Sunday, August 25, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 63
தமிழ் இலக்கியங்களில் கல்வி  
கல்வியின் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கிய நூற்கள் மிக ஆழமாகவும் அழகாகவும் எடுத்துக் கூறியுள்ளன . அனைத்ததையும் எடுத்துக் கூறுவது இந்நூலின் நோக்கமல்ல , என்றாலும் ஒரு சிலவற்றை அறிந்து கொள்வது நம் சிந்தனைகளை நெறிப்படுத்திக் கொள்ள நன்மையளிக்கும். 
ஒரு மனிதனுக்கு அழகு ஆடையோ ஆபரணமோ இல்லை , உடல் வனப்போ , வாசனைத் திரவியமோ இல்லை   கல்வியறிவே  உண்மையான அழகாகும் என்று நாலடியார் பின்வரும் பாட்டில் குறிப்பிடுகிறது.
              “குஞ்சி யழகும் கொடுந்தனை கோட்டழகும்                                                                                                                                  மஞ்ச ளழகு மழகல்ல –நெஞ்த்து                                                                                  நல்லம்யா மென்று நடுவு நிலையால்                  கல்வி யழகே யழகு” (நாலடி)
நடுவு நிலைமை உடைய ஒழுக்க வாழ்க்கை தரும் கல்வி அழகே முதன்மை  அழகு. கல்வி கற்று அழகுமிக்கவர்களாகத் திகழும் இவர்கள் யாராயினும் அவர்களை உலகம் உள்ளளவும் போற்றும் என்பதை நாலடியார் குறிப்பிடுகிறது 
                           “கடைநிலத் தோராயினுங் கற்றறிந் தோரை                                                தலைநிலத்து வைக்கப் படும்”
கற்றவர் வாழும் போதும் , வாழ்ந்து மறைந்த பின்பும் அவர்கள்புகழை  நிலைத்திருக்கச் செய்வது கல்வியே. கல்லாமை  என்னும் கொடிய நோயை நீக்கவல்ல அருமருந்து கல்வி ஒன்றேயாகும். இதனை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் பின்வரும் பாடல் மூலம் தெரிவிக்கின்றது .
                “இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்                                                                                              தம்மை விளக்குமால் தாமுளராக் கேடிண்றால்                                                                                                எம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல்                                                                                                     மம்ம ரறுக்கும் மருந்து” 
ஒருவன் தன் பிள்ளைகளுக்குச் செல்வம் எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே,பொன்னும் பொருளுமல்ல  என்பதை   “விச்சை மற்றல்ல பிற’ என்ற பாடல் வரி தெரிவிக்கின்றது . அறிவு செல்வத்தைவிட மேலானது. ஏனெனில் செல்வத்தை நாம் கவனிக்க வேண்டும் . அறிவோ நம்மை கவனித்துக் கொள்ளும் .செல்வம் திருடப் படலாம் . அறிவை யாரும் திருடவே முடியாது, செல்வம் செலவழிக்க குறையும் , அறிவோ பெருகும்  .செல்வத்தால் வேண்டிய கல்வியைப் பெறமுடியாது ஆனால் கல்வியால் தேவையான செல்வத்தை ஈட்டமுடியும்   .பொருளைக் கொடுத்து வாழ வைப்பதை விட  பிறர் உதவியின்றி தனக்குத் தேவையான அப்பொருளை ஈட்டி தானே வாழக் கூடிய நம்பிக்கை தரக்கூடிய கல்வியைக் கொடுப்பதே சிறந்தது.    
பழமொழி நானூறு என்ற சங்கம் மருவிய இலக்கியத்தில் கல்வி பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன.கல்விக்கு கரையில்லை, கல்வி என்பது  வாழ்நாள் முழுதும்  தொடரும்  உள்ளார்ந்த செயல் என்றாலும் என்றாலும் வாழ்கைக்குத் தேவையான அடிப்படைக் கல்வியை எது தீயது என்பதை இனமறியா இளம்வயதிலேயே  முடித்துவிடவேண்டும். இல்லாவிட்டால்  தீய எண்ணங்களின் ஆக்கிரமிப்பால் கல்வியின் நிறமும் தரமும் மாறிப்போய்விட வாய்ப்பு ஏற்படுகின்றது .கற்பதற்குரிய இளம் பருவத்தில் கல்வியைக் கல்லாதவன் முதுமையில் கற்று வல்லவன் ஆக முடியாது என்ற கருத்தை “சுரம் போக்கி உல்கு கொண்டாம் இல்லை’ என்ற பாடல் வரி கூறுகின்றது .   கற்கும் போது வற்றாத ஆர்வத்தால் தொடர்ந்து அறியாதனவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் . ஆர்வம் வற்றிப் போய்விட்டால்  ஏற்படும் சோர்வால் கற்பது தடைப்பட்டு போகும் . அரைகுறையான கல்வியால் நன்மையை விட தீமையே அதிகம் என்பதால் தளர்ச்சியில்லாது தான் கல்லாதவனாய் எண்ணிக் கற்க வேண்டும் என்ற கருத்தை    “கற்றொறும் தான் கல்லாதவாறு’ என்ற பாடல் வரி எடுத்துரைக்கின்றது . 
“மறுமைக்கு அணிகலம் கல்வி’  என்கிறது திரிகடுகம். மறுபிறப்பிலும் நன்மைபெற ஒருவர் இம்மையில் கற்றுச் சிறக்கவேண்டும் என்ற கருத்தை இது கூறுகின்றது.ஒரு சமுதாயம் தொடர்ந்து ஒழுக்க நெறியுடன்  வாழும் போது தான் அது சாகாத சமுதாயமாக நிலைத்து வாழ்கின்றது . அப்படி ஒரு சமுதாயம்  அமைய கற்றோரின் அறவியல் அறிவுரைகளே காவலாய் இருக்கின்றன. இறந்த பின் இயற்கையின் விதிப்படி மீண்டும் அதே சமுதாயத்தில் பிறக்கும் போது  நிலைத்த சமுதாய ஒழுக்கமே புதிய வாழ்க்கைக்கு பாதுகாப்பாய் இருக்கின்றது என்ற உட்பொருளை இது கூறுவதாய் இருக்கின்றது .
இனியவை நாற்பது கல்வி கற்றலின் இனிமையை  சுட்டிக்காட்டுகின்றது  “பிச்சை புக்காயினும் கற்றல் மிக் இனிதே’ (பிச்சை எடுத்து உண்டாயினும் கற்க வேண்டியவற்றைக் கற்றல் மிகவும் இனிதாகும்) ,  “கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே’ (கற்க வேண்டிய நூல்களைக் கற்று அவற்றின் பொருளை உணர்ந்தவர் சொல்லின் பயன்  இனிதாகும் ),  “கற்றலிற் காழினியது இல்’ (நன்மைதரக்கூடிய  நூல்களைக் கற்பது  இனியத்துள் இனியதாகும் )  போன்ற வரிகள்  கல்வியின் சிறப்பை படம்பிடித்துக் காட்டுகின்றன .
 எண்வகை ஒழுக்கங்களுள் கல்வியும் ஒன்று என்று கூறும் ஆசாரகோவை “கல்வியோடு ஒப்புரவாற்ற அறிதல்’ நலமுடையது என்றும்  தெரிவிக்கின்றது  .

1 comment: