Sunday, August 29, 2010

vanna vanna ennangal-12


                                           உனக்கு மட்டும் ஓர் இரகசியம்




உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


ஒழுக்கம் உன்னிடம் குடியிருந்தால் போதும்

உயர்விற்கு வழிகள் கூடிவரும்

வெத்துப் பேச்சைக் குறைத்தால் போதும்

வேலைகள் தானாய் நிறைவேறும்

சொற்கள் சுத்தமாய் இருந்தால் போதும்

உலகம் உன்னை நம்பும்

சோம்பல் தினமும் வந்தால் போதும்

சுகமெல்லாம் பறந்து போகும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


நல்லோர் அறிவுரை கேட்டால் போதும்

நல்லதே வாழ்க்கையில் நடக்கும்

தீயோரைத் தாண்டிப் போனால் போதும்

தீமைகள் விலகிப் போகும்

போராடத் துணிவு இருந்தால் போதும்

புகழோடு வாழ முடியும்

பொறுமையைக் கடைப் பிடித்தால் போதும்

உன்பங்கு உன்னைச் சேரும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


தொலை நோக்கு தொடர்ந்தால் போதும்

தொல்லைகளைத் தவிர்க்க முடியும்

சிந்தனை வளம் வளர்ந்தால் போதும்

சிறப்பால் சிறக்க முடியும்

களைப்பின்றி உழைக்கத் தெரிந்தால் போதும்

களிப்பில் திளைக்க முடியும்

நம்பிக்கை நெஞ்சில் துளிர்த்தால் போதும்

எதையும் சாதித்து விடமுடியும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?


உற்சாகம் உறங்காமல் விழித்திருந்தால் போதும்

உலகமே உன்கையில் உறங்கும்

இறைவனை இதயத்தில் தீண்டினால் போதும்

தீயஎண்ணங்கள் தேய்ந்து போகும்

பொறாமையைப் புதைத்து விட்டால் போதும்

புகழ் உன்னைத்தேடி வரும்

தவறுகளைத் தவறாது தவிர்த்தால் போதும்

உறவுகள் உன்னோடு ஒட்டும்


உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ஓர் இரகசியம் சொல்வேன்

காது கொடுத்து அதைக் கேட்டு

காலத்தை நீ வெல்வாயா ?

Saturday, August 28, 2010

Eluthatha kaditham-8

அன்பார்ந்த இந்தியப் பெருங்குடி மக்களே ,




என் பேத்தி சிங்கப்பூரில் செக் -4 படிக்கின்றாள்.அவளுடைய

வகுப்பில் சீன ,மலேசிய மற்றும் இந்திய மாணவர்கள்

படிக்கின்றார்கள் .இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தமிழ்

மொழியை ஒரு பாடமாகப் படிப்பார்கள் .ஒரு நாள் தமிழ்

வகுப்பில் அவளுடைய ஸ்கூல் டீச்சர் வகுப்பு மாணவர்களிடம்

எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகின்றீர்கள் என்ற கேள்வி

கேட்டதாகவும் அதற்கு அவள் பதில் கூறியதாகவும் கூறினாள்.

அப்போது அக் கேள்விக்கு என்ன பதில் கூறினாய் என்று நான்

கேட்டேன்.எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதாகக்

கூறினேன் என்றும் அதற்கு டீச்சர் " அரசியலிலா ஈடுபடப்

போகின்றாய் ,அப்படியானால் உலகில் எங்கு வேண்டுமானாலும்

அரசியலில் ஈடுபடு ஆனால் இந்தியாவில் மட்டும் வேண்டாம்,

அங்கு நடப்பது அரசியலே இல்லை " என்று சொன்னார் என்றும்

பதிலளித்தாள்.பேத்தி சின்னப்பிள்ளை என்பதால் அதன் உட்பொருளை

அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் அவள் என்னிடம்

அப்படிக் கூறியபோது யாரோ நெருஞ்சி முள்ளால்

நெஞ்சைக் குத்தியது போல இருந்தது.ஊர் சிரித்து உலகமே சிரிப்பதற்கு

முன்னால் நாம் விழித்துக் கொள்ளவேண்டாமா?

இந்திய அரசியலே நீ எப்பொழுது நிமிர்ந்து நிற்கப் போகின்றாய் ?

உன்னுடைய இழுக்கிற்கு யார் காரணம்?அரசியல் வாதிகளா ?

அப்பாவி மக்களா ? இந்த நிலையை அப்படியே இருக்கட்டும்

என விட்டு விடப் போகின்றாயா ?மாற்றம் செய்ய வேண்டும்

என்றால், எப்படி? எப்பொழுது? யாரால்? செய்யப் போகின்றாய் ?

என்ன செய்யவேண்டும் என்று சொல்ல கொஞ்சம் யோசியுங்க !



அன்புடன்

காவேரி

Wednesday, August 25, 2010

Arika iyarpiyal -3


அறிக இயற்பியல் - 3




இரபீந்தர நாத் தாகூர்
(1861 -1941) இந்தியத் திருநாட்டிற்கு தேசிய கீதத்தைத்
தந்தவர் . இரபீந்திர நாத் தாகூர் ஒரு சிறந்த கவிஞர்
மட்டுமில்லை ,நல்ல இசைக் கலைஞரும் ,
ஓவியம் தீட்டுவதில் வல்லவரும் ,நாவல் ,நாடகம்
எழுதுவதில் ஒரு படைப்பாளியாகவும் இருந்தார் .இவருடைய
கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக 1913 -ல் இலக்கியத்திற்கான
நோபெல் பரிசைப் பெற்றார் .சாந்தி நிகேதனில் ஒரு ஆஷ்ரமம்
நிறுவி அங்கு ஒரு மாதிரிப் பள்ளிக்கூடத்தையும் நிறுவினார் .
தாகூர் ஒரு சிறந்த படைப்பாளியாக வருவார் என்று அவருடைய
தந்தையாரான தேவேந்திர நாத் தாகூருக்குத் தெரிந்திருந்தது. அந்த
இரகசியத்தை நாமும் தெரிந்து வைத்துக் கொண்டால் நம்
பிள்ளைகளையும் ஒரு சிறந்த வெற்றியாளனாக உருவாக்க முடியுமே . தாகூர் சிறு பிள்ளையாக இருக்கும் போது கிடைக்கும் காகிதங்களில் கவிதை என்று எதையாவது கிறுக்கி
அதைத் தன் தந்தையிடம் படித்துக் காட்டுவார் . அது அபத்தமாக
இருந்தாலும், அவரது தந்தையார்அதை வெகுவாகப் பாராட்டுவார் . அத்தோடு நில்லாமல் அதற்காக ஒருகைக் கடிகாரமும் பரிசு
அளிப்பார் . இந்த மனப்பூர்வமான பாராட்டும் ,பரிசும்
அவரை எதிர்காலத்தில் ஒரு தலை சிறந்த கவிஞனாக்கிவிட்டது.

உங்கள் குழந்தையினுடைய முயற்சி சிறிதெனினும் ,அதை வெகுவாகப் பாராட்டப் பழகிக்கொள்ளுங்கள் . அதைவிட
ஒரு சிறந்த ஊக்கம் உங்கள் குழந்தைக்கு இருக்கமுடியாது .
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் -2 ல் வந்த அஜித் அல்காவும், அந்தச் சிறுவன் ஸ்ரீகாந்த்-ம் வெற்றி மேடையைத்
தொட்டதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுடைய
பெற்றோர்கள் தொடர்ந்து அளித்த ஊக்கம்தான் . நம்புங்கள் ,எல்லாம் நம் எண்ணத்திலும் ,கையிலும்தான் இருக்கிறது .

                                                        *****************

அலைவு தானம் மாறும் ஊசல்

ஓர் உள்ளீடற்ற உலோகக் கோளம் நீரால் நிரப்பப்பட்டு ஊசல் குண்டாகஎடுத்துக் கொள்ளப்பட்டது. அக் குண்டின் அடிப்பாகத்தில்
ஒரு சிறிய துளையை ஏற்படுத்த நீரானது மெதுவாக வெளியேறும் .
ஊசல் அலைவுறும் போது இந்த வெளியேற்றம் ஏற்பட ,
ஊசலின் அலைவு நேரத்தில் என்ன மாற்றம் நிகழும் ?

                                           *******************

ஊசல் குண்டிலிருந்து நீர் வெளியேறும் போது ஈர்ப்பு மையம் மாறுகிறது .கோளம் முழுதும் நீரால் நிரப்பப்பட்டிருக்கும்
போது அதன் ஈர்ப்பு மையம் கோளத்தின் மையமாக இருக்கும் .
நீர் துளை வழியாக வெளியேறும் போது பாதியளவு நீர் வெளியேறும் வரை ஈர்ப்பு மையம் கீழிறங்க ,ஊசலின்உண்மையான நீளம் அதிகரிக்கிறது .அதனால் அலைவு நேரம் தொடர்ந்து
அதிகரிக்கிறது . அதாவது ஊசல் மெதுவாக அலைவுறுகிறது .மீதி நீர்
வெளியேறும் போது வெற்றுக் கோளமாகும் வரை அதன் ஈர்ப்பு மையம் மேலேறிக் கோளத்தின் மித்தை மீண்டும் அடைகிறது . அப்போது அலைவு நேரம் தொடர்ந்து அதிகரித்து தொடக்கநிலை மதிப்பை எட்டுகிறது .

                                                    *****************

Tuesday, August 24, 2010

vanna vanna ennangal-11

                                                      11.இட்டலித் தத்துவம்
                                                                   "காவேரி"


இன்றைக்கு வேண்டும் எனக்கு

இட்டலி என்றல்

என்றைக்கும் அதுவொன்றும்

மந்திரத்தில் விளைவதில்லை

கடைதெரு போய்

கடை கடையாய் ஏறி

கல்லில்லாத அரிசி வாங்கி

கருப்பில்லாத உளுந்தும் வாங்கி

அளந்தெடுத்து ஊறவைத்து

ஆட்டுக் கல்லிலிட்டு அரைத்து

இரண்டையும் ஒன்று கலந்து

இத்துணை உப்பிட்டு

அரைநாள் நொதிக்கவிட்டால்

அடுத்தநாள் மாவு ரெடி


அகன்ற சட்டியில் கொஞ்சம்

தண்ணீர் எடுத்து

ஆவிவர அடுப்பிலேற்றி

துணைத் தட்டில் ஈரத்

துண்டை விரித்து

சின்னச்சின்ன குழிகளில்

சிறிதளவு மாவை ஊற்றி

ஆறேழு நிமிடம்

ஆவியில் வெந்தபின்

ஊசி முனையில் பதம் பார்த்து

உரித் தெடுத்தால்

வெள்ளை இட்டலிப்பூக்கள்

வெம்மையிலும் பூத்திருக்கும்


தினம் உண்ணும்

இட்டலிக்கே நிலை

இதுவென்றால்

உன் எதிர்காலக் கனவுகளுக்கு

உருவமென்ன உடனேயா

வந்துவிடும் ?

உருவாக்கம் எதுவும்

உடனடி நிகழ்வில்லை

உருவமில்லாக் கனவுகள்

உண்மை நிகழ்வுகளாகப் பூக்க

எண்ணங்களுக்கு உரம் வேண்டும்

உழைக்க உறுதி வேண்டும்

பக்குவம் வர வேண்டும்

படிப்படியாய் உயர வேண்டும்.

Sunday, August 22, 2010

Arika iyarpiyal -2

அறிக இயற்பியல் -2

ஓர் அரசியல்வாதி விட்டுச் சென்ற இடத்தைப் பிடிப்பதற்கு
நான் ,நீ என்று போட்டப் போட்டி .ஆனால் ஓர் அறிவியல்
விஞ்ஞானி விட்டுச் சென்ற இடம் வெகு காலமானாலும்
வெற்றிடமாகவே இருக்கிறது . இதற்குக் காரணம் நான்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

ஜார்ஜ் காமோவ் (George Gamow )என்றொரு விஞ்ஞானி.இரஷ்யாவின்
உக்ரெயினில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் . அணுக்கரு
விற்கு திரவத் துளி மாதிரியைப் பற்றியும் ,அல்பா சிதைவுவிற்கு
விளக்கமும்.பேரண்ட பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும்
தெரிவித்தவர் .இவர் எழுதிய பல அறிவியல் நூல்கள் மக்களிடையே
மிகவும் பிரபலமானவை .

மக்களால் கண் மூடித்தனமாகப் பின்பற்றப்படும் மதவாதிகளின்
கருத்துகள் பல இயற்கைக்குப் புறம்பாக இருக்கிறன என்று
சிறு வயது முதற்கொண்டு காமோவ் அடிக்கடி சிந்திப்பார் .
அதை உறுதிப்படுதுவதற்கான வாய்ப்பை எப்பொழுதும் எதிர்
பார்த்துக் கொண்டே இருந்தார் . ஒரு சமயம் தேவாலயத்தில்
ஒரு ஆன்மிகச் சொற்பொழிவாளர்,தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட
சிவப்பு ஒயினும் ,ரொட்டித் துண்டும் ஏசுவின் இரத்தமாகவும்
சதையாகவும் மாறுகிறது என்று சொல்லி ஒவ்வொருவருக்கும்
கொஞ்சம் ஒயினும் ஒரு ரொட்டித் துண்டும் கொடுத்தார் .
தனக்கு அளிக்கப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்ட ஒயினையும் .
ரொட்டித் துண்டையும் விழுங்காமல் வாயில் வைத்துக் கொண்டு
விரைந்து வீட்டிற்கு ஓடி , அந்த ரொட்டித் துண்டை எடுத்து ,
தன்னிடமுள்ள ஒரு பொம்மை நுண்ணோக்கியால் ஆர்வத்துடன்
ஆராய்ந்து பார்த்தார். அது வழக்கமான ரொட்டித் துண்டு போலவே
இருந்தது . இந்த அறிவியல் பூர்வமான சோதனையே பின்னாளில்
தன்னை ஒரு விஞ்ஞானியாக்கியது என்று காமோவ் ஒருமுறை
சொல்லியிருக்கிறார் .

ஆம் ,உண்மைதான் . நீயும் இயற்கையைக் கூர்ந்து கவனித்துவந்தால்
நீயும் கூட சத்தியமாய் ஒரு விஞ்ஞானிதான்.

கேள்வி .2

தானாகக் கீழே விழும் கனமான ,இலேசான குண்டுகள்

கலிலியோ ,தானாகக் கீழே விழும் பொருட்களைப் பற்றி
ஆராய்ந்த போது,கனமான பொருளும்,இலேசான பொருளும்
சம உயரத்தை சம காலத்தில் கடந்து ஒரே நேரத்தில்
தரையில் விழுகின்றன என்பதைக் கண்டறிந்தார் .அதாவது
தானாகக் கீழே விழும் பொருளின் முடுக்கம் அவற்றின்
நிறையோடு தொடர்புடையதாக இல்லை. வெவ்வேறு
நிறையுடைய எல்லாப் பொருட்களும் ஒரே அளவு
முடுக்கத்தையே பெறுகின்றன

கனமான இரும்புக் குண்டு இலேசான மரக்குண்டை விடக்
கூடுதலான ஈர்ப்பு விசையுடன் ஈர்க்கப்பட்டலும் அது தான்
ஏற்படுத்துகின்ற கூடுதலான நிலைமத் தடையால் வேக
மாற்றத்தைக் கட்டுப்படுத்தி எல்லாப் பொருள்களும்
ஒரே மாதிரியான வேக மாற்றத்துடன் விழுவதைப்போல் விழுகின்றன .இந்த சுய கட்டுப்பாடு ஈர்ப்புப்புலத்தில்
மட்டுமே காணப் படுகின்றது.

எல்லா வகையிலும் ஒத்த இரு பந்துகளில் ஒன்று கனமானது ,மற்றொன்று இலேசானது .ஒரு குறிப்பிட்ட
உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் அவற்றைத் தானாகக்
கீழே விழுமாறு செய்ய ,கனமான பந்து முதலில் தரையை
அடைவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

                                         ****************

தானாகக் கீழே விழும் பொருட்களுக்கு வளிமமண்டலத்திலுள்ள

காற்றினால் இயக்கத் தடை ஏற்படுகின்றது .இந்த எதிர் முடுக்க
விசை பொருளின் நிறையைச் சார்திருப்பதில்லை .இது பருமனை
யும் ,புறப்பரப்பின் தன்மையையும் பொருத்திருகிறது. எனவே
எதிர் முடுக்க விசை இரு பந்துகளுக்கும் சமமாகும் . ஆனால் எதிர் முடுக்கம் என்பது எதிர் முடுக்க விசைக்கும் நிறைக்கும் உள்ள
தகவாகும் . எனவே கனமான பந்து குறைவான எதிர் முடுக்கத்தையும்,இலேசான பந்து மிகுதியான எதிர் முடுக்கத்தையும் பெறுவதால் கனமான பந்து முதலில் தரையை  அடைகிறது .

Eluthatha kaditham-7

எழுதாத கடிதம் -7


அன்பார்ந்த தமிழக நூல் வெளியீட்டாளர்களே


தமிழ் மொழி தமிழகத்தில் மட்டுமில்லாது உலகெங்கும் வளர்ந்து
வருவதற்கு உங்கள் பணி இன்றியமையாதது . அதற்காகத் தமிழ்
மொழி உங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்.நீங்கள்
நூல்களை கஷ்டப்பட்டு வெளியிட்டாலும் ,இஷ்டப்பட்டு வெளியிட்டாலும்
பெரும்பாலும் நல்ல இலாபங்களையே சம்பாதித்துவருகின்றீர்கள்.
ஆனால் நீங்கள் நூல் வெளியிடுவதற்குக் காரணமாக இருக்கும்
ஆசிரியர்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் .

ஒரு சில பிரபலமான எழுத்தாளர்களைத் தவிர பிற எழுத்தாளர்கள்
எழுதி, அதற்குரிய நியாயமான வெகுமதியைப் பெறுவதில்லை .நூல்
வெளியீட்டாளர்களால் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணமே
அவர்களிடம் இறுதியில் எஞ்சி நிற்கிறது . நடைமுறையில் நூலை
எழுதிய ஆசிரியருக்கு ராயல்டியாக விற்பனை வருமானத்தில்
7 .5 முதல் 15 % வழங்குவது உலக வழக்கமாக இருந்து வருகிறது .
ஆனால் இதைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் படும் பாடு அவர்களுடைய
நெஞ்சிலேயே புதைக்கப்பட்ட ஒரு சோக கீதம் .

நூலை எழுதி வெளியிடுவதற்காக அனுப்பி வைத்த பின்னர் அதை
வெளியிட ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பது கடைசி வரை
தெரியாது . பல முறை கடிதம் எழுதியும் , நேரில் சந்தித்தும் கேட்டுக்
கொண்டபிறகு அதை ஒருவழியாக வெளியிடுவார்கள். நூல்
வெளியிடும் போது முறையான ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை .
முழு உரிமையை வெகு இலவசமாக அபகரித்துக் கொண்டுவிடுவார்கள் .
இதில் இலவசமாக புரூப் திருத்தம் வேறு செய்துகொடுக்க வேண்டும்
ஆசிரியரும் தன்னுடைய நூல் வெளிவந்தால் போதும் என்ற
ஆர்வத்தில் தன்னுடைய உரிமையை விட்டு விடுவார் . ஆசிரியருக்கு
கொடுக்க வேண்டிய சன்மானமும் உடனேயே கொடுக்கப்படுவதில்லை .
பலமுறை நினைவூட்டி நீண்ட காலத்திற்குப் பிறகே அதையும்
ஒரு ஆசிரியர் பெறுகிறார் .முழு உரிமைக்கான சன்மானம் எவ்வளவு என்று நினைக்கின்றீர்கள், வெறும் Rs .1000 லிருந்து 6000 வரைதான். தன்னுடைய எழுத்துக்களை வரலாற்றுப் பதிவு செய்து விட்டோம் என்ற நிம்மதி மட்டும் ஒரு ஆசிரியருக்குக் கிடைகிறது .சங்க காலத்திலிருந்தே மொழி வளர்க்கும் பெரும்பாலான புலவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை .புலவர்களின் வறுமை என்பது மொழியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி விடும் .அவர்களின் வயிற்றைப் போல எழுதுகோலும் வற்றிப்போனால் படைப்புத்தொழிலும் அழிந்து போகாதா .

இதைக் கண்ணுறும் போது எனக்கொரு யோசனை தோன்றுகிறது .இதில்
நான் முன்பே ஈடுபடாததற்குக் காரணம் நூல்களை சந்தைப்படுத்தும்
வழிமுறை இல்லாததுதான் .

எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பொதுவான அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்களுடைய படைப்புகளை வெளியிடலாமே . முதலீடும் ,இலாபமும் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் . கூட்டு வியாபாரம் என்பதில் சிலசிக்கல்கள் இருக்கவே செய்கின்றன .எனினும் மிகச் சரியாக முன் திட்டமிட்டு ,
நேர்மையாகச் செய்தால் எல்லோருக்கும் நலமே . உழவர் சந்தை போல ,நூல்சந்தையும் ஆங்காங்கே தோன்றினால் நாட்டுக்கும் நல்லது மொழிக்கும் நல்லது.

எழுத்தாளர்களே கொஞ்சம் சிந்தியுங்க !



அன்புடன்

காவேரி .

Saturday, August 21, 2010

Arika iyarpiyal

இன்றைய உலகம் பெரிதும் மாறிப் போயிருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் வளர்ந்து வரும் அறிவியல் தான்.நிர்வாகம்,பொருள் உற்பத்தி ,மருத்துவம் ,விவசாயம் கட்டுமானம் ,போக்கு
வரத்து ,பொழுது போக்கு என எத்துறையை எடுத்துக்கொண்டாலும்
அதற்கும் அறிவியலுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பதால்
அறிவியலைப் புறக்கணித்துவிட்டு எந்த நாடும் முன்னேறிவிட
முடியாது .அறிவியல் என்பது ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப
வளர்ச்சிக்கும் ஆதாரமானது.இந்த அறிவியலை,அறிவியலுக்காகப்
படிப்போர் இன்றைக்கு இளைய தலைமுறையினரிடையே அருகிக்
கொண்டே வருகின்றார்கள் . இதற்குக் காரணம் அலைபாயும்
எண்ணங்களைத் தடுமாறச் செய்து, செல்லும் திசையைத் திருப்பி விடும் காரணிகள் சமுதாயத்தில் பெருகி வருவதுதான்.எண்ணங்கள்
தடுமாறுவதற்கு முன்னரே குறிக்கோளில் மனதை நிலைப்படுத்தி
விட்டால் மறைவாய்,மௌனமாய்ப் பெருகும் தவறான போக்குகளை மட்டுப் படுத்திவிட முடியும் .இதையும் இளம்வயதிலிருந்தே தொடங்கும் போது விளையும் பிற்பயன் முழு அளவினதாக இருக்கும் .அறிவியலை அறிவியலுக்காகப் படிக்கும் போது ,அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலுவதாகின்றது. கதை படிப்பது போலில்லை அறிவியலைக்
கற்பது. அதில் பல துறை சார்ந்த கருத்துகள் ஒருங்கிணைந்துள்ளன . ஒரு கருத்துதெரியாமல் மற்றொரு கருத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால் ,மேலோட்டமாக விரைந்து கற்றுக்கொள்ள இயலாது .மனதில் எழும் ஐயங்கள் நம்பிக்கையின்மையைத் துண்டுவதால் ,பல சமயங்களில் ஆர்வம் தடைப் பட்டுப் போவதுமுண்டு. அறியும் அறிவியலை
ஐயமறக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும் . இதற்குப் பல பொது அறிவியல் நூல்கள் துணை புரிகின்றன . 'அறிக இயற்பியல்' எனும் தலைப்பில் எழுதப்படவிருக்கிற செய்திகள் பயனுள்ளதாக இருக்கும்

என நம்புகிறேன் .

ஓடும் இரயிலில் பந்து விளையாட்டு

நாம் பலமுறை இரயிலில் பயணம் செய்திருக்கிறோம் .சும்மா
உட்கார்ந்துகொண்டு அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டும்
அரட்டை யடித்துக் கொண்டும் இருப்போம் . ஒருமுறை கூட
பயண நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக்கொள்ள
முயற்சிப்பதில்லை. படிக்கலாம், படித்ததைச் சிந்திக்கலாம் ,
சிந்தித்ததை பதிவு செய்யலாமே . 
 
ஒருவர் ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டு மேல்நோக்கி ஒரு

சிறிய பந்தைத் தூக்கி எறிகின்றார் . அந்தப் பந்து சிறிது தொலைவு
மேல் நோக்கிச் சென்ற பிறகு பின் திரும்பி கீழே விழுகின்றது .
வானத்தை நோக்கி விட்டெறிந்த கல் போல அந்தப் பந்து,
எறிந்தவர் மீதே வந்து விழுமா அல்லது பந்து காற்று வெளியில்
பயணித்த போது இரயில் சிறிது தொலைவு இயக்கம் காரணமாக
நகர்ந்து சென்றதால் பின்னால் போய் விழுமா?

 ஓடும் இரயில் பெட்டியில் மேல் நோக்கி எறிந்த பந்து மீண்டும்

எறிந்தவர் மீதே விழும் இரயிலின் இயக்கம் என்பது இரயில் பெட்டிகளின் இயக்கம் மட்டுமல்ல .இரயில் பெட்டிக்குள் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும்தான் .அவற்றின் நிலைமம்
(inertia) காரணமாக பந்தின் கிடைமட்ட திசைவேகக் கூறு ,இரயில்
செல்லும் திக்கில் இரயிலின் வேகமாக இருக்கும் . மேல் நோக்கி எறியப்பட்ட பந்தின் கிடைமட்டத் திசை வேகம் மாறுவதில்லை
என்பதால் ஒரே கிடைமட்டத்திசை வேகம் கொண்ட பந்திற்கும், எறிபவருக்கும் இடைப்பட்ட சார்பு வேகம் சுழியாகும் . எனவே பந்து எறிபவரைச் சென்றடைகிறது .

Thursday, August 19, 2010

Eluthatha kaditham-6

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் தலைவர்களே

இந்தியாவில் குற்றங்கள் பெருகி வரும் நிலை பற்றி முன்னொரு
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.அதற்கு சரியான தீர்வு என்ன என்று யோசித்தபோது என்னுள் எழுந்த எண்ணங்களை அதன் தொடர்ச்சியாகத் தரலாம் என நினைக்கிறேன் .

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று வந்தால் வீடு கொள்ளையடி-க்கப் பட்டிருக்கிறது .தரமான பொருள் வாங்கப் பணம் கொடுத்தால்
கலப்படம் செய்யப்பட்ட அல்லது எடை,அளவு குறைவான பொருள் தரப்படுகிறது. தனியாக ஒரு பெண் இரவு வேண்டாம்,பகலில்
சென்றால் கூட,கடத்தப்பட்டு கற்பழிப்புக்கு ஆளாகின்றாள்.
எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம் ,சண்டை ,சச்சரவு . கருத்து முரண்பட்டால் யாரவது ஒருவர் கொலை செய்யப்படுகின்றார் .
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்,
ஏமாறுபவர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என இதற்குப்
பலரும் சமாதானம் கூறுவார்கள் ஏமாற்றுபவர்களை இப்படி
எல்லோரும் விட்டு விடுவதால் அவர்கள் அவ் வேலையை
இன்னும் தீவிரமாகச் செய்யத் துணிவு கொள்கிறார்கள்
ஏமாறுபவர்கள் ,இயல்பான வாழ்கையை வாழுகின்றவர்கள்.தங்களுக்குப் பாதுகாப்பு அரசு என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள் .
இதில் அவர்கள் தங்களுடைய மூளையைத் தவறாகப் பயன்
படுத்தவில்லை . ஆனால் ஏமாற்றுபவர்கள் இயல்பான

வாழ்க்கை முறைக்கு எதிராகச் சிந்தித்து தவறாகச் செயல்
படுகின்றார்கள் . எது கிளர்சியுற்றதோ அதைத்தான் நாம் செம்மைப்
படுத்தவேண்டுமே ஒழிய,அமைதியாக இருப்பதையே மீண்டும்
மீண்டும் அமைதிப் படுத்த முயற்சிக்கக் கூடாது

ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதற்கு இரு காரணங்களைக்
கூறலாம் .ஒன்று சுகம் தேட ,மற்றொன்று வறுமையைப் போக்க .
சுகம் தேடுபவர்கள் அதன் எல்லை தெரியாததால் வரம்பின்றி
பொருள் குவிக்கத் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைச்
செலவழிக்கின்றார்கள் .தங்கள் முயற்சியில் வெற்றி பெற
எந்தத் தவற்றையும் செய்ய இவர்கள் சிறிதும் வெட்கப்
படுவதில்லை .கண்காணிப்பு இல்லாமை,லஞ்சம் கொடுத்து
தப்பித்தல்,அரசியல் அங்கீகாரம் , குண்டர்களைக் கொண்டு
பயமுறுத்துதல் போன்ற திரை மறைவு விஷயங்கள் இவர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது . பெரும்பாலான அரசியல் வாதிகள்
இதன் கீழ் வருவதால் அரசியல் அமைப்புக்களைக் கொண்டே
இவர்களைத் திருத்த முடியாது .உண்மையைச் சொன்னால் அரசியல் வாதிகள் அவர்களாகப் பார்த்துத் திருந்த விட்டால்
இதில் ஓர் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே முடியாது .

வறுமையில் தொடர்ந்து வாடுபவர்கள் ,திறமைகள் இருந்தும் தொடர்ந்து புறக்கனிக்கப்படுபவர்கள் செயற்கையான முட்டுக்கட்டைகளைக் கண்டு மனம் வெறுத்து மனநிலை பாதிக்கப்பட்டிருப்பார்கள் .பாதிப்பின் அளவைப் பொறுத்து இவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்

பொதுவாக ஒருவர் உடனடியாக குற்றம் புரியும் நிலைக்கு வந்து விடுவதில்லை .இயற்கையாக வாழும் நிலை அதாவது இயல்பாக வாழும் முறையிலிருந்து செயற்கையாக வாழும் நிலை அதாவது குற்றம் புரிந்து வாழும் முறைக்குத்தாவும் போது இடைவெளியான ஒரு காலம் உண்டு . இது வேலை வெட்டி இல்லாத காலம் .இந்தக் காலத்திலேயே இவர்கள் தங்களைத் தவறான பாதையில்
செல்லத் தூண்டிக் கொள்கிறார்கள் . வேலை இல்லாமல் சும்மா ஊர் சுற்றித் திரியும் காலங்களில் இவர்கள் காணும் சுற்றுப்புற
அவலங்களினால் மன மாற்றம் பெறுகிறார்கள். ஒரு தவறு செய்வதைச் சிந்திப்பதற்கு ஒரு கால அவகாசம் கொடுத்தது
போல ஆகிவிடுகிறது .வேலை இல்லாமல் ஒரு இளைஞரும்
இருக்கக் கூடாது என்பது இனி வரும் அரசாங்கத்தின்
அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும் .நாட்டின் வளம் ஒரு சிலரால் மட்டும் தீர்மானிக்கப் படாமல் ,நாட்டு மக்கள்
எல்லோராலும் சேர்ந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும் .
எல்லோருக்கும் வேலை கொடுப்பது என்பது ஒரு நல்ல அரசின்
கடமையாகும் .அரசாங்க வேலையில் எல்லோருக்கும் வாய்ப்பில்லை என்று உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விடாதீர்கள் .புதிய புதிய யுக்திகளினால் பணி இடங்களை உருவாக்குங்கள் .கஜானா காலி என்று பழைய கதையையே கூறாதீர்கள் . இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்து
கொடுங்கள் .

கண்காணிப்பு என்பது சிறிதும் இல்லை கடைகள், நிறுவனங்கள்
போன்றவற்றில் எடை,அளவுக் குறைவாக விற்பனை செய்வோர் ,
வரி ஏய்ப்போர், பணி புரிவோர் ஒழுங்காகப் பணி செய்கின்றார்களா,
பொது இடங்களில் விதிகளை மீறாமல் இருக்கின்றார்களா எனக்
கண்காணித்தல் ,கட்டமைப்புப் பணிகளை அதிகரித்து
எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுத்தல்,பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்துதல்,தரிசு நிலங்களை அரசு என்ற பொது முதலாளிக்காக
உழவு செய்தல்,வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்வதை அரசு சார்பான அமைப்பு மூலமாக மட்டுமே வாங்குவோர் மற்றும் விற்போருக்கு நேர்மையாகச் செய்தல் ,அரசு அமைப்பு
மூலமாக வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுத்தல் ,கிராமங்களிலும், நகரங்களிலும் பூங்காக்களை
உருவாக்கி ,உடற் பயிற்சி கூடங்களை நிறுவி செயல்படுத்துதல் ,
ஓய்வு பெற்றவர்கள்,முதியவர்கள் விரும்பினால் அவர்களுக்கேற்ற வேலையைக் கொடுத்தல் ,இப்படி இன்னும் இன்னும்
எவ்வளவோ இருக்கின்றது . நாங்கள் நினைத்தால் அது நிழல் நீங்கள் நினைத்தால் அது நிஜம் .இனியாவது நாட்டை
நாட்டுக்காக வளப்படுதுங்களேன். எல்லோரும் சேர்ந்து ஏதாவது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாம் அல்லல்பட
நேரிடும்.கொஞ்சம் சிந்திக்க வேண்டுகின்றேன் .



அன்புடன்.

காவேரி





 

Tuesday, August 17, 2010

vanna vanna ennangal-10

10.ஒன்னுமே புரியலே உலகத்திலே


                     "காவேரி"


என்னென்னமோ நடக்குது நாட்டிலே
எதுவுமே புரியலே வீட்டிலே

ஆளும் தலைவனைக் கேட்டால்
அமைச்சனைக் கேளு என்பார்
அமைச்சரை அணுகிக் கேட்டால்
அதிகாரியைக் கேளு என்பார்
அதிகாரியைத் தேடிக் கேட்டால்
மக்கள் ரெம்ப மோசம் என்பார்

என்னென்னமோ நடக்குது நாட்டிலே
எதுவுமே புரியலே வீட்டிலே

மக்களைக் கூட்டிக் கேட்டால்
அதிகாரியைச் சுட்டிக் காட்டுவார்
அதிகாரியை அதட்டிக் கேட்டால்
அமைச்சரை இட்டுக் கட்டுவார்
அமைச்சரைத் தட்டிக் கேட்டால்
தலையே ரெம்ப மோசம் என்பார்

என்னென்னமோ நடக்குது நாட்டிலே
எதுவுமே புரியலே வீட்டிலே

தினம் தினம் தவறுகள்
திரும்பத் திரும்ப நடந்தாலும்
எங்கே தவறு என்று
இன்னும் தெரியலையே எனக்கு
தவற்றைத் தடுத்து நிறுத்த
தெரியுமா ஒருவழி உனக்கு?

Sunday, August 15, 2010

Eluthatha kaditham-5

எழுதாத கடிதம் - 5

பழம் பெருமைக்குரிய இந்தியத் திருநாட்டை ஆளும் அரசியல்
தலைவர்களே

நான் பல முறை சிந்தித்து சரியான விடை கிடைக்காமல் மனதை
வருத்திய ஒரு கேள்வி உண்டென்றால் அது இதுதான்.
இந்தியாவில் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே
வருவதேன் ? நேர்மையற்ற வாழ்க்கை வழி முறையை
இந்தியர்கள் ஏன் அதிகம் நாடுகின்றார்கள் ? நேர்மையாக வாழும்
இந்தியர்கள் சிறுபான்மையாகிக் கொண்டே வரும் நிலையால் ஒரு பாதுகாப்பற்ற சூழல் உருவாகித் திடமாக நிலை பெற்று
வருகின்றது . ஒரு விதமான பயம் ,ஏமாற்றப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் , போன்றவற்றால் அவர்களும் தடம் புரண்டு வாழத் துணிந்து வருகின்றார்கள் .இன்றைக்குக் கிடைக்கும் புள்ளி விவரங்களை
வரைபடத்திலிட்டு இந்த நிலையின் போக்கு எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்கும் போது அதன் முடிவுகள்
என்னை நிலை குலையச் செய்கின்றன . இந்த முரட்டுத் தனமான
போக்கிற்கு மக்களால் ஒரு தீர்வைத் தரவே முடியாது .ஏனெனில்
இதைப் பொறுத்தமட்டில் மக்கள் நோயாளிகள் .மருத்துவர்களாக
விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட நீங்களே இதற்கு
சரியான மருந்து கொடுத்து ஒரு முற்றுப் புள்ளி வைக்கமுடியும் .

இந்தியாவில் குற்றங்கள் பல விதமாக இருக்கின்றது.உலகில் எங்குதான் குற்றங்கள் நடைபெறவில்லை, என்று நம்மை நாமே சமாதனப் படுத்திக்கொண்டு இன்னும் சும்மா இருப்பதில்
அர்த்தமில்லை எதிர்காலச் சந்ததியினர் நம்மை விடவும்
சிறப்பாக வாழ்வதற்கு வழி ஏற்படுதிக்கொடுக்காவிட்டாலும்
குறைந்தபட்சம் நம்மைப் போலவாவது வாழ்வதற்கான
சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும் .

சட்டத்திற்கு புறம்பாக மருந்து,உணவுப் பண்டங்கள்
மற்றும் கலப்பட பொருள்கள் போன்றவற்றை எந்தத் தடையுமின்றி விற்பது,கள்ளநோட்டு அடித்து விநியோகிப்பது ,கள்ளச் சாராயம்
காய்ச்சி விற்பனை செய்வது ,நிதிநிறுவனம் மூலம் மோசடி செய்வது மாமூல் ,லஞ்சம் வாங்குவது ,வேலை தருவதாகக் கூறி
ஏமாற்றுவது ,சிறுவர்களைக் கடத்தி பணம் பறிப்பது அல்லது
விற்றுவிடுவது ,குவாரிகளில் உழைப்பை வாங்கிக்கொண்டு
அடிமையாக வைத்திருப்பது ,பொய்க்கையெழுத்து பத்திரம்
போன்றவற்றால் ஏமாற்றுவது ,மற்றவர்களின் உடைமைகளைத்
திருடுவது ,ஆசைவார்த்தைகளைக் கூறி மோசம் செய்வது ,பெற்ற குழந்தையைத் தேவையில்லை என்று அனாதரவாய்
விட்டுவிடுதல் கொலை செய்தல் அல்லது விற்று விடுதல்
போதைப் பொருள் விற்பனை , வீடு,கடை ,பேங்க் புகுந்து கொள்ளை அடித்தல், கழுத்துச்சங்கிலியை அத்துக் கொண்டு ஓடுதல், ஜேப்படி செய்தல் ,கார்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றை
திருடுதல் ,மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுதல்
அல்லது ஒரு விதமாக நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றுதல்
,நிறுவனத்தின் நிதியை தவறாகப் பயன் படுத்துதல் ,
அதிகாரம்,செல்வாக்கு, பண பலம் போன்றவற்றைப் பயன் படுத்தியும் ,மக்களைப் பயமுறுத்தியும் ஏமாற்றுதல் , மக்களிடையே வன்முறையைத் தூண்டி ஆதாயம் தேடுதல் ,
மக்களின் கவனத்தை திசை திருப்பி ஆதாயம் பெறுதல் , சின்னச் சின்னக் காரணக்களுக்கெல்லாம் பொதுச் சொத்துக்களை
அழித்தல்,பாதுகாப்பற்ற பெண்களைக் கற்பழித்தல் ,இன்னும்
இன்னும்........ இந்தப் பட்டியல் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகின்றது .புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்க வீதத்தைவிட இந்த குற்றங்களின் வீதம் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன . பெரும்பாலான குற்றங்கள் முறையாகப் பதிவு
செய்யப்படுவதில்லை என்பதால் இது இன்னும் கூட இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.இது நமக்குப் பெரும் அச்சத்தைத் தருவதாக இருக்கின்றது

மக்களை ஆண்டது போதும் ,மக்களின் மனதை ஆளப் பாருங்கள் .
உங்கள் காலத்தில் செய்யவேண்டியது உங்கள் காலத்திலேயே
செய்யப்படவேண்டும் . இல்லாவிட்டால் அது செய்யப்படாமலேயே
போய்விடலாம் . ஏனெனில் பிற்பாடு அதைச் செய்வதற்கு
இன்னும் கடிய,கூடுதலான முயற்சி எடுக்கவேண்டியிருக்கும்.
குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்றால் அதற்கு இருக்கும் தடை போதுமானதாக இல்லை என்று பொருள். மொழியோடு
இவை எல்லாம் இங்கே வளர்ந்தால் மொழிதான் வளருமா
இந்தியர்களின் நிலைதான் வளருமா ?

இதில் இருக்கக்கூடிய ஒரு பொதுவான குற்றச்சாட்டு
பெரும்பாலான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து
விடுகின்றர்கள் என்று சொல்லப்படுவதுதான். இதற்கு அரசியல் தலையீடே காரணம் என்று மக்கள் நினைக்கின்றார்கள் .
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் தவறாது தண்டிக்கப் படவேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் அடிப்படைக்கொள்கையாக இருக்கவேண்டும் .
அரபு நாடுகளைப் போல இல்லாவிட்டாலும் முறையான
தண்டனைகள் மூலமே ஒரு சமூக ஒழுங்கை இங்கே
நிலைப்படுத்த முடியும்.

மக்களோடு நீங்களும் சிந்திக்க வேண்டுகின்றேன்.

அன்புடன்,

காவேரி

Friday, August 13, 2010

Eluthatha kaditham-4

எழுதாத கடிதம் -4

பொருளின் இயக்கத்திற்கு மட்டுமின்றி ஒரு நாட்டின்
இயக்கத்திற்கும் நியூட்டனின் இயக்க விதிகள் பொருந்தி
வருகின்றன . எனவே மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
அரசியல் தலைவர்களே இந்த விஞஞானத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். அரசியல் நாகரிகம் மேம்படுவதற்கான ஒரு வழி பிறக்கலாமே.மக்கள் உங்களிடம் ஒரு நல்ல அரசியலை எதிர்பார்க் கின்றார்கள் .மக்களுக்காக மக்களை ஆள வந்த பின் அந்த அடிப்படையான கொள்கையிலிருந்து வேறுபட்டிருப்பது பாவம் நம்பிய மக்களுக்குத் துரோகம் செய்வதற்கு ஒப்பாகும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து இன்றைக்கு ஏறக்குறைய முற்றிலும் சீரழிந்து விட்ட
இந்த அரசியல் நாகரிகம் மண்ணுக்குள் புதைந்து விட்ட
இந்து சமவெளி நாகரிகம் போல எண்ணங்களுக்குள் ஒரு புதை பொருளாகி விட்டது .

மக்கள் உங்களிடம் நியாயமாக என்ன எதிர் பார்க்கவேண்டும் என்பதில் மக்களும் மக்களுக்கு நியாயமாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் நீங்களும் நேர்மையாக இருக்க இந்த நானூறு ஆண்டு காலப் பழமையான அறிவியல் விதிகள் வழி காட்டுகின்றன.

நியுட்டனின் முதல் விதி

எந்தப் பொருளும் தன் இயக்க நிலையில் வேகத்திலோ அல்லது செல்லும் திசையிலோ மாற்றம் பெற அதன் மீது எதாவது ஒரு புறவிசை செயல் படவேண்டும். இல்லாவிட்டால் அப் பொருள் தன் ஓய்வு நிலையிலோ அல்லது ஏற்கனவே பெற்றிருந்த அதே இயக்க நிலையிலோ இருக்கும் .

இந்த விதி,விசையின் ஒரு பொதுத் தன்மையைத் தெரிவிக்கின்றது
அதாவது விசையின்றி(விசை மூலமின்றி) எந்த இயக்க மாறுதலும்
நடைபெற முடியாததைப் போல, செயல்திறன் மிக்க ஒரு தலைவனின்றி நாடு எந்தவளர்ச்சியையும் நிலைப் படுத்திக்கொள்ள முடியாது .ஒரு பொருளின் இயக்கமாறுதலுக்கு காரணமாக இருக்கும் விசை போல ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முழு முதல் காரணமாக இருப்பது அந் நாட்டின் தலைவரே . நாட்டின் வளர்ச்சியை முடுக்கிவிடும் மூல சக்தி முழுமையாக
நாட்டின் தலைவரிடமே உள்ளது. ஏனெனில் தன் எண்ணத்தை உடனடியாகச் செயல் படுத்தக்கூடிய கட்டமைப்பும், வாய்ப்பும்
நாட்டுத் தலைவரிடம் மட்டும் இருக்கின்றது .ஒரு தலைவர் ஆளும்
போது சுகமாய் இருந்துவிட்டு ,போகும் போது நாட்டில் இருக்கும்
மற்றும் வளர்ந்துவரும் தீய சக்திகளைச் சுட்டிக்காட்டி தன் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதாக
இவ் விதி இருக்கின்றது .

நாட்டுத் தலைவர் பொறுப்புள்ளவராக இருப்பாரானால் அந் நாடு அவரால் ஊட்டப்படும் உந்து விசையால் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் .சிங்கப்பூரின் லி குவான் யு ,மலேசியாவின் மகாதீர், கியூபாவின் பெடரல் காஸ்ட்ரோ போன்ற தலைவர்களை இதற்கு முன் உதாரணமாகக் கூறலாம் .

நியுட்டனின் இரண்டாம் விதி

விசை ஒரு பொருளின் மீது செயல்படும் போது அதற்கு ஒரு முடுக்கத்தைக்கொடுத்து அதன் இயக்கத்தை முடுக்கிவிடுகின்றது .அது பெறும் முடுக்கத்தின் அளவு அதன்நிறையைப் பொருத்திருக்கின்றது.இதைக் கணித மொழியில் குறிப்பிட்டால்
F (விசை) = m (நிறை) x a (முடுக்கம்)..விசை,நிறை மற்றும் முடுக்கம்
இவைகளுக்கு இடைப்பட்ட தொடர்பை இது வரையறுப்பதால் இவ் விதி ஒருதலைவர் தன் நாட்டை ஆளும் முறையின் அடிப்படையைத் தெரிவிக்கின்றது.விசை அல்லது விசை மூலம் அரசியல் தலைவர் என்றால் ,நிறை என்பது நாட்டுமக்களாகும் .முடுக்கம் என்பது மக்களின் நிலை மாற்றம் என்பதால்அது நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கும் .விரைவான நாட்டு வளர்ச்சிக்குத் தேவை கூடுதலான விசை .இது கூடுதலான மக்கள் தொகையால் குறைவானால் ,அதற்கேற்ப விசையின் அளவைக் கூட்டவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது.
ஒரு தலைவர் நாட்டு வளர்ச்சிக்கான விசையை எங்ஙனம் அதிகரிக்க முடியும் என்ற கேள்வி இங்கே எழுகின்றது .
மக்களும் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஒரு தலைவர் நேர்மையாக இருந்து அப் பழக்கத்தையே எங்கும் எதிலும் வழக்கமாக்குவதாலும் , தன்னுடைய செயல்பாடுகளுக்குஆதரவான பொது மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும், மக்களை வளப்படுத்தாமல் மக்களுக்கான அரசியல் அமைப்புகளை வளப்படுத்துவதைத் தவிர்ப்பதாலும்,
கட்டுப்பாட்டிற்கு எவரும் விலக்கமின்றி எல்லோரையும் சமமாக உட்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாலும் விசையின் வலிமையை அதிகரிக்கமுடியும்

நியுட்டனின் மூன்றாம் விதி
விசையாலான ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான ஒரு எதிர் செயல் உண்டு.

செயல் என்பது விசையானால் எதிர்ச் செயல் என்பது விளை பலனாகும்.
இவ்விதி எதிர் செயல் இல்லாமல் ஒரு செயலையும் செய்ய முடியாது என்பதையும்,செயலே இல்லாமல் ஒரு பலனையும் எதிர்பார்க்கமுடியாது என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றது

பெற்ற பலனைப் பகிர்ந்து கொடுக்காமல் அதைத் தனக்குத் தானே
ஒதுக்கிக் கொண்டால் அது தன் வீட்டில் தானே திருடியதற்கு ஒப்பானதாகும்.பெரும்பாலான இந்தியத் தலைவர்கள் இந்தப் பட்டியலிலேயே வருகின்றார்கள். ஓரிரு வரிகளில் சொன்னால் அரசியல் என்பது நாட்டின் வளத்தை மேம்படுத்துவதும் ,கிடைத்த பலன்களை நாட்டு மக்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு சமப் பங்கீட்டுத்தனம்
செய்யும் முயற்சி.இதில் அயலாருக்குப் பங்கில்லை என்பதால் பாதுகாப்பும் சேருகின்றது .இப்பொழுது சொல்லுங்கள் ,மக்களுக்கு சேவை செய்யப்போகின்றேன் என்று மக்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு மக்களால் தேர்வு பெற்ற நீங்கள் உங்கள் பணியைப் பொறுப்புடன் செய்துவருகின்றீர்களா ? இப்படி ஒரு கேள்வியை உங்கள் மனம் உங்களைக் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள் . சிந்திக்க வேண்டுகின்றேன் .

அன்புடன்

காவேரி

Tuesday, August 10, 2010

vanna vanna ennangal-9

.எண்ணத்தின் குறை


          "காவேரி"



நேர் மின் துகளிருந்தால் அங்கே

எதிர் மின் துகளிருக்கும்

அண்டமனாலும் சரி இல்லை

அணுவானாலும் சரி

எப்பொழுதும் சமமாய் இருக்க

ஏற்றத் தாழ்வு எழுந்ததில்லை



காந்த வடமுனை இருந்தால் அங்கே

காந்தத் தென்முனையுமிருக்கும்

உருளும் உலகமனாலும் சரி இல்லை

சுழலும் துகளனாலும் சரி

இணைத் துணையாய் இருக்க

என்றைக்கும் இவை பிரிந்ததில்லை



உயிரினத்தில் ஆண் இருந்தால் அங்கே

உயிர் தர பெண்ணுமிருக்கும்

அதாம்- ஈவாள் காலம் தொட்டே

ஆணும் பெண்ணும் சம விகிதமே

ஆணே போதும் பெண் வேண்டாமென்றால்

அந்த இயற்கையும் மிரண்டு போகாதா?



எப்போதும் ஆணொன்றும் பெண்னொன்றும்

எல்லோருக்கும் பிள்ளைகளாய் பிறப்பதில்லை

இவருக்கு இரண்டும் பெண்னென்றால்

அவருக்கு இரண்டும் ஆண்கள்

இது இயற்கையின் திருமறை

எல்லாம் நம் எண்ணத்தின் குறை

Monday, August 9, 2010

vanna vanna ennangal-8k

மரணமும் மறுபிறப்பும்

             "காவேரி"

முதிர்ந்து உதிர்ந்து

நிலத்தில் விழுந்த இலை

அதே மரத்தில்

துளிர் விட்டுச் சிரிக்கின்றது



விழுந்து புதைந்து

பூமியில் இறுகிய மரம்

அதன் வயிற்றில்

வைரமாய் ஜொலிக்கின்றது



நீ இறந்து

நிலத்தில் புதைந்தால்

உன் நிலையும் அதுதான்

பூமிக்குள் ஒரு வைரமாய்

பின் புதையலாய்

வேற்றுயிராய்

இலைக்கும் இருக்கு

மரத்திற்கும் இருக்கு

மீண்டும் பிறப்போம்

என்ற நம்பிக்கை

உனக்கு ஏன்

அவ நம்பிக்கை?

Thursday, August 5, 2010

vanna vanna ennangal-7

அன்பே சர்வ மயம்


"காவேரி"



எலக்ட்ரானைப் புரோட்டன் நேசித்ததால்

அது அணுவானது

அணு அணுவை நேசித்ததால்

அது மூலக்கூறானது

மூலக்கூறு மூலக்கூறை நேசித்ததால்

அது பொருளானது

பொருள் பொருளை நேசித்ததால்

அது உயிரானது

உயிர் உயிரை நேசித்ததால்

அது ஊரானது

ஊர் ஊரை நேசித்ததால்

அது உலகமானது

உலகம் உலகை நேசித்ததால்

அது அண்டமானது

அண்டம் அண்டத்தை நேசித்ததால்

அது பிரபஞ்சமானது

நேசிப்பே நேர்ச்சி என்றால்

நேசிப்பை நேசிக்க மறக்கலாமோ?

Monday, August 2, 2010

Eluthatha kaditham-3

எழுதாத கடிதம் -3







அன்பார்ந்த LPG - சிலிண்டர் விநியோகிப்போர்களே ,






நான் ஒரு சிலிண்டர் ரூ. 60 - 70 க்கு விநியோகித்த காலத்திலிருந்து

சமையலுக்காக LPG - யை வீட்டில் பயன்படுத்தி வந்திருக்கின்றேன்.

படிப்படியாக விலை ஏறி இன்றைக்கு ஒரு சிலிண்டர் ரூ.335 /= ஆக

உயர்திருக்கின்றது. விலைவாசி உயர்வால் விலைகள் உயர்வது

வழக்கமானதுதான்.



சிலிண்டர் கொண்டு வந்து போடும் பணியாளர் முன்பு ரூ.2 /= +

தீபாவளி இனாம் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்வர். ஆனால்

இன்றைய நிலை அப்படி இல்லை .ஒவ்வொரு முறையும் ரூ.15 /=

-ம் தீபாவளி இனாமும் கொடுத்தாலும் திருப்தி இல்லை.
சிலிண்டர் விலை திருத்தப்படும் ஒவ்வொரு முறையும்
இதுவும் தனியாக அதிகரிக்கும் . எனக்கு லஞ்சம் கொடுப்பதும்

பிடிக்காது வாங்குவதும் பிடிக்காது .ஆனால் வீட்டில் மனைவி

15 ரூபாய்க்காக அந்தப் பணியாளருடன் வாக்கு வாதம் நான்

செய்வதையும் ,அண்டை அயலார் வேடிக்கை பார்ப்பதையும்

விரும்புவதில்லை.



பணியாளருக்கு மக்கள் இப்படிக் கொடுப்பது தவறான பழக்கம்

மட்டுமில்லை பிற தவறான பழக்கங்களின் வளர்ச்சிக்கு முன்

உதாரணமாகவும் அமைந்து விடுகின்றது .ஒரு விதத்தில் இது

கையூட்டும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஒப்பானதாகும் .

ஒரு பணியின் காரணமாக மக்களுக்கும் ஒரு நிறுவனத்திற்கும்

மட்டுமே பணப் பரிமாற்றத் தொடர்பு இருக்க வேண்டுமே ஒழிய

இடை வரும் பணியாளருடன் அது போன்ற தொடர்புகள் வளர

அனுமதிக்கலாகாது. பயனாளருக்கும் பணியாளருக்கும் இடையே

ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நிறுவனத்தின் வளர்ச்சியைப்

பாதிக்கின்றது .



பிற பொருள்களைப்போலப் பயனாளரே சிலிண்டரைக் கடையில்

வாங்கி பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்து செல்லமுடியாது என்பதால்

சிலிண்டரை விநியோகிக்கும் நிறுவனமே அந்தப் பொறுப்பையும்

செய்ய வேண்டியது தவிர்க்க இயலாததாக இருக்கின்றது. இதற்காக

ஆகும் கூடுதல் செலவை ரசிப்டில் குறிப்பிட்டு ,சிலிண்டரின்
விலையோடு சேர்த்து வாங்குவது நல்ல வியாபாரத்தின்
நேர்மையான அணுகுமுறையாகும் .பயனாளரும் பணியாளரும்
எப்படியோ போங்கள், எனக்கு வரவேண்டியது வந்தால் சரிதான்
என்று பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள்.நேர்மையான பழக்க
வழக்கங்களை எங்கும் எதிலும் பரப்ப வேண்டிய 
கட்டாயக் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் .

கொஞ்சம் சிந்தியுங்க .

அன்புடன்

காவேரி







Sunday, August 1, 2010

vanna vanna ennangal-6

5. மனிதா உனக்குத் தெரியுமா?


                   "காவேரி"

சிறிய விதைக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு பெரிய மரமொன்று
மறைந்து கொண்டிருக்கின்றது என்று


பூ மொட்டுக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு சுவைமிகு அமுதமொன்று
சுரந்து கொண்டிருக்கின்றது என்று


புல்லாங் குழலுக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஓர் இனிய இசையொன்று
ஒளிந்து கொண்டிருக்கின்றது என்று


கருங்கல் பாறைக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஓர் அழகிய சிலை யொன்று
தூங்கிக் கொண்டிருக்கின்றது என்று


சிக்கிமுக்கிக் கல்லுக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு சுடும் நெருப்பொன்று
அணையாமல் இருக்கின்றது என்று


வெறும் வெண்மைக்குத் தெரியும்
அதற்குள்ளே
ஒரு நிறமலையொன்று
குவிந்து இருக்கின்றது என்று


அழகுப் பெண்மைக்குத் தெரியும்  
அதற்குள்ளே
ஒரு தாய்மை ஒன்று
கூடி இருக்கின்றது என்று


ஆனால்..............


மனிதா உனக்குத் தெரியுமா?
உனக்குள்ளே
ஓர் அளவில்லா ஆற்றல்
உறங்கிக் கொண்டிருக்கின்றது என்று


இயற்கையில் எல்லாம் அறியும்
தமக்குள்ளே
இருக்கும் தனி ஆற்றலை
ஆறறிவு மனிதனைத் தவிர.