Tuesday, July 30, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 57

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பிறரை மதிப்பிடும் ஆர்வத்தில் பெரும்பாலானோர் சுய மதிப்பீடு செய்வதில் மெத்தனமாக இருந்து விடுகின்றார்கள் .பிறருடைய தனித்  திறமைகளை கற்றுக்கொண்டு தேர்ச்சி பெறுவதற்காக இல்லாது  , அவருடைய வளர்ச்சியை  எப்படித் தடுக்கலாம்  கெடுதல் செய்யலாம் என்பதற்காக புரிதலின்றி அவர்களை மதிப்பீடு செய்கின்றார்கள்.பலருக்கு சுய மதிப்பீடு செய்யத்தெரிவதில்லை . அது    இருக்கும் பயன்தரு திறமை மற்றும் வாய்ப்புக்களின் பயனுறுதிறனை கணக்கிட்டு அறிவதாகும். சுய மதிப்பீடு செய்யத் தெரிந்தவர்கள் , இலக்குக்கு ஏற்ப திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள், அல்லது திறமைக்கு ஏற்ற இலக்குகளில் மட்டும் ஈடுபடுவார்கள்.சுய மதிப்பீடு ஒருவருடைய இயலாமையை அவரே ஏற்றுக்கொள்ளுமாறு உணர்த்திவிடுகின்றது . சரியாகச் சுய மதிப்பீடு செய்யாதவர்களே தங்கள் தகுதிக்கு மீறிய செயல்களை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள் 
தெரிந்திருப்பதெல்லாம் திறமைகள் இல்லை. எந்த சூழ்நிலையும் பயன் பெறக்கூடிய  திறமைகளே திறமைகள்.இனிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவருக்கும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. எந்த வொரு திறமையையும் முழுமையாக ஒரே முயற்சியில் அடைந்து விட முடியாது. ஒவொருநாளும் தொடர்ந்து பயற்சியெடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் தொடர் முயற்சியில் தோற்றுப்போய்விடுகின்றார்கள்   இலக்கு முடிவு செய்யப்படாததால் அல்லது அடிக்கடி நிறம் மாறும் இலக்குகளால் எவை  தேவையான திறமைகள் , எவை தேவையில்லாத திறமைகள் என்பது தெரியாமல் பலர் பல திறமைகளை வளர்த்துக் கொள்கின்றார்கள். சிலர் தேவையான திறமைகளை விட்டுவிட்டு தவறான திறமைகளை த் தேர்வு செய்து வளர்த்துக்கொண்டு விடுகின்றார்கள்  சில திறமைகள் வாழ்க்கையில் பயன்படுத்தாமலே வீணாகி விடுவதும் உண்டு  பெரும்பாலும் இதைக் காலங் கடந்தே அறிந்து கொள்வதால் இடையிலேயே திருத்திக் கொள்ள முடிவதில்லை  திடமான முடிவுடன் கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ள முடியாதவர்களே தெளிவின்றி பல திறமைகளையும் கற்றுக் கொள்கின்றார்கள் .இதனால் தேவையான திறமைகளைப் போதிய அளவு  கற்றுக் கொள்ள முடியாமல் போவதுடன், தேவையான திறமைகளை வளர்த்துக்  கொள்ள போதிய அவகாசம் கிடைக்காமல் போகின்றது ,  பொதுவான அடிப்படை திறமைகள் , இலக்கைத் தீர்மானித்த பின்பு , அதை அடைவதற்கான திறமைகள் இவற்றைத் தீர்க்கமாக முடிவு செய்து விட்டால்  வீண் முயற்சிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் 

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 56

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒவ்வொருவரும் அவர்களுடைய பலத்தையும் , பலவீனத்தையும்  ஒருசேர புரிந்து வைத்திருக்க வேண்டும் . ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை மட்டும் நம்பிக்கொண்டு வாழ்வது முன்னேற்றத்தைப் பெரிதும் மட்டுப்படுத்தி விடும் . முதலாவது முன்னேற்றத்தை முன்திட்டமிட்டு வரையறுத்துக் கொள்ள முடியாது, நினைத்தை நினைத்தது போல நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. நினைப்பது ஒன்று கிடைப்பது வேற்றொன்றாக இருக்கும்.  இடைத்தடைகளை எதிர்கொள்ள முடியாமல் எதிர்பாராத இன்னல்களையும் சந்திக்க நேரிடுவதுடன் முயற்சியை இடையிலேயே கைவிட்டுவிடவும் நேரிடும்.  
பலத்தை மட்டுமே நம்பியவர்கள் மிகை மதிப்பீட்டினால்  பிரச்சனையின் முழுப் பரிமானத்தையும் அறிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள் . எதிர்ப்புக்களை சமாளிக்கும் வழிமுறையை முன்கூட்டியே அறியாததால் தடையில்லாத முன்னேற்றத்தை தவற விட்டுவிடுகிறார்கள் . தோல்விக்கான காரணத்தை பிறர் மீது சுமத்தி விடுவார்கள் . பலவீனத்தை மட்டும் கருத்திற் கொண்டு பயத்தோடு ஈடுபடுபவர்கள் குறை மதிப்பீட்டினால் முயற்சிகளை முடக்கி வைத்துவிடுகிறார்கள் 
ஆக்கப் பூர்வமான திறமைகள் ஒருவருக்கு பலமாகவும் , அழிவுப் பூர்வமான திறமைகள் பலவீனமாகவும் அமைகின்றன .இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு சம்பாத்தியத்தைக் கொடுக்கலாம். ஆனால் ஆக்கப் பூர்வமான திறமைகள் மட்டுமே தனிமனிதனின் முன்னேற்றத்தை முடுக்கி விட்டு  தனி மனித நலத்தையும்  சமுதாய  நலத்தையும்  காக்கும் . சமுதாயத்திற்கு உதவிகள் செய்து சமுதாய நலம் காக்கலாம் . இதற்கு ஒருவர் அதிகமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு கெடுதல் செய்யாமலும் சமுதாய நலம் காக்கலாம். இதற்கு  நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொண்டாலே போதுமானது. அழிவுப் பூர்வமான திறமைகள் மனிதர்களைச் சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தி விடுகின்றது . இவர்கள்  அகத்திலும் , புறத்திலும் மாறுபட்ட பண்புடையவராக இருப்பார்கள்  
மாணவர்கள் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பலத்தை தொடர்ந்து அதிகரிக்கவும், பலவீனத்தை முழுமையாகப் புரிந்திருக்கவும் வேண்டும்.அப்பொழுதுதான் பலத்தால் விளையும் பயனை நுகரவும் , பலவீனத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்க்கவும் முடியும் 

Saturday, July 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 55

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
இந்த உலகில் ஒரு மனிதன் தொடர்ந்து  உயிர்வாழ, அவனுக்கு முதலில் அவன் மீதே நம்பிக்கை இருக்க வேண்டும் . தன் வாழ்க்கைக்கு என்ன இடையூறு வந்தாலும் அதை எதிர்கொண்டு தாக்குப் பிடித்து வாழமுடியும் என்ற மன உறுதியைத் தருவது இந்த நம்பிக்கைதான் அடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களிடம் ஏற்படும் நம்பிக்கை இயற்கையானது. பிற உறவினர்களிடம் ஏற்படும் நம்பிக்கை நம் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவைப் பொருத்தது. தேவையான போது மட்டும் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பது நிலைத்து நின்று நற்பயன் தருவதில்லை .  நம் வளர்ச்சிக்கு யார் பிரதிபலன் பாராது உதவுகின்றார்களோ அவர்களே உண்மையில் நம் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகின்றார்கள். அதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாதவர்கள்  ஏமாந்து போகின்றார்கள் . இதற்கு ஒருவர் தன்னை தானே பரிபூர்ணமாக உணர்ந்து, தனது திறமை, சுய வலிமை என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒருவர் தன்னைத்தானே அறிந்து கொண்டிருப்பது என்பது , தன்னால் என்ன செய்ய முடியும், தனக்குள்ள திறமைகள் என்னென்ன, தன்னால் அதிகபட்சமாக என்ன சாதிக்க முடியும்?  பலம் என்ன என்பதோடு பலவீனம் என்ன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். திறமையையும் , திறமையின்  பயனுறு திறனையும் அதிகரிக்க  கல்வி அவசியம். இது அடிப்படைக் கல்வியோடு . விருப்பப்பட்ட திறமைக்குத் தேவையான ஆதாரக் கல்வியையும் பெறுவதில் அடங்கியிருக்கின்றது  கற்பனைகளுக்கு உருவம் கொடுப்பதற்கும் , முயற்சிகளுக்கு பலன் அளிப்பதற்கும் .கடின உழைப்பை புத்திசாலித்தனமான  உழைப்பாக மாற்றுவதற்கும்  இந்தக் கல்வி துணைபுரிகின்றது . 

வாழ்க்கையில் வெற்றி  பெற்றவர்களின் சுயசரித்திரம் நமக்கு  ஒரு  உண்மையை அறிவுறுத்திக் கூறுகின்றது. வெற்றிக்கு வேண்டியது திறமை மட்டுமில்லை அந்தத் திறமையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் ஆகும். நம்பிக்கையற்ற திறமை முழுமையான திறமையாகாது, இறுதியில் பயனேதும் தருவதுமில்லை. நம்பிக்கையின் ஒரு பகுதியை கல்வியாலும் , மற்றொரு பகுதியை அனுபவத்தாலும் வளர்த்துக் கொள்ள முடியும்  கல்வி என்பது படிப்பறிவு. இதன் மூலம் நம் முன்னோர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளலாம்  , அனுபவம் என்பது செய்முறைக் கல்வி. அவர்களுடைய அனுபவங்களைப் புரிந்து கொள்ளலாம் ஒருவருடைய வாழ்க்கையின் பிற்பகுதி அறிந்து கொண்டதை விட புரிந்து கொண்ட அனுபவங்களின் அடிப்படையிலேயே அமைகின்றது . மனதில் நம்பிக்கை துளிர்த்துவிட்டால்  அதற்கடுத்து ஏற்படும் அனுபவமானது இந்த நம்பிக்கையை மேலும் செம்மைப்படுத்தும்.
இந்தியாவில், யானையின் காலை பெரிய கையிற்றால் கட்டி வைப்பார்கள் . அந்தக் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும் அளவிற்கு யானைகள் வலுவானவைதான். ஆனால் எந்தவொரு யானையும்  அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், யானை குட்டியாக இருக்கும்போதே இதுபோன்ற கயிற்றால் கட்டுகிறார்கள். அந்த கயிற்றை அறுத்துக்கொண்டுஓடும் வலிமை குட்டி யானைக்கு இல்லாதிருப்பதால்  அது பல முறை முயன்று தோற்றுப் போய்.  இந்த கயிற்றை நம்மால் அறுக்க முடியாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு விடுகின்றது. பெரிய யானையாக வளர்ந்த பிறகும் இந்த நம்பிக்கையை மாற்றிக் கொள்வதில்லை ஒரு யானை, பூனை போல அடங்கி  இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அந்த யானை தன் வலிமையை உணராமல் இருப்பதுதான். உண்மையில் தன்னால் முடிந்தும், தனது பழைய அனுபவத்தின் அடிப்படையில் உருவான நம்பிக்கையால் யானை கயிற்றில் அகப்பட்டு கிடக்கிறது. என்பதை இந்தக் கதை மூலம்  புரிந்து கொள்ள முடிகின்றது . 
இந்த யானை மாதிரி வாழ்ந்தால் ,நாமும் நம் வலிமையை அறியாது வாழ்க்கையில் காண வேண்டிய முன்னேற்றத்தை தவற விட்டுவிடுவோம்.  என்றோ, எப்போதோ ஒரு முயற்சியில் தோற்றுப் போயிருந்தால் அன்றைய நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறாக இருக்கும். அன்று முடியாதது இன்று முடியும். எனவே தோல்விக்கு காரணமாக இருந்த பழைய அனுபவத்திலிருந்து வெற்றிக்கான  பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முறை ஒரு விஷயத்தில்  தோல்வி ஏற்பட்டால், வாழ்க்கை முழுவதும் அந்த விஷயத்தில் தோல்வி ஏற்படும் என்று அர்த்தமல்ல.அனுபவங்கள் எல்லாம் சூழ்நிலைகளைப் பொறுத்தன.அனுபவங்களை அறிந்து கொள்வதோடு சரியாகப் புரிந்து கொண்டுவிட்டால் எல்லா அனுபவங்களும் நற்பயன் தரும். 

Sunday, July 21, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 54

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை அவர்களுடைய கையில் இருக்கின்றது என்று பெற்றோர்கள் கைகட்டிக்கொண்டு  சும்மா இருக்கமுடியாது .  அவர்களுடைய வாழ்க்கையின் பயனுறுதிறனை மேம்படுத்திக் கொள்வதும் கொள்ளாததும் அவர்களுடைய விதி என்றும் அதைத் தீர்மானித்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுடையதே என்றும் நினைத்துக் கொண்டு பெற்றோர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும். உண்மையில்  இனிய சமுதாயத்தை அப்படியே எடுத்துச் செல்ல வளரும் குழந்தைகளை வாழும் மனிதர்கள் உருவாக்க வேண்டும் என்று  இயற்கையாலும் ,இனிய சமுதாயத்தாலும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பே இது .விதியின் பெயரைச் சொல்லி பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்வது மதியற்ற  செயல்.ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும்  விதியே தீர்மானிக்கின்றது என்றால் வாழ்க்கையைத் தொடர்வதற்கு மதி தேவையில்லாததாகி விடுகின்றது . விதியை மதி என்றாலும் அந்த விதிகளை ஏற்படுத்தியதே மதிதான் என்பதை மறந்துவிடக் கூடாது , விதியை மதியால் வென்று வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்க முடியும் .அதைச் செய்து காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இயற்கை  பெற்றோர்களின் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கின்றது. இயற்கையின் அந்தப் பரிட்சையில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே இனிய சமுதாயத்தை வாழ வைக்கின்றார்கள் .
ஒருவருடைய வாழ்க்கையின் முடிவு விதியால் முன்திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் .ஆனால் அவருடைய வாழ்க்கையின் போக்கு முழுதும் விதியால் தீர்மானிக்கப் படுவதில்லை. திட்ட மாறுதல்களுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதை ஒரு ஜென் துறவியின் கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம் .
ஓர் ஏழை தொடர்ந்து வறுமையில் வாழ்ந்து வந்தான் .செய்த முற்சிகளில் ஒவ்வொருமுறையும்  தோல்வியே கண்டதால்  அவனுக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு உண்டானது. எவ்வளவு முறை முயன்றாலும் தோல்விதான் கிடைக்கும் என்று ஜாதகம் கூறியதை நம்பி முயல்வதை விட்டுவிட்டான். முற்பிறப்பில் செய்த பாவங்களே விதியாகி தன்னை ஆட்டுவிப்பதாக நினைத்துக் கொண்டான் . ஒருநாள் அவன் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டான் . அப்போது அப்பக்கமாக வந்த ஒரு ஜென் துறவியிடம் தனக்கு விதியால் ஏற்படும் துன்பங்களை எடுத்துக்கூறி மனம் நொந்து கொண்டான் ."விதியை மதியால் வெல்லமுடியும் , உன் மதியை பயன்படுத்தலாமே"  என்றார் . அதற்கு "விதி கடவுளின் முடிவு அதைத் திருத்த மனிதர்களால் முடியாது" என்று வறுமையின் வெறுப்பில் கூறினான்.வார்த்தைகள் பயனளிக்காததை உணர்ந்த துறவி செயலில் விளக்க ஆரம்பித்தார். ஒரு சிறிய கல்லை மேல் நோக்கி எறிந்து விட்டு இந்தக் கல்லின் விதி என்ன என்று கேட்டார் . அதற்கு அந்த ஏழை அந்தக் கல் இதே இடத்தில் தரையில் வந்து விழும் என்றான் . மதியால் இந்தக் கல்லின் விதியை மாற்றிக் காட்டுகின்றேன் பார் என்று சொல்லிக் கொண்டே மற்றொரு கல்லை வீசி எறிந்து கீழே விழும் அந்தக் காலோடு மோதச் செய்து விலகி வேறொரு இடத்தில் விழுமாறு காட்டி இப்பொழுது என்ன சொல்கிறாய் என்று கேட்டார் .  அதைப்பார்த்த ஏழை "கீழே விழுவதுதான்  கல்லின் விதி அது எந்த இடமாக இருந்தால் என்ன" என்று   ஒப்புக் கொள்ள மறுத்தான்.அதற்கு  அது விதியாக இருக்கலாம் ஆனால் இது புதிய விதி இல்லையா என்று கேட்டார். இதே செயலை  மீண்டும் துறவி செய்து கீழே விழும் கல் தரையில் விழாமல்  தன் கையால் பிடித்துக் கொண்டார். இப்பொழுது என்ன சொல்கிறாய் என்று கேட்க கீழே விழுமிடம் தரையாக இருந்தாலென்ன , கையாக இருந்தாலென்ன  என்று சொல்லி அப்போதும் அந்த  ஏழை மதியின் வலிமையை ஒப்புக்கொள்ள மறுத்தான்.  மூன்றாவது முறையாக அந்தத் துறவி அதே செயலைச் செய்து விட்டு , மற்றொரு கல்லை வேகமாக எறிந்து . கீழே விழும் கல்லை பொடியாக்கி வளி மண்டலத்திலேயே தூசியாக மிதக்குமாறு  செய்து காட்டினார் . இதை ப் பார்த்து   திகைத்துப் போய் நின்றுகொண்டிருந்த ஏழையைப் பார்த்து  " விதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றாலே , விதி மதியின் கீழ் அடங்கிவிடுகிறது. மதியை வளர்த்து கொள்ளாதவர்களும் , நம்பிக்கையற்றவர்களுமே விதி வழிச் சென்று துன்பத்தில் சிக்கிக் கொள்கின்றார்கள் .கல்லின் விதியை என் விருப்பம் போல மாற்றிக் கொண்டேன் ,அதைப்போல உன் வாழ்க்கையின் விதியை நீயும் மாற்றிக் கொள்ள முடியும்." என்று கூறினார் . அந்த ஏழைக்கு கொஞ்சம் ஞானம் வந்தது போல இருந்தது . 

Saturday, July 20, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 53

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
எதிர்காலத் தேவைகள் எதுவானாலும்  அவற்றைப் பிறருடைய உதவியின்றி  கல்வியால் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் .நமக்குப் பிறகு நம்முடைய உதவிகளின்றி தனித்து வாழ குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களுக்கு இயற்கை கொடுத்த கடமையாகும். இந்த நீண்டகாலப் பொறுப்பை ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே நன்கு உணர்ந்துகொண்டு செயல்படுகிறார்கள் 
கற்றலின்றி கற்பித்தல் இல்லை. எனவே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் அவர்களுக்காக தொடர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும். கற்றுக்கொள்ளாமல் கற்பிக்க முடியாமல் போவதாலும் அல்லது அரைகுறையாக கற்பிக்க  முயலுவதாலும் ஒருகுறுகிய கால எல்லைக்குள்ளேயே பலனற்றுப் போய்விடுகின்றது கல்வி கற்காமல் இருக்கும் வழிகளில் ஈடுபடுவதற்கு முன்பாகவே கல்வியைக்  கற்றுக்கொள்ளும் சுய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள தூண்டிவிட்டால்  குழந்தைகளின் கல்வியில்   பெற்றோர்களின் முயற்சி  பாதி குறைந்த மாதிரித்தான் . பெரும்பாலானோர் கட்டாயப்படுத்தி குழந்தைகளிடம் தாங்கள் விரும்பிய கல்வியை வளர்க்கிறார்கள். இது ஒரு கால கட்டத்திற்குப் பிறகு எதிரிடையாகத் திரும்பிவிடுகின்றது 
 மொழி அடிப்படை , சமுதாய ஒழுக்கம்  இவற்றை அறிந்து கொள்வதோடு தொடங்கும் ஆரம்பக் கல்வியை ஒரு பெற்றோர் கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ளாமலேயே கற்றுக்கொடுக்க முடியும். இது குழந்தையின் ஐந்து வயதுக்குள் ஓரளவு முடிந்து விடுகின்றது .அதன் பிறகு தங்கள் பிள்ளை எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ அல்லது அவன் விரும்புகிறானோ அதற்கு ஏற்ப  ஊக்கப்படுத்த வேண்டும் . இது அவனாக சுய  ஈடுபாடு  மேற்கொள்ளும்வரை தொடரவேண்டும்.  
மருத்துவரின் பிள்ளை மருத்துவராவதும், திரைப்பட நடிகரின் குழந்தை நடிகராவதும்  இயல்பாக இருப்பதற்குக் காரணம் வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்களே பாடப் புத்தகமாகி விடுகின்றார்கள் . மாற்றுத் துறையில்  குழந்தையை ஈடுபடுத்த பெற்றோர்கள் தனித்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.படித்து அறிவை வளர்த்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு அது தொடர்பான புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம் . கண்காட்சி , பொருட்காட்சி களுக்கு அழைத்துச் சென்று ஆர்வமூட்டலாம் . துறை வல்லுனர்களின் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் . அக் குறிப்பிட்ட துறையில் ஆர்வம் கொள்ளுமாறு ஒவ்வொருநாளும்  ஓய்வு நேரத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். இதற்குத் தேவையான செய்திகளை ஒரு பெற்றோர் முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கோலா வேண்டும். . 
பொதுவாக எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளைப் பற்றி ஒரு குறிப்பிட்ட எதிர்காலத் திட்டம் இருப்பதில்லை . மாறிக் கொண்டே வரும் மாறுபட்ட முன்னேற்றத் திட்டங்களினால்  ஒரு குறிப்பிட்ட துறையில் பெறவேண்டிய வளர்ச்சியை இழந்துவிடுகின்றார்கள் . இப்படிப் பட்ட பெற்றோர்கள் எல்லாச் சூழல்களுக்கு இணக்கமான ஒரு பொதுவான கல்வியை  ஊக்கப்படுத்துவது நல்லது .  

Friday, July 19, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 52

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
தூக்கம் வராவிட்டாலும் தூங்குமாறு சில பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவார்கள் வேறு சிலர் கைபேசி , தொலைக்காட்சி போன்றவைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள் .இவர்கள்  தங்கள் குழந்தைகள் பொன்னான நேரத்தை எப்படியெல்லாம் வீணாக்குவது என்பதை கற்றுக்கொடுத்து விடுகின்றார்கள். நேரத்தை வீணாக்குவது என்பது செயலின்மையின் தொடக்கம் .செயலின்மை மனதில் உட்புந்துவிட்டால் , அது நிலைப்படுத்திக் கொள்ள முயலும்.  முன்னேற்றம் தடைபட்டுப் போவதற்கு முக்கியமான அகக் காரணங்களுள் இது தலையாயது . ஏனெனில் இது ஒருவருடைய விருப்பத்துடனேயே செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்வதற்கான வாய்ப்புகள் இல்லை .   பொழுது போக்கிற்காகவே இவற்றைப் பயன்படுத்தப் பழகிய குழந்தைகள் பிற்பாடு இவற்றை மட்டுமின்றி பிறவற்றையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்டுத்த முழுமனதுடன் சுய விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை என்பது பின்விளைவின் துணை விளைவுகளாகும் .எனவே குழந்தைகள் வேண்டாதனவற்றைக் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் அதற்கு முன்பாகவே நல்லனவற்றை  கற்றுக்கொள்ள இருக்கும் வழிகளை விரிவுபடுத்திக்  கொடுக்க வேண்டும்.சின்னச் சின்னச் விஷயங்கள் கூட, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திவிடக் காரணமாக இருக்கின்றது  என்பதால் புற ஊடகத் தொடர்பின்றி வளரும் குழந்தைகளின்  வளர்ப்பில்  பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டியதின் அவசியத்தை இது வலியுறுத்திக் கூறுகின்றது.  
கைபேசி , தொலைகாட்சி போன்றவற்றை கல்வி கற்றலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் .  ஆனால் அப்பயன்களுக்காக  பயன்படுத்த   வேண்டும் போது, பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்தப் பழகிய குழந்தைகள், பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு  வேண்டா வெறுப்புடனேயே செய்கின்றன .  விருப்பமும்  செயலும் ஒன்றுபடாததால் செயலின் பயனுறு திறன் வெகுவாகக் குறைந்து போகின்றது .
பொதுவாக குழந்தைகள் முதலில் தங்கள் பெற்றோரைப் பார்த்து தானும் செய்யத் தெரிந்து கொள்கின்றது. பெற்றோர் படித்தால் தானும் படிக்கின்றது , தூங்கினால் தானும் தூக்குகின்றது . விளையாண்டால் விளையாடுகிறது , தப்பு செய்தால் தானும் அதே தப்பை பிசகாமல் செய்கின்றது. பெற்றோர்கள் செய்யும் திருத்தங்களால் செயலைச் செம்மையாகச் செய்ய கற்றுக்கொள்கிறது .எப்போதும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை கட்டாயப்படுத்தியே  குழந்தைகளின் மீது திணித்துவிடுகின்றார்கள்  .எது பெற்றோர்களின் விருப்பமோ அதுவே குழந்தைகளின் விருப்பமாக இருந்தால் மட்டுமே குழந்தைகளால் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது .பெற்றோரின்  விருப்பம் குழந்தையின் விருப்பமாகவும் இருக்க  அதற்கான செயல்களும் ஒன்றாக இருக்கவேண்டும் .எடுத்துக்காட்டாக குழந்தை நன்கு படிக்க வேண்டும் என்று விரும்புனால் , பெற்றோரும் அவர்தம் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டும் .வேண்டாதனவற்றை கற்றுக்கொண்டு அதில் அளவில்லாத விருப்பத்தை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக தொடங்கும் கல்வி வளர்ச்சியில் இடைத்தடைகள் வருவதேயில்லை என்பதை ஒரு சில பெற்றோர்களே நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் . குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களும் குழந்தையைப் போல குழந்தைகளுடன் சேர்த்து படிப்பது மிகையான பலன் தரும். அப்போது உச்சரிப்புக்கள் , சொற்களின் பயன்பாடு , பொருண்மை வேறுபாடு போன்றவற்றை எளிய சொற்கள் மூலம் விளக்கிக் கூறவேண்டும் . குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள் , சிறுவர் பாடல்கள் . எளிய கணக்குகள்  போன்றவைகளுக்காக அடிக்கடி நூல்கள் வாங்கி கொடுத்து அதையும் அவர்களுடன்  சேர்ந்து படிக்கலாம் . குழந்தைகள் புரியாமல் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுப்பது அவசியம். காரணம் தெரியாவிட்டால் ,தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விளக்கிக் கூறுங்கள்.
தன் குழந்தையின் அறிவு வளர்ச்சி மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக  கட்டாயப்படுத்தி துரிதப்படுத்தாதீர்கள் .அதிக அழுத்தம் எதிர்மறையான பின் விளைவுகளையே ஏற்படுத்தும் .இயற்கையில் சீரான வளர்ச்சியில் விளைந்தன மட்டுமே நிலைத்து நிற்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள் எப்போதும் அவசரப்பட மாட்டார்கள்.
அறிவு வளர்ச்சிக்கு உடல் நலம் மிக முக்கியம். எனவே அறிவும் , உடல் நலமும் சரிசம விகித்தில் ஊட்டப்பட்ட வேண்டும் . உடல்நலமில்லாத அறிவு வளர்வதில்லை , அறிவில்லாத உடலால் பயனில்லை . எனவே குழந்தைகளின் உடல் நலத்திற்கான விளையாட்டுக்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஈடுபடுவது அவசியமாகும் .இது பெற்றோர்கள் மீது குழந்தைகள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
ஒன்றில் கொண்டுள்ள ஈடுபாடு ,மற்றொன்றில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச ஈடுப்பாட்டை நீக்கிவிடாமல் இருக்க அபரிதமான ஈடுபாடு கொள்வதை தடுக்க வேண்டும். .குழந்தை வளர்ப்பில் தவறு செய்ய அனுமதித்து விட்டு குணப்படுத்துவதை விட முழுமையாகத் தவிர்ப்பது நல்லது .    

Thursday, July 18, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 51

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
பிறர் அச்சப்படுமாறு பெற்றோர்கள் கையில் கத்தி ,அரிவாள் , தீப்பந்தம் என ஆபத்தான கொலைக்கருவிகள் இருந்தாலும் அவர்களுடைய  குழந்தைகள் அதைக்கண்டு பயப்படுவதில்லை. அதற்குக் காரணம் குழந்தைகள் பெற்றோர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையே . இந்த நம்பிக்கையே  பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே கற்றுக்கொண்டு பின்பற்ற காரணமாக இருக்கின்றது . அந்த நம்பிக்கைக்கு பெற்றோர்கள் முழுமையாகத் தகுதியுடைவர்களாக இருப்பது குழந்தையின் சிறப்பான, நேர்மறையான  வளர்ச்சிக்கு காரணமாக அமையும்.உரிமை தந்த அதிகாரத்தால் இந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு குழந்தைகளை அவர்களுக்காக வளர்க்காமல் தங்களுக்காக வளர்க்கும் போக்கால்  பெரும்பாலான குழந்தைகள் தங்கள் சுய சிந்தனைகளை இழந்து தனித்  திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தவறிவிடுகின்றன .   பெற்றோர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும் .சாகாத சமுதாயத்தை நிலைத்திருக்கச் செய்யவே எல்லோருக்கும்  பிள்ளைகளைப் பெறும் பாக்கியத்தை இயற்கை வழங்கியிருக்கின்றது. நமக்குத் பிறகு நம் குழந்தைகள் நம்மைப் போல வாழத் தகுதியும் திறமையும் உடையவனாக வளர்த்து ஆளாக வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கின்றது. இதில்  தவறு செய்யும் பெற்றோர்கள் சமுதாய நலனுக்கு கேடு செய்தவர்களாகின்றார்கள் எல்லாக் குழந்தைகளும்  பெற்றோர்களின் முயற்சியால் எதிர்காலத்தில் தங்கள்  தேவைகளைத் தாங்களே  நிறைவேற்றிக் கொள்ளும் தகுதியுடைவர்களாக வளர்ந்து விட்டால் சமுதாயத்தின் சீரழிவு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டு  விடும்.  சமுதாயம் சீர்கெட்டு வருகின்றது என்று வருத்தப்பட்டால் அதற்குத் தன் மகனைச் சான்றோன் என வளர்க்கத் தவறியதும் ஒரு காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் .
1.ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் குறைந்தது ஒரு மணிநேரமாவது குழந்தைகளுக்காகச் செலவிடவேண்டும் . அந்த நேரத்தில் நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது மனதில் ஆழமாகப் பதிய நீதிக் கதைகளை ச் சொல்லலாம் , குறும்படங்களைக் காட்டலாம் . விளையாட்டாக கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொடுக்கலாம். இந்த விளையாட்டால்  பெறும் திறமை  எதிர்காலத்தில் அவனை அந்தத் துறையில் ஒரு தொழிலதிபராக்கிவிடலாம்.
2. சொல்வது எதுவானாலும் அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது. எப்பொழுது கட்டாயப்படுத்துவதை எதிர்க்கின்றானோ அப்பொழுதிலிருந்து நம்பிக்கையை இழந்துவிடுவான்.காரணமின்றி கட்டாயப்படுத்தும் போது பெற்றோரின் அதிகாரத்தையும் ஆணவத்தையும் ஒரு குழந்தை தவறாக எடுத்துக் கொண்டுவிடுகின்றது . கட்டாயப்படுத்த வேண்டிய நிலைமை வந்தால் அதற்கான காரணத்தையும் தெரியப்படுத்த வேண்டும். வெறும் கட்டாயம் சுயநலமாகும். காரணத்தோடு கூடிய கட்டாயம் சமுதாய  நலமாகும்     

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 50

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி?
ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயின் உதவியுடனே எதையும் கற்றுக்கொள்ளத் தொடங்குகின்றது . தானாகக் கற்றுக்கொள்ள போதுமான அறிவு வளர்ச்சி இல்லாததால் முதலில் தாய் பின்னர் அதன் நெருங்கிய உறவினர்கள் மூலம்  நல்லது கெட்டது என எல்லாவற்றையும் ஒரு வேறுபாடு இன்றி கற்றுக்கொண்டு விடுகின்றது .குழந்தை வளர்ப்பில் தாய் காட்டும் அக்கறையும், தாயன்பும்  தாயின் மீது ஒரு குழந்தை அசைக்க முடியாத நம்பிக்கையை இயல்பாக வளர்த்துக் கொண்டு  விடுகின்றது. பிறர் செய்வதைப் பார்த்தும் , தாய் சொல்லிக்  கொடுப்பதையும்   காரணம் கேட்காமல் கற்றுக்கொள்ளும் எந்தப் பழக்கத்தையும் காரணம் தெரியாமல்  விட்டுவிடுவதில்லை . முழுமையாகப் புரிந்து கொள்வதற்குப் போதுமான அறிவு வளர்ச்சி குழந்தைகளிடம்  இல்லாததால் பெற்றோர்களின்  வெறும் அதிகாரமும் அறிவுரையும் பயன் தருவதில்லை. அறிவு வளர்ச்சியால் புரிதல் ஏற்படும் வரை , பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீயன விலக்கி நல்லனவற்றை மட்டும் தெரிந்து கொண்டு பழகுமாறு  வழிகாட்ட வேண்டும். இதற்கு ஒவ்வொரு பெற்றோரும்  குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தை அழுது  அடம் பிடிக்கிறான்  என்றும் ,  வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கின்றான் என்றும்  இன்றைக்கு பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் கைபேசியை கொடுத்து இஷ்டம் போல விளையாட அனுமதிக்கிறார்கள் . தொலைக் காட்சியை மணிக்கணக்கில் பார்க்க விட்டு விடுகின்றார்கள்.  நல்லதை கற்றுக்கொள்வதற்கு முன்பாகவே தீயனவற்றை கற்றுக் கொண்டு விடுவதால் பிற்பாடு நமக்கு வேண்டும் போது குழந்தையை நல்வழிப் படுத்துவது கடினமாகி விடுகின்றது . குழந்தை சுய அறிவால் சுயமாக முடிவெடுக்கும் நிலைவரை . நல்லன வற்றைமட்டுமே தெரிந்து கொள்ளுமாறு கற்றுக்கொடுக்க வேண்டும். நல்லவற்றை கற்றுக் கொண்டு நடக்கும் போது  சமுதாயத்தில்  சுய மதிப்பு மிகுந்து வருவதை பெற்றோர்கள் குழந்தைக்கு கொடுக்கும் பாராட்டுக்களால் உணர்த்தவேண்டும் .ஒரு குழந்தையின் உறுதியான அடித்தளத்துடன்  தொடரும் அறிவு  வளர்ச்சியின்  புரிதல் காரணமாக வளரும் போது தீயன தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இயல்பாகவே இருப்பதில்லை. இதனால் குழந்தை கற்றுக்கொண்டு கைவிடாத பழக்கங்களை விட்டுவிடுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக  பெற்றோர்கள் குழந்தையின்  ஆக்கப் பூர்வமான வளர்ச்சியில் அக்கறை எடுத்துக்கொள்வதற்கு  வாய்ப்பு ஏற்படுகின்றது