Sunday, July 21, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 54

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை அவர்களுடைய கையில் இருக்கின்றது என்று பெற்றோர்கள் கைகட்டிக்கொண்டு  சும்மா இருக்கமுடியாது .  அவர்களுடைய வாழ்க்கையின் பயனுறுதிறனை மேம்படுத்திக் கொள்வதும் கொள்ளாததும் அவர்களுடைய விதி என்றும் அதைத் தீர்மானித்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுடையதே என்றும் நினைத்துக் கொண்டு பெற்றோர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும். உண்மையில்  இனிய சமுதாயத்தை அப்படியே எடுத்துச் செல்ல வளரும் குழந்தைகளை வாழும் மனிதர்கள் உருவாக்க வேண்டும் என்று  இயற்கையாலும் ,இனிய சமுதாயத்தாலும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பே இது .விதியின் பெயரைச் சொல்லி பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்வது மதியற்ற  செயல்.ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும்  விதியே தீர்மானிக்கின்றது என்றால் வாழ்க்கையைத் தொடர்வதற்கு மதி தேவையில்லாததாகி விடுகின்றது . விதியை மதி என்றாலும் அந்த விதிகளை ஏற்படுத்தியதே மதிதான் என்பதை மறந்துவிடக் கூடாது , விதியை மதியால் வென்று வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்க முடியும் .அதைச் செய்து காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இயற்கை  பெற்றோர்களின் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கின்றது. இயற்கையின் அந்தப் பரிட்சையில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே இனிய சமுதாயத்தை வாழ வைக்கின்றார்கள் .
ஒருவருடைய வாழ்க்கையின் முடிவு விதியால் முன்திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் .ஆனால் அவருடைய வாழ்க்கையின் போக்கு முழுதும் விதியால் தீர்மானிக்கப் படுவதில்லை. திட்ட மாறுதல்களுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதை ஒரு ஜென் துறவியின் கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம் .
ஓர் ஏழை தொடர்ந்து வறுமையில் வாழ்ந்து வந்தான் .செய்த முற்சிகளில் ஒவ்வொருமுறையும்  தோல்வியே கண்டதால்  அவனுக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு உண்டானது. எவ்வளவு முறை முயன்றாலும் தோல்விதான் கிடைக்கும் என்று ஜாதகம் கூறியதை நம்பி முயல்வதை விட்டுவிட்டான். முற்பிறப்பில் செய்த பாவங்களே விதியாகி தன்னை ஆட்டுவிப்பதாக நினைத்துக் கொண்டான் . ஒருநாள் அவன் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டான் . அப்போது அப்பக்கமாக வந்த ஒரு ஜென் துறவியிடம் தனக்கு விதியால் ஏற்படும் துன்பங்களை எடுத்துக்கூறி மனம் நொந்து கொண்டான் ."விதியை மதியால் வெல்லமுடியும் , உன் மதியை பயன்படுத்தலாமே"  என்றார் . அதற்கு "விதி கடவுளின் முடிவு அதைத் திருத்த மனிதர்களால் முடியாது" என்று வறுமையின் வெறுப்பில் கூறினான்.வார்த்தைகள் பயனளிக்காததை உணர்ந்த துறவி செயலில் விளக்க ஆரம்பித்தார். ஒரு சிறிய கல்லை மேல் நோக்கி எறிந்து விட்டு இந்தக் கல்லின் விதி என்ன என்று கேட்டார் . அதற்கு அந்த ஏழை அந்தக் கல் இதே இடத்தில் தரையில் வந்து விழும் என்றான் . மதியால் இந்தக் கல்லின் விதியை மாற்றிக் காட்டுகின்றேன் பார் என்று சொல்லிக் கொண்டே மற்றொரு கல்லை வீசி எறிந்து கீழே விழும் அந்தக் காலோடு மோதச் செய்து விலகி வேறொரு இடத்தில் விழுமாறு காட்டி இப்பொழுது என்ன சொல்கிறாய் என்று கேட்டார் .  அதைப்பார்த்த ஏழை "கீழே விழுவதுதான்  கல்லின் விதி அது எந்த இடமாக இருந்தால் என்ன" என்று   ஒப்புக் கொள்ள மறுத்தான்.அதற்கு  அது விதியாக இருக்கலாம் ஆனால் இது புதிய விதி இல்லையா என்று கேட்டார். இதே செயலை  மீண்டும் துறவி செய்து கீழே விழும் கல் தரையில் விழாமல்  தன் கையால் பிடித்துக் கொண்டார். இப்பொழுது என்ன சொல்கிறாய் என்று கேட்க கீழே விழுமிடம் தரையாக இருந்தாலென்ன , கையாக இருந்தாலென்ன  என்று சொல்லி அப்போதும் அந்த  ஏழை மதியின் வலிமையை ஒப்புக்கொள்ள மறுத்தான்.  மூன்றாவது முறையாக அந்தத் துறவி அதே செயலைச் செய்து விட்டு , மற்றொரு கல்லை வேகமாக எறிந்து . கீழே விழும் கல்லை பொடியாக்கி வளி மண்டலத்திலேயே தூசியாக மிதக்குமாறு  செய்து காட்டினார் . இதை ப் பார்த்து   திகைத்துப் போய் நின்றுகொண்டிருந்த ஏழையைப் பார்த்து  " விதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றாலே , விதி மதியின் கீழ் அடங்கிவிடுகிறது. மதியை வளர்த்து கொள்ளாதவர்களும் , நம்பிக்கையற்றவர்களுமே விதி வழிச் சென்று துன்பத்தில் சிக்கிக் கொள்கின்றார்கள் .கல்லின் விதியை என் விருப்பம் போல மாற்றிக் கொண்டேன் ,அதைப்போல உன் வாழ்க்கையின் விதியை நீயும் மாற்றிக் கொள்ள முடியும்." என்று கூறினார் . அந்த ஏழைக்கு கொஞ்சம் ஞானம் வந்தது போல இருந்தது . 

No comments:

Post a Comment