Friday, January 25, 2019

sonnathum sollaathathum

சச்சின் டெண்டுல்கர் எழுதிய  "  Playing it my way " என்ற நூலில்  முன்னேறத்  துடிக்கும் இளைஞர்களுக்கு  பல நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளார் .


"உன் மீது பிறர் தூக்கி எறியும் கற்களை படிக்கல்லாக மாற்றிக் கொள்ள உன்னால் முடியும். "

பொதுவாக ஒருவரது வளர்ச்சியை விரும்பாதவர்கள் தடைப்படுத்துவதற்காக எதிர்ச் செயல்களை செய்வார்கள் . உற்சாகத்தை மட்டுப்படுத்துவதற்காக குறை கூறுவார்கள்.  போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் துணிந்து செல் என்று சான்றோர்கள் கூறுவார்கள் . குறை சொல்லுவோர் கருத்துக்களையெல்லாம்  செவிடராய் இருந்துகேட்டால் ,ஊமையாய் இருந்து தொடர்ந்து செயலைச் செய்தால்  எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. கடிய சொற்களால் மனம் துவண்டு போனால்  செய்யப்படும் செயல்கள் செயல்களாய் இருப்பதில்லை .குறை என்று நினைப்பது மனம்தான் நிறை என்று நினைப்பதும் அதே மனம் தான் . குறைகளையெல்லாம் நிறைகளாகத் திருத்தி நினைக்கத் தெரிந்தால் வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதையில்  வீழ்ச்சியேயில்லை. மனமிருந்தும் மனப்பக்குவம் இல்லாவிட்டால்  சொல் கூட கல்லைவிட பலமாகத் தாக்கும்

"கனவுகள் ஒரு நாள் நிச்சியமாக நனவாகும் . கொஞ்சம் கால தாமதமாகிறது  என்பதற்காக  கனவு காண்பதை விட்டு விடாதீர்கள் . "

கனவுகள் முன்னேறத் துடிக்கும் மனிதர்களின் சுயவழிகாட்டி . உள்ளுணர்வைத் தூண்டிக்கொண்டே இருக்கும் -விழித்திருக்கும் போது செயல்களாய் ,தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவுகளாய்.முன்னேற்றம் என்பது ஒரு திட்டம். அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுப்பது சுய விருப்பம். முயற்சிகள் என்பது மனதின் ஒத்துழைப்பு . இந்த கூட்டணி சந்திக்கும் போது கனவுகள் மலரும்.  கனவுகள் உறங்கும் போது இரவில் பூக்கும் வண்ணப் பூக்கள் .   செய்யவேண்டிய செயல்கள் நிறைய இருக்கு எழுந்திரு என்று அதன் நறுமணம் உன்னை எழுப்பிவிடுவதற்காக பூக்கின்ற  பூக்கள் .

" உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்று விளையாடுவவதற்குப் பின்னால்   ஒரு நெடிய வழிமுறை உள்ளது.  50 வது மாடிக்கு நேரிடையாகத் தாவிக்குதிக்கும் முயற்சியை  விட்டுவிட்டு அடித்தளத்திலிருந்து தொடங்கி முன்னேறிச் செல்ல வேண்டும் ."       

எதையும் நினைத்த மாத்திரத்தில்  அடைய முடியாது. எதை அடைய விரும்புகின்றோமோ அதை அடைய முதலில் நம்மைத் தகுதியுடையவர்களாக்கிக் கொள்ள வேண்டும் ,தகுதியின்மையால் மேற்கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன .  எந்தத் துறையில் முன்னேற விரும்பினாலும் முதலில் தகுதியுடையவனாக இருக்க வேண்டும். அந்தத் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபட்டால் வளர்ச்சி யில் தடை ஏற்படுவதற்கு வழியில்லை .
 கணப்பொழுதில் ஒரு பெரிய மாட மாளிகையைக் கட்டுவதும். கையை அசைத்து தங்கக் காசுகளைக் கொட்டுவதும், ,அறுசுவை உணவைப் பரிமாறுவதும்,  இயற்கைக்கு  அப்பாற்பட்ட  மந்திர தந்திரங்களுக்கு  வேண்டுமானால் இயலுவதாக இருக்கலாம்.  ஆற்றலின்றி ஒருநாளும் பொருட்கள் விளைவதில்லை என்பது இயற்கையின் மாறாத விதிகளில் ஒன்று என்பதை மறந்தவர்கள் மட்டுமே குறுக்கு வழியில் முன்னேற வழி தேடிக்கொண்டிருப்பார்கள்  .



No comments:

Post a Comment