Wednesday, December 28, 2011

vinveliyil ulaa

அல்டிபாரனின் அதிசயங்கள்





அல்டிபாரன், ஆர்க்டூரஸ்,போலக்ஸ் போன்ற விண்மீன்களின் சுற்றுப் பாதை வேகத்தின்
அளவீடுகள்,1993 ல் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.அப்போது அல்டிபாரன் பற்றிய
சில புதிய உண்மைகள் தெரியவந்தன.அல்டிபாரன் சுற்றுப் பாதை வேகத்தில் ஏற்றத்
தாழ்வுகள் மிகவும் அதிகமாக உள்ளன.இது அதற்கு ஒரு துணை விண்மீன் இருக்கலாம்
என்பதற்கு ஒரு வலுவான காரணமாக இருந்தது. கணக்கீடுகளைக் கொண்டு அதன்
துணை விண்மீனின் குறைந்த அளவு நிறை 11.4 மடங்கு,நமது சூரியக் குடும்பத்திலுள்ள
வியாழனின் நிறையைப் போல உள்ளது என்றும், அதன் சுற்றுக் காலம் 643 நாட்கள்
என்றும் அதற்கும் அல்டிபாரனுக்கும் உள்ள இடைவெளி 2 AU(300Gm )என்றும்
தெரிவித்துள்ளன .
அல்டிபாரன் காட்சி தரும் விண் வெளியில் அதற்கு மிக நெருக்கமாக ஐந்து மங்கலான விண்மீன்களை இன்றைக்கு இனமறிந்துள்ளனர்.இது அல்டிபாரன்
ஒரு இரட்டை விண்மீனாக இருக்கலாம் என்பதற்கு ஒரு வலிமையான
காரணமாக விளங்குகிறது .அல்டிபாரனோடு காட்சி தரும் விண்மீன்களை ஆல்பாடாரி A ,B ,C ,D மற்றும் E எனக் குறிப்பிட்டுள்ளனர் .இதில் ஆல்பாடாரி A மட்டும் பிரகாசமானதாக உள்ளது. இதன் சார்பிலா
ஒளிப்பொலிவெண் - ௦௦௦0 .63 ஆகும் .
விண் இயற்பியலாரின் சில கணிப்புகள் ,ஆல்பாடாரி B யின் தன்னியக்கப் பெயர்ச்சி இயக்கமும்(Proper motion )
தோற்ற இடப் பெயர்ச்சியும் (parallax ) அல்டிபாரனை மிகவும் ஒத்திருக்கிறது எனத்
தெரிவித்துள்ளன .இது அல்டிபாரன் உண்மையில் ஒரு இணை இரட்டையாக
இருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. .எனினும் ஆல்பா டாரி B மிகவும் மங்கலாக இருப்பதாலும், அல்டிபாரன் மிகவும் பிரகாசமாக இருப்பதாலும்
இதை உறுதி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
ஆல்பா டாரி C யும் D யும் ஒரு இரட்டை அமைப்பாக உள்ளது. இவை இரண்டும் ஈர்ப்பால் ஒன்றிணைந்து
ஒன்றை ஒன்று சுற்றி வருவதால் அப்படி முடிவு செய்யப்பட்டது .
இவை காட்சி வெளியில் அல்டிபாரனுக்கு அருகில் தெரிந்தாலும் உண்மையில் வெகு தொலைவில் உள்ளன .இவை இரண்டும் ஹையாடெஸ்
கூட்டத்தின் உறுப்புகளாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

Tuesday, December 27, 2011

vinveliyil ulaa

அல்டிபாரன் (Aldebaran )




இக் கூட்டத்தில் மிகவும் பிரகாசமான விண்மீன் அல்டிபாரன் என்றழைக்கப்படும்
ஆல்பா டாரி என்ற விண்மீன்.இதைத் தமிழர்கள் ரோகினி எனக் குறிப்பிடுகின்றனர்
இது ஹையாடெஸ் (Hyades )எனப்படும் தனிக் கொத்து விண்மீன் கூட்டத்திற்கு
அருகாமையில் உள்ளது .எனினும் அல்டிபாரனும் ஹையாடெஸ்ஸும் வெவ்வேறு தொலைவுகளில் உள்ளன .
அல்டிபாரன் மஞ்சளும் .சிவப்பும் கலந்த ஒரு விண்மீன் .இதன் தோற்ற ஒளிப்
பொலிவெண் ௦0௦.75 முதல் ௦0.95 வரையுள்ள நெடுக்கையில் தொடர்ந்து சீரற்ற
முறையில்
மாறிக்கொண்டே இருப்பதால் இது மாறொளிர் வகை விண்மீனாகும்.இதன் தொலைவு சுமார் 65 -70 ஒளி ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர் ..
இது நமக்கு அருகாமையில் இருக்கும் பெரு விண்மீன்களுள் ஒன்றாகும் .
இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 30 மடங்கு என
அறிந்துள்ளனர் .பிரகாசமிக்க 20 விண்மீன்களின் பட்டியலில் இது 14 வது
இடத்தில் உள்ளது.


எல்நாத் (Elnath ) எனப்படும் பீட்டா டாரியின்தோற்ற ஒளிப்பொலிவெண்
1 .65 ,சார்பிலா ஒளிப்பொலிவெண் - 1 .37 .இது டாரஸ் வட்டார விண்மீன்
கூட்டத்திற்கு அருகாமையில் உள்ள ஔரிகா (Auriga ) எனும் விட்டாரா விண்மீன்
கூட்டத்திலுள்ள பிரகாசமிக்க விண்மீன்களின் கட்டமைப்பாலான ஐங்கோண
கட்டத்தின் அடியில் அமைந்துள்ளது. இது சுமார் 131 ஒளி ஆண்டுகள்
தொலைவில் இருப்பதாக அறிந்துள்ளனர்.
இக் கூட்டத்திலுள்ள விண்மீன்கள் தோராயமாக ஆங்கில எழுத்து 'V ' வடிவில்
அமைந்துள்ளன. இதில் ஆல்பா,பீட்டா டாரிகள் வெவ்வேறு புயங்களில்
இருக்குமாறும் ,அவற்றின் சந்திப்பில் ஹையாடெசும் அதன் அருகாமையில்
ஆல்பா டாரி இருக்குமாறும் உள்ளன .அருகாமையில் இருப்பதால்
அல்டிபாரன் என்ற ஆல்பா டாரி ,ஹையாடெஸ் கொத்து விண்மீன்
கூட்டத்தில் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில்
அவையிரெண்டும் சுமார் 70 ஒளியாண்டுகள் தொலைவு தள்ளி உள்ளன.

arika ariviyal

அறிக அறிவியல்

வாயிலிருந்து வெப்பக் காற்றும் குளிர்ந்த காற்றும்

அகன்ற வாயுடன் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது
வெப்பக் காற்றாக உள்ளது. ஆனால் அதே மூச்சுக் காற்றை
குவிந்த வாயுடன் வெளியேற்றும் போது குளிர்ந்து
இருக்கிறது. இந்த வேறுபாடு ஏன் ?

அகன்ற வாயுடன் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது
நுரையீரலில் உள்ள காற்று மிகக் குறைவாக இறுக்கப்பட்டு
எவ்வித விரிவாக்கமும் இல்லாமல் வளிமண்டலக்
காற்றோடு கலக்கிறது.நுரையீரலில் உள்ள மூச்சுக் காற்று
நுண்ணறைகளில் ஊடுருவி அப்பகுதியின் வெப்பநிலையை
அடைந்திருப்பதால்(உடலின் சராசரி வெப்பநிலை
வளிமண்டலத்தின் இயல்பான வெப்பநிலையைக் காட்டிலும்
ஒருசில சென்டிகிரேடு கூடுதலாகும்). வெளியேறும் காற்று
வெப்பமாக இருக்கிறது.

குவிந்த வாயுடன் காற்றை வெளிவிடும் போது ,
நுரையீரலில் உள்ள காற்று மிகக் குறைவாக
இறுக்கப்பட்டாலும் குறுகிய இடைவெளி
வழியாக விரிவாக்கம் பெறுகிறது .இப்படித்
திடீரென்று காற்று விரிவாக்கம் பெற்றால் வெப்பநிலை
தாழ்வுறும் என்பது ஜூல்- தாம்சன் விளைவாகும்

வெப்பமான் காற்றை சுவாசிப்பதை விட குளிர்ந்த காற்றை
சுவாசிப்பது எளிதானது .காற்றில் உள்ள ஈரப்பதமே
இதற்குக் காரணமாக இருக்கிறது.

Friday, December 23, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

மக்கள் வசதியாக இல்லாவிட்டாலும்,மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு .தலைவர்களின் நேர்மையான செயல்களே அன்றி,அவர்களிடமிருந்து இயந்திரத் தனமாக வெளிப்படும்
யோசனைகள் பயன் தருவதில்லை.மக்கள் இதை இன்னும்
சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.இது இன்றையத்
தலைவர்களுக்கு வசதியாக இருப்பதால் இதில் ஒரு
மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்புவதில்லை.
இருக்கும் நிலைமையை தங்களின் சுய முன்னேற்றத்திற்கு
மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .இது இனி
வரப்போகும் தலைவர்களுக்கு தவறான வழிகாட்டலாக
விளங்குகிறது.தீதில் பெரும் தீது இதுவேயாகும்.தலைவர்களின் செயல்பாடின்மையால் எதிர்காலத்தில் பெரிய மாற்றம்
ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதை
இப்போதே உறுதியாகச் சொல்லலாம்.

நான் என் வீட்டுச் செலவை என் வருமானத்திற்குள்
இருக்குமாறு வைத்துக்கொள்கிறேன்.வருமானத்திற்கு மீறிய
திட்டங்களை தீட்டி வைத்துக் கொண்டு அதற்கான
வருமானத்தைத் தேடுவதில்லை. ஏனெனில் தேடிக்
கிடைக்காவிட்டால் மனம் தவறான வழிகளில் பொருள்
புரட்டப் புறப்பட்டுவிடும்.வருமானம் அதிகரிக்க நேர்மையாக் முயற்சிப்போம்.அப்படி வரும் போது வளர்ச்சிப்
பாதையில் முன்னேறுவோம்.

பொதுவாக படித்த பண்புள்ள,கட்டுப்பாடான இந்தியக்
குடிமகன்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.வரம்பு
மீறிய செலவு செய்து விட்டு சூடு போட்டுக் கொண்டவர்கள்,
இன்றைக்கு வாழ்க்கையைத் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.மக்களின் வாழ்க்கை முறை இப்படி
இருக்கும்போது அரசு மட்டும் வேறுபாடாய்
திட்டமிடுவதேன்.

Saturday, December 10, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் ஏற்பட்ட
தீ விபத்து காரணமாக 82 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் .
அதற்கு அரசு மருத்துவ மனை நிர்வாகிகள் 6 பேரைக் கைது செய்துள்ளது .
தவறு மருத்துவமனை நிர்வாகிகளிடம் மட்டும் இல்லை.பல ஆண்டுகளாக
இப்படி வசதி இல்லாத மருத்துவ மனை எப்படி இயங்கிவந்தது?
இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் ? பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கி
இருந்தால் அந்த அதிகாரிகளும் தண்டனைக்குரியவர்களே .
இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள் .இது போல நம் நாடெங்கும்
பல மருத்துவ மனைகள்,திரை அரங்குகள் ,கலைக் கூடங்கள் ,கண்காட்சி
யகங்கள்,பேருந்துகள் உள்ளன.முறையான அனுமதியும்,தரச்சான்றிதழும் இல்லாமல்
இவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகின்றன. இதுபோல விபத்துகள்
நிகழும் போது மட்டும் விஷயங்கள் ஊடங்கள் மூலமாக வெளியில் தெரிய வருகின்றன. .
prevention is better than cure என்பதை எப்போதுதான் நம் அரசாங்கம்
தெரிந்து கொள்ளப் போகிறதோ ?