Sunday, January 8, 2023

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஆட்சியாளர்கள் மக்களின் அறிவாற்றலை வளர்க்க,திறமைகளை மேம்படுத்த உரிய முயற்சி மேற்கொள்வதில்லை .  இருக்கும் அறிவாற்றலையும் ,திறமைகளையும்  பயன்படுத்தி நாட்டின் வளத்தை உயர்த்துவதில்லை. பொருள் உற்பத்தியைப் பெருக்கி அனைவருக்கும் வேலைவாய்ப்பும் வருவாயும்  கிடைக்க தொழிற்சாலைகளை உருவாக்குவதில்லை .அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து படைப்புக்களில் புதுமைகளை ஏற்படுத்தி உள்நாட்டு வர்க்கத்தையும்  மற்றும் ஏற்றுமதி மூலம் உலக வர்த்தகத்தையும் உற்சாகப்படுத்துவதில்லை .  மக்களிடம் வரி வசூலிக்க மட்டும் உயிர்ப்புடன் இருக்கும் திட்டங்கள் , வளர்ச்சித் திட்டங்களாகத்  தீட்டப்படுவதில்லை . திட்டச் செலவுகள் திட்டங்களை முழுமைப்படுத்துவதற்காக மட்டுமே செலவழிக்கப்படாமல் . ஒப்புக்கொள்ளமுடியாத நிர்வாகச் செலவுகளினால் பற்றாக்குறை யை ஏற்படுத்திவிடுகின்றார்கள் ,அதனால் எந்தத் திட்டமும் முன்திட்டமிட்ட பயன்களை மக்களுக்கு முழுமையாக வழங்குவதில்லை .ஒரு சில திட்டங்களையே முழுமைப்படுத்த மீண்டும் மீண்டும் திட்டச்செலவை அதிகரிக்க ,புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களாக வரும்போது அவர்களுக்கு விதிமீறிய வருவாய் கிடைக்க சட்டத்தின் கைகளை கட்டிப்போட்டு விட்டு  சட்டத்திற்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்கின்றார்கள் . இந்த வாய்ப்பு ஆட்சியாளர்களுக்கு மட்டுமே இருப்பதால் , எதிர் கட்சியினர் எப்போதும் ஆளும் கட்சியை எதிர்த்தே செயல்படும் போக்கை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .இவர்களால் ஆட்சியாளர்கள் நல்ல திட்டங்களைச்  செயல்படுத்த விரும்பினாலும், முடிவதில்லை. ஒரு தவறு திருத்தப்படவேண்டுமானால் ,திருத்துவதற்குத் தகுதியான நபர் அல்லது அமைப்பு இருக்கவேண்டும் .மக்கள் தவறு செய்தால் காவல் மற்றும் நீதித் துறைகள் உள்ளன. ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக நடந்து கொண்டால் இருக்கும் அமைப்புக்களே போதுமானது ஆனால் ஆட்சியாளர்கள் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை  தவறுசெய்தால் அவர்களைத் திருத்த இப்பொழுது இருக்கும் அமைப்புக்களினால் இயலவில்லை . மாறாக சமுதாயத்திற்கான அமைப்புக்களை அவர்களுடைய பாதுகாப்பிற்கான அமைப்புகளாக மாற்றிக்கொண்டு வருகின்றார்கள் .இந்த நிலைமாற்றம் மேலும் மேலும் ஆட்சியாளர்களின் மறைவொழுக்க நடவடிக்கைகளையே அதிகரிக்கும்        

No comments:

Post a Comment