Monday, December 31, 2012

Sonnathum Sollaathathum-9

 
 


சொன்னதும் சொல்லாததும்-9

இருளகற்றும் மெழுகுவர்த்தியின் துயர் துடைக்க மின்னிழை விளக்குகள் கண்டறியப்பட்ட காலம் .சாதாரண உலோக இழைகளின் வழியே மின்சாரம் பாயும் போது ஏற்படுகின்ற உயர் வெப்பத்தினால் உலோக இழை சிவந்து எங்கும் ஒளி சிந்துகிறது .பெரும்பாலான உலோக இழைகள் உயர் வெப்பம் தாளாது விரைவிலேயே உருகிப் போய் மின் விளக்கு அடிக்கடி அணைந்து போய்விடுவதால் மெழுகுவர்த்திக்கு மாற்றாக வந்த மின்னிழை விளக்கே ஒரு பிரச்சனையாக விளங்கியது .இதற்கு உயர் வெப்பத்தைத் தாங்க வல்ல மின்தடைமிக்க உலோக இழைகளை ஆராய்ந்து கண்டறிய வேண்டியது அவசியமாக இருந்தது .மின்னிழை விளக்கிற்கு எந்த உலோகத்தாலான அல்லது கலப்பு உலோகத்தாலான இழை உகந்ததாக இருக்கும் என்பதைக் கண்டறிய ஏறக்குறைய 7000 முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடி இறுதியில் வெற்றி பெற்றவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன் .இவரைப் பற்றித் தெரியாத ஒருவர் கூட இவ்வுலகில் இருக்க முடியாது அந்த அளவிற்கு அவர் அவரை பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார் .டங்ஸ்டன் என்ற உலோகத்தாலான இழை மின்னிழை விளக்கிற்கு மிகவும் பொருத்தமானது என்பது எடிசன் தந்த பல

பயனுள்ள கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகும் .மனந்தளராமல் 7000 முறை எடிசன் முயன்று போராடியிருக்காவிட்டால் அன்றைக்கு வந்த ஒளிவிளக்கு இன்றைக்குக் கூட கிடைக்காமற் போயிருக்கலாம் .மின்னிழை விளக்கைக் கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் எடிசன் 6999 முறை தோல்விகளையும் இறுதியாக ஒரு முறை வெற்றியும் பெற்றார் .பல தோல்விகளைச் சந்தித்த பின்னரே அவருக்கு வெற்றி கைகூடியது .அதனால் வெற்றியைப் பெற பொறுமையாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று .உண்மையில் ஒரு சரியான மின்னிழை விளக்கைக் கண்டுபிடிக்க எடிசனுக்கு ஒரு முயற்சிதான் தேவைப்பட்டது .ஆனால் அந்தச் சரியான மின்னிழை விளக்கை உருவாக்க எந்தெந்த உலோக இழைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்குத்தான் 6999 முறை தேவைப்பட்டது.அதனால் எல்லா முயற்ச்சிகளுமே அவருக்கு வெற்றிதான்.இறுதி வெற்றிக்குத் துணை நின்ற துணை வெற்றிகள் .எடிசன் இது பற்றிக் குறிப்பிடும்போது " முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில் அதுதான் இரண்டாவது சோதனையைச் செய்யத் தூண்டியது" என்றார் .

இதிலிருந்து நாம் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வெற்றியை நோக்கிச் செல்லும் பயணத்தில் இடைவரும் தோல்விகள் எல்லாம் தோல்விகளே இல்லை. வெற்றியை எட்ட உதவும் ஏணிப்படிகள் .அவை புகட்டும் அறிவினால் மட்டுமே காலை அடுத்த படியில் பாதுகாப்பாக எடுத்து வைக்க முடியும். வெற்றியைத் தொட்டுவிடலாம் என்று நினைத்து தாவினால் தவறி விழுந்து அடிபடவேண்டி வரலாம் .சரியான பாதை எது என்று தெரிந்து கொள்ள முயலும் போது தவறான பாதைகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே முழுமையான வெற்றிக்கு உறுதி கூறும்

 

Sunday, December 30, 2012

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

இந்தியாவில் அரசியல்வாதிகள் மிகவும் தன்னிச்சையாகச் செயல்படுகின்றார்கள் .பொதுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை சிறிதும் இருப்பதில்லை.இந்தியாவைத் தன் வீடாகவும் ,இந்தியர்களைத் தன் உறவினர்களாகவும் நினைக்கத் தவறி விடுகின்றார்கள்.எதிர்க் கட்சியினரை எதிரிகளாகப் பார்க்கும் இவர்களால் இந்தியர்கள் எல்லோருக்கும் எப்படி ஒரேமாதியாக நல்லது செய்யமுடியும் ? மக்களுக்குத் தொண்டு செய்வதற்கே பதவி என்பதை மாற்றி அளவுக்கு மீறி வருமானமும் சொத்துக்களும் சேர்க்கப் பயன்படுத்திக் கொள்வதால் அரசியல்வாதிகள் இறக்கும் நாள் வரை பதவியை விடுவதில்லை. இதனால் மற்றவர்களுக்குத் தன் வாழ்நாளில் வாய்ப்புக் கிடைப்பதில்லை.அதற்காக அவர்கள் புதிய புதிய கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு பதவி பெற முயலுகின்றார்கள்.  

மக்களை மக்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று இருவர் அனுமதியோடு இடையில் நுழைந்தவர் தான் அரசியல்வாதி .நாட்டின் வளமும் வசதியும் எல்லோருக்கும் சமமாகப் பங்கீடு செய்யப்படுவதற்காக மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே அரசியல்.ஆனால் அப்படி செய்யப் படாமல் தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்படும் போது மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்து விடுகின்றார்கள்.புதிய ஆட்சியாளர்களால் புதிய ஆட்சியை மக்களால் ஏற்படுத்த முடிந்தாலும் ஆட்சியாளர்களின் மனநிலையை மாற்ற முடிவதில்லை அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றப் படுகின்றோம் என்று தெரியாமலேயே மக்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொள்வதால் அவநம்பிக்கையால் தூண்டப்பட்டு மக்களும் அரசியல்வாதிகளைப் போல                 அனுகூலம் அடைய முற்படுகின்றார்கள்.ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது எல்லை மீறி இனி திருத்தவே முடியாது என்ற நிலை வரை விரிவடைந்துள்ளது.  

 பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பொறியியல் கல்லூரி,கல்வியியல் கல்லூரி எனப் பல கல்விக் கூடங்கள்,சொகுசான பங்களாக்கள்,வெளி நாட்டுக் கார்கள்,எஸ்டேட்டுகள்,பண்ணைத் தோட்டங்கள்,ஏக்கர் கணக்கில் வீட்டு மனைகள்,அரசு செலவில் வசதிகள்,வங்கிகளில் நம்பமுடியாத அளவு இருப்பு,பினாமி பெயரில் சொத்துக்கள் ,இன்னும் எனக்குத் தெரியாத எவ்வளவோ.இவ்வளவும் பதவிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்.இவர்களா மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவகர்கள் ?

இரண்டு அப்பாவி மனிதர்கள் ஒரு ஆப்பத்திற்காகச் சண்டை போட்டனர்.அப்போது அங்கு ஒரு குரங்கு வந்தது..சண்டை போட்டவர்கள் குரங்கிடம் முறையிட்டனர் .குரங்கு ஆப்பத்தை வாங்கி இரண்டாகப் பிய்க்கும் போது வேண்டுமென்றே ஒன்றைப் பெரிதாகவும் மற்றொன்றைச் சிறிதாகவும் பிரித்தது. அதை அவர்களிடம் காட்டி இது பெரிதாக இருப்பதால் இதிலிருந்து கொஞ்சம் குறைத்து விடுவோம் என்று சொல்லி அதைப் பிய்த்து தன் வாயில் போட்டுக் கொண்டது.அதன் பிறகு சிறிய துண்டு பெரியதாக இருந்ததால் அதையும் அப்படிச் செய்து அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டது .இறுதியில் அப்பாவி மனிதர்களுக்கு ஆப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டு கூடக் கிடைக்கவில்லை .இந்திய அரசியல்வாதிகளை பார்க்கும் போது இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.

Friday, December 28, 2012

Cartoon


கார்ட்டூன்

டிவீயில் ஜெயலலிதா,எம்ஜியார் நடித்த ஒரு பழைய திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.குடும்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது பெரியவர் சொன்னார் "இது முன்னாள் சிஎம் மும் இந்நாள் சிஎம் மும் நடித்த படம்"என்று.அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அப்படியா என்று கேட்டுக் கொண்டார்கள் .அடுத்து என்.டி .ஆர் நடித்த படம் சின்னத் திரையில் ஓடியது. அப்போதும் அந்தப் பெரியவர் சொன்னார் " என்.டி .ஆரும் சிஎம் ஆக இருந்தவர்தான் " படம் முடிந்தவுடன் அருகில் இருந்த பேரப் பையன் 'ஐயா ,நானும் சி எம் ஆக வர வேண்டும், என்னை உடனடியாகச் சினிமாவில் நடிக்கச் சேர்த்து விடுங்கள்" என்றான். சினிமா அரசியலுக்கு ஒரு நுழைவு வாயிலாக மாறியது இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் மோசமான அரசியலையே எடுத்துக் காட்டுகிறது.