Sunday, December 3, 2023

கோயிலில் பாக்குவைத்து திருமணத்தைப் பதிவு செய்தல்

 கோயிலில் பாக்குவைத்து திருமணத்தைப் பதிவு செய்தல்

 திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இரு வீட்டாரும் அவர்கள் சார்ந்திருக்கின்ற கோயில்களுக்குச் சென்று திருமணத்தைப் பதிவுசெய்து மனமக்களைப் கோயில் புள்ளியாக்க வேண்டும் .இதற்கு பங்காளிகளில் ஒருவர் சென்று வர போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் .அவர்கள் இருவீட்டாரின்  திருமண அழைப்பிதழ்கள் மணமகன்/மணமகள் பெயர் மற்றும் ஒளிப்படம் , இரு வீட்டாரின் கோயில் பிரிவு, வகை, தகப்பனார் பெயர் ,ஊர் , வீட்டு முகவரி ,திருமண நாள்,திருமணம் நடைபெறும் இடம் நேரம் முதலிய விவரங்களை கோயில் பதிவேட்டில் ஏற்றக் கொடுக்க வேண்டும், அப்போது அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்கு உரிய விண்ணப்பப்படிவத்தை முன்கூட்டியே பெற்று உரியவர்களிடம் (மணமகன் அல்லது மணமகளின்  தந்தை மற்றும் கோயில் பங்காளிகளில் ஒருவர்  மற்றும் கோயில் காரியக்காரர்களிடமிருந்து) கையொப்பம் வாங்குவதை முன்கூட்டியே செய்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.    

 

இந்த திருமணத்தை ஒப்புக்கொண்டு கோயில் புள்ளியாகச் சேர்த்துக்கொண்டதற்கு அறிகுறியாக திருமணத்திற்கு முதல்நாள் இரண்டு கோயில்களிலிருந்தும் கோயில் பணியாட்கள் மூலம்  மாலை விபூதிப் பிரசாதம் போன்றவற்றை அனுப்பி வைப்பார்கள்  இதைப் பெண்கள் சங்கு ஊதி வாங்கி சுவாமி அறையில் வைத்து திருமண நாளன்று பயன்படுத்த வேண்டும். கோயில் மாலை என்பது முக்கியமானது .ஏனெனில் நகரக் கோயில் களிருந்து இவ்வாறு மாலை வந்தால் மட்டுமே அந்தத் திருமணம் நகரத்தார் சமூகத்தால்  ஒப்புக்கொள்ளப்படும்  மேலும்  மணமக்கள் நகரத்தார்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு புள்ளியாக அங்கீகரிக்கப்படுவார்கள் .கோயில் மாலை கொண்டுவரும் பணியாள் மூலம் கோயில் அலுவலகம் கொடுத்திருக்கும் குறிப்புப்படி அவருக்கு கொடுக்கவேண்டிய தொகை யைக் கொடுத்து அனுப்பிவைக்கவேண்டும். மாப்பிள்ளை வீட்டாருக்கு கோயிலிலிருந்து  வரும் இரு மாலைகளில் ஒன்றை மாப்பிள்ளை, மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்னர் அணிந்து கொள்ளவேண்டும் .மற்றொரு மாலையைத்  திருப்பூட்டுத் தட்டில் வைத்து மாப்பிள்ளையின் தாயார்   மாப்பிள்ளை அழைப்பின் போது பெண் வீட்டிற்கு கொண்டு சென்று திருப்பூட்டு வதற்கு  முன்னர் மாப்பிள்ளை மூலம் மணப்பெண்னின் கழுத்தில் கோயில் மாலையை முதலாவதாக அணிவிக்க வேண்டும். பெண் வீட்டாருக்கு வரும் இரு கோயில் மாலைகளுள் ஒன்றை திருமணத்தன்று காலையில் பெண் அணிந்து கொண்டு பகவணம் செய்து கொள்வார்  ,மற்றொன்றை அரசாணிக் காலில் கட்டிவிடுவார்கள்.  

 

இரணிக்கோயிலாரும் பிள்ளையார்பட்டி கோயிலாரும் இளையாற்றங்குடி கோயிலிருந்து பிரிந்து வந்ததினால் இவ்விருவரும் இளையாற்றங்குடி கோயிலில் பாகு வைத்த பின்னர் தான் தங்கள் தங்கள்கோயில்களில் பாக்கு வைத்து திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும்

No comments:

Post a Comment