Saturday, August 24, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 62

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
இளமையில் தேவையான அளவு கல்வியைக் கற்றுக் கொண்டுவிட்டால் எதிர்காலத் தேவைகள் எதுவானாலும்  அவற்றைப் பிறருடைய உதவியின்றி அந்தக் கல்வியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  ஒருவர் பெறும் கல்வி அவருக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடியதாகவும்  இருக்கின்றது .என்பதால் கல்வியின் முக்கியத்துவத்தை அறிஞர்களும் ,சமுதாயச் சிற்பிகளும்  அடுத்த தலைமுறையினரின் சிந்தனைக்கு  எடுத்துரைத்திருக்கின்றார்கள். அதை நமக்கு முன் வாழ்ந்து மறைந்து போன பன்னாட்டு அறிஞர்கள் பலர் நினைவில் கொள்ளத்தக்க பொன்மொழிகளாக மக்கள் மனதில் விதைத்துச் சென்றுள்ளார்கள் .
கல்வி என்பது ஆற்றல்மிக்க ஆயுதம் . அதைக்கொண்டு ஒரு தனிமனிதன் கூட இந்த உலகில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் - நெல்சன் மண்டேலா 
கல்விக்காகச் செய்யும் மூலதனம்  பிற்காலத்தில் நல்ல வட்டியுடன் திருப்பிக் கிடைக்கின்றது - பெஞ்சமின் பிராங்க்ளின் 
அறிவே ஆற்றல் . கருத்துக்கள் அதை வெளிப்படுத்துகின்றன .கல்வியே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ,குடும்பத்திற்கும் முன்னேற்றத்திற்கான கருவாக இருக்கின்றது       - கோபி அனான்
உண்மையான கல்வியின் நோக்கம் அறிவுக் கூர்மையையும் , வாழ்வியல் பண்புகளையும் ஒருசேரத் தருவதாகும் - மார்ட்டின் லூதர் கிங் 
மக்கள் ஆட்சியில் உண்மையான பாதுகாப்பு கல்வி தான். கல்வியைத்தவிர வேறெதுவுமில்லை .- அரிஸ்டாட்டில் 
ஒரு தலைமுறையினரின் வகுப்பறைக் கருத்துக்கள் அடுத்த தலைமுறையில் அரசின் கொள்கையாகிவிடுகின்றது - ஆப்ரகாம் லிங்கன் 
கற்றுக் கொள்வதில் சுய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் ,அவருடைய  வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - அந்தோணி ஜே ஏஞ்சலா 
கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல் . ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூல வேர் -பிளேட்டோ 
குழந்தைகளைச் சிந்திக்கும்படிதூண்டுவதே கல்வியின் அடிப்படைக் குறிக்கோள் - ஜான் டூபி
கல்வியின் முக்கியத்துவத்தை மனதிற்கொண்டு , பிச்சை எடுத்தாவது  இளமையில் கல்வி பயில் என்று தமிழ் சான்றோர்கள் கூறுவார்கள் 
கல்வியில் சிறந்த ஆசிரியர்களே சமுதாயத்திற்கு நல்ல மாணவர்களை உருவாக்கிக் கொடுக்கக் கூடியவராக இருக்கின்றார் .கல்வி கற்று பயிற்சி பெற்ற தொழிலாளர்களே தங்கள் வேலையை கடமை உணர்வோடும் ,பொறுப்போடும் செய்து முடிக்கின்றனர் . கல்வியில் தேர்ந்த பொறியாளர் , கட்டுமானப் பணிகளை தரமாகச் செய்யும் தன்மை யுள்ளவராக இருக்கின்றார் . கல்வி கற்ற மக்களே நல்ல பண்பாளர்களாகவும் குடிமக்களாகவும் இருக்கின்றார்கள் . நல்ல ஆட்சியாளர்களே நாட்டின் வளத்தை மேம்படுத்த முடியும். கல்வி கற்ற அரசியல்வாதிகளே மக்களின் மனதை வாசித்தறிந்து  அவர்களுடைய நியாமான தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். கல்வியே நல்ல மனிதனை , நல்ல குடும்பத்தை , நல்ல சமுதாயத்தை , நல்ல நாட்டை உருவாக்க உள்ளார்ந்த காரணமாக இருக்கின்றது 

No comments:

Post a Comment