Wednesday, May 1, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 49

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
நம் சான்றோர்கள் மாணவர்களை மூன்று வகையாகப்  பிரித்து அவர்களின் பொதுவான குணங்களைக் கூறுவார்கள். சொல்வதை அப்பொழுதே  புரிந்து கொள்பவர்களை  தீயிட்டால் சட்டெனெ பற்றிக் கொள்ளும் கற்பூரம் போன்றவர்கள் என்றும் . மீண்டும்  சொல்லி  அதற்கு விளக்கமும் சொன்ன  பிறகு  ஓரளவு அறிந்து கொள்பவர்களை . ஊதி  ஊதி  பற்றிக்கொள்ளும் கரித்துண்டு போன்றவர்கள் என்றும் , எவ்வளவு முயன்றாலும் கொஞ்சம் கூடத் தெரிந்து கொள்ளாதவர்களை எவ்வளவு முயன்றாலும் சிறிதும் பற்றிக் கொள்ளாத வாழைத்தண்டு போன்றவர்கள் என்றும் கூறுவார்கள்.      
சீன ஞானி கான்பூசியஸ்சும் மாணவர்களை மூன்று வகைப்படுத்துகின்றார்.முதல் தரம் வானம்பாடிப் பறவை போன்றவர்கள். வானம்பாடி மழைத்துளி மேகத்திலிருந்து பிரிந்து பூமியில் விழுவதற்கு முன்னதாகவே வானவெளியில் தன் அலகினால் பற்றிக்கொள்ளும்.துல்லியமாகச் சரியாகவும்,விரைவாகவும் செய்ய முடிந்தால் மட்டுமே மழைத்துளியை இப்படிக் கவர முடியும்.பறவைக்கு இதுவெறும் பயிற்சியினால் மட்டும் வந்ததில்லை.இது அதனுடைய உள்ளார்ந்த இயல்பு, வானம்பாடிபோன்ற மாணவர்கள் கல்வியைக் கற்கும் போதே அதைப் புரிந்து கொள்வதோடு விரித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள சிந்திக்கும் திறனையும் வளப்படுத்திக் கொள்வார்கள். கல்வியைப் பயன்படுத்திப் பயனீட்டும் வழி முறையினால் சமுதாய நலம் காப்பார்கள். வேற்றுச்சிந்தனைகளுக்கு நினைவில் இடமும், நிகழ்வில் நேரமும் இல்லாததால் தீய செயல்களைச் செய்யத் துணிவதில்லை.இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்ட வாய்ப்புக்களைத் தேடிச் செல்வார்கள். வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்க மாட்டார்கள் .
முத்துச் சிப்பி போன்றவர்கள் இரண்டாம் வகையினர் .முத்துச்சிப்பி மழைத் துளிக்காக நெடுநாள் காத்திருக்கும் .மழைத் துளி விழுந்ததும் அதை வாங்கிக் கொண்டு வாயை மூடும்.முத்துச்சிப்பி முத்தினை உருவாக்க இதைச் செய்கிறது.முத்துக்களைப் பெற்று பயன்படுத்த வேண்டுமானால் கடலில் முத்துக் குளிக்க வேண்டும்.முத்துச் சிப்பிபோன்ற மாணவர்கள் குடத்திலிட்ட விளக்குப் போன்றவர்கள். தங்கள் திறமையை ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரளவு பெரிதாக வளர்த்துக் கொள்வார்கள்.இவர்களுடைய புலமையையும் திறமையையும் மற்றவர்களே இனமறிந்து வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது.  
தவளையைப் போன்றவர்கள் மூன்றாமவர். தவளை மழைக்கு முன்னும்,பெய்யும் போதும், பெய்த பின்பும் தொடர்ந்து கத்திக் கொண்டேஇருக்கும். தன்வாயால் தானே கெடுவது தவளையின் இயல்பு.இவர்கள் எதையும் புரிந்து கொள்ள விரும்புவதில்லை.அறிந்து கொள்ளுவதுமில்லை.தானே எல்லாம் அறிந்தவன் போல பேசுவார்கள்.மற்றவர்கள் பேசினால் குறுக்கிட்டுப் பேசுவார்கள்.எதையும் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்.இவர்கள் தானும் கெட்டு சமுதாயத்தையும் கெடுப்பார்கள். 
மாணவர்களில் 10 சதவீதம் பேரே  முதல் வகையினராகவும் , 50 சதவீதம் பேர் இரண்டாம் வகையினராகவும் ,40 சதவீதம்  பேர் மூன்றாம் வகையினராகவும் இருக்கின்றார்கள் . சிறந்த மாணவராக வளர இரண்டாம் வகையினர் முதல் வகையினரை நட்புக்  கொள்ளவேண்டும் . மூன்றாம் வகையினரோடு நட்புக் கொண்டால் இருக்கும் திறமையையும் இழக்க நேரிடலாம் , மாணவனின் மன வலிமையைப் பொறுத்தது  மூன்றாம் வகை மாணவன் கல்வி கற்பதில் ஓரளவு முன்னேறலாம்.