை ஒருவர்  ஏமாற்றுதல் போன்றவற்றால் ஏற்படும் அச்சம் பாதுகாப்பற்ற சூழ்நிலையையே உருவாக்குகின்றது. அதில் தோற்றுப்போய்விட்டால் எந்த அரசாங்கத்தாலும் தங்கள் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றிவிட முடியாது.

“கல்வியறிவு கவலையிலிருந்து நம்பிக்கைக்குச் செல்லும் ஒரு பாலமாக இருக்கின்றது”

கல்வியறிவு அனுபவத்தைத் தருவதில்லை என்றாலும் பிறர் அனுபவங்களை அறிந்துகொள்ள புரிதலைக் கொடுக்கின்றது, செய்முறைக்கு வழிகாட்டுவதோடு, என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையும் , தெரியாததைத் தெரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதையும்  கற்றுக்கொடுக்கின்றது .


“பிரச்சனை நம்பிக்கையில் இல்லை நம்பிக்கையோடு இருப்பதில் இருக்கின்றது”

 நம்பிக்கை என்பது சிற்றுளி போன்றது . பிரச்சனைகள் மலை போல பெரியதாக இருக்கலாம். ஆனால் சிற்றுளி செயல்பட்டால் அந்த மலை கூட ஒருநாள் காணாமல் போய்விடலாம். இதில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது சிற்றுளியைக் கண்டு மலை காணாமற் போகவில்லை , அது செயல்பட்டதால் தான் என்பதையே . வாழ்க்கையில் விரும்பிய எதையும் விரும்பிய மாத்திரத்தில் பெறமுடிவதில்லை .நேரான வழியில் பெற்றதெல்லாம் நெடிய முயற்சியின் பின்னணி இருந்திருக்கும் . நம்பிக்கையோடு இருக்கும்போதுமட்டுமே  வழிமுறைகள் தேடப்படுகின்றன ,முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, தேவையான ஆற்றல் உள்ளுக்குள் ஊற்றெடுக்கின்றன, சிந்தனைகள் மேலும் வலுப்படுகின்றன .எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகின்றன  .      

“உலகமயமாதல் வெற்றி பெறுவதற்கு அந்த வெற்றி ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒன்றுபோல இருக்கவேண்டும் .செல்வம் தருவதற்கு குறைவில்லாமல் உரிமைகளைக் கொடுக்கவேண்டும் சமூக நீதியையும் ,சமத்துவத்தையும் ,பொருளாதார வளர்ச்சி ,நல்லிணக்க உறவுகளுக்கு குறைவேதுமில்லாமல் தரவேண்டும்”
“உலக மயமாதல் என்பது வாழ்க்கையின் உண்மை அதை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது”   .
.உலகமயமாதலுக்கு எதிரான வாக்குவாதம் என்பது ஈர்ப்பியல் விதிகளுக்கு எதிரான விவாதம் போன்றது”

உலகமயமாதல் என்பது மொழி ,பண்பாடு , பழக்க வழக்கங்கள் , நிறம் , தொழில் மற்றும் பொருளாத நிலை இவற்றால் முற்றிலும் வேறுபட்ட மக்களிடையே தொடர்புகளை அதிகரித்து உறவுகளை வளப்படுத்துவதாகும் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம், சுற்றுலா மற்றும் போக்குவரத்து,  கலாச்சார பரிமாற்றம், அரசியல் மற்றும் வர்த்தக உறவு, போன்றவற்றால் உலக மக்களிடையே ஏற்படும் நேரடித் தொடர்புகள்  உலகமயமாதலின் தேவையை வற்புறுத்துகிறன. இதனால் மக்கட்தொகை பெருக்கத்தினால் அதிகரித்தது வரும் மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன . நாட்டின் தேவையோடு உலகத்தின் தேவையையும் பூர்த்திசெய்யவேண்டிய வாய்ப்புகள் ஏற்படுவதால் தொழில் துறைகளின் முன்னேற்றம் தொய்வின்றி நடக்கின்றது . 
ஆனால் வளர்ந்த நாடுகள் விற்பனையாகாமல் தங்கிப்போன , பயன்பாட்டுக் காலம் தாண்டிய பொருட்களையையும் ,நவீன தொழிநுட்ப வசதிகளால் முடுக்கப்பட்ட உற்பத்தியால் அதிமான பொருட்களையும் வளரும் நாடுகளிடம்  கூடுதல் விலைக்குத் தள்ளிவிடுகின்றார்கள் . பொருட்களின் பண்டமாற்றத்தால் முழுமையாக ஈடுசெய்யமுடியாததால் வளரும் நாடுகளால் அதற்கு மாற்றாக மனித உழைப்பை மட்டுமே கொடுக்க முடிகின்றது. அந்த உழைப்பும்  வளரும் நாடுகளுக்கு விற்கப்படும் பொருள்களின் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உலகமயமாதலை எதிர்ப்போரும் உள்ளனர் . எதுவும் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதோ அதற்காக மட்டுமே செயல்படுமானால் அதன் பலன் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும்.
“இந்த உலகத்தை ஒருபோதும் நம்முடையதாக்கிக் கொள்ள முடியாது. எதிர்காலச் சந்ததியினருக்காக நம்பிக்கையுடன் மட்டுமே அதைக் கையாளவேண்டும்”
.இயற்கையின் நடைமுறைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கை எப்படி இருந்தால் எந்நாளும் இனிமையானததாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது .ஆனால் மனிதன் அவற்றை அறிந்திருந்தும் மன மயக்கத்தினால் இயற்கையைப் புரிந்து கொள்ளத்  தவறிவிடுகின்றான் செயற்கையின் கலப்பில் இனிய வாழக்கையை இழந்து தவிக்கிறான். வன வளம் , கனிம வளம் , ஆற்று மணல் , நிலத்தடி நீர் எல்லாவற்றையும் அளவுக்கு மீறி சுரண்டுகின்றார்கள் .மக்கா குப்பைகளால் நிலத்தின்  நீர் உட்கிரகிப்புத் தன்மையை பாழ் படுத்துகிறார்கள்.விலங்கினங்களை அழித்து உயிரியல் சமநிலையை கெடுக்கிறார்கள் .காற்றையும் நீரையும் மாசுபடுத்துகின்றார்கள் எல்லோருக்கும் பொதுவான இயற்கையின் பயனைத் தனதுடைமையாக்கிக் கொள்ளும் போக்கினால் இயற்கை சீர்கெட்டுவருகின்றது. தன்னலத்தில் கொண்ட விருப்பத்தாலும் ,போட்டி மனப்பான்மையாலும்  இயற்கையின் எச்சரிக்கைகளையும் மீறி மக்கள் செயல்படும் நிலையே தொடர்ந்துவருகின்றது.  இயற்கை வளத்தைப் பாதுகாப்பதில் அனைத்துத் தரப்பினருக்கும் பங்கிருக்கிறது . இயற்கை என்பது நம் அனைவருக்கும் கிடைத்த பரிசுமட்டுமல்ல  உண்மையான பாதுகாப்பும் கூட .பாதுகாப்பு பலவீனப்படும் போது நாம் பாகுபாடின்றி அழிந்துபோக நேரிடும் . அதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது .அந்த விபரீத முடிவை உணர்ந்து நாம் பொதுநலத்தோடு வாழ முயலவேண்டும் . நாம் எப்படி நலமோடு வாழ்ந்தோமோ அப்படி நமக்குப் பிறகு வாழப்போகும் நம் சந்ததியினரும் நலமோடு வாழ வேண்டும் .இது பொதுநலத்தோடு கூடிய சுயநலம். நிரந்தரமில்லாத அளவில்லாத மகிழ்ச்சியைவிட நிரந்தரமான நேர்மையான மகிழ்ச்சியே உலக ம் உள்ளளவும் ஓடிவரும்
“ஆண்-பெண் சமத்துவம் என்பது  குறிக்கோளைவிட முக்கியமானது  வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கும் ,தடையில்லாத முன்னேற்றத்தை முடுக்குவதற்கும் , நல்ல ஆளுமைத் திறனை கட்டமைப்பதற்கும் அது ஒரு அடிப்படை நிபந்தனையாக இருக்கின்றது”

“ஆண்-பெண் சமத்துவமின்மை  மற்றும் சமுதாயப் பிரச்சனைகள் தொற்று நோயாகப் பரவியிருந்தால், அதை சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்வார்கள்”
  ஆண் - பெண் சமத்துவமின்மை பரிணாம வளர்ச்சியில் விலங்கினங்களிலிருந்து மனிதர்களிடம் குடியேறியிருக்கலாம். ,இனப்பெருக்க  ஆதிக்கத்தில்  ஆண் விலங்கு ,பெண் விலங்குகளைத் தான் கட்டுப்பட்டுக்குள் வைத்திருக்க வலிமையை வளர்த்துக் கொள்ள , மென்மையான பெண்மையால் அதை எதிர்க்க முடியாமல் அடங்கிப் போக இந்த சமத்துவமின்மை நிலைப்பட்டுப்போயிருக்கவேண்டும். மரபுகளை நாம் மாற்றமின்றிப் பின்பற்றி ஒழுகும் பழக்கத்தால்   நாகரிக வளர்ச்சியில் கூட இந்த உணர்வு மங்காமல் போனது..
இயற்கைக்கு ஆண் -பெண் என்ற பாகுபாடில்லை . ஏன் உயிருள்ளவை . உயிரற்றவை என்ற வேறுபாடு காட்டுவதில்லை இயற்கை இப்படிப் பாகுபாடின்றி செயல்படுவதால் அது  .தன்தொழிலை எல்லாமுறையும் நேர்த்தியாகச் செய்து முடிகின்றது.. பெண்ணடிமைத்தனம் நாகரிகத்தின் அவமானச் சின்னம், பெண்கள் காயப்பட்டு கேட்டுப் பெறுவதை விட , ஆண்கள் அதை விட்டுக்கொடுப்பதே ஆண்-பெண் உறவை பலப்படுத்தும் . பிள்ளைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகக் கருதாமல் பெண்களையும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது மனித வளத்தின் பயனுறுதிறன் இரட்டிப்பாகின்றது . ஆண்களிடம்  இல்லாத சில சிறப்புக் குணங்களை இயற்கை பெண்களுக்குக் கொடுத்திருக்கின்றது. அவை சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகாட்டலாம்.         

“எப்போதும் தனித்தே செயல்புரிவது கடவுளுக்கு இருக்கும் மிகப்பெரிய அனுகூலம்”
தனித்து ஒரு வேலையைத் தடையின்றி ஒரு தனிமனிதனால் செய்து முடிக்க முடிகின்றது . அந்த வேலையை ஒரு கால எல்லைக்குள் செய்ய வேண்டுமானால் பிறருடைய ஒத்துழைப்பும் தேவை  . அவனுக்குத் தெரியாத வேலையை பிறரைக் கொண்டே முடிக்க வேண்டியிருக்கின்றது . கூட்டு முயற்சியால் செய்யவேண்டிய வேலைகளுக்கு பிறருடைய ஒத்துழைப்பு தேவை .இதனால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழவேண்டிய சூழ்நிலை உருவாகின்றது . போட்டி ,பொறாமை , சுயநலம், தீய எண்ணம்  போன்ற பல காரணங்களினால் இந்த ஒத்துழைப்பு முழுமையாக இருப்பதில்லை.இன்றைக்கு பல நிறுவங்களின் பிரச்சனையே தொழிலார்களின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெறமுடியாமல் போவதில்தான் இருக்கின்றது . பரந்த இயற்கையைப் பார்த்து பரிபூர்ண ஒத்துழைப்பின் அவசியத்தை நாம் உணரவேண்டும். .இயற்கை எல்லாச் செயல்களையும் இடைத் தடைகள்  ஏதுமில்லாததால் முன்திட்டமிட்டபடி முழுமையாக ,ஒரு குறைபாடுமின்றி செய்து முடிகின்றது .எப்போதும் அவசரப்பட்டு செயலாற்றுவதில்லை . காலம் அதிகமானாலும் செயலின் முழுமையே அதற்கு முக்கியம்.  இயற்கை அதையே தன் அனுகூலமாகிக் கொள்கின்றது .