Saturday, July 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 55

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
இந்த உலகில் ஒரு மனிதன் தொடர்ந்து  உயிர்வாழ, அவனுக்கு முதலில் அவன் மீதே நம்பிக்கை இருக்க வேண்டும் . தன் வாழ்க்கைக்கு என்ன இடையூறு வந்தாலும் அதை எதிர்கொண்டு தாக்குப் பிடித்து வாழமுடியும் என்ற மன உறுதியைத் தருவது இந்த நம்பிக்கைதான் அடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களிடம் ஏற்படும் நம்பிக்கை இயற்கையானது. பிற உறவினர்களிடம் ஏற்படும் நம்பிக்கை நம் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவைப் பொருத்தது. தேவையான போது மட்டும் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பது நிலைத்து நின்று நற்பயன் தருவதில்லை .  நம் வளர்ச்சிக்கு யார் பிரதிபலன் பாராது உதவுகின்றார்களோ அவர்களே உண்மையில் நம் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகின்றார்கள். அதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாதவர்கள்  ஏமாந்து போகின்றார்கள் . இதற்கு ஒருவர் தன்னை தானே பரிபூர்ணமாக உணர்ந்து, தனது திறமை, சுய வலிமை என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒருவர் தன்னைத்தானே அறிந்து கொண்டிருப்பது என்பது , தன்னால் என்ன செய்ய முடியும், தனக்குள்ள திறமைகள் என்னென்ன, தன்னால் அதிகபட்சமாக என்ன சாதிக்க முடியும்?  பலம் என்ன என்பதோடு பலவீனம் என்ன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். திறமையையும் , திறமையின்  பயனுறு திறனையும் அதிகரிக்க  கல்வி அவசியம். இது அடிப்படைக் கல்வியோடு . விருப்பப்பட்ட திறமைக்குத் தேவையான ஆதாரக் கல்வியையும் பெறுவதில் அடங்கியிருக்கின்றது  கற்பனைகளுக்கு உருவம் கொடுப்பதற்கும் , முயற்சிகளுக்கு பலன் அளிப்பதற்கும் .கடின உழைப்பை புத்திசாலித்தனமான  உழைப்பாக மாற்றுவதற்கும்  இந்தக் கல்வி துணைபுரிகின்றது . 

வாழ்க்கையில் வெற்றி  பெற்றவர்களின் சுயசரித்திரம் நமக்கு  ஒரு  உண்மையை அறிவுறுத்திக் கூறுகின்றது. வெற்றிக்கு வேண்டியது திறமை மட்டுமில்லை அந்தத் திறமையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் ஆகும். நம்பிக்கையற்ற திறமை முழுமையான திறமையாகாது, இறுதியில் பயனேதும் தருவதுமில்லை. நம்பிக்கையின் ஒரு பகுதியை கல்வியாலும் , மற்றொரு பகுதியை அனுபவத்தாலும் வளர்த்துக் கொள்ள முடியும்  கல்வி என்பது படிப்பறிவு. இதன் மூலம் நம் முன்னோர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளலாம்  , அனுபவம் என்பது செய்முறைக் கல்வி. அவர்களுடைய அனுபவங்களைப் புரிந்து கொள்ளலாம் ஒருவருடைய வாழ்க்கையின் பிற்பகுதி அறிந்து கொண்டதை விட புரிந்து கொண்ட அனுபவங்களின் அடிப்படையிலேயே அமைகின்றது . மனதில் நம்பிக்கை துளிர்த்துவிட்டால்  அதற்கடுத்து ஏற்படும் அனுபவமானது இந்த நம்பிக்கையை மேலும் செம்மைப்படுத்தும்.
இந்தியாவில், யானையின் காலை பெரிய கையிற்றால் கட்டி வைப்பார்கள் . அந்தக் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும் அளவிற்கு யானைகள் வலுவானவைதான். ஆனால் எந்தவொரு யானையும்  அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், யானை குட்டியாக இருக்கும்போதே இதுபோன்ற கயிற்றால் கட்டுகிறார்கள். அந்த கயிற்றை அறுத்துக்கொண்டுஓடும் வலிமை குட்டி யானைக்கு இல்லாதிருப்பதால்  அது பல முறை முயன்று தோற்றுப் போய்.  இந்த கயிற்றை நம்மால் அறுக்க முடியாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு விடுகின்றது. பெரிய யானையாக வளர்ந்த பிறகும் இந்த நம்பிக்கையை மாற்றிக் கொள்வதில்லை ஒரு யானை, பூனை போல அடங்கி  இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அந்த யானை தன் வலிமையை உணராமல் இருப்பதுதான். உண்மையில் தன்னால் முடிந்தும், தனது பழைய அனுபவத்தின் அடிப்படையில் உருவான நம்பிக்கையால் யானை கயிற்றில் அகப்பட்டு கிடக்கிறது. என்பதை இந்தக் கதை மூலம்  புரிந்து கொள்ள முடிகின்றது . 
இந்த யானை மாதிரி வாழ்ந்தால் ,நாமும் நம் வலிமையை அறியாது வாழ்க்கையில் காண வேண்டிய முன்னேற்றத்தை தவற விட்டுவிடுவோம்.  என்றோ, எப்போதோ ஒரு முயற்சியில் தோற்றுப் போயிருந்தால் அன்றைய நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறாக இருக்கும். அன்று முடியாதது இன்று முடியும். எனவே தோல்விக்கு காரணமாக இருந்த பழைய அனுபவத்திலிருந்து வெற்றிக்கான  பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முறை ஒரு விஷயத்தில்  தோல்வி ஏற்பட்டால், வாழ்க்கை முழுவதும் அந்த விஷயத்தில் தோல்வி ஏற்படும் என்று அர்த்தமல்ல.அனுபவங்கள் எல்லாம் சூழ்நிலைகளைப் பொறுத்தன.அனுபவங்களை அறிந்து கொள்வதோடு சரியாகப் புரிந்து கொண்டுவிட்டால் எல்லா அனுபவங்களும் நற்பயன் தரும். 

No comments:

Post a Comment