Thursday, March 28, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -புரோமின் -கண்டுபிடிப்பு

1825 ல் ஜெர்மனி நாட்டின் ஹைடெல் பெர்க் பல்கலைக் கழகத்தின் லோவிக் (Lowig ) என்ற மாணவர் ஒரு நீரூற்றிலுள்ள நீரில் சேர்ந்துள்ள உப்புக்களின் சேர்மானம் பற்றி ஆராய்ந்தார் .அக்கரைசல் வழி குளோரினைச் செலுத்த அது உப்பு நீருக்குச் செந்நிற மூட்டியது ஈதர் மூலம் உப்பு நீருக்கு நிறமூட்டிய பொருளைத் தனித்துப் பிரிக்க ,அது செம்பழுப்பு நிறத்தில் நீர்மமாக இருந்தது அதுவே பிற்பாடு புரோமின் என அழைக்கப்பட்டது .எனினும் தூய்மையான புரோமினைப் பெற்று அதன் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை முழுமையாகத் தெரிவிக்காததால் அதைக் கண்டுபிடித்த பெருமை அவருக்குக் கிடைக்கவில்லை .

1826 ல் பிரான்ஸ் நாட்டின் பாலார்டு (A .Balard) புரோமினைக் கண்டுபிடித்தார் .ஒரு குடுவையில் பொட்டசியம் ப்ரோமைடு,மாங்கனீஸ் டைஆக்சைடு மற்றும் நீர்த்த கந்தக அமிலம் இவற்றை இட்டு சூடுபடுத்தி எழும் கருஞ் சிவப்பு ஆவியை குளிர்வித்து நீர்மமாக்கி புரோமினைப் பெறலாம் .பாலார்டு இதற்கு முறைடு (Muride ) எனப் பெயரிட்டார் .இலத்தீன் மொழியில் முறியா என்றால் உவர் நீர் எனப் பொருள் .அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் ஒரே உலோகம் புரோமினாகும் .பின்னர் வேதியியலார் இதற்கு கிரேக்க மொழியில் கவிச்சி நாற்றமுடைய என்ற பொருள்படும் புரோமோஸ் என்ற சொல்லிலிருந்து புரோமின் என்ற பெயரைத் தேர்வு செய்தனர் .

பண்புகள்

இதன் அணுவெண் 35,அணு நிறை 79.91 கருஞ் சிவப்பு நீர்மமான இதன் அடர்த்தி 3120 கிகி/கமீ .உருகு நிலை 265.85 K ,கொதி நிலை 331.4 K ஆக உள்ளன.அறை வெப்ப நிலையிலேயே ஆவியாகி பழுப்பு நிற ஆவியாக வெளியேறுகின்றது .குளோரின் போல இதன் ஆவி உடனடியாக மூக்கையும் ,தொண்டையையும் பாதிக்கின்றது.தோலில் பட்டால் மஞ்சள் நிறத்தில் தீச் சுட்ட புண்ணை ஏற்படுத்துகின்றது.இது போன்ற விபத்திற்கு அவ்விடத்தை உடனடியாகத் தூய நீரால் கழுவி,சோடியம் பை கார்போனேட் கரைசலால் சுத்தப்படுத்தி ,பின்னர் வாசிலின் தடவி புற ஊடகத்திற்குத் தடுப்பாக ஒரு மறைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வேதிப் பொருட்களுள் புரோமினும் ஒன்று .

புரோமின் ஓரளவு நீரில் கரைந்து புரோமின் நீரை உண்டாக்குகின்றது .இது குளோரின் நீர் போலன்றி நிலையாக இருக்கின்றது .கார்பன் டை சல்பைடு ,குளோரோபாம் போன்றவற்றில் உடனடியாகக் கரைந்து ஆரஞ்சு-சிவப்பு நிற நீர்மத்தை ஏற்படுத்துகின்றது .

குளோரின் போல புரோமினும் வினை யூக்கமிக்க தனிமமாகும் .பல தனிமங்களுடன் இணைந்து புரோமைடை உண்டாக்குகின்றது .பாஸ்பரஸ் ,பொட்டசியம் ,புரோமினில் வெடிப்புடன் எரிகின்றன .பொடி செய்யப்பட்ட ஆர்செனிக் மற்றும் ஆண்டிமணி யும் வெடிப்புடன் எரிகின்றன .சூடுபடுத்திய நிலையில் ஹைட்ரஜனும் புரோமினும் இணைகின்றன..

புரோமின் ஒரு வலுவான வெளுப்பூட்டியாகும் .அதனால் ஸ்டார்ச்சை மஞ்சள் நிறமாக நிறமாற்றம் செய்கின்றது .இது ஆக்சிஜனேற்றம் செய்யும் காரணியாகவும் விளங்குகின்றது .

பயன்கள்

புரோமினின் முக்கியமான ஒரு பயன் எதிலின் டை புரோமைடாகும் .இதை ஈதைல் பெட்ரோலில் கலந்து அதிலுள்ள ஈயத்தை ஈய புரோமைடாக ஆவியாக்கி வெளியேற்றுகின்றது .இப்படிச் செய்யாவிட்டால் பொறித் தக்கையில் படிந்து அதனை நாளடைவில் செயலிழக்கச் செய்துவிடும் ..இது தொற்றுத் தடை மருந்தாகவும் பயன்படுகின்றது .புகை உண்டாக்கியாகவும் (fumigants ),நீர் சுத்திகரிப்பு வழிமுறையில் கிருமி நாசினியாகவும் ,சாயம் மருந்துப் பொருட்கள் மற்றும் புகைப்படத் தொழிலுக்குத் தேவையான வெள்ளி புரோமைடு போன்ற வேதிப் பொருட்கள் தயாரிக்க புரோமின் பெரிதும் நன்மை அளிக்கின்றது .பொட்டசியம் புரோமைடு மயக்க மூட்டியாக ப் பயன்படுத்தப் படுகின்றது .

Wednesday, March 27, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

பிரபாகரன் தன்னுடைய முயற்சியில் தோல்வியடைந்ததற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு.முதலாவது ஒரு நாடாளும் அரசைத் தனிமனிதனாகத் தலைமை தாங்கி எதிர்த்துப் போராடத் துணிந்தது.ஒரு தனி மனிதனை ஒரு தனி மனிதன் எதிர்த்துப் போராடலாம் .அங்கே வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு 50-50. உரிமை மற்றும் தனி நாடு என்று ஒரு அரசை எதிர்த்துப் போராட அகத் துணை மட்டும் போதுமானதில்லை அதற்கு புறத் துணையும் தேவை.புறத்துணைகளைத் தேடித் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளத் தவறியது காலப் போக்கில் ஒரு பலவீனமாக உருவாகியது .இதனால் உலகம் தீவிரவாதிகள் என்ற முத்திரையைத்தான் குத்தியது.இரண்டாவது அப்போதைய இந்தியப் பிரதமர்  ராஜீவ் காந்தியைக் கொலை செய்து இந்தியாவின் அதிருப்தியைத் தேடிக்கொண்டது . ஆதரவைப் பெற வேண்டிய சூழ்நிலையில் தேவையில்லாமால் ஒரு அண்டை நாட்டின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது அவருக்குச் சாதகமாக அமையவில்லை. மொழி மற்றும் இன உணர்வுகள் வேறு ,நாட்டுப் பற்று வேறு.மொழி மற்றும் இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நாட்டுப் பற்றும் தமிழக மக்களுக்கு உண்டு என்பதைத் தவறாக எடைபோட்டது ஒரு பலவீனமாக மாறியது.தமிழக மக்களின் இந்த மனப் போராட்டம் இன்றைக்கும் கூடத் தொடருகின்றது .

தனி ஈழம் அமைய தமிழ்நாட்டின் விருப்பம் இருந்தால் மட்டும் போதாது .உலக நாடுகளின் ஒத்துழைப்பும் தேவை.விருப்பம் வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கலாம் ஆனால் ஒத்துழைப்பு என்பது நியாயத்தையும் அவசியத்தையும் புரிந்து கொண்டதின் பின் விளைவாகவே அமையும்.நியாயம் இருக்கின்றது.ஆனால் உலக நாடுகளுக்கு அவசியம் ஒரு குறையாக இருக்கின்றது என்பதால் நம்முடைய அணுகுமுறையை உணர்ச்சிப் பூர்வமாக இருப்பதை விட்டுவிட்டு அறிவுப் பூர்வமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

Sonnathum Sollaathathum-18


சொன்னதும் சொல்லாததும்-18

1878-1968 வரை வாழ்ந்த ஆஸ்திரிய-ஸ்வீடன் நாட்டு இயற்பியல் துறை விஞ்ஞானி லிஸ் மெய்ட்னர் (Lise Meitner).இவர் புகழ் பெற்று விளங்கிய ஒரு பெண் விஞ்ஞானி.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவரை "நம்முடைய மேரிகியூரி " என்று அழைத்து பெருமைப் படுத்துவார் .மெய்ட்னர் ஜெர்மனியில் ஓட்டோ ஹான் (Otto Hahn )என்ற இயற்பியல் விஞ்ஞானி யுடன் இணைந்து 30 வருட காலம் ஆராய்ச்சி செய்தார் .அதன் பிறகு நாசிக்களின் தொந்தரவால் ஸ்வீடன் நாட்டிற்கு குடிபெயர்ந்தார் .எனினும் ஓட்டோ ஹானின் தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை .கடிதங்கள் மூலம் ஆராய்ச்சிக் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார் .ஓட்டோ ஹானுக்கு இவருடைய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் அணுக் கருப்பிளப்பு வினையைக் கண்டுபிடிக்க பெரிதும் துணைபுரிந்தது .என்று மெய்ட்னரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய ரூத் லிவின் சிமி குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டோ ஹான் அக் குறிப்புக்களைக் கொண்டு தானே கண்டறிந்ததாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுவிட்டார் .இது அவருக்கு 1944 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபெல் பரிசைப் பெற்றுத் தந்தது .மெய்ட்னர் பலமுறை இயற்பியலுக்காகவும்,வேதியியலுக்காகவும் நோபெல் பரிசுக்காக முன்மொழியப்பட்டார்.எனினும் நோபெல் பரிசு இறுதிவரை அவருக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது.மெய்ட்னர் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டார் என்று பல அறிவியல் அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.நோபெல் பரிசு பெற முழுத் தகுதி இருந்தும் விதி முறை காரணமாக நோபெல் பரிசு பெறாமல் போன ஒரு சில அறிஞர்களுள் மெய்ட்னரும் ஒருவர் .

“தன்னலமற்று உண்மைகளை உணர்வதற்கும் ஒரு குறிக்கோளைப் பெற்று செயலாற்றுவதற்கும் விஞ்ஞானம் மக்களைத் தூண்டுகின்றது .தன்னுடைய மகிழ்ச்சியையோ ,பயத்தையோ வெளிப்படுத்திக் காட்டுவதற்காக இல்லாது ஆச்சரியத்துடனும் ,வியப்புடனும் இயற்கை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற அறிவியல் ஆராய்ச்சிகள் கற்றுக் கொடுக்கின்றன” என்று இவர் கூறுவார். பணி என்பது பரிசுகளை எதிர்பார்த்து செய்யப்படுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக இவர் திகழ்கின்றார் . உண்மையில் பணி ,பணிக்காக மட்டுமே இருக்க வேண்டும் .நம்முடைய வேதங்களும் இதைத்தான் கற்பிக்கின்றன.