Monday, March 1, 2021

ஊழல்

ஒரு குறிப்பிட்ட திறமையை வளர்த்துக் கொள்பவர்கள் அந்தத் திறமையை வாழ்வாதாரமாகக் கொண்டு சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக வாழ்கின்றார்கள் .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை என்பதால் சமுதாயத்திற்கு வேண்டிய எல்லாத் திறமைகளும் கிடைத்துவிடுகிறது.. மக்களுக்கு எதிர்பார்ப்பின்றி சேவை செய்வதற்கு திறமை முக்கியமில்லை ,மனம் தான் வேண்டும்..ஒரு சிலர் மக்களுக்குச் சேவை செய்ய பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றார்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு சேவை செய்ய முன்வருகிறார்கள் இந்தியாவில் இது இன்றைக்கு அரசியலாக உருவெடுத்துள்ளது .   
இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுகிறார்கள் .அதை நிறைவேற்றச் செலவு செய்யும் உரிமையும்  அவர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது .வரவும் செலவும் ஒருவரின் மேற்பார்வையிலேயே இருக்கும் போது ஒருவர் அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.. மக்களுக்காகச் செலவு செய்யப்படவேண்டிய நிதியைத் தன இஷ்டம் போல செலவு செய்வதும் , தங்களுடைய வசதியான வாழ்க்கைக்கு கொஞ்சம் ஒதுக்கிக் கொள்வதும் ஊழலாகின்றது .
வர்த்தக ஒப்பந்தங்களில் விலைப்பட்டியலில் அதிக விலையைக் குறிப்பிட்டு ஊழல் செய்கின்றார்கள் .அரசுக்குச் சொந்தமான இடங்களை குறைந்த விலைக்கு வாங்கியும்  , தனக்குச் சொந்தமான இடத்தை அரசுக்கு அதிக விலைக்கு விற்றும் ஊழல் செய்கின்றார்கள் .அரசுக் கட்டிடங்களைக் குறைந்த வாடகைக்கு எடுத்து வெளியில் அதிக வாடைக்கு விட்டு அரசின் வருவாயைக் குறைக்கின்றார்கள்
பணம் வாங்கி கொண்டு வரியைக் குறைத்துப் போடுகின்றார்கள். இதனால் அரசின் வருவாய் குறைகின்றது .கோயில் மற்றும் சுற்றுலாத் தளங்களில் சிறப்பு நுழைவுக் கட்டணம் பூங்கா, பொருள்காட்சி ,வாரச்  சந்தை, விமான நிலையம்   ,டோல் கேட் போன்ற இடங்களில் வரி வசூலில் ஊழல் செய்கின்றார்கள்
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் , கட்டுமானப் பணிகள், புதிய சாலைகள் போடுதல் . புனரமைப்புப் பணிகள் , பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் , பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில்  திட்டத் செலவை உயர்திக் காட்டி ஊழல் மூலம் அரசின் நிதியைக் கொள்ளையடிக்கிறார்கள்
மக்களிடையே தங்கள் செல்வாக்கை உயர்திக் கொள்ள ஆளும் அரசியல்வாதிகள்  இலவச சேலை, வேஷ்டி, இலவச எரி வளிமம் , இலவச வீட்டு உபயோகச் சாமான்கள் என வள்ளல் போல மக்களுக்கு அள்ளிக்கொடுப்பார்கள் இலவசங்களை இழக்க விரும்பாத மக்கள் இதில் நடக்கும் ஊழல்களைத் தட்டிக் கேட்பதில்லை . 

No comments:

Post a Comment