Friday, July 19, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 52

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
தூக்கம் வராவிட்டாலும் தூங்குமாறு சில பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவார்கள் வேறு சிலர் கைபேசி , தொலைக்காட்சி போன்றவைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள் .இவர்கள்  தங்கள் குழந்தைகள் பொன்னான நேரத்தை எப்படியெல்லாம் வீணாக்குவது என்பதை கற்றுக்கொடுத்து விடுகின்றார்கள். நேரத்தை வீணாக்குவது என்பது செயலின்மையின் தொடக்கம் .செயலின்மை மனதில் உட்புந்துவிட்டால் , அது நிலைப்படுத்திக் கொள்ள முயலும்.  முன்னேற்றம் தடைபட்டுப் போவதற்கு முக்கியமான அகக் காரணங்களுள் இது தலையாயது . ஏனெனில் இது ஒருவருடைய விருப்பத்துடனேயே செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்வதற்கான வாய்ப்புகள் இல்லை .   பொழுது போக்கிற்காகவே இவற்றைப் பயன்படுத்தப் பழகிய குழந்தைகள் பிற்பாடு இவற்றை மட்டுமின்றி பிறவற்றையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்டுத்த முழுமனதுடன் சுய விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை என்பது பின்விளைவின் துணை விளைவுகளாகும் .எனவே குழந்தைகள் வேண்டாதனவற்றைக் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் அதற்கு முன்பாகவே நல்லனவற்றை  கற்றுக்கொள்ள இருக்கும் வழிகளை விரிவுபடுத்திக்  கொடுக்க வேண்டும்.சின்னச் சின்னச் விஷயங்கள் கூட, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திவிடக் காரணமாக இருக்கின்றது  என்பதால் புற ஊடகத் தொடர்பின்றி வளரும் குழந்தைகளின்  வளர்ப்பில்  பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டியதின் அவசியத்தை இது வலியுறுத்திக் கூறுகின்றது.  
கைபேசி , தொலைகாட்சி போன்றவற்றை கல்வி கற்றலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் .  ஆனால் அப்பயன்களுக்காக  பயன்படுத்த   வேண்டும் போது, பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்தப் பழகிய குழந்தைகள், பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு  வேண்டா வெறுப்புடனேயே செய்கின்றன .  விருப்பமும்  செயலும் ஒன்றுபடாததால் செயலின் பயனுறு திறன் வெகுவாகக் குறைந்து போகின்றது .
பொதுவாக குழந்தைகள் முதலில் தங்கள் பெற்றோரைப் பார்த்து தானும் செய்யத் தெரிந்து கொள்கின்றது. பெற்றோர் படித்தால் தானும் படிக்கின்றது , தூங்கினால் தானும் தூக்குகின்றது . விளையாண்டால் விளையாடுகிறது , தப்பு செய்தால் தானும் அதே தப்பை பிசகாமல் செய்கின்றது. பெற்றோர்கள் செய்யும் திருத்தங்களால் செயலைச் செம்மையாகச் செய்ய கற்றுக்கொள்கிறது .எப்போதும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை கட்டாயப்படுத்தியே  குழந்தைகளின் மீது திணித்துவிடுகின்றார்கள்  .எது பெற்றோர்களின் விருப்பமோ அதுவே குழந்தைகளின் விருப்பமாக இருந்தால் மட்டுமே குழந்தைகளால் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது .பெற்றோரின்  விருப்பம் குழந்தையின் விருப்பமாகவும் இருக்க  அதற்கான செயல்களும் ஒன்றாக இருக்கவேண்டும் .எடுத்துக்காட்டாக குழந்தை நன்கு படிக்க வேண்டும் என்று விரும்புனால் , பெற்றோரும் அவர்தம் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டும் .வேண்டாதனவற்றை கற்றுக்கொண்டு அதில் அளவில்லாத விருப்பத்தை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக தொடங்கும் கல்வி வளர்ச்சியில் இடைத்தடைகள் வருவதேயில்லை என்பதை ஒரு சில பெற்றோர்களே நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் . குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களும் குழந்தையைப் போல குழந்தைகளுடன் சேர்த்து படிப்பது மிகையான பலன் தரும். அப்போது உச்சரிப்புக்கள் , சொற்களின் பயன்பாடு , பொருண்மை வேறுபாடு போன்றவற்றை எளிய சொற்கள் மூலம் விளக்கிக் கூறவேண்டும் . குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள் , சிறுவர் பாடல்கள் . எளிய கணக்குகள்  போன்றவைகளுக்காக அடிக்கடி நூல்கள் வாங்கி கொடுத்து அதையும் அவர்களுடன்  சேர்ந்து படிக்கலாம் . குழந்தைகள் புரியாமல் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுப்பது அவசியம். காரணம் தெரியாவிட்டால் ,தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விளக்கிக் கூறுங்கள்.
தன் குழந்தையின் அறிவு வளர்ச்சி மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக  கட்டாயப்படுத்தி துரிதப்படுத்தாதீர்கள் .அதிக அழுத்தம் எதிர்மறையான பின் விளைவுகளையே ஏற்படுத்தும் .இயற்கையில் சீரான வளர்ச்சியில் விளைந்தன மட்டுமே நிலைத்து நிற்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள் எப்போதும் அவசரப்பட மாட்டார்கள்.
அறிவு வளர்ச்சிக்கு உடல் நலம் மிக முக்கியம். எனவே அறிவும் , உடல் நலமும் சரிசம விகித்தில் ஊட்டப்பட்ட வேண்டும் . உடல்நலமில்லாத அறிவு வளர்வதில்லை , அறிவில்லாத உடலால் பயனில்லை . எனவே குழந்தைகளின் உடல் நலத்திற்கான விளையாட்டுக்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஈடுபடுவது அவசியமாகும் .இது பெற்றோர்கள் மீது குழந்தைகள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
ஒன்றில் கொண்டுள்ள ஈடுபாடு ,மற்றொன்றில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச ஈடுப்பாட்டை நீக்கிவிடாமல் இருக்க அபரிதமான ஈடுபாடு கொள்வதை தடுக்க வேண்டும். .குழந்தை வளர்ப்பில் தவறு செய்ய அனுமதித்து விட்டு குணப்படுத்துவதை விட முழுமையாகத் தவிர்ப்பது நல்லது .    

No comments:

Post a Comment