Tuesday, December 7, 2010

Arika ar5iviyal-20

நுண் புழை ஏற்றத்தில் குழாயின் நீளம் குறைவானால் .......





ஒரு நீர்மத்தில் நுண் புழைக் குழாயின் ஒரு முனை அமிழ்ந்து இருக்குமாறு செங்குத்தாக நிறுத்தினால் நீர்மத்தின் மட்டம்
அதில் உயரும் .இதற்கு காரணம் பரப்பு இழுவிசை .இதன்
மேல் நோக்கிய செங்குத்துக் கூறு, நீர்மத் தம்பத்தின் எடையை
ஈடு செய்கின்றது.அக் குழாயில் இருக்கும் நீர்மத்
தம்பத்தின் உயரத்தை விட குழாயின் நீளம் குறைவாக
இருக்குமானால் என்ன நிகழும் ?


                                               *********************

நுண் புழையில் மேலுயரும் நீர்மத்திற்கு அதன் நீளம்
பற்றி அறியாததால் புழையில் நீர்ம மட்டம் உயரும் .
ஆனால் முனையில் வளைபரப்பின் ஆரம் அதிகரித்து
பரப்பு இழுவிசை கிடைமட்டம் நோக்கிச் சாயும் .
இதனால் அதன் மேல் நோக்கிய செங்குத்துக் கூறு குறைவாக ,
குறைந்த உயரமுள்ள நீர்தம்பத்தின் எடையைச்
சமன் செய்கிறது .சுழி உயரத்தில் புழையில் உள்ள
நீர் மட்டம் கிடைமட்டமாகவும், உயரம் அதிகரிக்க
அதிகரிக்க வளைவாரம் குறைந்து இயல்பாக இருக்கும்
நிலையை அடையும் .

.தானாக மோதிக்கொள்ளும் படகுகள்



இரு படகுகள் நீர் பரப்பில் ஒரே திசையில் இணையாகச்
செல்கின்றன .அவை இரண்டும் ஒன்றுக் கொன்று அருகில்
இருக்கும் போது அவை ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு
மோதிக் கொள்கின்றன .படகுகளின் வேகம் அதிகரிக்க இந்த
மோதல் தீவிரமாக இருக்கின்றது. இது ஏன் ?
                                     
                                             *****************

இரு படகுகள் அருகருகே இருந்து கொண்டு ஒரே
திசையில் இணையாகச் செல்லும் போது அவைகளுக்
கிடைப்பட்ட நீர் எதிர் திசையில் பாய்வது
போன்ற இயக்கத்தைப் பெறுகிறது . நீரின் இவ்வியக்கம்
படகுகளின் இடையில் அழுத்தத்தைக் குறைத்து விடுகிறது
( இது பெர்னோலியின் கொள்கையாகும். இதன் படி
அழுத்தம் மற்றும் ஓரலகுப் பருமனுள்ள நீரின் இயக்க
ஆற்றல் இவற்றின் கூடுதல் ஒரு மாறிலியாக இருக்கும் .
இயக்க ஆற்றலில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தில் குறைவை ஏற்படுத்துகிறது). இது படகுகளை இழுத்து மோதுமாறு
செய்கிறது .

No comments:

Post a Comment