Thursday, November 24, 2011

vinveliyil ulaa

ரிஷப ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்






ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டம் டாரஸ் (taurus ) ஆகும் .இது மேஷ ராசிக் குரிய
எரிஸ்சுக்கும்,மிதுன ராசிக்குரிய ஜெமினிக்கும் இடையில் உள்ளதுய். .நம் சூரியன்
இக் கூட்டத்தை மே 14 முதல் ஜூன் 21 வரையில் கடந்து செல்கிறது.
கிரேக்க புராணத்தில் ஜீயஸ் என்ற கடவுள் பொனிசியாவின் இளவரசி ஈரோப்பாவை
பாதுகாப்பாகக் கடத்திச் செல்ல காளை மாடாக உருமாறி அவளைத் தன் முதுகில் சுமந்து
கொண்டு ஆற்றை நீந்திக் கடக்கிறார் .ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில்
நீர் மட்டத்திக்கு மேலாகக் காளை மாட்டின் மேற்பகுதி மட்டுமே தெரிகிறது. புராணத்தின்
இந்தக் கட்டத்தைக் குறிப்பிடுவதாக இந்த வட்டார விண்மீன் கூடம் கற்பனை செய்யப்பட்டுள்ளது.




இக் கூட்டத்தில் 125 விண்மீன்களுடன். பிளியாடெஸ் (pleiades ),ஹையாடெஸ் (Hyades ) என்ற

இரு தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களையும் இனமறிந்துள்ளனர். இதை ஒட்டியே
சைக்னேஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது .

vinveliyil ulaa

ஹோரோலோஜியம்( horologium )



தென் பகுதியில் காணப்படும் இது ஒரு சிறிய ,மங்கலான விண்மீன் கூட்டமாகும் .லத்தீன் மொழியில்
கடிகார ஊசல் என்று இதற்குப் பொருள் .18 ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் வானவியலாரான அபே நிக்கோலஸ் லூயிஸ் டி பொகாலே என்பார் ,ஊசல் கடிகாரத்தைக் கண்டுபிடித்த
கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்பாரைக் கௌரவிக்கும் விதமாக இதற்கு ஹோரோலோஜியம்
ஆசிலிடோரியம் என்று பெயரிட்டார் .இது காலப் போக்கில் சுருக்கி ஹோரோலோஜியம் ஆனது.

இது எரிடானஸ் வட்டாரத்திலுள்ள பிரகாசமான் ஆர்செர்னர் விண்மீனுக்கும் ,கரினா வட்டாரத்திலுள்ள பிரகாசமான கனோபஸ் விண்மீனுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இது ஒரு ஊசலாடும் குண்டுபோலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது .இதில் பிரகாசமிக்க
ஆல்பா கோரோலோஜி ஊசலின் அலைவு தானத்தில் உள்ள நிறைமிக்க குண்டு போல
அமைந்துள்ளது. மொத்தம் 20 விண்மீன்கள் இவ்வட்டாரத்தில் அமைந்திருக்கலாம் என
அறிந்துள்ளனர் .இதிலுள்ள R ஹோரோலோஜி சீடெஸ் வட்டாரத்திலுள்ள செம்பூதபோன்ற
மீரா விண்மீன் போல ஒரு பெருஞ் சிவப்பு மாறொளிர் விண்மீனாக உள்ளது .இதன் ஒளி பொலி வெண் பெரும நிலையில் 5
லிருந்து, சிறும நிலையில் 14 வரை ,சுமார் 13 மாத கால நெடுக்கையில் மாற்றத்திற்கு
உள்ளாகிறது .
ஒளிப்பொலிவெண்ணில் மிக அதிக வேறுபாட்டுடன் கூடிய மாறொளிர் விண்மீன் இதுவே ஆகும் .
AM 1 என்று குறிப்பிடப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் இப்பகுதியில் உள்ளது. .இக் கூட்டமே ,பால் வெளி அண்டத்திலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கும் கூட்டமாகும்.இது
398000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக அறிந்துள்ளனர்.

Wednesday, November 23, 2011

vinveliyil ulaa

உமிகிரான் எரிடானி / 40 எரிடானி

16 .5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உமிகிரான் எரிடானி என்றும் 40 எரிடானி என்றும் அழைக்கப்படுகின்ற ஒரு விண்மீன் உள்ளது .இது ஒரு மும் மீன்களின் தொகுப்பாகும் .
இதில் உள்ள முதன்மை விண்மீன் 4 .6 தோற்ற ஒளிப்பொலி வெண்ணுடன் நமது
சூரியனைப் போல உள்ளது. 1 வினாடி கோண விளக்கத்துடன் காணப்படும் இதன்துனை விண்மீன் ஓர் இரட்டை விண்மீனாக உள்ளது .9 .7 மற்றும் 11 .2 தோற்ற ஒளிப் பொலி வெண் கொண்ட
அவை குறுஞ் சிவப்பு, குறு வெள்ளை விண்மீன்களாக உள்ளன. ,குறுஞ் சிவப்பு விண்மீன்
மிகவும் குளிர்ச்சியாகவும் ,சூரியனின் பருமனில் 5 ல் 1 பங்கு உள்ளதாகவும் இருக்கிறது.
குறு வெள்ளை விண்மீன் சூரியனி விட 50 மடங்கு சிறியது. ஆனால் அடர்த்தி 64000
மடங்கு சூரியனின் அடர்த்தியை விடக் கூடுதலானது .இவை இரண்டும் தற் சுழற்சியுடன்
ஒன்றையொன்று 250 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றன .இந்த இரட்டை
விண்மீன் ,முதன்மை விண்மீனை மிக நீண்ட கால சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகிறது.

பொதுவாக குறு வெள்ளை விண்மீன்கள் சிறிய அளவினதாகவும் ,ஓரளவு குளிர்ச்சியாகவும் ,
குறைந்த ஒளிர்திறனுடனும் காணப்படும். நிறைமிக்கதாக இருப்பதால் இதன் அடர்த்தி
அதிகமாக இருக்கும்.அணுக் கருவிற்கும் அதைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களுக்கும்
இடையே ஓரளவு இடைவெளி இருக்கிறது. ஈர்ப்பால் இறுக்கப்படும் போது இந்த
எலெக்ட்ரான் களின் எதிர்ப்பு வலுவாக இல்லாத போது முறிந்து தூசித் துகள் போல
நெருக்கப் படுகின்றன .அப்போது அணுக் கருவிற்கும் எலெக்ட்ரான்களுக்கும் இடையே
சிறிதும் இடைவெளி இருப்பதில்லை .அப்போது அதன் அடர்த்தி மிகவும் அதிகரித்துவிடுகிறது .
இதுவே குறு வெள்ளை விண்மீனின் நிலை என ஆராய்ந்து கூறியுள்ளனர்.

arika ariviyal

ஆலிவ் எண்ணையும் டின் பாத்திரமும்




டின் பூசப் பட்ட செம்பாலான பாத்திரங்களைச் சிலர் சமையல் பாத்திரங்களாகப்
பயன்படுத்துவர். இதயத்தின் இயக்கத்திற்கு உகந்தது என்று சமையலில் ஆலிவ்
எண்ணெயையும் பயன்படுத்துவர்.ஆலிவ் எண்ணையின் கொதி நிலை 573.2 K'
டின்னின் உருகு நிலை 505 K. ஆலிவ் எண்ணையின் கொதி நிலையை விடக்
குறைவு. அப்படி இருக்க டின்னால் ஆனா ஒரு சமையல் பாத்திரத்தில் ஆலிவ்
எண்ணையில் ஒரு உணவுப் பண்டத்தை வறுப்பது எங்ஙனம் சாத்தியப் படுகிறது ?

ஓர் உணவுப் பொருள் வறுக்கப்படும் போது ஆலிவ் எண்ணெய் கொதிப்பதில்லை .
மாறாக உணவுப் பொருளில் உள்ள நீர் கொதிக்கிறது .அந்த நீர் முழுவதும்
வெளியேறிய பின்னரே ஆலிவ் எண்ணையின் வெப்ப நிலை அதிகரிக்கும் .
எனவே உணவுப் பொருளின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியசுக்கு மேல்
அதிகரிப்பதில்லை. இதனால் வெறும் காகிதத்தால் ஆனா பையில் நீரை
இட்டு அதைச் சூடு படுத்தி கொதிக்க வைக்க முடியும்

Saturday, November 19, 2011

vinveliyil ulaa



ஆசெர்னர் (Achernar ) (இது ஆல்பா எரி அல்லது ஆல்பா எரிடானி என்றழைக்கப்படும் )


ஆசெர்னர் மிக விரைவாகத் தற்சுழலும் ஒரு விண்மீன். இதன் தற்சுழற்சி வேகம் குறைந்தது
225 கி.மீ/வி என மதிப்பிட்டுள்ளனர். 2003 ல் இந்த விண்மீனை ,கட்டமைக்கப் பட்ட மிகப் பெரிய
வானத் தொலை நோக்கியால் பார்த்த போது இந்த விண்மீன் அளவுக்கு அதிகமாகத் தட்டையாக இருப்பது அறியப்பட்டது. நடுவரைக் கோட்டில் ஆரம், துருவ ஆரத்தை விட 50 சதவீதம்
அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது .
ஆல்பா எரிடானி இரவில் வானத்தில் காணப்படும் விண்மீன்களுள் 9 வது பிரகாசமான
வின்மீனாகும்






இந்த வட்டார விண்மீன் கூட்டத்தில் எப்சிலான் எரிடானி என்றொரு விண்மீன் உள்ளது .
வெறும் கண்களுக்குப் புலப்படக் கூடிய இந்த விண்மீன் ,மிக அருகாமையில் இருப்பவற்றுள்
மூன்றாவதாக உள்ளது. இது சூரியனை விடச் சிறிய அளவினதாகவும் ,குளிர்ச்சியானதாகவும்
குறைந்த பிரகாசமுள்ளதாகவும் இருந்தாலும் சற்றேறக் குறைய சூரியனைப் போன்றது எனலாம் .
10 .5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல 0 .88 மடங்கும்
நிறை 0 .85 மடங்கும் ஒளிர் திறன் 0 .34 மடங்கும் உள்ளது. தோற்ற ஒளிப்பொலிவெண்
3 .72 ஆக உள்ளது .சூரியனைப் போல மெதுவாகச் தற்சுழல்கிறது.
1998 ல் குளிர்ந்த வெப்பநிலையில் ஒரு தூசிப் படலம் தட்டு வடிவில் எப்சிலான் எரிடானியைச்
சுற்றி இருப்பதைக் கண்டறிந்தார்கள். சூரியக் குடும்பத்தில் காணப்படும் கெய்பர் பெல்ட் (Kuiper belt போல, ஏறக்குறைய சூரியனிலிருந்து புளூட்டோவின் சராசரித் தொலைவைப் போல இருமடங்கு
தொலைவு வரை விரவியுள்ளது .தூசியின் செறிவு 35 முதல் 75 வானியல் அலகுத் தொலைவு வரை
உள்ள வளையத்தில் காணப்படுகின்றது . 60 வானியல் அலகுத் தொலைவில் செறிவின் பெருமம்
அமைந்துள்ளது .இத் தூசிப் படலத்தின் பெரும நிறையை ௦.4 சூரிய நிறையாக மதிப்பிட்டுள்ளனர் .


2000 ல் வானவியலார் இந்த விண்மீனுக்கு நமது வியாழன் கோள் போன்று ஒரு கோள் ,
1 .2 மடங்கு வியாழனின் நிறையுடன் ,மிகவும் நீட்சியுற்ற ஒரு நீள் வட்டப் பாதையில்
3 .3 வானியல் அலகுத் தொலைவு சராசரி ஆரத்துடன் 6 .8 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன்
இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர் .

பூமிக்கு வெளியே உயர் உயிரினம் இருக்கக் கூடிய வாய்ப்பு பற்றி இன்றைக்கு பன்னாட்டு
வானவியலார் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியில் இது முக்கியமாகக் கருதப்படுகிறது .
எப்சிலான் எரிடானசின் இளநிலை ,உயிரினம் இன்னும் தோன்றி இருக்க வாய்ப்பில்லை
என்று கூறினாலும் எதிர்காலத்தில் உயிரினம் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை என்று
மறுக்க முடியாது. இந்த ஆய்வில் டௌ சீடிக்கு அடுத்ததாக இந்த விண்மீன் அனைவரின்
கவனத்தில் இருந்து வருகிறது. இது டௌ சீடியை விடவும் சற்று குறுகிய தொலைவில்
உள்ளது என்பதும் அதற்கு ஒரு காரணம்

Friday, November 18, 2011

arika ariviyal

ஓட்டிக் கொள்ளும் பனிக்கட்டித் துண்டுகள்

குளிர் சாதனப் பெட்டியின் உறைவறையில் உறைய வைத்த கனச் சதுர
பனிக் கட்டித் துண்டுகளை ஒரு வாளியில் குவிக்க, அவை ஒன்றோடொன்று
ஒட்டிக் கொள்வதேன்?

கனச் சதுரப் பனிக் கட்டித் துண்டுகளைக் குவிக்கும் போது, ஒரு சில ஒன்றோடொன்று
தொட்டுக் கொண்டிருக்கும். எனவே அப்பரப்பு திறவலாக இல்லாது போகும் .
மேலும் தொடக்கத்தில் ஒவ்வொரு பனிக்கட்டித் துண்டின் பரப்பிலும் ஒரு
மெல்லிய நீர் படலம் இருக்கும். தொடுபரப்பில் ,காற்றுவெளித் தொடர்பு
இல்லாததால் ,நீரிலிருந்து சிறிதளவு வெப்ப ஆற்றல் வெளியேற்றப் படுகிறது.
உறைதல் தூண்டப்பட்டு கனச் சதுர பனிக் கட்டித் துண்டுகள் ஒட்டிக்
கொள்கின்றன .

Thursday, November 17, 2011

arika ariviyal

ஆற்றல் மறைந்த மாயம் ?
ஒரே மாதிரியான இரு கொள்கலன்கள் ,கட்டுப்பாட்டு வால்வுடன்
கூடிய ஒரு மில்லிய குழாய் மூலம் இணைக்கப்படுகின்றன .
தொடக்கத்தில் ஒரு கலனில் h உயரம் இருக்குமாறு நீரிட்டு
நிரப்பப்படுகிறது .வால்வைத் திறக்க ,நீர் ஒரு கலனிலிருந்து
மற்றொரு கலனுக்குப் பாய்ந்து செல்கின்றது .இந்தப் பாய்வு
இரு கலனிலும் நீர் மட்டம் h /2 உயரம் எட்டும் வரை நிகழ்கிறது .

தொடக்கத்தில் நீரின் ஈர்ப்பு நிலையாற்றல் (gravitational potential
energy ) W (h/2), நீரின் எடை மற்றும் ஈர்ப்பு மையத்தின் உயரம் இவற்றின்
பெருக்கல் பலனாகும் . இறுதி நிலையில் நீரின் ஈர்ப்பு நிலை யாற்றல்
2 (W /2)(h/4) = W(h/4). இது தொடக்க ஈர்ப்பு நிலையாற்றலில்
பாதியளவேயாகும். மீதிப் பாதியளவு ஈர்ப்பு நிலையாற்றல்
எப்படி மாயமாய்ப் போனது ?

நுண் புழைக் குழாய் வழிப் பாயும் நீர் ,பல அடுக்குகளாக வகுக்கப்பட்டு பாய்கிறது .
இதில் மையத்தில் செல்லும் நீர் விரைவாகவும் ,குழாயின் சுவரை ஓட்டிச்
செல்லும் நீர் குறைந்த வேகத்துடனும் பாயும்.இந்த வேக வேறுபாடு
இயங்கும் இரு அடுக்குகளுக் கிடையே உராய்வை ஏற்படுத்துகிறது.
இந்த உராய்வை எதிர்த்துச் செல்வதால்,தொடக்க ஈர்ப்பு நிலையாற்றலில்
பாதியளவு வெப்ப ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. இந்த அக உராய்வும்
குழாயின் சுவரோடு ஏற்படுத்தும் உராய்வும் இல்லாதிருந்தால் ,நீரானது
இரு கொள்கலன்களுக்குமிடையே தொடர்ந்து மாறிமாறிப் பாய்ந்து
அலைவியக்கதைக் கொண்டிருக்கும் .

vinveliyil ulaa



(எரிடானஸ் இத்தாலி நாட்டில் ஓடும் ஒரு ஆறு . இதை அங்கு போ (PO ) என அழைக்கின்றார்கள் .
இதற்கு ஆறுகளின் அரசன் என்று பொருள் .)

எரிட்டாநெஸ்(Eridanus) என்ற ஆறு ,பாத்தோன் (Phaethon ) என்பவனின் கதையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது .
இவன் சூரியக் கடவுளான ஹிலியோவின் மகனாவான் .ஒருசமயம் தன்னுடைய பிறந்த நாளன்று ,தன் தந்தையை அணுகி தான் சூரியனின் மகன்
என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது என்று கேட்டான் .அதற்கு
அவன் தந்தை நீ விரும்பியதைக் கேள் நான் தருகிறேன் என்று கூற , பாத்தோனும்
தன் தந்தையின் தேரை ஓட்டிப் பார்க்க விரும்பிக் கேட்டான் .அப்போது அவன் தந்தை
இந்தத் தேரை ஓட்டிச் செலுத்துவது கடினம் ,அனுபவம் இல்லாத இளைங்கர்களுக்கு
இது மரணத்தைத் தரக் கூடியது என்று சொல்ல, பார்தோனும் வற்புறுத்திக் கேட்க
மறுக்கமுடியாமல் அப்பல்லோவும் அனுமதித்துவிட்டார் .
தேரைச் செலுத்தும்போது குதிரைகளை கட்டுப்படுத்த முடியாது போகவே
ஆற்றுக்குள் விழுந்துவிடுகிறான் .



தன் தந்தையின் தேரை ஓட்டிச் செல்லும் ஒரு சோகமான
முயற்சியில் அவன் ஆற்றுக்குள் விழுந்து விடுகிறான் .அதனால் அந்த ஆறு புராணக் கதையில் சிறப்புற்றது .அந்த
ஆற்றின் பெயரிலேயே இந்த வட்டார விண்மீன் கூட்டம் அழைக்கப்படுகிறது .இதிலுள்ள அடுத்தடுத்த விண்மீன்களை
இணைத்தால் ,அது வளைந்து வளைந்து ஓடும் ஒரு ஆறு போலத் தோன்றும். விண்ணில் 60 டிகிரி வடக்கிலிருந்து
தெற்கு வரை நெடிய தொலைவு விரிந்து இருக்குமாறு ஒரு சரிவைப் பெற்றிருக்கிறது .இது போல வேறு எந்த வட்டார
விண்மீன் கூட்டங்களும் சரிவைப் பெற்றிருக்கவில்லை .

இதிலுள்ள மிகப் பிரகாசமான விண்மீன் ஆசெர்னர் (Achernar ) என அழைக்கப்படும் ஆல்பா எரிடானி ஆகும். இது இளம்
நீல நிறமான ,தோற்றப் பொலிவெண் 0 .5 உடைய மிகப் பிரகாசமான விண்வெளியில் 9 வது பிரகாசமிக்க 144
ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள விண்மீனாகும்.ஆசெர்நர் என்றால் அரேபிய மொழியில் ஆற்றின் கழிமுகம் .
இதன் பிரகாசம் சூரியனைப் போல 3000 மடங்கு என மதிப்பிட்டுள்ளனர் .இது நிறமாலை வகையில் B3e ஆக
உள்ளது. அதாவது நிறமாலையில் ஹைட்ரஜன் உமிழ்வு வரிகளைக் காணமுடிகிறது.

arika ariviyal

வண்ணக் கலனும் சுடு நீரும்
எல்லா வகையிலும் ஒத்த இரு கொள்கலன்களில் சம அளவு சுடுநீர் எடுத்துக்
கொள்ளப்படுகிறது .ஆனால் ஒரு கலனின் புறப்பகுதி கறுப்பு நிறம் பூசப்பட்டும்
மற்றொரு கலனின் புறப்பகுதி வெள்ளை நிறம் பூசப்பட்டும் உள்ளது .தொடக்கத்தில்
சுடுநீரின் வெப்பநிலை இரு கலன்களிலும் சமமாக உள்ளது. நேரம் செல்லச் செல்ல
இக் கலன்களில் உள்ள சுடுநீரின் வெப்பநிலை எங்ஙனம் மாறும் ? அல்லது எக்கலனில்
உள்ள சுடுநீர் விரைவாகக் குளிரும் ?
ஒரு பொருள் கதிர்வீச்சினால் குளிர்வடையும் வீதம் என்பது அப்பொருளின் வெப்பநிலை
மற்றும் அதன் அகச் சிவப்புப் பண்பினைப் பொறுத்தது .கட் புலனறி ஒளியும் அகச் சிவப்புக்
கதிர்களைப் போல மின்காந்த அலைகளாக இருப்பினும் ,கதிர்வீச்சினால் குளிர்வடையும்
வீதம் இதனால் தீர்மானிக்கப் படுவதில்லை. நிறம் தவிர்த்த பிற கூறுகள் அனைத்தும் இரு
கலன்களுக்கும் சமமாக இருப்பதால் ,இரு கலன்களும் சமமாய் குளிர்வடைகின்றன.

.
அதே பண்பென்றாலும் நீர் மட்டும் தனித்தது

நீர் பனியாக உறையும் போது பருமப் பெருக்கமடைகிறது .இது போன்ற பண்பை சிலிகான் ,
ஜெர்மானியம் ,ஸ்டெர்லிங் சில்வர் கலப்பு உலோகம் ,ஈயம்-டின் -ஆண்டிமணி கலப்பு உலோகம்
போன்றவை பெற்றிருக்கின்றன .ஆனால் இவற்றிலிருந்து நீர் சற்று வேறுபட்ட பண்பைக் கொண்டிருக்கிறது . அது என்ன ?


நீரின் வெப்பஞ் சார்ந்த விரிவாக்கம் என்பது அதன் உறைநிலைக்கு வெகு அருகாமையில்
4 டிகிரி லிருந்து ௦ டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் போது ஏற்படுகிறது. இந்த
விரிவாக்கததினால் நீர் 11 % பெருக்கமடைகிறது. நீரால் அடைக்கப்பட்ட கலன்
உறையும் போது ,அதை வெடிக்கச் செய்ய இது போதுமானதாக இருக்கிறது

Tuesday, November 15, 2011

arika ariviyal

சுற்றுப் புறம் அதே வெப்ப நிலையில் இருக்க நீர் ஏன் ஆவியாகவேண்டும் ?

இரு பொருட்களுக்கிடையே வெப்ப நிலை வேறுபாடு இருக்கும்போது மட்டும் தான் வெப்பமானது
தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருளுக்கு பரிமாற்றப் படுகிறது.அப்படியென்றால் சுற்றுப்
புறத்தின் அதே வெப்ப நிலையில் ஒரு கண்ணாடித் தட்டில் எடுத்துக் கொண்ட நீர் எப்படி
ஆவியாகிறது?அது ஆவியாவதற்குத் தேவையான ஆற்றலை நீர் சுற்றுப் புறத்திலிருந்து
பெறவே முடியாது. ஏனெனில் சுற்றுப் புறமும் அதே வெப்ப நிலையில் உள்ளது.அப்படியென்றால்
நீர் எப்படி ஆவியாகிறது ?

எந்த ஒரு வெப்ப நிலையிலும் ஓர் நீர்மத்திலுள்ள அனைத்து மூலக்கூறுகளும் ஒரே வேகத்தில்
இயங்குவதில்லை.அவ வெப்பநிலையில் அவற்றின் சராசரி வேகம் மட்டுமே மாறாதிருக்கிறது .
எனவே அதில் சராசரி வேகத்தைவிட வேகம் மிகுந்த மூலக்கூறுகளும் ,வேகம் குறைந்த
மூலக்கூறுகளும் உள்ளன.ஆவியாக்கத்தின் போது முதலில் வேகம் மிகுந்த மூலக்கூறுகள்
நீர்மத்தை விட்டு வெளியேறுகின்றன.ஏனெனில் அவை நீர்மத்தின் ஒட்டு விசை (cohesion
force)க்கு எதிராகச் செயல்பட்டு விடுபடும் தன்மையைப் பெற்றுள்ளன.அவை வெளியேறிய பின்
எஞ்சிய மூலக்கூறுகளின் சராசரி வேகம் குறைகிறது.அதாவது அதன் வெப்ப நிலை
குறைகிறது. அந்த வெப்ப நிலையில் மிகு வேக மூலக்கூறுகள் வெளியேற மீண்டும் வெப்ப நிலை
குறைகிறது .அதனால் ஆவியாக்கம் தொடர்ந்து நிகழ்கிறது .

Thursday, November 10, 2011

arika ariviyal

சுடும் பனிக்கட்டி
பனிக் கட்டி என்றாலே குளிர்ச்சியான பொருள் என்று நினைக்கிறோம் .
ஆனால் ஒருவர் பனிக்கட்டியால் தீக்காயம் ஏற்பட்டது என்று சொன்னால்
நம்ப முடிகிறதா ? நம்ப மறுத்த போது அதே பனிக்கட்டியால் என்னையும்
சுட்டுக் காட்டினார் . இது எப்படி சாத்தியமாகும் ?

செயல் படும் அழுத்தம் அதிகரிக்க கொதி நிலையும் உறை நிலையும் அதிகரிக்கின்றன .
நீரில் 20 ,௦௦௦ வழி அழுத்தத்தைச் செயல் படுத்த அது௮ 76 டிகிரி செல்சியஸ்
வெப்ப நிலையில் உறைகிறது .அப்படி உறைந்த பனிக்கட்டி தோலில்
தீக்காயத்தை ஏற்படுத்தக் கூடியது .

குளிர்காலத்தில் தொப்பி அணி

கோடை காலத்தை விட குளிர் காலத்தில் தொப்பி யணிபவர்கள் அதிகம் .ஏன் ?

பொதுவாக தலையிலிருந்து 30 % உடல் வெப்பம் வெளியேறுகிறது .இதற்குக்
காரணம் தலை முடி மட்டுமின்றி ,தலைப் பகுதியின் வெப்ப நிலை பிற
பகுதிகளைக் காட்டிலும் சற்று அதிகமானது. எனவே வெப்பப் பரிமாற்றம்
அப் பகுதியில் அதிகமாக நடை பெறுகிறது. தொப்பி அணிவதால் இந்த
வேப்ப இழப்பு பெரிதும் தடுக்கப் பட்டு உடல் வெப்பம் காக்கப் படுகிறது.

Tuesday, November 8, 2011

arika ariviyal

சமைக்க கூடுதல் நேரம் வேண்டுமா ?

ஒரே அளவு சமிக்க மலைப் பிரதேசங்களில் கூடுதல் நேரமாகின்றது ? இது ஏன் ?

மலைப் பிரதேசங்கள் கடல் மட்டத்திலிருந்து வெகு உயரங்களில் இருப்பதால்
அங்கே வளி அழுத்தம் சற்று குறைவாக இருக்கும். அதனால் நீர் குறைந்த
வெப்ப நிலையிலேயேகொதிக்கும் . 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில்
ஒரு பொருளைச் சமைக்க ஆகும் நேரத்தை விட 80 டிகிரி செல்சியஸ் வெப்ப்
நிலையில் அதே அளவு பொருளைச் சமைக்க ஆகும் நேரம் அதிகமாக இருக்கும்.
இதனால் மலைப் பிரதேசங்களில் சமைப்பதற்கு கூடுதல் நேரமாகிறது. .

அண்டார்டிகாவும் அர்க்டிக்கும்

அண்டார்டிகாவும் ஆர்க்டிக்கும் பூமியின் தெற்கு ,வடக்கு முனைகளில் உள்ளன .இதில்
அண்டார்டிகாவில் உள்ள பனி படர்ந்த பகுதி ஆர்க்டிக்கில் பனி படர்ந்த பகுதியை விட
8 மடங்கு அதிகமாய் உள்ளது. வட, தென் முனைகளில் காணப்படும் இந்த வேறுபாட்டிற்கு
யாது காரணம் ?

அண்டார்டிக்கா ஒரு கண்டமாகும் . அது ஒரு நிலப்பகுதி . அது வெப்பத்தைத் தக்க வைத்துக்
கொள்வதில் மந்தமானது .பெற்ற வெப்ப ஆற்றலை உடனே கதிர் வீச்சாக வெளியே
உமிழ்ந்து விடுகிறது . இதனால் கடுங் குளிர்ச்சியான பகுதி பனி படர்ந்த பகுதியில் உட்புறம்
தள்ளி இருக்கிறது. ஆனால் ஆர்க்டிக் பனி கடலில் மிதக்கும் பனி மலை யாகும் .நீரின்
வெப்ப ஏற்புத் திறன் மிகவும் அதிகம் .பெற்ற வெப்பத்தை மெதுவாகவே இழக்கிறது.. கோடையில்
சேமித்த வெப்பம் குளிர் காலத்திலும் பாதிப்பதால் ஆர்க்டிக் பனி சிறிய எல்லைக்குள்
அடங்கி விடுகிறது .

Friday, November 4, 2011

arika ariviyal

பனிச் சறுக்கு விளையாட்டிற்கு இன்று தடை

பனிப் பிரதேசங்களில் பனிப் பரப்பில் கீழே விழுந்து விடாமல் சறுக்கி விளையாடுவார்கள் .
இதற்காக கால்களில் தகடுகளை அணிந்து கொள்வார்கள் .இதனால் இயக்கச் சமநிலையைப்
பெறமுடிகிறது .பனிப் பரப்பு மிகவும் குளிர்ச்சியாக உள்ள நாட்களில் பனியில் சறுக்குவது
கடினமாக இருக்கும். அனுபவம் உள்ளவர்கள் கூட விபத்தில் சிக்கிக் கொள்வர் .இதனால்
குளிர் மிகுந்த நாட்களில் பனியில் சறுக்கு வதற்கு அனுமதிப்பதில்லை. குளிர் மிகுந்த
நாட்களில் பனியில் சறுக்குவது ஏன் கடுமையாக இருக்கிறது ?

ஒரு பரப்பின் நிலைம உராய்வுக் குணகம்(static friction coefficient).பரப்பு மிகவும் .
குளிர்ச்சியாக
இருக்கும் போது அதிகம் .நிலைம உராய்வின் பெருமமும் அதிகரிக்கிறது. அந் நிலையில்
பனியில் சறுக்குவது மிகவும் கடினமாகி விடுகிறது .

0 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் பனிக்கட்டியின் புறப்பரப்பில் ஒரு மெல்லிய நீர் படலம்
படர்ந்திருக்கும் .இது சறுக்கி விளையாடும் போது இரு பரப்புகளுக் கிடையே மசகாகச் செயல்பட்டு
உராய்வைப் பெரிதும் குறைக்கிறது .மேலும் அழுத்தத்தின் காரணமாக பனியின் உறைநிலை
அதிகரிக்கிறது . அதனால் குறைந்த அழுத்தத்தில் உறைந்த பனிக்கட்டி உருகுகிறது ,இதற்குக்
காரணம் பனிக் கட்டியில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளே .ஹைட்ரஜன் பிணைப்புகளை
வெப்பம் மட்டுமின்றி அழுத்தம் கொடுத்ததும் துண்டிக்கலாம் .

ஒரு பனிக்கட்டித் துண்டின் மீது இரு முனைகளிலும் எடை கட்டிய நூலை இட ,அது பனிக்கட்டியை அறுத்துக்
கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் அழுத்தம் காரணமாக பனி உருகுவதாகும் .பனி கட்டியின்
மீது நூல் எங்கு அழுத்தம் கொடுக்கின்றதோ அப்பகுதி உருகிப் போவதால் ,நூல் கீழே நழுவிச்
செல்கிறது. எனினும் செயல்பட்ட அழுத்தம் நீக்கம் பெற்றவுடன் நூலுக்கு மேலாக உருகிய நீர் மீண்டும்
பணியாக உறைந்து விடுகிறது

arika ariviyal

சுடு நீரும் குளிர் நீரும் உறைதல்

நீர் உறையும் கடுங் குளிர் காலத்தில் மூடியற்ற ,ஒரே மாதிரியான இரு மர
வாளிகளில் நீருற்றி,புற வெளியில் உறையுமாறு வைக்கப்படுகின்றன .ஒரு
வாளியில் சுடு நீரும் ,மற்றொரு வாளியில் குளிர் நீரும் இருப்பதாகக்
கொள்வோம்.இவற்றுள் எது முதலில் உறையும்? அல்லது இரண்டுமே ஒரே
சமயத்தில் உரையுமா ?

சில குறிப்பிட்ட சூழ் நிலைகளில் ,சுடு நீர் குளிர் நீரை விட விரைவாகக்
குளிர்வுற்று உறைகிறது. இது மர வாளிக்கு மட்டும் பொருந்தும்.
கடத்தும் திறன் மிக்க உலோகங்களாலான வாளிகளுக்கு பொருந்துவதில்லை .

மூடியற்ற மர வாளியில் உள்ள சுடு நீரின் மேற்பரப்பில் நிகழும் ஆவியாக்கமும்
அதைத் தொடர்ந்து நிகழும் குளிர்ந்த மேல் நிலை நீரும் ,சூடாக உள்ள
அடிநிலை நீரும் ஏற்படுத்தும் கலவையும் இங்கு முக்கியமாக குளிர்
வூட்டுதலுக்குக் காரணமாய் இருக்கின்றன.ஆவியாக்கமும் ,நீர்மச் சலனமும்
வெப்ப ஆற்றலை புற வெளிக்கு
விரைவாக எடுத்துச் செல்லும் வீதத்தில் முக்கியப் பங்கேற்றுள்ளன .
ஆனால் மரவாளிகளின் சுவர் பரப்பு வழியாகக்
கடத்திச் செல்லப்படும் வெப்பம் மிகவும் குறைவு. ஆவியாக்கம் மட்டுமே
குளிர்வூட்டுதலைப் பெற வேண்டி இருக்கிறது.
மேலும் சூடான நீரின் ஆவியாக்கத்தினால் அதிக அளவு நீர் மூலக்கூறு
வெளியேறிவிடுகின்றன. அதனால் குறைந்த
அளவு நீரையே உறைய வைக்க வேண்டியிருக்கிறது.

குளிர்வூட்டலில் ஆவியாக்கம் மூலம் ஏற்படும் நிறை இழப்பு
குறிப்பிடும்படியானது. எடுத்துக்காட்டாக நீரை 100 டிகிரி
செல்சியஸ் லிருந்து 0 டிகிரி வரை தானாகக் குளிரும் போது 16 %
நிறையை இழக்கிறது. இதை உறைய வைக்கும் போது
மேலும் 12 % நிறையை இழக்கிறது. எனவே மொத்த நிறை இழப்பு
{16 + 12 x (100 -16 )}/100 = 26 %

இது நம் அன்றாட வாழ்க்கைக் குரிய பயனை நல்கியிருக்கிறது .எ.கா.
காரை வெந்நீரால் கழுவக்கூடாது .ஏனெனில்
வெந்நீரால் கழுவ, அது குளிர் நீரை விட விரைவாக உறைந்து காரில் படிக்கிறது

Wednesday, November 2, 2011

arika ariviyal

காற்றும் நீரும்

காற்றும் நீரும் ஒரே வெப்பநிலையில் (28 டிகிரி சென்டிகிரேடு) இருந்தாலும்,
பெரும்பாலும் அப்படி உணரப்படுவதில்லை.நீச்சல் குளத்தில் குதிக்கும் போது,
நீரைத் தொட்ட நிலையில் அது சற்று குளிர்ச்சியாக இருப்பதை உணர்வார்கள்.
ஏன் இந்த வேறுபாடு ?

காற்றும் நீரும் பொதுவாக அரிதில் கடத்திகளாகும்.வெப்பத்தை விரைவாகக்
கடத்திச் செல்வதில்லை. இவையிரண்டினுள் காற்றை விட நீர் ஓரளவு
கூடுதலாக வெப்பங் கடத்துகிறது.உடலின் வெப்பநிலை சுற்றுப் புறத்தின்
வெப்ப நிலையை விட அதிகம் .எனவே கடத்தியைத் தொட்டவுடன் உடல்
வெப்பம் அதன் கடத்து திறனுக்கு ஏற்ப கடத்திச் செல்லப் படுகிறது.
இதனால் நீர் குளிர்ச்சியாக இருப்பதாக உணருகிறோம் .

இப் பண்பு ஒரு வைரம் உண்மையானதா இல்லை போலியானதா என்பதைக்
கண்டு பிடிக்கப் பயன் தருகிறது. .உண்மையான
வைரம் கடத்து திறன் மிக்கது. போலி வைரம் அப்படி இல்லை .
எனவே வைரத்தை நாவில் வைத்துப் பார்க்கும் போது அது
குளிர்ச்சியாகத் தெரியும். .