Friday, August 9, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 59

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
முயற்சியை இடையிலேயே விட்டுவிடுவதற்கு நூறு சாதாரணக் காரணங்கள் இருக்கலாம் , ஆனால் அதைத் தொடர்வதற்கு ஐந்து வலிமையான  காரணங்கள்  தான் இருக்கின்றன . சோம்பேறித்தனம் , உழைப்பின்றி சுகத்தை மட்டும் அனுபவிக்க நினைக்கும் மனம், அறியாமை , மறதி, பலவற்றில் காட்டும் ஆர்வத்தால் ஏற்படும் கவனக் குறைவு , உடல் நலக் குறைவு . புறத் தூண்டுதலால்  ஏற்படும் நிலை மாற்றம் , போன்ற காரணங்கள் கௌரவர்கள் போலவும் , சுய முன்னேற்றம் , குடும்ப முன்னேற்றம் , சமுதாய முன்னேற்றம், நாட்டு முன்னேற்றம் , உலக முன்னேற்றம்  போன்ற காரணங்கள் பாண்டவர்கள் போலவும்  இருந்து கொண்டு  சுய சிந்தனையை தன்வசப்படுத்த முயலுகின்றன . ஒருவருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே  கத்தியின்றி,ரத்தமின்றி எண்ணங்களுக்குள் நடக்கும் அந்தப் போரில்  ஒருவரே   தனக்குத் தானே எதிரியாக இருந்து கொண்டு சண்டை போடும்போது தோற்றுவிட்டால் தோற்றுவிட்டோம் என்று ஒருபோதும்  நினைப்பதில்லை  . 
உழைத்துப் பெற்று மகிழவேண்டிய சுகத்தை உழைக்காமலே அனுபவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலோ அல்லது  திருத்தாமல் அனுபவிக்க விட்டுவிட்டாலோ சோம்பேறித்தனம் உடலுக்குள்  வேண்டாத  விருந்தாளியாகக்     குடி கொண்டு விடுகின்றது .அப்புறம் அந்த வேண்டாத விருந்தாளியை வீட்டை விட்டு வெளியேற்ற சுய விருப்பமில்லாது போய்விடுகின்றது . காலம் தாழ்த்த தாழ்த்த அந்த விருந்தாளியை வீட்டை ஆளும் உரிமையாளராகின்றார். சோம்பேறித்தனம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளரவிடாமல் தடுத்துவிடுவதால் பகுத்தறிவையும் ,  ஆக்கப்பூர்வமான  செயல்களை செய்யவிடாமல் தடுப்பதால் சமுதாய நலம் சார்ந்த சுய முன்னேற்றத்தையும் இழக்கநேரிடும் . 
சமுதாய நலத்திற்காக தன்நலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஒவ்வொருவரும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் ,சுகங்களை அனுபவிப்பதற்காக மட்டும் இல்லை என்பதை புரிந்து கொள்ளாதவர்களே  உண்மையாய் உழைத்து உலக சுகங்கள் அனைத்தையும் தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியாது என்று எண்ணி உழைக்காமலே சுகங்களை அனுபவிக்கும் வழி முறைகளில் நட்புக் கொள்கின்றார்கள்.தகுதிக்கு மீறிய சுகங்கள் அளவுக்கு மீறிய அமிர்தம் போன்றது . இரண்டும் உயிர் வாழும் உடலுக்கு தீங்கிழைக்கக் கூடியவையே. 
எல்லாவற்றிலும் எல்லோரை விடவும் தான் ஒரு படி உயர்வாய்  இருக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதால் , ஒரு போட்டி மனப்பான்மை இயல்பாகவே தூண்டப்படுகிறது. இந்த போட்டி மனப்பான்மை சுய முன்னேற்றத்தை மட்டுமின்றி சமுதாய முன்னேற்றத்தையும் பாதுகாக்கு மாறு இருக்கவேண்டும் .சமுதாய முன்னேற்றத்தை மறந்தவர்கள் , சுய முன்னேற்றத்தை சுகத்திற்காக மட்டுமே மேற்கொள்வார்கள் .  அவர்களே  உழைக்காமலேயே சுகம் தேடுவார்கள்.இவர்கள்  சமுதாயத்திற்கு ஒரு தவறான வழிகாட்டிகளாக இருப்பது  சமுதாயத்தின் ஊமைக் காயமாகும்   
 நெறிமுறையோடு கூடிய வழிமுறையை முன்கூட்டியே அறிந்து கொள்ள அறிவும் அனுபவமும் தேவை . அறியாமையால் இவை தெரியாததால் , செயலின்மை  நிலைப்படுகின்றது . அறிவைத் திரட்டி வைத்துக்கொள்ளவே ஒரு முயற்சி வேண்டும். அந்த முயற்சி முழுமையில்லாத போது பயனுள்ள அறிவைவிட  பயனிலா அறிவு மிகுந்து விடுகின்றது .சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே பயனுள்ள அறிவு . மற்றவை பயனிலா அறிவு . மறதி சில நேரங்களில் பயனுள்ள அறிவைக் கூட பயனிலா அறிவாக்கிவிடுகின்றது. பயனில்லாத அறிவு எப்போதும் தோல்வியைத் தந்து சோர்வை ஏற்படுத்தும் 

No comments:

Post a Comment