Saturday, March 21, 2020

sonnathum solaathathum


புத்தரின் பொன்மொழிகள்.


. “பகைமையை பகைமையினால் தணிக்க முடியாது , அன்பின் மூலம் மட்டுமே தணிக்க முடியும்”

. அன்புதான் உலக மகா சக்தி என்பது பௌத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை.
அன்பு மனதில் பரிபூர்ணமாக இருந்தால் இந்த உலகிலுள்ள அனைவருமே சொந்தக்காரர்களாக இருப்பார்கள் மனிதர்கள் மட்டும்மல்ல வாய்பேசாத விலங்குகள் ,பறவைகள் கூட அந்த அன்பிற்கு அடிமையாகின்றன . கொடிய காட்டு விலங்குகள் கூட தன் இயல்பை மறந்து அன்புக்கு முன்னே அடிபணிகின்றன. இயற்கை மனிதனுக்குத் தந்த அணிகலன்கள் முகத்தில் புன்னகையும் அகத்தினுள் அன்பும்தான் .இனிய சமுதாய வாழ்க்கைக்கு இவைகளே ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை தந்த சீதனம் . விலையுர்ந்த நகையும் .மதம் சார்ந்த அடையாளங்களும் இயற்கையின் இந்த அணிகள்களுக்கு ஈடாகாது.
மக்கட் தொகை பெருகப்பெருக நெருக்கத்தினால் மக்கள் நெருங்கிவந்தாலும் மனம் என்னவோ விலகிக் கொண்டே செல்கின்றது .மனிதநேயம் நலிவடைந்து கொண்டே வருகின்றது அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனை மேலும் எதிரியாகப் பார்க்கின்றான் . பகைமையை பகைமையால் வளர்க்கிறான். வைரத்தை வைரத்தால் இருக்கமுடியும் .நஞ்சை நஞ்சால் முறிக்க முடியும் , ஆனால் பகையை பகையால் அழிக்க முடியாது .பகையை நேசிப்பாக மாற்ற  அன்பினால் மட்டுமே முடியும்இயற்கையில் நேர் மற்றும் எதிர் என  இரண்டு வகையான மின்னூட்டங்களே உண்டு .ஒத்த மின்னூட்டங்கள் ஒன்றையொன்று எதிர்த்து விலக்கிக் கொள்கின்றன .இதை ப் பகை என்றால் , அதை மாற்ற வல்லது பகைக்கு எதிரான மாற்று மின்னூட்டமே அதை நாம் அன்பெனலாம் . ஒத்த மின்னூட்டங்கள் ஒன்றையொன்று வெறுத்து விலகிச் செல்கின்றன ,வேறுபட்ட . மின்னூடஙகள் ஒன்றையொன்று நேசித்து நெருங்கிவருகின்றன .என்ற இயற்பியல் விதி மூலம் பகையை அன்பால் நேர்படுத்த முடியும் என்ற வாழ்வியல் உண்மையை இயற்கை மனிதர்களுக்கு உணர்த்துகின்றது     

மனதில் நினைப்பதை சொல்ல வேண்டும், இல்லையெனில் மௌனமாக இருப்பதே சிறந்தது.”

நுணல் தன் வாயால் கெடுவது போல மனிதனும் தன் வாயால் கெட்டுப் போகின்றான். தேவையான இடத்தில், நேரத்தில்  தேவையான விஷயங்களைப் பேசாதிருப்பதும் ,தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதும் தேவையில்லாத இடத்தில், நேரத்தில்  தேவையான விஷயங்களைப் பேசுவதும் பெரும்பாலான மனிதர்களுக்கிடையிலான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றது .பிரச்சனைகளுக்குத் தீர்வு இரண்டுதான் ஒன்று புன்னகை மற்றொன்று அமைதி .என்று அறிஞர்கள் கூறுவார்கள் ., ஒன்றைப்பற்றி சரியாகத்தெரிந்தால் பிறருக்கு அதுபற்றிச் சொல்லலாம். ஆனால் ஏதும் தெரியாமல் புனைந்து கற்பனையாக எதையாவது கூறினால் ,அது மற்றவர்களை க் குழப்பிவிடும். அது தொற்று நோய்போலப் பரவி சமுதாயத்தையும் குழப்பும் . சமுதாயத்தில் வதந்திகள் பரவுவது இப்படித்தான் . எனவே தெரியாவிட்டால் கேவலமில்லை ,மௌனமாக இருப்பது சிறந்தது. 

“ஆசையை வென்ற மனிதனை இந்த உலகில் யாராலும் வெல்ல முடியாது”

ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் , தகாத ஆசைகளைத் துறந்த மறு நொடியே மனத்தில் மகிழ்ச்சி பூக்கின்றது. ஆசைகளைத் துறப்பதற்கு மனம் எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. சுய இன்பம் தரும் தகாத ஆசைகள் இரு வழிகளில் எதிர்வினையாற்றத் தூண்டுகின்றன .  இயற்கைக்கு முற்றிலும் எதிரானது என்பதாலும்,பிறரோடு குறுக்கிடுவதால் ஏற்படும் பகைமையை வளர்த்துக் கொள்வதாலும் ஏற்படும் இழப்பு இரட்டிப்பாகின்றது .தீயனவற்றை ஏற்றுக்கொள்வதால் நல்லனவற்றை நிரந்தரமாக இழக்க   வேண்டியிருக்கும் .
ஆசைகள் ஒரு மனிதனின் பலவீனம்.  நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’,  ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’,‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்போன்ற  எட்டு வழிகள் பலம் பலத்தால் பலவீனத்தை வெற்றிகொள்ள வேண்டும் ..பலவீனமில்லாத மனிதனை வீழ்த்தி வெற்றிபெற முடியாது.     

“நல்ல உடல் நலத்தைப் பெற்று மகிழவும் தன் குடும்பத்தில் நிறைவான மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கவும் எங்கும் அமைதியை ஏற்படுத்தவும் எங்கும் அமைதியை ஏற்படுத்தவும் ஒருவர் முதலில் செய்யவேண்டியது ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி தன் மனதைத்  தானே  கட்டுப்படுத்திக் கொள்ள  வேண்டும். ஒரு மனிதனால் அவனது மனத்தைக் கட்டுப்படுத்த முடியுமானால் அவனால் மட்டுமே மகிழ்ச்சிக்கான  வழியைக் காட்டமுடியும். அதற்கான அறிவும் ஆற்றலும் இயற்கையாகவே அவரிடம் உண்டாகும்”
“ஒவ்வொருவரும் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவரவர் கடைகையாகும்   கடமை தவறினால் மனத்தைத் தூய்மையாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள முடியாது “
உடல் என்பது மனம் குடியிருக்கும் கோயில். .மனமே உடலை இயக்கம் கருவி . உடலோ செயல்களைச் செய்ய உதவும் கருவி .மனம் நலமாக இருந்தால்தான் உடலும் முமையான நலத்தைப் பெறும் , அதனால் செய்யப்படும் செயலும் சிறப்பாக இருக்கும் . உடல் வலுவாக இருந்து மனதை வேறு எங்கோ பறிகொடுத்து விட்டு , ஒரு செயலைச் செய்வதால் அது முழுமையான வெற்றியைத் தருவதில்லை . மாணவர்களின் கல்வி , அலுவலர்களின் பணி சிறப்பாக வெளிப்படாததற்கு இதுவே அடிப்படைக் காரணம்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மனக் கட்டுப்பாடு மிக முக்கியம் .நம்முடைய மனதை நாமே கட்டுப்படுத்த முடியா விட்டால் வேறு எவராலும் கட்டுப்படுத்த முடியாது . மனம் ஒரு குரங்கு . எண்ணங்களுக்கிடையே  தொடர்ந்து தாவிக்கொண்டே இருக்கும் ஒருமுகப்படுத்தப்படாத சிந்தனைகளால் செயல்கள் தொடங்கப்படுவதும் இல்லை ,முடிக்க;ப்படுவதுமில்லை . கடிவாளமிடப்படாத குதிரை எத்திசை வேண்டுமானாலும்  செல்லும். அதன் நோக்கும் போக்கும் அப்படி .ஆனால் கடிவாளமிடப்பட்ட குதிரை தான் செல்லும் வழித்தடத்தில்  மட்டுமே செல்லும். குதிரையைப் போல மனதையும் கட்டுப்பாடு என்ற கடிவாளமிட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டும் .
தூய்மையற்ற மனம் ஒருவருக்குத் தாற்காலியமான சுகத்தை மட்டுமே கொடுக்கின்றது. ஆனால் தூய்மையான மனம் அவருக்கும் . அனைவருக்கும் நிரந்தரமான சுகத்தைக் கொடுக்கின்றது. தாற்காலிய சுகத்தை மட்டுமே அனுபவிக்கப் பழகிய மக்களால் நிரந்தரமான சுகத்தை புரிந்து கொள்ளவே முடியாது . அது மது என்றால் இது குடிநீர் .    .
“கடந்த காலத்தில் மூழ்கிக் கிடைக்காதே , எதிர் காலத்தைப் பற்றிய கனவு கண்டுகொண்டிருக்கதே .  நிகழ் காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க   சிந்தி”
பிறப்பு என்பது இறந்த காலம். இறப்பு என்பது எதிர்காலம். அதைப்பற்றிச் சிந்திப்பதற்கோ , கவலைப்படுவதற்கோ ஏதுமில்லை.. ஒவ்வொருவருக்கும் இறைவனால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு நிகழ்காலம் மட்டுமே. .நிகழ்காலத்தை பயனுள்ளவாறு கழிக்கத் தெரிந்து கொண்டுவிட்டால் , எதிர்காலம் இயல்பாகவே நன்றாக அமைந்துவிடும். எதிர்காலத்தைப் பற்றி கனவு காணாமல் கடந்த கால  அனுபவங்களை நிகழ்காலத்தில் பயனில் கொண்டு கடமையாற்றினால் கனவில் காண விரும்பிய எதிர்காலத்தை விட மேலான ஒரு எதிர்காலம் தானாக வரும். இனிய வாழ்க்கை என்பது நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வதுதான் . ஆனால் பலர் அனுபவித்தலுக்குத் தவறான பொருள் கொண்டுவிடுகின்றார்கள் .அல்லது ஏதும் தெரியாமல் சும்மாவே காலத்தைக் கழித்து விடுகின்றார்கள் . அனுபவம் எப்போதும் செயல்களுக்குப் பின்னே வருவது. ஒருபோதும் பலனை முன்பலனாகக் கொடுப்பதில்லை.  
  . 
சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட, ஒரு நாள் உழைத்து  வாழ்வது மேலானது”.

எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை , எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் என்பார்கள். இறந்த பின்பு நிலைத்து வாழும் ஒருவருடைய  சிறப்பு  அவருடைய நீண்ட ஆயுளால் வருவதில்லை. அது எப்படி வாழ்ந்தார் என்பதைப் பொறுத்து அமைகின்றது.. குறுகிய வாழ்வேயானாலும் அதில் செயற்கரிய காரியங்களைச் செய்து முடிக்கவேண்டும்..அதனால் ஏற்படும் புகழ் அவன் வாழ்நாளையும் தாண்டி உலகம் உள்ளளவும்  நிலைத்திருக்கும்.  

ஒவ்வொருவரும் தன்னுடைய வேலைகளைத் தாங்களே செய்துகொள்ள இறைவன் எல்லோருக்கும் ஒத்த கருவிகளால் ஆன உடலைக் கொடுத்துள்ளார் கொடுத்த கருவிகளை ப் பயன்படுத்தி வாழாமல் பிறருடைய கருவிகளால் வாழ நினைப்பது தவறு . அதற்குக் கருவிகளோடு பிறக்காமலேயே இருந்திருக்கலாம் ..பிறருடைய உழைப்பில் வாழும் எவரும் காலப்போக்கில் அவசியமான நேரத்தில் கூட தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள முடியாமல் துன்பப்படுவார்கள் . யார் இறுதிவரை உழைத்து வாழவேண்டும் என்ற உறுதியோடு இருக்கின்றார்களோ அவர்களே மேலான வாழ்க்கை வாழ்கின்றார்கள். படைப்பில் இறைவனுடைய எதிர்பார்ப்பும் அதுதான்

“எந்த காலம் காயை கனியாக்குகிறதோ, அந்த காலம் கனியை அழுகவும் செய்கிறது”.

நம்முடைய அறியாமையால் ஏற்படும் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் பலர் காலத்தை க் குறை கூறுவார்கள். .காலத்தில்  நல்ல காலம் , கெட்ட காலம் என்று இல்லை. அது உண்மையில் இயற்கையின் எந்தச் சூழ்நிலையையும் பொருட்படுத்துவதில்லை . அதன் ஓட்டத்தை யாராலும் நிறுத்திவைக்கவும்  முடியாது . அதுபோலத்தான்  வாழ்க்கை  இன்பமும் துன்பமும் கலந்தது .செயல்கள் வெற்றியும் தோல்வியும் சேர்ந்தது .வெளி ஒளியும் இருளும் கொண்டது , சுவை இனிப்பும் கசப்பும் இணைந்தது

Sunday, March 15, 2020

sonnathum sollaathathum


ஐசக் அசிமோவின் பொன்மொழிகள்

கல்விமுறையில் எனக்கு சுயகல்வியில் மட்டுமே முழுமையான நம்பிக்கை இருக்கின்றது

இந்திய மாணவர்கள் பெரும்பாலும்  தேர்வுக்காகப் படிக்கின்றார்கள் அல்லது படிக்கவைக்கப்
படுகின்றார்கள் , வாழ்க்கைக்காகப் படிப்பதில்லை. அல்லது படிக்கவைக்கப்படுவதில்லை என்று கல்வியாளர்கள் குறை கூறுவார்கள் இதற்குக் காரணம் மாணவர்களின்  படிப்பு சுயமுயற்சியின் விளைவாக இல்லாமல் பிறருடைய திணிப்பினாலேயே திட்டமிடப்படுவதாக இருப்பதுதான் . அதனால் ஒரு மாணவனின் விருப்பப் பாடமும்  , படிக்கும்  பாடமும் வேறாக இருக்கின்றன. . இது படிப்பில் கொண்டுள்ள உற்சாகத்தை பாழ்படுத்திவிடுகின்றது கல்வியைத்  தெரிந்து கொள்வதற்காகவோ , அறிந்து கொள்வதற்காகவோ படிக்காமல் புரிந்து கொள்வதற்காகப் படித்தால் அறிவு ஓர் உரிமைப்பொருளாகி சுயமாக பயன்படுத்திக்கொள்ளும் உரிமையைத் தரும்  கல்வியின் பயனுறுதிறனை அதிகரிக்க  சுயமாகக் கல்வி தேடும் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்  கல்வி தேடுதல் என்பது வகுப்பறையில்லாது  ஊக்கம்தரும் சொற்பொழிவு களைக் கேட்டல் , நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல், ,நூலகம்  சென்று கூடுதல் விவரங்கள் சேகரித்தல் .விளையாட்டாய்  செய்முறைப் பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவைகளாகும். கல்வி தேடுதல் சுயமுயற்சியாக இருக்கும்போது புற உதவிகள் எதுவும்  தேவைப்படுவதில்லை. அவராகவே தன் கல்வியை முழுமைப்படுத்திக் கொள்ளும் பக்குவதைப் பெறுகின்றார். இதற்கு  ஐசக் அசிமோவ் ஒரு எடுத்துக்காட்டு. .
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் இப் பழக்கத்தைப் பின்பற்றி ஒழுக மாணவர்களை உற்சாகப் படுத்தி சுயமாக முன்னேற வழிகாட்டலாமே . படிக்காத அப்பாக்களும் இந்த வழிமுறையைப் பின்பற்றலாமே. உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை குறைவாக இருப்பதால் நீண்ட சொற்பொழிவுகளில் அதிக அக்கறை காட்டாத நம் மாணவர்களுக்கு தொடர்ந்த சொற்பொழிவுகளை விட கலந்துரையாடலும் பயிற்சியுமே நற்பயனளிக்கும்

சரியானதே  என்று ஒரு செயலில் ஈடுபடும்போது ஒருபோதும்  நீதி நேர்மையைக் கைவிட்டுவிடாதீர்கள் “.

இந்த உலகில் ஒருவர் தொடர்ந்து  தனித்து வாழ முடியாது, ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ்வதற்க்கே இந்த பூமி படைக்கப்பட்டிருக்கிறது , ஆனால் போட்டி பொறாமை போன்றவற்றால் ஒவ்வொருவரும்  பிறரைவிட பொருளாதாரத்தால் முன்னேறியிருக்க வேண்டும் என்று நினைத்து  அதை முறையான தகுதியில்லாமல் பெறுவதற்கும்  பிறருடைய பொருளை ஏமாற்றி அபகரிப்பதற்கும்  தீய  வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த எண்ணம் சிறு வயதிலிருந்தே தொடங்கி வாழ்க்கை முழுதும் ஊடுருவிவிடுகின்றது. நாம் நினைப்பதுண்டு ,பிறருக்குத் தெரியாமல் இந்தத் தவறைச் செய்து பயனைந்துவிட்டோம்  என்று.  எல்லோரும்     அப்படி யே நினைக்கின்றார்கள் என்பதை அறியாமலேயே , எந்தத் தீய பழக்கமும் சொல்லிக்
கொடுத்து வளர்வதில்லை . பெரும்பாலும் அவை சுயநலத்தில் கொண்ட ஆர்வத்தினால் தானாகவே பின்பற்றப் படுகின்றது. அதனால்தான் தீய செயல்கள் யாவும் மறைவொழுக்கமாகவே
 இருக்கின்றன. இது தொற்று நோய் போல சமுதாயத்தை தொற்றும் எண்ணமாக அமைந்துவிடும். அப்போது குணப்படுத்த முடியாமல் ஒட்டு மொத்த சமுதாயமும் சீரழிந்து போகும் அபாயம் ஏற்படும்..

மனம் அறிந்ததை , கேள்விப்பட்டதை விரும்பும் .அறியாதனவற்றைப்  பற்றி ஏதும் சிந்திக்காது, ஏங்காது.அதனால்தான் சான்றோர்கள் தீயதை மனதிற்கு ஒருபோதும் அறிமுகப்படுத்தி விடாதீர்கள் என்று அறிவுரை கூறுகின்றார்கள் . செய்யும் செயலில் நேர்மை வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவது நாம் வாழும் சமுதாயத்தின் நலன் கருதியே என்பதை நாம் உணரவேண்டும்

அறிவியல் ஒரு ஒளி விளக்குப் போல .எங்கோ ஓரிடத்தில் பிரகாசிக்கும்போது அது எல்லா இடங்களிலும் பிரகாசமூட்டத் தவறுவதில்லை

அதிகாரமுள்ளவர்கள் மக்களை எப்போதும் அடிமைகளாகவே பார்க்க விரும்பினார்கள் , அதனால் சில மூடப்பழக்கங்களை  மக்களுக்கு ஏற்படுத்தினார்கள் அறிவியல் வளரும் போது மூடப்பழக்கங்களின் உண்மைத்தோற்றம் தெரியவந்ததால்அறிவியல் அறிஞர்களைத் துன்புறுத்தினார்கள். புவி மையக் கொள்கை தவறு என்றும் ,பூமி தான் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிறிவருகின்றது என்றும் சொன்ன கலிலியோ கலிலியை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எல்லோருடைய நம்பிக்கையாக இருந்தாலும் நம்முடைய நம்பிக்கையும் அப்படியே இருக்கவேண்டும் என்பதில்லை . அறிவுப் பூர்வமில்லாத நம்பிக்கைகள் பெரும்பாலும் தவறான முடிவுகளையே மேற்கொள்ளத் தூண்டுகின்றன

அறிவியல் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது  சமுதாயாத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் நாகரிக வளர்ச்சியோடு வாழ்க்கையை எளிமைப்படுத்தவும் செய்கின்றது. சுகாதாரமான சுற்றுச் சூழலையும், ஆரோக்கியமான வாழ்க்கையையும் தருகின்றது   உலகில் ஒவ்வொருநாடும் பொருளாதார முன்னேற்றம் காண அறிவியலை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபாடு கொண்டுள்ளன. அது அறிவியலை மேலும் புதுமைப்படுத்தும் வாய்ப்பை த் தருவதால் , தொழில் புரட்சியில் முன்னோடியாகத் திகழ முடிகின்றது . இது உலகநாடுகளிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது

பிறப்பு மகிழ்ச்சிகரமாக இருக்கின்றது, இறப்பு அமைதியுடன் முடிகின்றது.ஆனால் அந்த நிலைமாற்றம் தான் மிகவும் துன்பமாக இருக்கின்றது

மகிழ்ச்சியான பிறப்பிற்கும் ,அமைதியான இறப்பிற்கும் இடையில் வருவது வாழ்க்கை. பிறப்பைக் கேட்டுப் பெறவும் முடியாது இறப்பை  வேண்டாமென்று மறுக்கவும் முடியாது.உண்மையில் ஒருவருடைய பிறப்பும் , இறப்பும் அவருடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இருப்பதில்லை. ஆனால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும்  என்ற உரிமையை இயற்கை எல்லோருக்கும்  சமமாக வழங்கியிருக்கின்றது .அதில் ஒரு ஏற்றத் தாழ்வு இருக்கின்றது என்றால் அது மனிதர் களின் கள்ளத்தனமே ஒழிய இயற்கையின் பிழையன்று. போராட்டம் தான் வாழ்க்கை என்பது இயற்கை வலிமையானவர்களே தொடர்ந்து வாழமுடியும் அவர்களால் தான் மேலும் கடுமையாக்கிக் கொண்டே போகும் எதிர்காலச் சூழலில்  வாழத்  தகுதியுடைய வலிமைமிக்கோரை உருவாக்க முடியும் .ஆனால் இயற்கைப் போராட்டத்தில் செயற்கைப் போராட்டம் வேதனைதான் .

செயற்கைப் போராட்டத்தைத் தூண்டும் சுயநலத்தை யாரும் தவறென மறுப்பதில்லை . மறைமுகமாக அதில் அளவில்லாத விருப்பத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றார்கள் .பிறருடைய வாழ்க்கையில் எதிர்வினை புரியாமல் இதைச் செய்யமுடியாததால் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் துன்ப மயமானதாகி வருகின்றது. துன்பத்திலும் இன்பத்தைக் காண மனத்தால் முடியும். அலைபாயும் மனதை ப் பக்குவப்படுத்த இறைவன் மனிதனுக்குச் சொன்ன பேரண்டம் முழுமைக்கும் சாலப் பொருந்தும்  இந்த அறிவுரையைக் கேளுங்கள்.ஒருமுறை கேட்டாலே மனம் உங்கள் வசப்படும்.
 
 " உன்னுடையது எதை இழந்தாய் , எதற்காக நீ  அழுகின்றாய்
எதை நீ கொண்டுவந்தால் அதை நீ இழப்பதற்கு
எதிர் நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு
எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ அது  நாளை மற்றொருவனுடையதாகின்றது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும்
இந்த மாற்றம் உலக நியதியாகும்