Monday, May 28, 2012

Vinveliyil Ulaa- Space Science

கானிஸ் மைனர்
ஒரு சிறிய நாய் உருவகமாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 2௦ விண்மீன்களே அடங்கிய ஒரு சிறிய வட்டாரம் .இதிலுள்ள மிகப் பிரகாச மிக்க விண்மீன் புரோசியான் என அழைக்கப்படும் ஆல்பா கானிஸ் மைனோரிஸ் என்ற விண்மீனாகும். இது விண்ணில் தெரிவான வற்றுள் 8 வது பிரகாசமான விண்மீனாகும்.11.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் ௦.4. புரோசியான் என்றால் நாய்க்கு முன்னால் என்று அர்த்தம். இதற்குக் காரணம் நாய்க்குள் அடங்கிய பிற விண்மீன்கள் தெரிவதற்கு முன்னர் விண்ணில் இது தெரிவதாகும்.
கானிஸ் மைனர் வட்டாரத்திலுள்ள புரோசியான் மஞ்சள் நிறங் கலந்த வெண்ணிற விண்மீன் எனினும் விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன்களுள் முதலாவதான சீரியஸ் என்ற விண்மீனை அளவாலும்,பிரகாசத்தாலும், புற வெப்ப நிலையாலும், சற்று குறைவானது. இருப்பினும் இவ்விரு விண்மீன்களுக்கிடையே ஒரு சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன.இவையிரண்டும் சிறிய வட்டாரத்திற்கு முதன்மை விண்மீன்களாக உள்ளன.இரட்டை விண்மீன்கள் என்பதால் மட்டுமின்றி, துணை விண்மீன் ஒரு குறு வெண் விண்மீனாக இருப்பதும் ஒரு ஒற்றுமையாகும்.இத் துணை விண்மீன்களை சீரியஸ் B,புரோசியான் B என அழைக்கின்றார்கள்.புரோசியான் B முதன்மை விண்மீனைவிட 10000 மடங்கு மங்கலானது.இதன் சுற்றுக் காலம் 41 ஆண்டுகளாகும்.
சீரியஸ் மற்றும் புரோசியான் விண்மீன் களுக்கிடையே காணப்படும் மற்றொரு ஒற்றுமை அவற்றை இனமறிந்த வழிமுறையும் ஏறக்குறைய ஒன்று போல இருப்பது. இவைகளுக்குரிய துணை விண்மீன்கள் முதலில் கண்டுபிடிக்கப் படாவிட்டாலும் புள்ளி விவரங்களைக் கொண்டு கற்பிக்கப் பட்டன.பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்த அனுமானங்கள் உண்மையென நிறுவப்பட்டன. பெசல் என்ற வானவியலார் புரோசியானின் தனித்த தன்னியக்கத்தில் சீரியஸில் காணப்படுவதைப் போன்ற அலை போன்ற விலக்கங்களைக் கண்டறிந்தார்.கண்ணுக்குத் புலப்பட்டுத் தெரியாத ஒரு சிறிய விண்மீனால் புரோசியானின் இயக்கம் சீர்குலைக்கப் படுகிறது என்று பெசல் தெரிவித்தார். ஏறக்குறைய 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி நாட்டு வானவியலாரால் புரோசியான் B என்ற துணை விண்மீன் இனமறியப்பட்டது. ஒளிப் பொலி வெண் 11 கொண்ட இது 4 வினாடி கோண விலக்கத்துடன் புரோசியான் A லிருந்து விலகி உள்ளது.இது சீரியசின் துணை விண்மீனைக் காட்டிலும் குறைவான ஒளியை உமிழ்கிறது. எனினும் பப்பி விண்மீனை விட அடர்த்தி மிக்க குறு வெண் விண்மீனாக உள்ளது . புரோசியான் A ன் பிரகாசம் நமது சூரியனை விட 5.8 மடங்கு அதிகமானது. சூரியனை விட ஓரளவு பெரியது,வெப்பமானது. இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 7000 டிகிரி கெல்வின் .

Cartoon

கார்டூன்
துணை டைரக்டர்: புதுப் படத்திற்கு புதிய கதாநாயகனாக நடிக்க வந்திருக்கும் அந்த ஆள் ரெம்ப வித்தியாசமானவராக இருக்கிறார். டைரக்டர்: சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்ததை வைத்துச் சொல்றீங்களோ . துணை டைரக்டர்: ஹு ஹும். காதல் காட்சிகளில் கதாநாயகியுடன் நடிக்க டூப் வேணுமாம் .

Sunday, May 27, 2012

eluthatha kaditham

எழுதாத கடிதம் வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் மின்சாரம் மிகவும் தேவையானது வீட்டுப் பயன்பாட்டிற்கும் தொழில் துறைகளில் உற்பத்திக்கும் இரவு நேரங்களில் சாலை மற்றும் பொதுவிடங்களில் ஒளி தருவதற்கும்.மின்சாரம் தேவையாக இருக்கிறது. மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் ,பொருள் உற்பத்திக்காக பெருகி வரும் தொழில் சாலைகள்,பெருகி வரும் புதிய புதிய விஞ்ஞான வசதிகள் இதற்குக் காரணமாக இருக்கின்றது .2025 ல் நமது மின்சாரத் தேவை இப்போது தேவைப்படுவதைப் போல இரு மடங்காக இருக்கும். இப் பிரச்னையை இப்போது முதற்கொண்டே உன்னிப்பாகக் கவனித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்தால்,கடுமையான எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியும். நமெக்கென விடியும் போது விடியட்டும் என்று சும்மா விட்டுவிட்டால் எப்போதும் போல நாட்டையும் நாட்டு மக்களையும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.பல வளரும் நாடுகள் இப்போது சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழிமுறைகளில் புதுமையைப் புகுத்திப் பயன்படுத்தத் தொடங்கியிருகின்றன.ஸ்பெயின் நாட்டில் சூரிய சக்தி கோபுரங்களை நிர்மாணித்திருகின்றார்கள்.42 கால் பந்து மைதானப் பரப்பளவு கொண்ட அதாவது 120 சதுர மீட்டர் பரப்பில் 1250 பிரதிபலிக்கும் கண்ணாடிகளை வைத்து விழும் சூரிய ஒளியை திசை திருப்பி சூரிய சக்தி கோபுரத்தில் விழுமாறு செய்து நீரின் வெப்ப நிலையை 2000 டிகிரி சென்டிகிரேடு வரை உயர்த்தி நீராவியின் மூலம் மின்சாரம் தயாரிக்கின்றார்கள்.இது இரு சிறிய கிராமத்திருக்குப் போதுமானதாக இருக்கின்றது.இஸ்ரேல்,பிரான்சு போன்ற நாட்டினர் சூரிய மின்கலம் மூலம் நேரடியாக மின்சாரம் தயாரிக்கும் முறையைப் பின்பற்றுகிறார்கள் இவ் வழிமுறைகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதால் எதிர்காலத்தில் விரிவுபடுத்தி மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஆண்டுமுழுதும் சூரிய ஒளி செறிவாகக் கிடைக்கும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்துகொண்டு,முறையான,விரிவான, முயற்சிகளை மேற்கொள்ளாமல்,மின்சாரத் தட்டுப்பாடு வரும்போதெல்லாம் தயாரான பதிலைச் சொல்வதால் எந்தப் பயனும் விளைவதில்லை. ஆட்சியாளர்களே, பிரச்சனைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள் ஆனால் காலவரம்பிற்குள் ஏதாவது பயனுள்ள முயற்சி எடுங்கள் . .

Saturday, May 26, 2012

Eluthaatha kaditham

மக்கள் : டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறதே? மந்திரி : கவலைப்படாதீர்கள்.அதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்.சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்போம் . மக்கள் : முன்னாலேயே உன்னிப்பாகக் கவனித்திருந்திருக்கலாமே.
அனுபவமின்மை அனுபவமாக வெளிக்காட்டிக் கொள்ளும் நிலைகளைத்தான் இந்திய மக்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கின்றார்கள்.மாணவன் ஆசிரியனைப் போல நடிப்பதைத்தான் வாழ்க்கை எனும் மேடையில் பார்கின்றார்கள் ஒவ்வொரு நிமிடமும் உழைப்பைக் காட்ட வேண்டிய கடமை மக்களுக்கு உண்டு.நாட்டு மக்களுக்காக நாட்டின் வளத்தையும்,நலத்தையும் மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு. நாடு நம் மக்களாலேயே சுரண்டப்படுவதை உன்னிப்பாக கவனிக்கின்றீர்களா? ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்தியனால் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவதொரு வழியில் ஏமாறுகின்றான் அல்லது ஏமாற்றப்படுகின்றான்.இது எப்படி தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்கின்றீகளா? பெட்ரோல் விலை ஏறுமுகமாக இருப்பதற்கு கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பதும்,எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்வதும் காரணமாக இருக்கட்டும். ஆனால் இதற்காக நீங்கள் உங்களுடைய உபரிச் செலவினகளைக் குறைத்துக் கொண்ட்டீர்களா? அதை இப்பொழுது முதற்கொண்டே உன்னிப்பாகக் கவனிக்கலாமே . .

Vethith Thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் புளூரின்(Fluorine) கண்டுபிடிப்பு புளூரின் மிகவும் தீவிரமாக வினை புரியக்கூடிய,ஹாலஜென் குடும்பத்தைச் சேர்ந்த அறை வெப்ப நிலையில் வளிம நிலையில் இருக்கின்ற ஒரு தனிமமாகும்.மக்கள் புளூரினை அறிவதற்கு முன்னால் அதன் ஒரு கூட்டுப் பொருளான புளூர்ஸபர் (Fluorspar)என்ற கால்சியம் புளூரைடை நன்கு தெரிந்திருந்தனர்.இது நிறமற்ற ஒரு படிகமாகும்.1670 கும் முன்னால் ஜெர்மனியின் ஸ்வாண்டு ஹார்டு (H.Schwandhard)என்பார்,புளூர்ஸபர் கரைந்த அமிலம் கண்ணாடியை அரித்தெடுப் பதைக் கண்டார் ,கண்ணாடியை அரித்தெடுத்தது ஹைட்ரோ புளூரிக் அமிலம் என்றாலும் அப்போ து ஸ்வாண்டு ஹார்டும் பிறரும் அது சிலிசிக் அமிலம் என்று தவறுதலாக முடிவு செய்தனர் ஏறக்குறைய ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புளூர்ஸ்பைரை ஷீலே என்ற ஆங்கிலேயர் ஆராய்ந்தார் புளூரைடை கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த கண்ணாடிக் குடுவை ஒளி ஊடுருவும் பண்பை இழந்ததைக் கண்டார்.இது குடுவையில் தோன்றிய புதிய அமிலத்தின் செயல் என அறிந்தார்.இது ஹைட்ரோ புளூரிக் அமிலம் என்று அறிந்தாலும் சில காலம் குழப்பமாகவே இருந்தது. இந்த அமிலத்தைப் பின்னர் ஆராய்ந்த டேவி ,ஹே லூசாக், லவாய்ச்சியர் மற்றும் தென்னார்டு போன்றவர்கள் இதன் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டார்கள். டேவி இவ்வமிலத்தில் ஒரு புதிய தனிமம் இருக்க வேண்டும் என்றும் அது குளோரினை ஒத்தது என்றும் அறிவித்தார்.அதற்கு புளூரின் என்று பெயரிட்டவரும் இவரே.இலத்தீன் மொழியிலிருந்து பிரஞ்சுக்குப் பெயர்ந்த கலவைப் பொருள் (flux) எனப் பொருள்படும் புளூர் என்ற வார்த்தையே இதற்குப் பெயர் தந்தது.புளூரினுக்குப் பெயரிட்டாலும் டேவியால் அத் தனிமத்தைத் தனித்துப் பிரித்துக் காட்ட முடியவில்லை. ஹைட்ரோ குளோரிக் அமிலம் மின்னார் பகுப்பினால் பிரிவதில்லை என்பதால் அவ் வழிமுறை புளூரினுக்குப் பயனற்றதாக இருந்தது.இறுதியாக 1886 ல் பிரான்சு நாட்டு வேதியியலாரான ஹென்றி மொய்சன்(Moisson) முதன் முதலாக தூய புளூரினைப் பிரித்துக் காட்டினார்.ஹைட்ரஜன் புளூரைடு திண்மத்தை உருக்கி,அது மின்சாரத்தைக் கடத்துவதற்கு எதுவாக பொட்டாசியம் ஹைட்ரஜன் புளூரைடைக் கரைத்து,அதைi மின்னார் பகுப்பிற்கு உட்படுத்த எதிர் மின் வாயில் ஹைட்ரஜனும் நேர் மின் வாயில் புளூரினும் வெளியேறின.1887 ல் மொய்சன் நீர்ம புளூரினை உருவாக்கிக் காட்டினார். பண்புகள் புளூரின் இலேசான மஞ்சளும் பச்சையும் சேர்ந்த நிறமும் ,கடிய நெடியும் கொண் ட ஒரு வளிமம்.இது மிகவும் தீவிரமாக வினை புரியக் கூடியது.என்பதால் மந்த வளிமங்கள் தவிர பிற உலோகங்கள் அலோகங்கள் என எல்லாவற்றுடனும் வினையாற்றுகிறது.இவற்றை புளூரைடு என்பர் இது ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனுடன் நேரடியாக இணைவதில்லை.இருட்டில் ஹைட்ரஜனுடன் வெடிப்புடன் இணைகிறது. இது தாழ்ந்த வெப்ப நிலையிலும் - 252 டிகிரி C யிலும் நிகழ்கிறது.இவ் வெப்ப நிலையில் புளூரின் திண்மமாகவும்,ஹைட்ரஜன் நீர்மமாகவும் இருக்கின்றன. கார்பன்,போரான்,கந்தகம்,பாஸ்பரஸ் ஐயோடின் போன்ற அலோகங்களும்,கால்சியம்,சோடியம்,பொட்டாசியம் போன்ற உலோகங்களும் இவ்வளிமத்தில் தூண்டுதல் ஏதுமின்றித் தானாக எரிகின்றன. பிற உலோகங்களை சிறிது சூடு படுத்தும் போது இந்த எரிதல் நிகழ்கிறது.நிக்கலும்,செம்பும் சேர்ந்த ஒரு கலப்பு உலோகமான மோனல் உலோகம் புளூரினால் அரிக்கப் படுவதில்லை. புளூரின் வேதிச் சேர்மங்களையும் கூடத்தாக்குகிறது.நீரானது புளூரினால் ஹைட்ரோ புளூரிக் அமிலமாகவும் ஆக்சிஜனால் ஆன ஓசோனாகவும் பகுக்கப்படுகிறது குளோரினை இடப்பெயர்ச்சி செய்கிறது.
F என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய புளூரினின் அணு எண்,9 அணு எடை 19 .வளிமமான இதன் அடர்த்தி இயல் வெளியில் o டிகிரி வெப்ப நிலையில் 1.7 கிகி /கமீ ஆகும் . இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 53 .15 K ,85 .15 K ஆக உள்ளன புளூரின் காற்றை விடச் சற்றே கனமானது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 0,065 சதவீதம் உள்ளது. இயற்கையில் இதற்கு ஒரே ஒரு நிலையான அணு எண்மம் (isotope) மட்டுமே உள்ளது. இது ஒரு வலிமையான ஆக்சிஜனூட்டியாகும் புளூரின் சிறிய அளவில் கடல் நீரிலும் ,பற்கள் எலும்பு இரத்தம், மூளை போன்ற உடல் பகுதிகளிலும் உள்ளது.

Wednesday, May 23, 2012

Vinveliyil ulaa

வாசட் (Wasat) வாசட் என்றழைக்கப்படும் டெல்டா ஜெமினோரம் மிகச் சாதாரணமான ஓர் இரட்டை விண்மீன் .இதிலுள்ள முதன்மை விண்மீன் மஞ்சள் நிறப் பெரு விண்மீனாகவும் ஒளிப்பொலிவெண் 3.5 கொண்டதாகவும் உள்ளது,6.8 வினாடி கோண விலக்கத்துடன்அமைந்துள்ள இதன் துணை விண்மீன் சிவப்பு நிறத்துடன் சிறியதாகவும்,ஒளிப் பொலி வெண் 8.2 கொண்டதாகவும் உள்ளது. ஜெமினி வட்டாரத்தில் சிபிட்ஸ் ஜெமினி வட்டாரத்தில் இரு சிபிட்ஸ் மாறொளிர் விண்மீன் களாக சீட்டா (ζ),ஈட்டா (η)ஜெமினோரம் உள்ளன. மஞ்சள் நிறத்துடன் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மாபெரும் விண்மீனான சீட்டா ஜெமினோரம் தொலை நோக்கியால் பார்க்கும் போது ஒளிப்பொலிவெண் 8 உடைய ஒரு துணை விண்மீனைக் கொண்ட ஓர் இரட்டை விண்மீனாகத் தெரிகிறது ..இதன் பிரகாசம் 10 நாட்கள் சுற்று முறையில் மாறிமாறி ஒளிரும்போது ஒளிப் பொலி வெண் 3.6 முதல் 4.2 வரை வேறுபடுகிறது. பிரகாசத்தின் ஏற்றத்தாழ்வு சீராக இல்லாமல் அதிலும் நுண்ணிய அளவில் வேறுபாடு காணப்படுகிறது. 350 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஈட்டா ஜெமினோரம் பெருஞ் சிவப்பு மாறொளிர் விண்மீனாகும்.இதன் உருவம் 8 மாத காலச் சுற்று முறையில் விரிந்து சுருங்குகிறது.அப்போது இதன் ஒளிப்பொலிவெண் 3.2-3.9 என்ற நெடுக்கையில் மாற்றம் பெறுகிறது இது ஒரு துடிப்பு விண்மீனாகும்.இது மற்றொரு விண்மீனால் மறைக்கப் படுவதால் மறைப்பு மாறொளிர் விண்மீனாகவும் விளங்குகிறது.இதனால் இதன் பிரகாசம் 3000 நாட்களுக்கு ஒருமுறை ஏற்றத் தாழ்வுடன் மாறொளிர்கிறது. ஜெமினி வட்டாரத்தில் தனிக் கொத்து விண்மீன் கூட்டம் இவ் வட்டாரத்தில் M.35 என்ற செறிவுமிக்க தனிக் கொத்து விண்மீன் கூட்டம் 3500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது கஸ்டரிலிருந்து தொடங்கி எப்சிலான் ,மியூ,ஈட்டா மற்றும் அயோட்டா ஜெமினோரம் இவற்றின் தொடரால் நீண்டிருக்கும் வால் நுனியின் இறுதியில் M.35 அமைந்துள்ளது. இறுதியாக உள்ள ஈட்டா மற்றும் அயோட்டா ஜெமினோரம் இவற்றுடன் M.35 ஒரு செங்கோண முக்கோணத் தோற்றம் தருகிறது. இது வானத்தில் ஒரு முழு நிலவின் பரப்பை அடைத்துள்ளது. இதில் 8 மற்றும் அதற்கும் அதிகமான ஒளி பொலி வெண் கொண்ட மங்கலான விண்மீன்கள் இருப்பதைத் தொலை நோக்கியால் காணமுடியும். இதில் குறைந்தது 200 விண்மீன்கள் ஒரு வளைகோட்டில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.உண்மையில் இக் கொத்து விண்மீன் கூட்டத்தின் சராசரி விட்டம் 23 ஒளி ஆண்டுகள்.இது டாரஸ் கூட்டத்திலுள்ள ஹையடெஸ் கொத்து விண்மீன் கூட்டத்தை விட 20 மடங்கு பெரியது.

Monday, May 21, 2012

Vethith thanimangal- Chemistry

வேதித் தனிமங்கள் ஆக்சிஜன்-பயன்கள் ஆக்சிஜன் - அசிடிலின் வளிமங்களை ஊதி எரியச்செய்து உலோகங்களை வெட்டவும்,பற்றவைத்து ஒட்டவும் பயன்படுத்து கிறார்கள்.இது 3300 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை தரவல்லது.ஆக்சிஜன்-நைட்ரஜன் எரி வளிமங்கள் பிளாட்டினம் சிலிகா போன்றவைகளுக்குப் பயன் தருகிறது.இது 2400 சென்டிகிரேடு வரை வெப்பநிலை தரவல்லது.இயல்பாக வாழும் சூழலை விட்டு வேறுபட்ட சூழல்களில் பணிபுரிவோருக்கு ஆக்சிஜன் ஊட்டம் தேவையாக இருக்கிறது.மலை ஏறுபவர்கள், விமானங்களில் பயணிப்போர்,கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்வோர்,விண்வெளி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணி புரிவோர், சுரங்கங்களில் வேலை செய்வோர்,நோயாளிகள் போன்றவர்களுக்குத் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்க இது பயன் தருகிறது. நீர்ம ஆக்சிஜனை கரிப் பொடியுடன் கலக்க அது ஒரு வெடி பொருளாகின்றது.
சின்னக் குப்பியில் சோடியம் குளோரேட்டையும் இரும்புத் துருவல்களையும் போட்டு விமானத்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அருகாமையிலும் வைத்திருப்பார்கள்.ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து,ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றார்கள்.இன்றைக்கு ஆக்சிஜனை ஓரிடத்தில் உற்பத்தி செய்து,குழாய் மூலம் ஒவ்வொரு இருக்கைக்கும் அனுப்புகின்றார்கள்.மருத்துவ மனைகளில் செயற்கைச் சுவாசத்திற்கு ஆக்சிஜன் கலந்த வளிமங்கள் பயன்தருகின்றன. அமோனியா, மெதனால், எதிலின் ஆக்சைடு போன்ற வளிமங்களின் தொகுப்பாக்க முறையில் ஆக்சிஜன் பயன் படுகிறது. ஆக்ஸிஜனேற்ற வினைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தரக்கூடிய பொருளை ஆக்ஸிமம்(Oxidant) என்பர். ஏவுகணைகளில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கும் பொருளையும் ஆக்ஸிமம் என்பர். பொதுவாக ஏவுகணை ,எவூர்திகளில் நீர்ம ஆக்சிஜன்,ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் ஆக்ஸிமம் ஆகக் கொள்ளப்படுகின்றன. உடலில் வளர் சிதை மாற்ற வினைகள் நடைபெறும் போதும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் தற்காப்பு செய்யும் போதும் தனித்த பகுதி மூலக்கூறுகள்(free radicals)உற்பத்தி செய்யப்படுகின்றன.மாசற்ற சுற்றுச் சூழலுக்கு அதிகம் இலக்காகும் போதும்,புற ஊதக் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் போதும்,புகைக்கும் போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தனித்த வீரியமான பகுதி மூலக்கூறுகளின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்த நிலையற்ற தீமை பயக்கின்ற வேதிப் பொருள் ,இதய நோய் ,புற்று நோய்களைத் தூண்டுகிறது. இதைச் சரிக்கட்ட உடலுக்குத் தேவைப் படுவது எதிர் ஆக்ஸிமம் (anti oxidant ) ஆகும். உடல் இயற்கையாகவே எதிர் ஆக்ஸிமங்களை உற்பத்தி செய்கிறது. என்றாலும் இயல்பு மீறிய சூழ்நிலைகளில் அவை போதாமல் போய்விடுகின்றன. அதனால் எதிர் ஆக்ஸிமம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வைட்டமின் E,வைட்டமின் C,கரோட்டீன் என்ற வைட்டமின் A,தனிமங்களுள் செலினியம்,செம்பு,துத்தநாகம்,திராட்சைப் பழத்திலுள்ள பிளாவோனாய்டு (flavonoids) எதிர் ஆக்ஸிமம் பண்பைக் கொண்டுள்ளன.

Sunday, May 20, 2012

Vinveliyil ulaa

விண்வெளியில் உலா மிதுன ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும் ஜெமினி
டாரெஸ் மற்றும் கான்செர் வட்டார விண்மீன் கூட்டங்களுக்கு இடையிலுள்ள ஒரு வட்டாரம் .இரட்டையர் எனப்படும். இவ் வட்டாரத்தை சூரியன் நகர் வலம் வருவது போலத் தோற்றம் தரும் கதிர் வீதியில் ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை சூரியன் கடக்கிறது. இது 12 ராசிகளில் மிதுன ராசிக்குரிய நட்சத்திர மண்டலமாகும் .இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் காஸ்டர் (Castor) என்ற ஆல்பா ஜெமினோரம் மற்றும் போலக்ஸ் (Pollux) என்ற பீட்டா ஜெமினோரம் என இரு முக்கிய பிரகாசமிக்க விண்மீன்கள் தோற்றத் தொலைவில் அருகருகே உள்ளன.ivai சற்றேறக் குறைய ஒத்த விண்மீன்கள் போன்று தோற்றம் தருகின்றன இதன் பொருட்டே இந்த வட்டார விண்மீன் கூட்டத்தை இரட்டையர் (twins) என அழைக்கின்றார்கள் கிரேக்க புராணத்தில் காஸ்டர்,போலக்ஸ் என்ற இரட்டையர்கள் கூறப்பட்டிருக்கின்றார்கள்.இவர்கள் நினைவாகவே ஜெமினியிலுள்ள இரு பிரகாசமிக்க விண்மீன்களும் பெயரிடப் பட்டுள்ளன .இவர்கள் இருவரும் பொன் கம்பிளி தேடி ஆர்கோ என்ற தோணியில் பயணம் செய்ததாகக் கூறுவார்கள்.இவர்கள் அந்தக் காலத்தில் ,கடல் பயணம் மேற்கொண்ட பழங்காலத்திய கிரேக்கர்களாக பெருமைப்படுத்தப் பட்டுள்ளனர் .இவ்விரு விண்மீன்களும் இரட்டையர் என அழைக்கப்பட்டாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் இருப்பதுடன் முற்றிலும் வேறுபட்ட இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளன. . . . ஆல்பா ஜெனோரம் என்ற காஸ்டர் ,உண்மையில் பீட்டா ஜெனோரம் என்ற போலக்சை விடச் சற்று குறைந்தது .வெறும் கண்களுக்கு ஒரு விண்மீன் போலத் தோன்றும் காஸ்டர் தொலை நோக்கியில் தோற்றப் பொலி வெண் 2 .௦ மற்றும் 2 .8 கொண்ட ஒரு வினாடி கோண விலக்கத்துடன் இருக்கும் ஒரு இரட்டை விண்மீனாகத் தென் படுகிறது. இதன் சுற்றுக் காலம் 380 ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர். இவற்றை காஸ்டர் A , காஸ்டர் B என்று குறிப்பிட்டுள்ளனர். இவைகளுக்கு இடைப்பட்ட தொலைவு
10 ,௦௦௦,௦௦௦ கிமீ அதாவது சூரியனுக்கும் புதனுக்கும் இடைப்பட்ட தொலைவில் 6 ல் ஒரு பங்காகும் .இவை இரண்டுமே இரட்டை விண்மீன்கள் என நிறமாலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காஸ்டர் A ல் மொத்த நிறை 3 .2 சூரிய நிறை கொண்ட ஏறக்குறைய ஒத்த இரு விண்மீன்கள் ஒன்றை ஒன்று 9 .22 நாட்களில் சுற்றி வருகின்றன. காஸ்டர் B ல் உள்ள இரண்டு விண்மீன்களும் மிக விரைந்து சுற்றி வருவதால் அவற்றின் சுற்றுக் காலம் 2 .9 நாட்களாக உள்ளது. இந்த இரு இரட்டை விண்மீன்களுக்குத்தோற்றத் தொலைவிற்கு அருகில் தோற்றப் பொலி வெண் 9 கொண்ட ஒரு மங்கலான விண்மீன் 2 .7 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. இதுவும் ஏறக்குறைய ஒத்த நிறை கொண்ட செந்நிறமான குறு விண்மீன்களாக ஆனால் குறைந்த அளவே மொத்த நிறை உடைய ,புற வெப்பநிலை 4000 டிகிரி கெல்வின் உடைய M வகை விண்மீன்களால் ஆன இரட்டை விண்மீன்களாகும். 2 .5 மில்லியன் கிலோமீட்டர் இடைத் தொலைவுடன் இவை ஒன்றை ஒன்று 19 .5 மணி நேரத்தில் சுற்றி வருகின்றன. இவை மறைப்பு மாறொளிர் விண்மீன்களாக உள்ளன. இவற்றில் ஒன்றோ அல்லது இரண்டுமோ திடீரென்று ஒளிரும் தன்மையுடையதாக அதாவது திடீரென்று செறிவாக ஆற்றலை உமிழ்வதாக இருக்கின்றன. இந்த ஆறு விண்மீன்களும் ஏறக்குறைய 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. காஸ்டர் A , தீட்டா ஒரியானிஸ்போல ஆறு விண்மீன்களின் தொகுப்பாக உள்ளது இவ் விண்மீனுக்கு கோளும் வாழும் உயிரினங்களும் இருந்தால் அங்குள்ளவர்கள் ஒரே சமயத்தில் 6 சூரியங்களையும் பார்ப்பார்கள் .ஆறு விண்மீன்களைக் கொண்ட காஸ்டர் A யின் கட்டமைப்பை ஓரளவு அறிந்து கொண்டாலும் அவை உருவான தோற்றம் பற்றிய விவர்ணகள் இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றன. போலக்ஸ்(Pollux) போலக்ஸ் ஜெமினி வட்டாரத்தில் பிரகாசமிக்க வின்மீனாகவும் ,விண்ணில் கண்ணுக்குத் தெரிவனவற்றுள் 17 வது பிரகாசமிக்க விண்மீனாகவும் உள்ளது ,இது ஆரஞ்சு நிறங் கொண்ட K வகை பெரு விண்மீனாகும். வெண்மையான காஸ்டரிலிருந்து இது வேறுபட்ட நிறங் கொண்டுள்ளது. போலக்ஸ்சை சுற்றி காந்தப் புலத்தால் கட்டுப்படுத்தப் பட்ட அயனிகளால் ஆன புற மண்டலம் இருப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. இது எக்ஸ் கதிர்களை உமிழும் ஒரு மூலமாக அறியப்பட்டுள்ளது. தமிழர்கள் இதை புனர்பூசம் என அழைப்பர். 34 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது சூரியனைப் போல 32 மடங்கு பிரகாசத்துடனும் சூரியனை விட 10 மடங்கு ஆரமிக்கதாகவும் ,புற வெப்பநிலை 4500 டிகிரி கெல்வின் உடையதாகவும் ,தோற்ற ஒளிப் பொலி வெண் 1 .16 ஆகவும் உள்ளது

Saturday, May 19, 2012

Vethith Thanimangal- Chemistry

வேதித் தனிமங்கள்.-ஆக்சிஜனின் பண்புகள் ஆக்சிஜன் நிறம் மணம் சுவையற்ற ஒரு வளிமம் .நீர்ம நிலையில் நீல நிறத்தைப் பெறுகிறது .உறைந்து திண்மமாகச் சுருங்கும் போது வெளிர் நீல நிறத்தைப் பெறுகிறது. இது காற்றை விடச் சற்று கனமானது. நீரில் ஓரளவு கரைகிறது . நீரில் கரைந்த ஆக்சிஜன் நீர் வாழ் உயிரினங்களுக்குச் சுவாசித்தலுக்கு அனுகூலமாக இருக்கிறது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் நிலத்தில் வாழும் விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் சுவாசித்தலுக்கு அவசியமானதாய் இருக்கிறது.உடலுக்குள் சத்துப் பொருட்களை எரித்து ஆற்றலைப் பெறுவதற்கும்,உயிர் வேதியல் சார்ந்த பல வினைகளை ஏற்படுத்துவதற்கும் இந்த ஆக்சிஜன் தேவை . ஹிமோகுளோபின்(Haemoglobin)என்ற பெரிய புரோட்டீன்(Protein) மூலக்கூறுகள் ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து உயிர்ச் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது ஒரு ஹிமோகுளோபினில் 574 அமினோ அமிலங்கள்(amino acids) இணைந்துள்ளன .ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் போது ஹிமோகுளோபின் சென்னிறமாகவும்.ஆக்சிஜனை திசுக்களுக்குக் கொடுத்த பின் ஆக்சிஜன் இல்லா ஹிமோகுளோபின் நீல நிறமாகவும் இருக்கும். பொதுவாக இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் வட்டத் தட்டு வடிவில் இருக்கும் சிலருக்கு ஹிமோகுளோபினில் உள்ள அமினோ அமிலங்கள் குறைபாடுடன் இருக்கும். இது சிவப்பணு மூலக்கூறின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிறை வடிவத் தோற்றத்தைத் தரும்.இந்த உருமாறிய சிவப்பணுக்கள் ஆக்சிஜன் பரிமாற்றத்தில் தீங்களிக்கவல்ல பாதிப்பை உண்டாக்கும். இதையே பிறைவடிவச் செல் இரத்தச் சோகை (Sickle cell anemia) என்பர். 'O' என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஆக்சிஜனின் அணு எண் 8 , அணு எடை 15.9994. இதன் அடர்த்தி 1.33 கிகி /கமீ.இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 54.75 ,90.18 K ஆகும்.வேதியியலில் ஆக்சிஜன் ஒரு வினைதிறமிக்க தனிமமாகும்.மந்த வளிமம் தவிர்த்த பிற உலோகங்கள் ,அலோகங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைகிறது. ஆக்சிஜனுடன் கூடுவதையே எரிதல் என்கிறோம் .தங்கமும் ,பிளாட்டினமும் ஆக்சிஜனில் எரிவதில்லை. என்றாலும் அவற்றின் ஆக்சைடுகள் நேரடியில்லாத வழியில் தோன்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களை ஒளிச் சேர்க்கை(Photo synthesis) மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன. வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை தாவரத்தின் இலைகள் உறிஞ்ச ,நிலத்தடி நீரை வேர்கள் உறிஞ்ச ,யாண்டும் சேர்ந்து ஸ்டார்ச்சு(Starch) எனும் சக்கரைப் பொருளாக மாறுகிறது. இதற்குத் தேவையான ஆற்றலை தாவரங்கள் பச்சையம்(Chlorophyl) என்ற நிறமிகளால்(Pigments) ஒளிச் சேர்க்கையின் போது 400 -700 நானோ மீட்டர் நெடுக்கையில் சூரிய ஆற்றலை உட்கவர்ந்து பெறுகிறது. ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிஜன் வளிமண்டலத்தில் சேருகிறது. எனவே விலங்கினங்களின் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிஜன் தடிஎன்றிக் கிடைக்க இது வழி செய்கிறது. இதனால் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் மட்டுமின்றி கார்பன் டை ஆக்சைடும் ஒரு சம நிலையில் இருக்கிறது.
ஓசோன்(OZONE)
மூன்று ஆக்சிஜன் அணுக்களால் ஆன மூலக்கூறு ஓசோன் எனப்படும். இது நீர் மூலக்கூறு போல நேரியலற்றதாக (non -linear ) இருக்கிறது. இள நீல நிறமுடைய நச்சு வளிமமான இது மூக்கைத் துளைக்கிற கார நெடியுடையது .ஆக்சிஜன் வழியாக மின்னிறக்கம் செய்யும் போது இது உண்டாகிறது. அதனால் இது நெடுஞ் சாலைகளில் உள்ள உயர் மின் கம்பங்கள் ,இருப்புப் பாதை நிலையங்களில் உள்ள உயர் மின்னழுத்த மோட்டார்களுக்கு அருகாமையில் உருவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது .வளி மண்டலத்தில் மின்னல் என்பது மின்னிறக்கமே. மின்னல் ஏற்படும்போது வளிமண்டலத்தில் ஓசோன் உற்பத்தி செய்யப்படுகிறது . ஓசோன் மிகவும் வினைதிறமிக்க ஒரு வேதிச் சேர்மம் .இரப்பர்,நூல் இழைகள்,போன்றவற்றை எளிதாகச் சிதைக்கின்றன ஓசோன் செறிவு மிக்க காற்றைச் சுவாசித்தால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் அடிப்பகுதியில் ஓசோனை உற்பத்தி செய்யும் மூலங்கள் நைட்ரஜன் டை ஆக்சைடின் ஒளி வேதியியல் சிதைவாகும். .நைட்ரஜன் டை ஆக்சைடு தானியங்கு வண்டிகள் உமிழும் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இதை தீங்கிழைக்கும் ஓசோன் என்பர். ஆனால் வளிமண்டலத்தின் உயரடுக்குகளில் 15 -50 கிமீ உயரங்களில் ஓசோன் செரிவுற்றுள்ளது .இந்த ஓசோன் படலம் உலகில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படுகிறது. சூரிய ஒளியோடு சேர்ந்து வரும் தீங்கிழைக்க வல்ல புற ஊதாக் கதிர்களை இந்த ஓசோன் படலம் உட்கவர்ந்து கொள்வதால் அவை பூமியின் நிலப்பரப்பை எட்டுவதில்லை. . . .

Friday, May 18, 2012

Vinveliyil Ulaa-Space Science

விண்வெளியில் உலா கொலும்பா வட்டார விண்மீன் கூட்டம்
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு நாட்டு வான வியலாரான பெட்ரஸ் பிலான்சியஸ் (Petrus plancius) என்பார் கானிஸ் மேஜர் என்ற வட்டாரத்திற்கு தோற்றத் தொலைவில் அருகாமையிலுள்ள சில விண்மீன்களை ஒன்று சேர்த்து கொலும்பா என்ற புதிய வட்டார விண்மீன் கூட்டத்தைத் தோற்றுவித்தார்.இது பறக்கும் புறா போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது விவிலிய கதை மரபுப்படி வெள்ள ஊழி கடந்து வாழ்ந்த மனிதவின முன்னோனான நோவாவின் புறா(Noah 's dove ) என்பதைக் குறிப்பிட இதற்கு இப் பெயர் இடப்பட்டுள்ளது உணவின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை புறா நோவாவிற்கு உணர்த்துவதை இது குறிப்பிடுவதாகக் கூறுவர். இதிலுள்ள பிரகாசமிக்க விண்மீனான ஆல்பா கொழும்பே 240 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப் பொலி வெண் 2.6 உடைய இளம் நீல நிற விண்மீனாகும் புறா என்ற பொருள் தரும் அல் பாகிட்டா என்ற அரேபிய மொழிச் சொல்லே இதற்கு மூலமானது மீயூ கொழும்பே தப்பி யோடும் ஒரு விண்மீனாகும் .இது நம் பால் வெளி மண்டலத்தில் அபரிதமான வேகத்துடன் சுமார் 100 கி மீ /வி என்ற வேகத்தில் இயங்கி வருகிறது .53 எரிடிஸ்(Arietis) மற்றும் AE ஔரிகே போன்ற இரு மங்கலான விண்மீன்களுடன் இது ஒரே புள்ளியிலிருந்து விலகி விரிந்து செல்வது போலத் தோன்றுகிறது. இவை மூன்றும் ஒரு காலத்தில் பல விண்மீன்களின் தொகுப்பாக இருந்திருக்கலாம் என்றும்,அது ஒரு நிலையாமையால் பாதிக்கப்பட்டு 2-3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூப்பர் நோவாவாக வெடித்திருக்கலாம் என்றும் அனுமானித்திருக்கின்றார்கள்

Wednesday, May 16, 2012

Vethith thanimangal -Chemistry

வேதித் தனிமங்கள் ஆக்சிஜன் (Oxygen)
ஆக்சிஜன் மிகவும் முக்கியமான பூமியில் செழிப்புடன் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம் வளி மண்டலக் காற்றில் நைட்ரஜனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்சிஜன்.இதன் செழுமை (பரும அளவில்) 20.95 % .நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிஜனின் செழுமை (எடை அளவில்) 85.89 % பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13 %. மனித உடலில் 3 ல் 2 பங்கும் ,நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிஜனாகும்.
காரெல் வில்கெம் ஷீலே (C .W .Seheele) என்ற ஸ்வீடன் நட்டு வேதியியலார் 1774 ல் குளோரின் மற்றும் மாங்கனீசைக் கண்டுபிடித்தார்.1778 ல் மாலிப்பிடினத்தைக் கண்டுபிடித்தார்.1772 ல் இவர் ஆக்சிஜனை அறிந்திருந்தார்.கனிமச் சேர்மங் களைப் பகுத்து இவர் ஆக்சிஜனைப் பல வழிமுறைகளில் உற்பத்தி செய்து காட்டினார்.ஆக்சிஜனின் சில முக்கியமான வேதியியல் பண்புகளைக் கண்டறிந்து தெரிவித்தார். ஆனால் இவருடைய கண்டுபிடிப்புகள் யாவும் 1774 ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான ப்ரிஸ்ட்லே (J .Priestely)ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்ததாக வெளியிட்ட பின்னரே கால தாமதமாக வெளியிடப்பட்டதால் கண்டுபிடிப்பின் பெருமையையைப் பெறமுடியவில்லை. ப்ரிஸ்ட்லே பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி அதிலிருந்து வெளியேறும் வளிமம் எரியும் மெழுகுவர்த்தியை மேலும் பிரகாசமாக எரியத் தூண்டுவதாகக் கண்டார் .இந்த வளிமத்திற்கு லவாய்ச்சியர் என்ற பிரான்சு நாட்டு வேதியியலாரே ஆக்சிஜன் எனப் பெயரிட்டார் .கிரேக்க மொழியில் ஆக்சிஸ் என்றால் அமிலம் என்றும் ஜென் என்றால் உற்பத்தி செய்பவர் என்றும் பொருள். உற்பத்தி செய்தல் பாதரச ஆக்சைடு மட்டுமின்றி வெள்ளி,தங்கம்,பிளாட்டினம் இவற்றின் ஆக்சைடுகளை சூடுபடுத்தியும் ஆக்சிஜனைப் பெறலாம். எனினும் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் சூடுபடுத்தும் போது ஆக்சிஜனை வெளியேற்றுவதில்லை. மாங்கனீஸ் டை ஆக்சைடு ,பேரியம் பெராக்சைடு செவ்வீ யம்போன்ற உயர் ஆக்சைடுகளைச் சூடுபடுத்தியும் ஆக்சிஜனைப் பெறலாம்.மாங்கனீஸ் டை ஆக்சைடை அடர்மிகு கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த உடனடியாக ஆக்சிஜன் வெளியேறுகிறது.அமிலமிட்ட நீரை மின்னாற் பகுக்க ஆக்சிஜன் நேர் மின் வாயில் வெளியேறுகிறது.

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா லிபஸ் (Lepus)
40 விண்மீன்கள் வரை இனமறியப்பட்ட கிரேக்க காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ள லிபஸ் வட்டார விண்மீன் கூட்டம் ஓரியன் வட்டாரத்தின் வேட்டைக்காரனின் காலடிக்குக் கீழ் உள்ளது. முயல் போன்று கற்பனை செய்யப்பட்டுள்ள இவ்வட்டார விண்மீன்கள் அவனது வேட்டை நாயால் (கானிஸ் மேஜர் வட்டாரம்) பின் தொடர்ந்து வேட்டையாடுவது போலக் கற்பிக்கப் பட்டுள்ளது. இதிலுள்ள பிரகாசமிக்க விண்மீனான ஆல்பா லிப்போரிஸ் ,அர்நெப்(Arneb) என அழைக்கப்படுகிறது. அர்நெப் என்றால் அரேபிய மொழியில் குழி முயல் எனப் பொருள் .இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் 2.6 ஆக உள்ளது .இது 1280 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இது ரீகலுக்கு தெற்கு -தென் கிழக்காக 10 டிகிரி விலக்கத்துடன் காணப்படுகிறது . 30 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள காமா லிப்போரிஸ் ஓர் இரட்டை விண்மீனாகும். இவற்றின் ஒளிப்பொலிவெண் 3 .6 மற்றும் 6.2 ஆகவும் 95 வினாடி விலக்கத்துடனும் உள்ளது. R லிப்போரிஸ் மீரா வகை மாறொளிர் விண்மீனாகும். இது லண்டன் நகரத்தைச் சேர்ந்த J.R.Hind என்பாரால் 1845 ல் கண்டுபிடிக்கப் பட்டது அழுத்தமான சிவப்பு நிறத்துடன் காணப்படும் இதன் ஒளிப்பொலிவெண் பெரும நிலையில் 6 ஆகவும் சிறும நிலையில் 14 ஆகவும் ,14 மாத கால சுற்றுக் காலத்துடன் மாறுகிறது M . 79 என்பது ஓரளவு சிறிய கோள வடிவ கொத்து விண்மீன் கூட்டமாகும். தோற்றத்தில் இது ஒளிப் பொலி வெண் 8 உடைய ஒரு விண்மீன் போலக் காட்சி தருகிறது. இது 40000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். நிகால் (Nihal ) எனப் படும் பீட்டா லிப்போரிஸ் 159 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2 .81 தோற்ற ஒளிப்பொலி வெண் ணுடனும்,எப்சிலான் (ε ) லிப்போரிஸ் 227 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .19 தோற்ற ஒளிப் பொலி வெண்ணுடனும் மியூ(μ) லிப்போரிஸ் 184 ஒளி அண்டுகள் தொலைவில் 3 ,29 ஒளிப் பொலி வெண்ணுடனும் சீட் டா(ζ) லிப்போரிஸ் 70 ஒளி அண்டுகள் தொலைவில் 3 .55 ஒளிப் பொலி வெண்ணுடனும் ஈட்டா லிப்போரிஸ் 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .71 ஒளிப் பொலி வெண்ணுடனும் டெல்ட்டா(δ) லிப்போரிஸ் 112 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .76 ஒளிப் பொலி வெண்ணுடனும் அமைந்துள்ளன. 1995ல்l ஹபுல் தொலை நோக்கி மூலம் கிளைஸ் 229 (Gliese ) என்ற விண்மீனைக் கண்டறிந்தனர். இது ஒரு இரட்டை விண்மீனாகும்.இதில் குளிர்ச்சியாகவும் சென்னிறத்துடனும் ஒளிரும் ஒரு சிறு விண்மீன் முதன்மை விண்மீனாகவும் GL 229 B என்ற பழுப்பு நிறக் குறுவிண்மீன் துணை விண்மீனாகவும் உள்ளது .இதன் நிறை நமது வியாழன் கோளைப் போல 20 மடங்கு நிறை கொண்டிருக்கலாம் என்று அறிந்துள்ளனர் இதன் நிறை சராசரி கோளின் நிறையை விட அதிகமாக இருப்பதாலும் ,மேலும் வெப்ப மிக்கதாக இருப்பதாலும் இதைக் கோள் என்றும் சராசரி விண்மீனின் வெப்பநிலையை விடக் குளிர்ச்சியாகவும் சிறியதாகவும் இருப்பதால் இதை விண்மீன் என்றும் கருதமுடியவில்லை. இது 10,000 மடங்கு சூரியனை விட மங்கலாகப் பிரகாசிக்கிறது. இன்று வரை அறிந்தனவற்றுள் இதுவே மிகவும் இரட்டை விண்மீன்களில் சுற்றி வரும் மங்கலான விண்மீனாகும். இவ் விண்மீன் பகுதியில் உயரினம் வாழக் கூடிய சூழ்நிலையுடன் கூடிய ஒரு கோள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இதை GL 581 என்றும் இது 209 ஒளி ஆண்டுகள் தொலைவில் செந்நிற குறு விண்மீனாக உள்ளது என்றும் ,இதில் கோள்கள் இணைந்த குடும்பம் இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

Tuesday, May 15, 2012

Eluthatha kaditham

எழுதாத கடிதம் ஆசிரியர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றவேண்டும் . இல்லாவிட்டால் மாணவர்களிடம் அறிவின்மையோடு ஒழுக்கமின்மையும் வெகு இயல்பாகத் தூண்டப்படும். இந்நிலை நிலைப்படும் போது பிற்பாடு ஒட்டு மொத்த சமுதாயமும் சீரழிந்து போய்விடலாம்.ஏனெனில் சாகாத சமுதாயத்திற்கு மாணவர்களே சுவாசிக்கப்படும் மூச்சு.சமுதாயத்தின் நலங்காக்கும் ஆசிரியப் பணியை புனிதமான தெய்வீகப்பணி என்பர்.ஆசிரியர்கள் தத்தம் பணிகளைச் செவ்வனே செய்துவர எவ்வித புற மற்றும் அக இடையூறுகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது நலமான சமுதாயத்தின் கடமையாகும். துறவிகள் புறத் துறவிகளாக இல்லாது அகத் துறவிகளாக இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் துறந்தவர்களே துறவிகள்.அவர்கள் தலைமைப் பதவிக்கும், சிம்மாசனத்திற்கும்,தங்கக் கிரீடத்திற்கும் ஆசைப்படுவார்களே ஆனால் நிச்சியம் அவர்கள் புறத்துறவிகளாக மட்டுமே இருக்கமுடியும்.அவர்களால் நிச்சியமாக சீரழிந்து வரும் சமுதாயத்தை சிறிதளவு கூட செம்மைப்படுத்த முடியாது. மடாதிபதிகளாக இருப்பவர்கள் அதன் பொருட்டுக் கிடைக்கும் சுகங்களையும்,அனுகூலங்களையும் தனது உடைமையாக்கிக் கொண்டு மயங்கிக் கிடப்பார்களேயானால்,காலப்போக்கில் மக்களிடம் அறநெறிகள் மறக்கப்பட்டு அதன் பொருளே மாறுபட்டுப் போகும்.இந்நிலை சமுதாயத்தை மீண்டும் சீர்படுத்த முடியாத எல்லைக்கு இட்டுச் செல்லும். வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும். வாதாடுவது உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கே கிடைக்கும்பொருளுக்காக பொய்களினால் உண்மைகளை மூடி மறைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பதற்கில்லை.வழக்கில் மறைக்கப்படும் உண்மைகளை வாதாடிவெளிக்கொணர்ந்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதே அவர்கள் பணி.இவர்கள் தம் பணியைச் சட்டத்தினால் மட்டுமின்றி தர்மத்தினாலும் மேற்கொள்ளவேண்டும்.உரைக்கப்படாத உண்மைகளையும் ,உதிர்க்கப் பட்ட பொய்களையும் வைத்துக் கொண்டு தீர்ப்பு எழுதினால் அது சமுதாயத்தை அழிக்கும் ஒரு காரணியாகி விடும்
ஓரியன் நெபுலா (Orion Nebula) ஓரியன் வட்டார விண்மீன் கூட்டத்தில் மற்றொரு சிறப்பு அதில் காணப்படும் ஓரியன் நெபுலாவாகும்.இது மனித உடல் தோற்றம் தரும் நாற்கர வடிவம் போன்ற பகுதியில் பெல்ட்டுக்குக் கீழாக கட்டத்தின் மையத்தில் உள்ளது. மங்கலான வெண் மேகம் போன்று வெறும் கண்களுக்குக் கூடத் தெரியும் இதை M.42 மற்றும் NGC 1976 என்று பதிவு செய்துள்ளனர்.பூமியிலிருந்து தெரியும் நெபுலாக்களில் இதுவே மிகவும் பிரகாசமானது.இது முதன் முதலாக 1618 ல் சிசாடஸ் (Ziesatus) endra வானவியலாரால்,வால்மீன்களை ஆராய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்டது.கலிலியோ தன் தொலை நோக்கி மூலம் இந்த வட்டார விண்மீன் கூட்டத்தை ஆராய்ந்த போதும் ஓரியன் நெபுலாவைத் தவறவிட்டு விட்டார்.
இது நம்மிடமிருந்து சுமார் 1500 ஒளி ஆண்டுகள் தொலைவில்,ஒரு சில நூறு ஒளி ஆன்டுகள் குறுக்காக விரிந்துள்ளது.இது சீரற்ற வடிவம் கொண்டது.பொதுவாக அடர்த்திமிக்க பிரகாசமான இதன் பகுதியை மட்டுமே நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடிகிறது.இது இந்த வட்டார விண்மீன் கூட்டம் முழுவதையும் கவர்ந்திருக்கிறது. இதன் தோற்ற விட்டம் இரண்டு முழு நிலாவிற்குச் சமமாக உள்ளது. பொதுவாக நெபுலாவில் புது விண்மீன்கள் உருவாவது வழக்கம்.ஓரியன் நெபுலாவும் இதற்கு விதி விலக்கில்லை. நெபுலாவிலுள்ள வளிமங்களையும் தூசிகளையும் ஈர்ப்பால் ஒன்றுதிரட்டி இளம் விண்மீன்கள் இப்பகுதியில் உருவாக்கி வருகின்றன. ஓரியன் நெபுலாவே விண்மீன் வளர்ச்சிப் படிகளில் இறுதிக் கட்டத்தில் இருக்கின்ற நிலையைக் குறிக்கின்றது. நமது சூரியனை விட நிறை மிக்கனவாகவும் ,வெப்ப மிக்கதாகவும் பல விண்மீன்கள் இதில் அடங்கியிருக்கின்றன. .வெப்ப மிக்கவை புற ஊதக் கதிர்களை உமிழ்கின்றன. .இது புற ஊடகத்திலுள்ள அணுக்களையும் மூலக் கூறுகளையும் சிதைத்து ஹைட்ரஜனையும் அயனித்து விடுகிறது. இதுவே நெபுலாவில் எங்கும் விரவியுள்ளது. வெப்பமிக்க அயனிக்கப்பட்ட வளிமம்,கட்புலனறி,அகச் சிவப்பு மற்றும் ரேடியோ அலைநீள நெடுக்கையில் கதிர்வீச்சை உமிழ்கிறது ஓரியன் நெபுலா ஒளிர்வதற்குக் காரணம் அது நாற்கரத்தின் உட்புறமுள்ள தீட்டா ஒரியானிஸால் ஒளிவூட்டப்படுவதே ஆகும்.இதில் அருகருகே அமைந்துள்ள இரு விண்மீன்கள் உள்ளன. அவற்றை தீட்டா 1 என்றும் தீட்டா 2 என்றும் குறிப்பிடுகின்றார்கள்.தீட்டா 1 ஒரியானிஸ் பல விண்மீன்களின் தொகுப்பாகும். இது ஓரியன் நெபுலாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.சிறிய தொலை நோக்கி மூலம் பார்க்கும் போது 5.1,6.7,6.7,8.௦ ஒளிப்பொலிவெண் கொண்ட நான்கு விண்மீன்கள் ஒரு சிறிய நாற்கர வடிவில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. பெரிய திறன் மிகு தொலை நோக்கி இதில் இன்னும் பல விண்மீன்கள் இருப்பதைச் சுட்டிக்கட்டுகின்றது.தீட்டா 2 ஒரியானிஸ் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.௦, 6.4 கொண்ட இரு விண்மீன்களாலான ஒரு இரட்டை விண்மீன் நெபுலாக்களை பல வகைப் படுத்தியுள்ளனர். அவை விரிபடர் நெபுலா (diffuse)மாறொளிற் நெபுலா (variable), கோளொத்த நெபுலா (Planetary) மற்றும் சூப்பர் நோவா போன்றவையாகும். இவற்றுள் சூப்பர் நோவா தவிர்த்த பிற நெபுளாக்கள் அண்டக நெபுலாக்களாகும் (galactic) ஓரியன் நெபுலா ஒரு விரிபடர் நெபுலாவாகும். பொதுவாக இது போன்ற நெபுலாக்கள் கூடுதலான புறப் பரப்பு ,ஒளிரும் தன்மை, மங்கலாகப் படர்ந்திருக்கின்ற மேகம் போன்ற அமைப்பு ,குறைவான அடர்த்தி,வரையறுக்க இயலாதவாறு எல்லையற்ற தோற்றம் இவற்றுடன் காட்சி தரும். ஓரியன் நெபுலா விற்கு அருகில் கோள வடிவில் மற்றுமொரு நெபுலா காணப்படுகிறது. இதை M 43 என்று பதிவு செய்துள்ளனர். சீட்டா ஒரியானிஸ் லிருந்து டெல்டா ஒரியா னிஸ் எவ்வளவு தோற்றத் தொலைவில் உள்ளதோ அவ்வளவு தொலைவில் M .78 என்ற ஒரு நெபுலா சீட்டா ஒரியானிஸ் - பெடல்சியூஸ் இணை கோட்டில் சீட்டா ஒரியானிஸ் க்கு அருகாமையில் உள்ளது. சீட்டா ஒரியானிசுக்கு அருகில் தெற்குப் பகுதியில் இருண்ட குதிரை முகம் பதிந்த ஒரு நெபுலா(Horsehead nebula) உள்ளது. இது மங்கலான நெபுலாவாகும்.நீண்ட காலத்திற்குப் பதிவு செய்ய அனுமதித்தாலே
இதைப் பதிவு செய்ய முடியும்.குதிரை முகம் போன்ற இருண்ட பகுதி,அப்பகுதியில் வெப்ப மிக்க விண்மீன்கள் இல்லாததால் ஏற்படுகின்றது.இவ்விருண்ட பகுதி அதற்கு அப்பாலுள்ள விண்மீன்கள் உமிழும் ஒளியை உறிஞ்சிக் கொண்டு விடுவதால் அப்படிக் காட்சி யளிக்கின்றன.அதனால் பின்னாலுள்ள விண்மீன்களையும் காண முடிவதில்லை.

Monday, May 14, 2012

Eluthatha Kaditham

ஆதின கர்த்தர்கள் வெறும் துறவிகள் மட்டுமில்லை. அவர்கள் மதம்,இனம்,மொழி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அறவழியில் நின்று மக்களுக்கு நல்வழி காட்டுபவர்கள்.மண்,பொன்,பெண் மீது சிறுதும் விருப்பமில்லாதவர்கள்.இல்லறத்தில் இருப்பவர்கள் தவறான வழியில் சென்று சமுதாயத்தை சீரழித்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் பின்பற்றி ஒழுக வேண்டிய அறநெறிகளையே துறவறத்தில் இருப்பவர்கள் பரப்பிவருகின்றார்கள்.அறவுரைகளை எடுத்துக் கூறுவதற்கு ஒருவர்க்கு தொண்டர்கள் கூட்டமும், தலைமைப் பதவியும் அவசியத் தேவையில்லை. ஒரு மனிதன் சேவை செய்வதற்கு பதவி தேவையில்லை .பதவி இன்றி சேவை செய்தால் அதுவே உண்மையான,மனப் பூர்வமான சேவையாக இருக்க முடியும்.பதவி இருந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் இல்லாவிட்டால் சும்மா இருப்பேன் என்றால் அது தன்னலம் பூசப்பட்ட சேவையாகத் தான் இருக்கமுடியும்.அப்படிப்பட்ட சேவைகளை பூதக் கண்ணாடி மூலம் நுணுகி ஆராய்ந்தால் அதில் புரையோடிப் போயிருக்கும் குறைபாடுகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம். அன்பு,இன்சொல்,சேவை பற்றற்ற தன்மை போன்ற குணங்களே துறவிகளின் அடிப்படை இலக்கணங்களாகும்.இந்த அடிப்படி இலக்கணங்களைப் பின்பற்றாத எவரும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் துறவிகளாக இருக்கவே முடியாது. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு " என்பான் வள்ளுவன். இல்லறத்தில் இருந்துகொண்டு துறவிகளுக்கு இலக்கணம் வகுத்தவன். வரும் தலைமைப் பதவியை விடாப் பிடியாக பற்றிக்கொள்கிறார்.தொண்டர்கள் குண்டர்கள் போலச் செயல்படுகின்றனர்.பணிப் பெண்ணிடம் முரட்டுத் தனமாக நடந்து கொள்கின்றனர். நியமனத்திற்கு எதிராகச் செயல்படுவார்கள் அச்சப் படுமாறு அறைகூவல்.எதிர்த்து போராடுபவர்கள் மீது செருப்பு வீச்சு.துறவிகளின் இலக்கணத்தை மாற்றிவிட்டார்களே.

Saturday, May 12, 2012

நைட்ரஜனின் பயன்கள் (தொடர்ச்சி) நைட்ரஜன் னின் மற்றொரு முக்கியச் சேர்மம் நைட்ரிக் அமிலம். அமோனியம் நைட்ரேட் போன்ற உரங்கள் ,வெடி மருந்துகள் நைலான் மற்றும் பாலியுரித்தேன்(Polyurethane) போன்ற நெகிழ்மங்களின் உற்பத்தி முறையில் இது மூலப் பொருளாக உள்ளது. நைட்ரிக் அமிலம் கிளிசராலுடன் வினை புரியும் போது அது நைட்ரோ கிளிசரின் என்ற வலிமைமிக்க வெடி மருந்தை உற்பத்தி செய்கிறது.மிகச் சிறிய அசைவு கூட இதை வெடிக்கச் செய்துவிடும்.அப்போது மிகுந்த அளவு வெப்பம் ,நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வளிமங்கள் வெளிப்படுகின்றன.வளிமங்களின் வெப்பஞ் சார்ந்த விரை வேகப் பெருக்கமே வெடியாகிறது . நைட்ரோ கிளிசரினின் ஒரு துணைப் பொருள் டைனமைட்டாகும்.1867 ல் ஆல்பர்ட் நோபெல்(Alfred Nobel)என்பார் இதைக் கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிசரினைக் களிமண்ணுடன் கலக்க அது அதிர்வுகளினால் வெடிப்பதில்லை. என்ற உண்மையை இவர் கண்டறிந்தார்.இதை எடுத்துச் சென்று தேவையான இடங்களில் வெடிக்கச் செய்ய முடிந்ததால் அக் கண்டுபிடிப்பைக் கொண்டு பெரும் பொருள் சம்பாதித்தார்.எனினும் பிற்பாடு மனித குலத்திற்குச் செய்த தவறுகளுக்குப் பிராயச் சித்தமாக தாம் ஈட்டிய பொருள் அனைத்தையும் நோபெல் பரிசாக,மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல கண்டுபிடிப்புகளைச் செய்த விஞ்ஞானிகளுக்கு அளித்தார்.
சோடியம் அசைடு(NaN3)என்ற சேர்மம் இன்றைக்கு வளிமப் பொதியுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வெடி பொருள் .மோதலின் போது அல்லது எரிக்கும் போது இது விரைந்து சிதைவுற்று மிகுந்த அளவு நைட்ரஜனை வெளிப்படுத்துகிறது. இது பொதியுறையை உப்பச் செய்து மோதலினால் ஏற்படும் விபத்துக்களின் தீவிரத்தை மட்டுப்படுத்துகிறது.இது கடலில் பயணிப்போருக்கு விபத்துக்களின் போது பாதுகாப்பு உறையாகப் பயன்தருகிறது. 1999 ல் கார்ல் ஒ கிறிஸ்டி (Karl-o-Christie) மற்றும் வில்லியம் டபில்யூ வில்சன் (William W Wilson) என்ற வேதியியலார் நைட்ரஜனின் ஒரு புதிய சேர்மத்தைக் கண்டறிந்தனர்.இதில் 5 நைட்ரஜன் அணுக்கள் 'V' என்ற வடிவில் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. நைட்ரஜன்-13 உமிழும் பாசிட்ரான்(Positron) உடல் உள்ளுறுப்புகளின் நிழல் படம் காட்டியில்(Positron emission tomography) பயன்படுகிறது.இதன் அரை வாழ்வு 9.97 நிமிடங்கள் என்பதால் நோயாளிகளுக்கு கதிரியக்கத்தால் பெரும் தீங்கு விளைவதில்லை. விரைவிலேயே சிதைந்து அழிந்து விடுகின்றது.சிரிப்பு வளிமம் எனப்படும் நைட்ரஸ் ஆக்சைடு(N2O)மயக்க மருந்தாக அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுகிறது.
நைட்ரஜன் மாசுகள் நைட்ரிக் ஆக்சைடு(NO),நைட்ரஜன் பெராக்சைடு(NO2)போன்றவை தானியங்கு வண்டிகள் உமிழும் புகையாலும்,நைட்ரஸ் ஆக்சைடு (N2O) நைட்ரேட் உரங்களின் பயன்பாட்டினாலும் வளிமண்டலத்தில் மாசுகளாகச் சேருகின்றன.மின் உற்பத்தி நிலையங்களும் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்து வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவற்றால் வளிமண்டலத்தில் அடர்த்தியான மூடுபனி ஏற்படுகிறது.வளிமண்டலத்தின் உயரடுக்குகளுக்கு ஊடுபரவி அங்குள்ள ஓசோனைத் தாக்குவதில் NO முக்கியப் பங்கு வகிக்கின்றது.இதனால் தானியக்க உந்து வண்டிகளில் வினையூக்கிப் பரிமாற்றி (Catalytic converter) பொருத்தி மாசுகளைத் தீமையற்றதாக மாற்றிக்கொள்கிறார்கள் .
நைட்ரஜன் நிலைப்படுதல் என்றால் என்ன ? வளி மண்டலத்தில் நைட்ரஜனின் செழுமை எப்படி மாறாதிருக்கிறது ? நைட்ரஜன் நிலைப்படுதல் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன் நிலத்தில் ஒரு நிலையில்லாத நைட்ரஜன் கூட்டுப் பொருளாகப் படியும் வழிமுறையே நைட்ரஜன் நிலைப் படுதல் எனப்படுகிறது.
மேகங்களுக்கிடையே உராய்வின் காரணமாக மின்னூட்டம் பெற,அவை பின்னர் மின்னிறக்கத்தில் ஈடுபடுகின்றன. அதையே மின்னல் என்று நாம் குறிப்பிடுகின்றோம்.இதில் வெளிப்படும் ஆற்றல் ஈரணு நைட்ரஜன் மூலக்கூறைப் பகுத்து விடுகிறது.தனித்த நைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து NO என்ற நைட்ரஜன் ஆக்சைடு NO2 என்ற நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவற்றை உற்பத்தி செய்கின்றது.பெரும்பாலான நைட்ரஜன் டை ஆக்சைடு மழை நீரில் கரைந்து நிலத்தை அடைகிறது.அங்கு நைட்ரஜனை நிலைப்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா (சையனோ பாக்டீரியா )புரோட்டீன்,அமினோ அமிலங்கள் போன்ற சத்துப் பொருட்களை உருவாக்க,அதைத் தாவரங்கள் வேர்கள் மூலம் உட்கவர ,அதை உணவாகக் கொள்ளும் மனிதர்களுக்கும்,விலங்கினங்களுக்கும் புரோட்டீன் கிடைக்கிறது. நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தில் வெளியேறும் உடற் கழிவுகளையும் சிறுநீரையும் அமினோ அமிலங்களாகவும் அமோனியாகவும் நிலத்தில் நிறைந்துள்ள நுண்ணுயிரிகள் மாற்றிவிடுகின்றன.நைட்ரஜனைப் பகுக்கும் அதே பாக்டீரியாக்கள் இந்தச் சேர்மங்களைப் பகுத்து நைட்ரஜனை விடுவித்துவிடுகிறது.இது மீண்டும் வளி மண்டலத்தில் சேர்வதால்,வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனின் செழுமையின் சராசரி மதிப்பு மாறாதிருக்கிறது.
இயற்கையாக நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றொரு வழிமுறை வயலில் பயறு வகைகளைப் பயிரிடுவதாகும்.சோயா பீன்ஸ்,புற்கள் போன்றவற்றிலுள்ள வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் ஒரு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. இது நைட்ரஜநேஸ் என்ற ஒரு நொதிமத்தை உற்பத்தி செய்து நிலத்தில் உறைந்துள்ள நைட்ரஜனை நேரடியாக அமோனியாவாக மாற்றி விடுகிறது.இது எப்படி நிகழ்கிறது என்பது இன்னும் முழுமையாகத் தெளிவுபடாமல் இருப்பினும் ,மண்ணின் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சுற்று முறையில் இந்த வகைத் தாவரங்கள் வளர்க்கப் படுகின்றன. ,

Vinveliyil ulaa -Space science

காமா ஓரியானிஸ் என்ற பெல்லாட்ரிக்ஸ்
பெல்லாட்ரிக்ஸ் என்றழைக்கப்படும் காமா ஓரியானிஸ் பிரகாசமான ஆனால் ரீகலையும் பெடல்சியூசையும் விடக் குறைவான வெப்ப மிக்க ஒரு பெரு விண்மீனாகும்.உண்மையில் இது ரீகலை விடவும் வெப்ப மிக்கதாக உள்ளது. இதன் புறப்பரப்பு வெப்ப நிலையை 2௦ ௦௦௦௦ டிகிரி கெல்வின் நெடுக்கையில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.பெல்லாட்ரிக்ஸ் என்றால் அரேபிய மொழியில் பெண் வீராங்கனை என்று பொருள்.வான சாஸ்திரத்தால் எதிர் காலத்தை முன்னுரைப்பவர்கள் ,இந்த விண்மீன் விண்ணில் தோன்றி இருக்க பூமியில் பிறந்த பெண்கள் மகிழ்ச்சியாகவும் பேச்சுத் திறமை உள்ளவர்களாகவும் இருப்பார் என்று கூறுவார்கள்.இந்த விண்மீன் 243 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 1.64 உடன் காணப்படுகிறது .
வேட்டைக்காரன் பெல்ட்டில் உள்ள மூன்று விண்மீன்களை சீட்டா(ζ),எப்சிலான் (ε), டெல்ட்டா (δ) ஓரியானிஸ் என்றும் இவற்றை முறையே அல்நிடாக்,அல்நிலம் மற்றும் மிண்டகா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.இவை மூன்றும் சற்றேறக் குறைய சமமான உருவ அளவுடனும் , பிரகாசத்துடனும் இருப்பினும் ,அல்நிலம் சற்று கூடுதல் பிரகாசத்துடனும், மிண்டகா சற்று குறைவான பிரகாசத்துடனும் இருக்கின்றன. இவை முறையே 817,1340,916 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. சீட்டா மற்றும் டெல்ட்டா ஓரியானிஸ் இரண்டும் 'O' வகை விண்மீனாகும். இவற்றின் புற வெப்ப நிலை 25000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது.
அரேபிய மொழியில் அல்நிடாக் என்றால் "அல்ஜாயுஷாவின் பெல்ட்" என்று பொருள். இது ஓர் இரட்டை விண்மீனாகும் .இதன் துணை விண்மீன் 3 வினாடி கோண விலக்கத்தில் உள்ளது. இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. அல்நிடாக் எக்ஸ் கதிர் மூலமாக விளங்குகிறது. 6 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது தற்பொழுது மாபெரும் சிவப்பு விண்மீனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. விரைவில் இது ஒரு சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறலாம். பெடல்சியூசுக்கும்,பெல்லாட்ரிக்ஸ்சுக்கும் ஓரளவு இடையில் மங்கலான மூன்று விண்மீன்களடங்கிய ஒரு துணை வட்டாரக் கூட்டம் உள்ளது. இதை வட மொழியில் மிருகசீர்ஷம் என்றும் தமிழில் மும்மீன் என்றும் பெயர்கள் .சந்திரன் விண்மீன்களிடையே உலா வருவது போலத் தோற்றம் தரும் சந்திரன் விண்மீன்களிடையே உலா வருவது போலத் தோற்றம் தரும் நிலவின் வீதியில் இருக்கும் 27 விண்மீன்களுள் திருவாதிரையும் மிருகசீர்ஷமும் அடுத்தடுத்துள்ள விண்மீன்களாகும் மும்மீன்களுள் ஒன்று லாம்டா ஓரியானிஸ் என்ற மெய்சா(Meissa ) .இது 1660 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .39 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் காணப்படுகின்றது இதுவும் 'O ' வகை விண்மீனாகும்,இதிலுள்ள பிரகாசமான விண்மீன்களைக் காட்டிலும் இது தன் புறப் பரப்பு வெப்ப நிலையை அதிகமாக 30 ,௦௦௦ டிகிரி கெல்வின் நெடுக்கையில் கொண்டுள்ளது. ரீகலுக்கு வலப்புறம் கெப்பா ஓரியானிஸ் என்ற ஸைய்ப் (saiph ) என்ற வெப்ப மிக்க பெரு விண்மீன் உள்ளது .இதன் புற வெப்ப நிலை ரீகல்,பெல்லாட்ரிக்ஸ்ஸை விடவும் அதிகமாக 25000 டிகிரி நெடுக்கையில் உள்ளது .இது ஏறக்குறைய எப்சிலான் ஓரியானிஸ்ஸை ஒத்திருக்கிறது

Friday, May 11, 2012

நைட்ரஜனின் பயன்கள் 19ll ல் லார்டு ரலே என்பார் வினை திறமிக்க நைட்ர ஜனைக்(active nitrogen)கண்டறிந்தார்.தாழ்ந்த அழுத்தத்தில் நைட்ரஜன் வழி மின்னிறக்கம் செய்ய,அது மஞ்சள் நிற வெப்போளிவைத் (thermo luminescence)தருகிறது.இது வினை திறமிக்கதாய் இருப்பதால் பெரும்பாலான உலோகங்கள் ஆலோகங்களுடன் நேரடியாகக் கூடுகிறது .வெள்ளைப் பாஸ்பரஸ் சிவப்பாகவும் ,அயோடின் நீலப் புகையாகவும் மாற்றம் பெறுகின்றன. இதையே வினை திறமிக்க நைட்ரஜன் என்பர். ஓரளவு மந்தமான வளிமம் என்றாலும் நைட்ரஜன் பல ஆயிரக்கணக்கான வேதிச் சேர்மங்களில் இணைந்திருக்கின்றது. இது விவசாயத்தில் உரமாகவும்,தொழில் துறையில் உணவுப் பொருளுற்பத்தி மற்றும் அவை கெடாமல் பாதுகாக்கவும் ,வெடி மருந்து,நஞ்சுப் பொருட்கள்,நைட்ரிக் அமிலம் போன்ற வேதிப் பொருட்களின் உற்பத்திக்கு மூலப் பொருளாகவும் விளங்குகிறது. அமோனிய உப்புக்கள் உரமாகப்பயன் படுகின்றன,அமோனியாவை ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்படுத்தி நைட்ரிக் அமிலத்தையும் உற்பத்தி செய்ய முடியும் . நீர்ம நைட்ரஜன் உணவுப் பொருட்களின் குளிர்பதனப் பாதுகாப்புக்கும்,உயிர் பொருட்களைப் பாதுகாத்துப் பிற்பாடு பயன்படுத்திக் கொள்வதற்கும் பயன் தருகிறது.எடுத்துக் காட்டாக மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் விந்துக்களை நீர்ம நைட்ரஜனில் முக்கி வைத்து பிற்பாடு செயற்கையாகக் கருத்தரித்தலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மிகவும் தீவிரமாக வினையில் ஈடுபடக் கூடிய வளி மண்டல வளிமங்களிலிருந்து,அதனால் பாதிக்கப்படும் புதிய உற்பத்திப் பொருட்களை விலக்கி வைக்க நைட்ரஜன் வளிமத்தை மூடு திரையாகப் பயன்படுத்துகின்றார்கள்.
டிரான்சிஸ்டர்,டையோடு போன்ற மின்னணுவியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் போது அவை வளி மண்டலக் காற்றால் பாதிக்கப்படாதிருக்க இவ் வழிமுறையைப் பின்பற்றுகின்றார்கள்.மது பானங்கள் ஆக்சிஜனேற்றம் பெறுவதைத் தடுக்க புட்டிகளில் நைட்ரஜனை இட்டு நிரப்புவார்கள்.பழங்கள் அழுகி விடாமல் பாதுகாக்கவும் நைட்ரஜன் வளிமம் பயன் தருகிறது. ஆப்பிள் பழங்களை தாழ்ந்த வெப்ப நிலை மற்றும் நைட்ரஜன் வெளியில் 30 மாதங்கள் வரை பாதுகாக்க முடியும்.
எண்ணைய்க் கிணறுகளில் நைட்ரஜனை அழுத்தி குழாய் வழியாக பூமிக்கு அடியில் செலுத்த,அது அங்குள்ள எண்ணையை எக்கி வெளிக்கொண்டு வருகிறது.இதையே கூடுதல் எண்ணெய் உற்பத்தி (enhanced oil production) என்பர். இதற்கு வளி மண்டலக் காற்றை ப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இதிலுள்ள சில வளிமக் கூறுகள் எண்ணையோடு வினை புரிந்து வேண்டாத விளை பொருட்களை உற்பத்தி செய்து விடுகின்றன. நைட்ரஜனைக் கொண்டுள்ள பல சேர்மங்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவை புரோட்டீன்களும் நியூக்ளிக் அமிலங்களுமாகும் .

Sunday, May 6, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் நைட்ரஜன் (Nitrogen) கண்டுபிடிப்பு
வளிமண்டலக் காற்றில் நைட்ரஜனின் செழுமை மிக அதிகமாக 78 % உள்ளது. வளிமண்டலத்தில் இதன் பருமன் ஆக்சிஜனை விட 4 மடங்கு அதிகமாய் உள்ளது . இங்கிலாந்து நாட்டு மருத்துவரான டானியல் ரூதர்போர்டு 1772 ல் நைட்ரஜன் வளிமத்தைக் கண்டுபிடித்தார். தனிம அட்டவணையில் நைட்ரஜன் தொகுதியில் (V. A) உள்ள எல்லாத் தனிமங்களும் உலோகம் அல்லது உலோகம் போன்றதாக இருக்க நைட்ரஜன் மட்டும் வளிம நிலையில் இருக்கின்றது. ஒரு மணி வடிவ ஜாடியில் வளி மண்டலக் காற்றை எடுத்துக் கொண்டு ,அதில் ஒரு பொருளை எரித்து அதிலுள்ள ஆக்சிஜன் முழுவதையும் நீக்கிக் கொண்டார். அதனுள் ஒரு உயிருள்ள எலியை விட,அது ஆக்சிஜன் இல்லா வெளியில் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டது ,இறுதியில் இறந்தும் போனது. இதன் மூலம் ஆக்சிஜன் நீக்கப் பெற்று எஞ்சிய வளி மண்டலக் காற்றை அவர் நைட்ரஜன் என அழைத்தார் .லத்தீன் மொழிச் சொல்லான நைட்ரியம் ,கிரேக்க மொழியில் நைட்ரஜனாக மாறி இதற்கு மூலமாகி N என்ற குறியீட்டையும் தந்தது.பிரான்சு நாட்டின் லவாச்சியர் இதற்கு அசோட்(azote)எனப் பெயரிட்டார்.'a'என்ற ஒட்டு கிரேக்க மொழியில் எதிர் மறையையும் 'சோ' என்றால் வாழ்க்கை பொருளையும் குறிக்கும்.அசோட் என்றால் வாழ்க்கை இல்லா நிலை என்று பொருள்.ஆக்சிஜன் இல்லாத நைட்ரஜன் வளிமத்தால் மட்டும் வாழ்க்கை நிலைபடாது என்பதால் இந்த வளிமம் முதலில் அப்பெயர் பெற்றது. காற்றை நீர்மமாக்கி அதிலிருந்து நைட்ரஜன் நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் பெறுகின்றார்கள்.நீர்மக் காற்றை கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபடுத்தி,வெவ்வேறு கொதி நிலை உடைய வளிமங்களை ஆவியாக்கி குளிர்வித்து நீர்மமாக்கி செழுமையூட்டிக் கொள்கிறார்கள்.நைட்ரஜனின் கொதி நிலை - 195.8 டிகிரி C ஆகும். காற்று வெளியில் பொட்டாசியம் பைரோ காலேட்டை வைத்து அதிலுள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன்டைஆக்சைடை நீக்கி நைட்ரஜன் மட்டும் எஞ்சுமாறு செய்கின்றாகள் வளி மண்டலக் காற்றிலிருந்து பெறப்படும் நைட்ரஜன் தூய்மையானதில்லை.ஏனெனில் அதில் மந்த வளிமங்களான ஆர்கான்,கிரப்பிட்டான் போன்றவை சிறிதளவு கலந்திருக்கும் எனவே தூய நைட்ரஜன் பெற வேதியியல் வினைகளையே அணுக வேண்டியுள்ளது. செம்பையும் நைட்ரிக் அமிலத்தையும் சமவிகிதத்தில் கலக்க நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி ஆகும். இதை சூடுபடுத்தப்பட்ட செம்புத் துருவல்கள் வழியே செலுத்திக் கிடைக்கும் வளிமத்தைச் சேகரிக்க அது நைட்ரஜனாகும்.அமோனியம் நைட்ரேட்டை நீரில் கரைத்துச் சூடுபடுத்தி நைட்ரஜனை எளிதாகப் பெறலாம். பண்புகள் நைட்ரஜன் நிறம்,மணம் சுவையற்ற ஒரு வளிமம் .இது காற்றை விட மிகச்சிறிதளவே இலேசானது. நீரில் மிகச் சிறிதளவே கரைகிறது .இது நச்சுத் தன்மை யற்றது. காற்றில் எரிவதில்லை. எரிதலின்றி வாழ்க்கைக்கு உறுதுணையாகவும் இல்லை.சுண்ணாம்பு நீரைப் பால்போல வெண்மையாக்குவதில்லை. இதன் அணு எண் 7 . அணு நிறை 14.007.அடர்த்தி 1.165 கிகி /கமீ.இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 70.25 ,77.31 K ஆகும். நைட்ரஜன் வினையில் மந்தமாக ஈடுபடுகிறது. சற்று உயர்வெப்ப நிலையில் இது மக்னீசியம்,லித்தியம்,கால்சியம் போன்ற பல உலோகங்களுடன் கூடி நைட்ரைடுகளை உண்டாக்குகின்றது.அது போலவே அலோகமான போரான் சிலிகானுடன் வினை யாற்றுகின்றது .இன்னும் கூடுதலான வெப்ப நிலையில் நைட்ரஜன் ஆக்சிஜனுடன் நேரடியாகக் கூடி அமோனியா மற்றும் நைட்ரிக் ஆக்சைடை உண்டாக்குகின்றது. கார்பன் மின் வில் லின் (Carbon arc)சுடரொளியில் நைட்ரஜனுடன் கூடுகிறது. கந்தகமும்,ஹாலஜன்களும் எந்த வெப்ப நிலையிலும் நைட்ரஜனுடன் கூடுவதில்லை. துருவ ஒளி என்பது சூரியனிலிருந்து வீசப்படும் மின்னேற்றக் கொண்ட துகள்கள்,அயனிகள் வளி மண்டலத்தை ஊடுருவும் போது புவி காந்தப் புலத்தோடு இடையீட்டுச் செயல் புரிந்துவெளிப்படும் ஒளியாகும். நைட்ரஜன் மூலக்கூறு ஆரஞ்சு-சிவப்பு ,நீலம் -பச்சை .நீலம்- வைலட் மற்றும் அவுரி நீலம் போன்ற வண்ணங்களைத் துருவ ஒளியில் தருகிறது.
திண்ம நைட்ரஜன் இரு வேற்றுருக்களைக்(allotropic forms) கொண்டுள்ளது. அவற்றை ஆல்பா ,பீட்டா நைட்ரஜன் என்பர். - 237 டிகிரி C வெப்ப நிலையில் இதன் நிலை மாற்றம் நிகழ்கிறது.

eluthatha kaditham

எழுதாதக் கடிதம் தமிழகத்தில் எங்கும் காளான் முளைத்தது மாதிரி பொறியியல் கல்லூரிகள் தோன்றியுள்ளன.பாலிடெக்னிக் ,கல்வியியல் கல்லூரிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன ஒரே மாதிரியான அறிவும் திறமையும் கொண்ட பலரை உருவாக்குவதால் தேவை இல்லாத போது அவர்கள் தேடப்படுவதில்லை.அவர்கள் அறிவும் திறமையும் வீணாகிப் போகிறது. அதனால் பலரும் பல் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள கடிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் அவர்கள் உழைப்பு சிதறிப் போவதால் ,ஒரு குறிப்பிட்ட துறையில் மேலோங்கிச் சிறப்பதில்லை போட்டாப் போட்டியான உலகத்தில் அவர்கள் முகவரியைத் தொலைத்து விட்டு அங்கும் இங்குமாக அலைகின்றார்கள் .தான் எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்பதைத் தீர்மானித்துத் திட்டமிடத் தெரியாததின் விளைவே இது. சினிமாத் துறை சார்ந்த பயிற்சிக் கல்வி ,மாயக் காட்சிகள்,கிராபிக்,ஒளிப்படம்,ஓவியம்,சிற்பம் போன்ற கலைகள் சார்ந்த பயிற்சிக் கல்வி,படைப்பாற்றல்(மேடைப் பேச்சு,கதை, நாடகம் எழுதுதல்,கவிதை புனைதல்)சார்ந்த பயிற்சிக் கல்வி,கிராமியக் கலைகள் (பொம்மலாட்டம்,கரகம் ,மயிலாட்டம்,,புலியாட்டம் ) சார்ந்த பயிற்சிக் கல்வி ,தொலைக் காட்சிக்கு தயாரித்தல் ,வர்ணனை செய்தல் போன்ற பயிற்சிக் கல்வி இப்படி விதவிதமாகத் திட்டமிடலாம்.இது போன்ற கல்விகளில் போட்டி இல்லாததால் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி பெறுவது எளிது. வழக்கத்துக்கு மாறான ஒரு புதிய பாடத் திட்டத்துடன் கூடிய கல்வியை அறிமுகப்படுத்த அதற்கென ஒரு தனிக் கல்லூரியை அமைக்க வேண்டும் அரசு மற்றும் பல்கலைக் கழகத்திடமிருந்து அனுமதிவாங்குதல் , பொருள் ஈட்டுதல், இடம் தேர்வு செய்து கட்டடம் எழுப்புதல்,வசதிகளை ஏற்படுத்துதல், பயிற்சியாளர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்துதல், மேற்பார்வை செய்தல் என்று பல பொறுப்பான வேலைகள் இதற்குப் பின்னால் உள்ளன. இதைத் தனி ஒருவனாகச் செய்வதை விட ஒத்த எண்ணமும், சிந்தனையும் கொண்டவர்கள் கூடிச் செய்வதே மிகுந்த நன்மை தரும். ஒரு அறிமுகக் கூட்டம் மூலம் இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாமே .தேவை ஒரு தலைவர்.

vinveliyil ulaa Space Science

ரீகல்(Rigel)
ஓரியன்வட்டார விண்மீன் கூட்டத்தில் முதலாவது பிரகாசமான விண்மீன் பீட்டா ஒரியானிஸ் என்ற ரீகல் என்று அழைக்கப் படும் விண்மீனாகும் விண்வெளியில் தெரியும் பிரகாசமிக்க விண்மீன்களுள் இது 7 வதாகும். அரேபிய மொழியில் கால் பாதத்தைக் குறிக்கும் சொல்லே ரீகல் என்ற பெயரைத் தந்தது .773 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ரீகல் வெளிறிய நீல நிறங் கொண்ட ,புறப் பரப்பு வெப்ப நிலை 13 ,௦௦௦ டிகிரி கெல்வின் உடைய வெப்ப மிக்க ஒரு விண்மீனாகும். நிறமாலை வகையில் இது B வகையைச் சேர்ந்தது. ரீகலின் நிறமாலையைப் படித்தரமாகக் கொண்டு பல விண்மீன்களை வகைப்படுத்தி உள்ளனர். முதன்மைத் தொடர்(Main sequence) விண்மீனாக உள்ள ரீகலின் தோற்ற ஒளிப் பொலி வெண் ௦. 12 ஆகும். இதன் ஒளிர் திறன் சூரியனை விட 23,௦௦௦ மடங்கு அதிகமானது. அளப்பரிய ஒளிர் திறனுக்கும் உயர் வெப்ப நிலைக்கும் அதன் பெரிய உருவ அளவும் ஒரு காரணமாகும். இதன் விட்டம் சூரியனைப் போல 35 மடங்கு பெரியது. பால் வழி மண்டலத்தில்(Milky way) நாமிருக்கும் வட்டாரத்தில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் விண்மீன் ரீகலாகும் சூரியன் இருக்குமிடத்தில் ரீகல் அமைந்திருந்தால் அதன் கோண விட்டம் 35 டிகிரியாகவும் ,ஒளிப் பொலி வெண் - 38 ஆகவும்.ஒளிப் பாயம் 10 KW/s.cm ஆகவும் (சூரியனுக்கு 1 .4 KW/s.cm) இருக்கும் . இதிலிருந்து இதன் ஒளிர் திறனை நன்கு உணரலாம் . ரீகல் உண்மையில் மூன்று விண்மீன்களின் தொகுப்பாகும் .ரீகலுக்கு மிக நெருக்கமாக உள்ள துணை விண்மீன் 9 வினாடிகள் கோண விலக்கத்துடன் ஒளிப் பொலி வெண் 7 ஆகவும் வெப்ப மிக்க வெண்ணிற விண்மீனாகவும் உள்ளது.இது ரீகலை 10 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. .ரீகலும் ஒரு மாறொளிர் விண்மீனாகும் . ரீகல் பிரகாசமாக இருப்பதுடன் தனக்கு அருகாமையில் உள்ள நெபுலா ஊடாகவும் இயங்கிச் செல்கிறது.IC 2118 என்று குறிப்பிடப்படுகின்ற சூன்யக்காரக் கிழவித் தலை நெபுலா (Witch head nebula ) வை ஒளி ஊட்டுவது ரீகலாகும் .ஓரியன் நெபுலாவுடனும் ரீகல் இணைந்திருக்கிறது

Saturday, May 5, 2012

arika ariviyal -Science

அறிகஅறிவியல் இரவில் கொசு எப்படி நம்மை க் கண்டு பிடித்து இரத்தத்தை உறிஞ்ச சரியான இடத்தைத் தேர்ந் தெடுக்கிறது ? பூச்சிகள் நல்ல கண் பார்வை பெற்றிருந்தாலும் ,கொசு தன்னுடைய இரை தேடலுக்கு கண் பார்வையை நம்பி இருக்கவில்லை. தலையில் அதற்கு இரண்டு உணர் கொம்புகள் (antennae) இருக்கின்றன. உணர் கொம்புகள் சமிக்கை அலைகளை உணர வல்லவை . நம்முடைய வானொலி ,தொலைகாட்சி போன்றவைகள் இது போன்ற உணர்கொம்புகளைக் கொண்டு ஒலி ,ஒளி அலைகளை உணர்ந்து பேச்சு மற்றும் காட்சிகளை த் தெரிவிக்கின்றன .கொசுக்கள் உணர்கொம்புகளைப் பயன் படுத்தி உணவு கிடைக்கும் தன் இரையை இடமறிந்து கொள்கின்றன உயிரினங்களின் உடலிலிருந்து வெளிவரும் வியர்வை, மற்றும் பிற கழிவுகளினால் உண்டாகும் வேதிச் சமிக்கைகள் காற்றினால் பரவ அதை இனமறிந்து உடலின் சரியான இருப்பிடத்தைத் தெரிந்து கொள்கின்றன பெண்களின் மாதவிடாய் ,இரத்தத்தின் செறிவு போன்றவற்றைக் கூட கொசுக்கள் அறிந்து கொள்கின்றன. .பொதுவாக கொசுக்கள் ஈரம் ,வெது வெதுப்பு ,கார்பன் டை ஆக்சைடு இருள் மற்றும் அழுத்தமான நிறங்கள் போன்றவற்றை அதிகம் விரும்புகின்றன. கொசுக்களிலிருந்து இயற்கையாகத் தப்பிக்க விரும்பினால்கொசுக்கள் விரும்பாத வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்ளலாம் .காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் இருந்து கொண்டால் சமிக்கை அலைகள் கொசுவை எட்டுவதில்லை. அதனால் கொசுக்கள் நம்மை இடமறிந்து கொள்ளத் தவறுகின்றன.

eluthatha kaditham

எழுதாத கடிதம் அண்ணா ஹசாரேயும் ,ராம் தேவும் எம். பி க்களைத் திருடர்கள் என்று சொன்ன போது உங்கள் மனதில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் .நம்மை யார் குறை கூறினாலும் கோபம் வருவது இயற்கைதானே. நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் - நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ? உண்மையிலேயே நீங்கள் யார் என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் .அது தவறு. நீங்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும், உண்மையிலேயே யார் என்பதும் மக்களுக்குத் தெரியும் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை என்ற பொதுமைக் கருத்தாலும், குற்றம் செய்தும் குற்றம் நிரூபிக்கப் படாவிட்டால் அவர் குற்றவாளி இல்லை என்ற சட்டத்தாலும் நீங்கள் உங்களை மறைத்துக் கொள்ளலாம். எங்களால் நீங்கள் குற்றவாளி என்று நீருபிக்க முடியாது .அது எல்லா வகையாலும் நிராயுதபாணியாக நிற்கும் எங்களால் நிச்சியமாக முடியாது தொட்டால் தீ சுடும் ,கை விட்டால் பொருள் கீழே விழும் நீரில் மூழ்கினால் சுவாசிக்க முடியாது ,கண்களை மூடினால் வாசிக்க முடியாது என்பதெல்லாம் எப்படித் தெரியுமோ அதைப் போலத்தான் நீங்களும் எப்படி எங்கள் நம்பிக்கையை வஞ்சித்து விட்டு வளர்ந்து வருகின்றீகள் என்பதையும் தெரிந்து வைத்திருக்கின்றோம் . எங்களுக்கு நீங்கள் குற்றவாளி என்று சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் அதற்கு வலுவான நிரூபணம் எங்களிடம் இல்லை. அப்படியே சிக்கினாலும் அதை வெளிப்படுத்த முடியாது ஏனெனில் பயம். அதையும் மீறி வார்த்தைகள் வெளி வந்தால் அவன் பாதி உச்சரிக்கும் போதே உயிர் விட்டிருப்பான். இது தான் இந்திய நடைமுறை. அண்ணா ஹசாரேயும் ,ராம் தேவும் தப்பிப் பிறந்தவர்கள்.பயந்து பயந்தே வாழும் மக்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றார்கள். இதற்காக நீங்கள் கோபப்பட்டு உங்கள் அஸ்திரங்களை அள்ளி வீசாதீர்கள். நீங்கள் நல்லவர்.ஆனால் நீங்கள் மட்டுமே நல்லவராக இருந்து என்ன செய்து விட முடியும் .உங்களைச் சுற்றி எவ்வளவு மோசமானவர்கள் பதவியில் இருக்கின்றார்கள் என்பது எங்களை விடவும் உங்களுக்குத் தான் சரியாகத் தெரியும் .அதைத் தட்டிக் கேளுங்கள் .தடுத்து நிறுத்துங்கள் .உங்களைப் போல மக்களுக்காக அர்பணித்துக் கொண்ட எல்லோரையும் நல்லவர்களாக மாற்றுங்கள் .அது உங்களால் முடியும் ,உங்களால் மட்டுமே முடியும் . கொஞ்சம் மாற்றி யோசியுங்க
கார்பனின் பண்புகள் இயற்பியல் பண்புகள் C என்ற குறியீட்டுடன் குறிப்பிடப்படுகின்ற கார்பனின் அணு எண் 6 ,அணு நிறை 12. அணுவின் நிறையை அணுத்திணிவு அலகால்(automic mass unit) குறிப்பிடுவார்கள். இதற்கு கார்பன் படித்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது கார்பனின் அடர்த்தி 2050 கிகி/கமீ ஆகும். கார்பனின் உருகு நிலை 3773 K, கொதி நிலை 4173 K . கார்பன் சில உலோகங்களுடன் கூடி கார்பைடுகளை ஏற்படுத்துகின்றது. இவை உலோகப் பண்பில் சிறிதளவும்,அலோகப் பண்பில் சிறிதளவும் கொண்டுள்ளன .கால்சியம், அலுமினியம்,சிலிகான் கார்பைடுகள் பெரிதும் அறியப்பட்டுள்ளன. இவை உறுதிமிக்கதாகவும் ,உயர் உருகு நிலை கொண்டதாகவும் இருப்பதால் உயர் வெப்பநிலையைத் தாக்குப் பிடிக்கும் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கிறது. வேதிப் பண்புகள் கார்பன் மந்தமாக வினை புரியக் கூடிய ஒரு தனிமமாகும். காற்றில் எரிக்கும் போது ஆக்சிஜனுடன் கூடி கார்பன் டை ஆக்சைடை உண்டாக்குகின்றது .கந்தக ஆவியில் இது கார்பன் டை சல்பைடாக மாறுகிறது. புளூரினுடன்நேரடியாகக் கூடுகிறது. ஆனால் பிற ஹாலஜன் களுடனும்,நைட்ரஜ னுடனும் வினை புரிவதில்லை. ஹைட்ரஜனுடன் கூடி பல ஆயிரக் கணக்கான வேதிப் பொருட்களை உண்டாக்கி இருக்கிறது. உயிரியல் மூலக் கூறுகள் பெரும்பாலும் இவ்வகையின இதனால் கரிம வேதியியல் (Organic Chemistry ) என்ற தனிப் பிரிவே தோற்றுவிக்கப்பட்டது. பயன்கள் கார்பனின் ஒரு வடிவம் வைரமாகும். வைரத்தின் ஒளி விலகல் எண் ணும்(refractive index ), பிரிகைத் திறனும் (dispersive power ) மிகவும் அதிகம். அதனால் அது பிரகாசமாய் ஒளியைச் சிந்துகிறது. வைரம், அமிலம், காரம் மற்றும் ஆக்சிஜனூட்டிகளால் பாதிக்கப் படுவதில்லை. 800 டிகிரி C வரை சூடுபடுத்தும் போது கார்பன்டை ஆக்சைடாக மாறி விடுகிறது. கரியையும் மணலையும் மின் உலையில் வைத்து தொடர்ந்து சூடு படுத்த கார்பன் சிலிசைடு உண்டாகி சிலிகான் ஆவியாக்கப் பட்டு கிராபைட் உண்டாகிறது. கிராபைட் செறிவூட்டப் பட்ட நைட்ரிக் அமிலத்தால் பாதிக்கப் படுகின்றது. மின்சாரத்தைக் கடத்தினாலும் வெப்பத்தைச் சிறிதும் கடத்தாத கிராபைட் தீச் செங்கல் ,உலோகங்களை உருக்க உதவும் மண் குப்பிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன் படுகிறது. கிரபைட்டுடன் களிமண் கலந்து பென்சில் தயாரிக்கின்றாகள். இதில் சிறிதளவு ஈயமும் கலக்கப்படும். கிராபைட் ஒரு மசகுப் பொருளாகவும் பயன் தருகிறது. வர்ணங்களின் தயாரிப்பு முறையிலும் ,மின் சாதனங்கள் ,மின் கலங்களில் மின் வாயாகவும் (electrode) பயன் படுகிறது. மரக் கரி சில வளிமங்களை உட்கவர்ந்து கொள்கிறது. இப்படி உட்கவரப்படும் வளிமம் இயல்பான நிலை யில் இருக்கும் போது இருப்பதை விட கூடுதல் தீவிரமிக்கதாய் இருக்கிறது. இப் பண்பு உயர் வெற்றிட வெளியை உண்டாக்கவும் உட்கவரப் படாத நீயான் ,ஹீலியம் வலிமைத்திளிருந்து எளிதில் உட்கவரப்படும் வளிமங்களை பிரித்தெடுக்கவும் பயன் படுத்திக் கொள்ளப் படுகிறது. வயிற்றில் சேர்ந்துள்ள வளிமத்தை அகற்ற கரி சேர்க்கப் பட்ட ரொட்டித் துண்டுகளை மருந்தாகக் கொடுக்கும் பழக்கம் கை வைத்திய முறையில் இன்றைக்கும் பின் பற்றப் படுகிறது. குடி நீரை மணம் அகற்றி கிருமிகளை நீக்கி கழிவு நீரைச் சுத்தப் படுத்தும் முறையிலும் கரி பயன் படுத்தப் படுகிறது. உலோகங்களின் ஆக்சைடு கனிமத்திலிருந்து ஆக்சிஜநிறக்கம் செய்து உலோகத்தைத் தனித்துப் பிரிக்க கரி பெரிதும் உதவுகிறது. கரிப் புகைப் படிவு,இசைத் தட்டுகள் ,கார்பன் தாள் ,தார்பாய்கள் போன்றவற்றின் தயாரிப்பு முறையில் பயன் படுகிறது. எலும்புக் கரி கரைசலின் நிறமிப் பொருளைக் கவர்ந்து வெண்மை யூட்டுவதால் சக்கரைக் கரைசலிலிருந்து சீனி தயாரிக்கப் பயன் படுத்தப் படுகிறது. நிலக்கரி என்பது முழுமையான கார்பன் இல்லை. அதில் கார்பன் தவிர்த்து எப்போதும் நைட்ரஜன் ,ஆக்சிஜன் ,கந்தகம் போன்றவைகளும் மேலும் சிலிகா, அலுமினா மற்றும் பெரிக் ஆக்சைடு போன்றவைகளும் சேர்ந்திருக்கும். தொல்படிவு படிப்படியாகப் பெற்ற சிதைவுகளைப் ; பொறுத்து அதில் கார்பனின் அளவு இருக்கும் மரத்தில் 40 % மும் ,அடுப்புக் கரியில் 60 % மும் பழுப்பு நிலக் கரியில் 70 % மும் கருப்பு நிலக்கரியில் 78 % ஆந்திரசைட் நிலக்கரியில் 90 % மும் கார்பன் உள்ளது. நிலக்கரி தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன் படுகிறது. அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி ஆதரவாய் உள்ளது .தார் சாலைகள் போடப் பயன் தருகிறது. தாரிலிருந்து பல வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றைக் கொண்டு வண்ண மூட்டிப் பொருள் ,மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் ,வெடிப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் ,இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள் . கார்பனின் மற்றொரு பயன் பாடு கார்பன் கால மதிப்பீட்டு முறை (Carbon dating ) ஆகும். உயிர் வாழும் மரத்தில் நிலைத்த கார்பன்- 12 உடன் கார்பன் -14 என்ற கதிரியக்க அணுவும் உட்கிரகிக்கப் பட்டு நிலைப்படுகின்றன. இவை irandum ஒரு சம நிலையில் இருக்கும் .ஆனால் மரம் வெட்டப் பட்டவுடன் ,கார்பன் உட்கிரகிப்பு இல்லாததால் ,கார்பன்- 14 சிதைவுற்று அதன் செழுமை குறையும் இதன் செழுமையை அளவிட்டறிந்து மரத்தின் காலத்தை மதிப்பிட முடியும் .

Thursday, May 3, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் கார்பன் (Carbon) கண்டுபிடிப்பு நிகழ்வுகளைப் பதிவு செய்யும் வழக்கம் இல்லாத காலத்திற்கும் முன்பிருந்தே கார்பனின் பயன்பாடு இருந்து வந்ததால் அது எப்போது யாரால் கண்டுபிக்கப்பட்டது என்பது தெரியாதிருக்கிறது . கார்பன் இயற்கையில் தனித்தும் கூட்டுப் பொருளாகவும் கிடைக்கிறது.தனிமமாகக் கார்பன் வைரமாகவும் (diamond ) கிராபைட்டு படிவுகளாகவும்,நிலக்கரியாகவும் கிடைக்கின்றது. கார்பனின் கூட்டுப் பொருட்கள் பல உள்ளன. வளிம நிலையில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு கார்பன் மற்றும் ஆக்சிஜனின் சேர்கையாலானதாகும். சுவாசிக்கும் போது கார்பன் டை ஆக்சைடை கழிவாக நாம் வெளியேற்றினாலும் தாவரங்களின் வளர்ச்சிக்கு இது இன்றியமையாததாகும். ஹைட்ரோ கார்பன்களாக இது எரி வளிமத்திலும் (natural gas) பெட்ரோலியத்திலும் உள்ளது. கார்பொனேட்டுகளாக சுண்ணாம்புக்கல்,சலவைக்கல் போன்றவற்றில் காணப்படுகிறது. விலங்கினங்களின் உடலாகட்டும் தாவரங்களின் திசுக்களாகட்டும் கார்பனின் கலப்பு இல்லாதது எதுவும் இல்லை. அதனால் எப்பொருளைக் காற்றில் எரித்தாலும் கார்பன்டை ஆக்சைடு உண்டாவதும் ,முழுமையாக எரியாத நிலையில் கரியாவதும் இயல்பாகின்றது. கார்பனின் வேற்றுருக்கள் (allotropic forms) கார்பன் ஓர் அலோகமாகும். இயற்கையில் காணப்படும் கார்பனில் படிக உருவமற்ற (amorphous) கரி,கிராபைட்,வைரம் என மூன்று வேற்றுருக்கள் உள்ளன.வெள்ளைக் கார்பன்(White Carbon) என்று நான்காவது வேற்றுரு இருக்கலாம் என்று அறிந்துள்ளனர். இது சிறிய கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் உடல் கட்டமைக்கப் பயன்படுகிறது 1969 ல் கார்பனின் இந்த நான்காவது வேற்றுரு இனமறியப்பட்டது. ஆவியாக்கப்பட்ட கிராபைட்டை ,தாழ்ந்த வெப்ப நிலையில் திண்மமாக உறையச் செய்யும் போது இது காணப்பட்டது. வெள்ளைக் கார்பன் வழிச் செலுத்தப் படும் ஒளி இரு கூறாகத் தளவாகம் (Polarization) செய்யப்பட்டு உடுருவிச் செல்கிறது. கிராபைட் மிகவும் மென்மையான பொருட்களில் ஒன்று ஆனால் வைரம் மிகவும் கடினமான பொருள். எல்லாப் பொருட்களிலும் வைரமே கடினத் தன்மை (hardness) மிக்கது ,கிராபைட்டும் ஆல்பா ,பீட்டா என இரு வகைப்படுகிறது. இவை ஒத்த இயற்பியல் பண்புகளைப் பெற்றிருந்தாலும் இவற்றின் படிகக் கட்டமைப்பு மாறுபட்டிருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் கிராப்பைட்டில் ஆறு செவ்வகப் புறத் தளமுடைய(rhombohedral) பீட்டா வடிவம் 30 % க்கு மேல் உள்ளது. ஆனால் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கிராபைட்டில் ஆறுமுக புறத்தளமுடைய (hexagonal) ஆல்பா வடிவம் மட்டுமே உள்ளது. இயந்திரப் பண்டுவத்தினால் ஆல்பா கிராபைட்டை பீட்டா கிராபைட்டாக்க முடியும். 1000 டிகிரி C மேல் சூடு படுத்தும் போது பீட்டா கிராபைட் ஆல்பா கிராபைட்டாக உருமாறுகிறது .
குரோடோ (kroto ) மற்றும் ஸ்மாலே (smalley) என்ற விஞ்ஞானிகள் நீள் வட்டப் பந்து வடிவ C 60 ,C 70 என்று குறிப்பிடப் படும் 60,70 கார்பன் அணுக்களால் ஆன புல்லரின் (Fullerene ) என்ற குடும்பம் சார்ந்த மூலக்கூறைக் கண்டறிந்தனர். கார்பன் அணுக்களால் மட் டுமே கட்டமைக்கப்பட்ட எந்த மூலக்கூறும் புல்லரின் எனப்படும் இது கோள வடிவில் இருந்தால் அதைப் பந்து வடிவ மூலக் கூறு (bucky ball ) என்றும் நீள் உருளை வடிவில் இருந்தால் அதை கார்பன் நானோ குழல் (Carbon nano tube) அல்லது குழல் வடிவ மூலக்கூறு(Bucky tube) என்றும் கூறுவர். C60 முதன் முதலாக 1985 ல் Richard Smalley, Robert Curl,James Heath o’Breien மற்றும் Harold Kroto என்ற விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். C60 , C70 மட்டுமின்றி C 72, C76 , C82 , C84 C100 போன்ற புல்லரின்களையும் அறிந்துள்ளனர். மிகச் சிறிய புல்லரின் ஆக C 20 உள்ளது 6500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஒரு விண்மீனைச் சுற்றி யுள்ள தூசி மண்டலத் தாலான நெபுலாவில் 2010ல் C 60 என்ற புல்லரினை கண்டறிந்தனர்.
பின்னர் இதைப் போல கிராபீன் (Graphene) என்றொரு பொருளையும் உருவாக்கினார்கள் பென்சீன் கட்டமைப்பைப் போல உள்ள இதில் கார்பன் அணுக்கள் எல்லாம் ஒரே தளத்தில் அமைந்திருக்கும் . கிராபீன் ,தேன் கூடு போன்ற படிக அணித் தளத்தில் ,ஒன்றை அணு தடிப்புடன் வெறும் கார்பன் அணுக்களின் பிணைப்பால் கட்டமைக்கப்பட்டது இதில் கார்பன்- கார்பன் பிணைப்பின் நீளம் ௦.142 நானோ மீட்டராகும் .கிராபீன் தளங்களை அடுக்கி கிராபைட்டை உருவாக்கினால் அணித்தள இடைவெளி ௦.35 நானோ மீட்டராக இருக்கும்.இதன் வலிமையும் நிலைப்புத் தன்மையும் மிகவும் அதிகம் . மெல்லியதாக இருந்தாலும் எக்கை காட்டிலும் உறுதியானதாக இருக்கின்றது. இதைக் கண்டுபிடித்து அதன் பண்புகளைத் தெரியப் படுத்தியதற்காக 2010 ல் இயற்பியலுக்கான நோபெல் பரிசு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே கிம் (Andre Geim ) மற்றும் கோன்ஸ்டன்டின் நோவோசெலோவ் (Konstantin Novoselov ) ஆகியோருக்கு வழங்கப் பட்டது

Wednesday, May 2, 2012

பெடல்ஜியூஸ்
பெடல்ஜியூஸ் ஒரு நீண்ட கால மாறொளிர் விண்மீனாக,அதன் பிரகாசம் 6 ஆண்டுகளில் ஒளிப்பொலிவெண் சுழியிலிருந்து 1.3 வரை இருக்குமாறு மாறுகிறது.இதன் ஒளிர் திறன் 100000 முதல் 40000,௦௦௦ மடங்கு சூரிய ஒளிர் திறனாக வேறுபடுகிறது .பெடல்ஜியூஸ் மாறொளிரும் போது பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்கு ஏற்ப அதன் விட்டம் சுருங்கி விரிகிறது .பெருமப் பிரகாசத்தின் போது அதன் விட்டம் சிறுமமாகவும் ,அதனால் அதன் வெப்பநிலை அதிகமாகவும் ,சிறுமப் பிரகாசத்தின் போது இதற்கு எதிராகவும் இருக்கிறது.
ஹபுல் டெலஸ்கோப் பெடல்ஜியூசைஆராயவும் தவறவில்லை. அது பெடல்ஜியூசுக்கு மிகப் பெரிய அளவிலான வளி மண்டலம் இருப்பதையும் அதன் புறப்பரப்பில் ஏதோ இனமறியப்படாத வெப்ப மிக்க பிரகாசமான புள்ளிகள் காணப்படுவதையும் புலப்படுத்திக் காட்டியுள்ளது. இப் பகுதிகள் பிற பகுதிகளை விடவும் 2000 o K வெப்ப நிலை கூடுதலாக உள்ளது. சூரியனில் இதற்கு மாறாக வெப்ப நிலை தாழ்ந்த மங்கலான கரும் புள்ளிகள் இருக்கின்றன. என்பதையும் இங்கு ஒப்பிட்டு நோக்கலாம் .மிகப் பெரிய பிரகாசமான் புள்ளியில் குறைந்தது 10 பூமிகளை உள்ளடக்கலாம். பெடல்ஜியூஸ் ஒரு மாறொளிர் விண்மீனாக இருப்பதால் இதன் பிரகாசம் ஓர் அரை குறையான ஒழுங்கு முறையுடன் மாறுகிறது. வேறு ஒரு சுற்றுக் காலத்துடன் அதன் பிரகாசம் ,அதாவது 420 நாட்கள் அலைவு காலத்துடன் மாறுவதை நுணுகி ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர் .இந்த அலைவு காலம் ஏறக்குறைய நமது சூரியனில் காணப்படும் 11 ஆண்டுகள் கரும்புள்ளி சுழற்சியை ப் போல இருக்கிறது. பெடல்சியூசின் புறப் பரப்பிற்கு க் கீழே ஏற்படும் வளிமக் கிளர்ச்சியாலான இயக்கம் ,அதிலுள்ள பிரகாசமான புள்ளிகளை காலத்திற்கு ஏற்ப இடம் மாற்றுவதால் இந்த மாறொளிர்தல் ஏற்படுகின்றது. . பெடல்ஜியூஸ் விண்மீனைச் சுற்றி 1000 மில்லியன் கிலோ மீட்டர் வரை தூசியாலான புற மண்டலம் விரிந்துள்ளது. இது பெடல்ஜியூசால் உமிழப்பட்டு வெளியேறிய அதன் மூலப் பொருட்களாகும் . தூசி தவிர பெடல்ஜியூஸ் இரண்டு துணை விண்மீன்களையும் பெற்றிருப்பதாக 1985 ல் கண்டுபிடித்தார்கள் .பிரகாசமிக்க பெடல்ஜியூசின் பின்னணியில் இந்த விண்மீன்களை இனமறிவது எளிதில்லை. பெடல்சியூசுக்கு அருகிலுள்ள விண்மீன் 5 வானியல் அலகுத் தொலைவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சுற்றிவருவதாகவும் ,விலகியுள்ள விண்மீன் 40 -50 வானியல் அலகுத் தொலைவில் சுற்றி வருவதாகவும் கண்டறிந்துள்ளனர், Mass ~18–19 M☉ Radius ~1180 R☉ Luminosity ~140,000 L☉ Surface gravity (log g) -0.5 Temperature 3,500K Metallicity 0.05 Fe/H Rotation 5 km/s Age ~1.0×107 years பெடல்ஜியூஸ்சின் நிறை சூரிய அலகில் 12 - 17 க்கு உட்பட்டதாக இருக்கலாம் என்றும் ,இந் நிலையில் அதன் உள்ளகத்தில் ஹைட்ரஜன் தீர்ந்து போய் ஹீலியம் எரிபொருளாகவும் புறக் கூடுகளில் ஹைட்ரஜன் எரிபொருளாகவும் இருக்கிறது என்றும் கருதுகிறார்கள் பெடல்ஜியூஸ் அழிந்து கொண்டிருக்கும் ஒரு விண்மீன் என்று இப்பொழுது கண்டு பிடித்துள்ளனர். இது இன்னும் ஒரு சில பத்தாண்டுகளில் நோவா ,சூப்பர் நோவா போன்ற நிலைகளை அடையலாம் என்று கூறுகின்றார்கள்