Tuesday, April 30, 2013

Mind without fear


Mind without fear

முற்றிலும் மனம் தளர்ந்து ,நம்பிக்கை இழந்து நிர்க்கதியாய் நிற்கும்போது ஒருவர் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டு விடுகின்றார்.பிரச்சனையிலிருந்து விடுபட தற்கொலையே சரியான முடிவு என்று ஒருவர் தீர்மானித்தால் அது முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும்.உண்மையில் அவர் பிரச்சனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை,பிரச்சனையோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்.பிரச்சனையோ அவரை விட்டுவிட்டு இன்னொருவரைப் பிடித்துக்கொள்கிறது.

பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஒவ்வொரு பிரச்சனைக்கும் நிச்சியம் ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்வுகள் உண்டு .இனியொரு மாற்றத்தை நம்மால் ஏற்படுத்தவே முடியாது ,அந்த மாற்றம் வருவதற்கு நிச்சியமான பிற வழியொன்றும் இல்லை என்று அவராகவே இறுதி முடிவு எடுத்துவிட்டு வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காததால் பிரச்சனையின் கொலைவெறிக்கு தானாகவே சிக்கிக் கொள்கிறார்.தற்கொலை செய்து கொள்பவர்களை பிரச்சனைகளின் அடிப்படையில் பொதுவாக மூன்று வகைப்படுத்திக் கொள்ளலாம்.முதல் வகை எதிர்பார்த்தது கிடைக்காமல் தோல்வியைத் தழுவியவர்கள் .இவர்களது தோல்வி, தேர்வில் தோல்வி, தேர்தலில் தோல்வி, விளையாட்டில் தோல்வி ,காதலில் தோல்வி, தொழிலில் தோல்வி இவற்றுள் ஒன்றாக இருக்கலாம். இரண்டாம் வகையினர் சமுதாயக் கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் .கணவனின் கொடுமைகளைத்             தாங்கமுடியாமை ,ஏழ்மையை எதிர்த்து போராடமுடியாமை,       தீங்கிழைக்கும் வலிமையான எதிரியைத் தனித்து எதிர்க்க முடியாமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொள்கைப் பற்றாளர் இந்த வகைக்குள் அடங்குவர்.பிறர் முன்னே அவமானப்பட்டு தன்மானம் பாதிக்கப்படுதல்,அல்லது அப்படியொரு நிலை வந்துவிடும் என்று எதிர்பார்த்து அவசரப்படுதல் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் மூன்றாம் வகையினராகும் .

தற்கொலை, தற்கொலை செய்து கொள்பவரின் முட்டாள்தனம் மட்டுமன்று,அது சமுதாயத்தின் முட்டாள்தனமும் கூட.ஒருவர்              தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அவர் பங்களிப்பு ஒரு பங்கு         என்றால் சமுதாயத்தின் பங்களிப்பு மூன்று மடங்கு.தற்கொலை         அதிகமுள்ள சமுதாயம் ஒரு நல்ல சமுதாயமே இல்லை.தற்கொலையால் செத்துப் போனவனைவிட 
சாகாத சமுதாயத்திற்குத்தான் அழுக்கும் 
இழுக்கும்
என்பதை வாழும் சமுதாயம் புரிந்துகொள்ளவேண்டும்.


 

 


 

 

Monday, April 29, 2013

Creative thoughts


Creative Thoughts

நீங்கள் இல்லாமல் எப்படி உங்களுக்குத் திருமணம் நடைபெறமுடியாதோ ,அதுபோல உங்கள் ஈடுபாடு இல்லாமல் உங்கள் வாழ்கையில் எந்த மாற்றமும் நிகழமுடியாது .

ஒருவர் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு அவரே காரணமாக இருப்பதோடு மிக மிக்கியப் பங்கும் ஏற்கின்றார் .மாற்றங்கள் தரும் வெகுமதிகளை அள்ளிக் காட்டிக்கொள்ளப் போகின்றவர் அவர் மட்டும் தான் என்பதால் மற்றவர்கள் ஒருபோதும் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை .

ஒவ்வொரு மாற்றமும் நிச்சயம் வெகுமதி தரும் .அந்த வெகுமதியைப் பெறுவதற்கு நாம்தான் தகுதியுடையவராக இருக்கவேண்டும் .வேலை செய்வதற்கு மட்டுமன்று அதன் பலனைப் பெறுவதற்கும் தகுதி யுடையவராக இருக்கவேண்டும் .

தகுதியுடையவனாக இருப்பது முக்கியம் .காலத்தோடு தகுதியுடையவனாக இருப்பது அதைவிட முக்கியம் .காலந்தாண்டிய தகுதிகள் பயன் தருவதில் வெகு சிக்கனம்.(ஆணுக்கு) 20-30 வயதில் திருமணம் தரும் பயன் 50-60 வயதில் திருமணம் தருவதில்லை .

ஒரு சமயம் ஒருவர் ஒரு திசையை நோக்கித்தான் முன்னேறிச் செல்ல முடியும். எல்லாத் திசைகளிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது வட்டப்பாதையாக அமைந்து மீண்டும் தொடங்கிய இடத்தையே வந்தடைய நேரிடும் .

நேரான வழியில் முன்னேறுவதற்கான அறிவுரைகள், எடுத்துக்காட்டுகளை விட இன்றைக்குத் தவறான வழியில் நடப்பதற்கான அறிவுரைகளும்,எடுத்துக்காட்டுகளுமே நம்மை அதிகம் எட்டுகின்றன .வாழ்க்கைத் தரம் மேலும்மேலும் குறைந்து போவதற்கு இது ஓர் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பதை இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை.திருந்தங்களைப் புகுத்தி திருத்தப்படாத சமுதாயம் வளர்ந்து விட்டால் அதுவே சாகாத சமுதாயத்திற்கு அழிக்க முடியாத எதிரியாகி விடும் .அப்புறம் ஒட்டு மொத்த சமுதாயமும் அழிந்து புதிய சமுதாயம் உருவானால்தான் உண்டு .

எல்லா மாற்றங்களும் உடனடிப் பயனைத் தருவதில்லை .உடனடிப் பயனைப் பெறுவதற்காகவே மாற்றங்கள் எப்போதும் மேற்கொள்ளப் படுவதில்லை .உடனடிப் பயனைத் தரும் சில மாற்றங்களைக் கண்டு பழகிவிட்ட பின்பு எல்லா மாற்றங்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் போது ஏமாறுவது நாம் தான் என்றாலும் ஏமாற்றுவது மாற்றமில்லை .

Micro aspects of developing inherent potentials


Micro aspects of developing inherent potentials

தனிமை எப்போதும் துன்ப மயமானதாக இருப்பதில்லை.தனிமையில் இனிமையும் உண்டு. அவ்விரு தனிமைகளை தீந்தனிமை என்றும் நற் தனிமை என்றும் கூறலாம். இனிமை தரும் நற்தனிமை என்பது ஒருவர் புறத்தாக்கமின்றி சுயமாகச் சிந்திப்பதற்கும்,செயல்படுவதற்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் ஒரு பழக்கம். ஒருவர் தன் எண்ணங்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதால் அது புறத் தனிமை மட்டுமே. அகம் தனிமையில் இல்லாததால் அது உண்மையில் ஒருவிதத்தில் தோற்றத் தனிமையே.விடுதலைப் போராட்டத்தில் பல தலைவர்கள் தனிமைச் சிறையில் நெடுங் காலம் அடைக்கப் பட்டிருந்தனர் .அவர்கள் தனிமையில் இருந்தாலும் அவர்களுடைய மனம் தனிமையில் இல்லை.தங்கள் சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டு,கட்டுரைகளையும்,சுய சரிதைகளையும்,எழுதினார்கள்.நாட்டின் சுதந்திரத்தைப் பற்றி ஒவ்வொரு கணமும் சிந்திந்தார்கள். அப்படியின்றி சிறையில் சும்மா முடங்கிக்கிடந்தால்,உடலையும் ,உடலை இயக்கும் மனதையும் செயலின்றி வைத்திருந்தால் அதுவே தீந்தனிமை.

புத்தகத்தை வாசித்து மெய்யறிவை வளப்படுத்தி கொள்ளும்போதும் ,தன் படைப்பாற்றலை வெளிப்படுத்திக் காட்ட முயற்சி எடுத்துக் கொள்ளும்போதும் நற்தனிமையே நலம் தரும்.சுய தேடலின்றி நமக்குத் தேவையான செய்திகளையும்,வசதிகளையும் ஓரளவு பெறுவதற்கு பெற்றோர்கள்,உற்றார் உறவினர்கள்,நண்பர்கள்,ஆசிரியர்கள், சமுதாய மக்கள் என பலதரப்பட்ட மக்களோடு உரையாடுதல் பயன் தரும். எவ்வளவுக்கெவ்வளவு உரையாடும் தொடர்புடைய மக்களின் எண்ணிக்கையும் நேரமும் அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு தீந்தனிமை நம் வாழ்கையில் எட்டிப்பார்ப்பதில்லை. உரையாடல் என்பது நாம் பிறர்க்கு எந்த அளவு பயன்படக் கூடியவராக இருகின்றோம் என்பதைப் பொறுத்தே வலுப்பெறும் .வாழ்கை என்பதே பிறருக்குப் பயன்படுவதற்காக ஏற்பட்டதுதான்.வாழ்கையில் பிறருக்குப் பயன்படுவதற்கான தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை வெகு சிலரே வாழும் காலத்தில் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.பிறருக்கு உதவும் மனப் பான்மையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் ஒரு கால கட்டத்தில் தீந்தனிமையில் உழன்று துன்பப்பட நேரிடும். தீந்தனிமை நம்மைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்லும் என்பதால் அதைத் தவிர்த்துக்கொள்ளுதல் நலம் பயக்கும்.

Sunday, April 28, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் - யெட்ரியம் (Yttrium)-கண்டுபிடிப்பு

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானியான ஜோஹன் கடோலின் (Johan Gadolin ) என்பார் 1794 ல் இத் தனிமத்தைக் கண்டறிந்தார். யெட்டர்பி என்பது ஸ்வீடன் நாட்டில் உள்ள கனிமச் சுரங்கங்கள் நிறைந்த கிராமமாகும். இச் சிறிய கிராமம் யெர்பியம் ,டெர்பியம் ,யெட்டர்பியம் ,யெட்ரியம் ஆகிய தனிமங்களுக்குப் பெயர் சூட்டக் காரணமாக இருந்தது .

யெட்ரியம் ,யெட்ரியா என்ற மண்ணில் உள்ளது .மொசாண்டர் ,இதை வேதியியல் பகுப்பாய்விற்கு உட்படுத்தி ஆராய்ந்து அதில் மூன்று வெவ்வேறு தனிமங்கள் இருப்பதை அறிந்தார். அவை முறையே யெட் ரியம் .யெர்பியம் ,டெர்பியம் என்று பெயர் சூட்டப்பட்டன,யெட்ரியம் அருமண் உலோகங்கள் (rare earth) ஒன்று சேர்ந்து கிடைக்கும் பல கனிமங்களில் கிடைக்கின்றது.மோனசைட்டில் யெட்ரியம் 3 % உள்ளது. சந்திரனில் உள்ள மண்ணில் யெட்ரியத்தின் செழுமை பூமியைக் காட்டிலும் சற்று கூடுதலாக உள்ளது.

பண்புகள்

Y என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய யெட்ரியத்தின் அணுவெண் 39; அணு நிறை 88.91 ,அடர்த்தி 4340 கிகி/கமீ .இதன் உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1763 K ,3273 K ஆகும் .

யெட்ரியம் வெள்ளி போன்று உலோகப் பொலிவு கொண்டது .காற்று வெளியில் ஓரளவு நிலையாக இருக்கின்றது .உலோகத்தை வளைக்கும் போது அதன் வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ்க்கு அப்பாற்படுமானால் யெட்ரியம் பற்றிக் எரிகிறது .மிகவும் நேர்த்தியாகப் பொடிசெய்யப்பட்ட யெட்ரியத் தூள் காற்று வெளியில் மிகவும் நிலையற்றது .

பயன்கள்

யெட்ரியம் ஆக்சைடு ஈரோப்பியத்துடன் சேர்ந்து ஒளிர்மங்களை (Phosphors) த் தந்துள்ளது .இவை வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளில் சிவப்பு

நிறம் தரப் பயன்படுகின்றன .யெட்ரியம் ஆக்சைடு கொண்டு யெட்ரியம் -இரும்பு கலப்புக் கனிப் (garnet) பொருட்களை உருவாக்கி அவற்றை நுண்ணலை வடிப்பான்களாகப் (Microwave filter) பயன்படுத்துகின்றார்கள் .யெட்ரியம் -அலுமினியம்-கடோலினியம் கலப்புக் கனிப் பொருள் முரண்பட்ட காந்தப் பண்புகளைக் கொண்டுள்ளது.யெட்ரியம்-இரும்பு கலப்புக் கனிப் பொருள்கள் ஒலிபரப்பி (transmitter) மற்றும் ஒலி ஆற்றல் வகை மாற்றிகளில் (transducers) மிகச் சிறப்பாகப் பயன் தருகிறது .யெட்ரியம் -அலுமினியக் கலப்புக் கனிப் பொருளின் கடினத் தன்மை (hardness ) 8.5 ஆக உள்ளது.இது இரத்தினக் கல்லாக ஆபரணங்களில் பயன்படுகின்றது .

குரோமியம் ,மாலிப்பிடினம்,ஸிர்கோனியம்,டைட்டானியம் போன்றவற்றில் உள்ளணுத் துகளின் பரும அளவைக் குறைக்கவும் அலுமினியம் மற்றும் மக்னீசிய கலப்பு உலோகங்களின் வலிமையை அதிகரிக்கவும் சிறிதளவு யெட்ரியம் (0.1 - 0.2 %) சேர்க்கப்படுகின்றது .வனேடியம் மற்றும் இரும்பியலற்ற உலோகங்களில் ஆக்சிஜனிறக்கியாக யெட்ரியம் பயன் தருகின்றது.பீங்கான் மற்றும் கண்ணாடிகளில் சேர்ப்பதினால் அவற்றின் வெப்பஞ் சார்ந்த விரிவாக்கம் குறைவதுடன்,அதிர்ச்சிகளையும் தாக்குப் பிடிக்கின்றது .யெட்ரியம், லேசர் ஊடகங்களில் ஒரு சேர்மானப் பொருளாக உள்ளது .யெட்ரிய அலுமினிய கனிப் பொருளில் (Y3Al5O12) நியோடைமையத்தை வேற்றுப் பொருளாகக் கலந்து லேசரில் 1.064 மைக்ரோ மீட்டர் அலை நீளத்தில் ஓரியல்(Monocromatic) லேசர் ஒளி உண்டாக்கப் பயன் படுத்துகின்றார்கள் .அணு ஆற்றல் தொழில் நுட்பத்தில் யெட் ரியம் ஒரு தடுப்புத் தடைப் பொருளாகப் பயன் தருகிறது