Friday, September 24, 2010

Eluthatha Kaditham-11

எழுதாத கடிதம் - 11




அன்பார்ந்த இளம் மாணவர்களே ,



இந்தியத் திருநாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று அவ்வப்போது
சொற்பொழிவாளர்களால் வர்ணிக்கப்படுவதற்காகவே நீங்கள்
இருக்கின்றீர்களோ என்ற ஐயம் என் நெஞ்சில் இப்போதெல்லாம்
மாறாதிருக்கிறது .இந்திய இளைஞர்களில் வெகு குறைந்த
சதவீதமே சாதனையாளர்களாகவும் ,வெற்றிச் சிந்தனையாளர்களாகவும்
இருகிறார்கள் .பிற நாடுகளில் ,குறிப்பாக வல்லரசு நாடுகளிலும் .பல
ஐரோப்பிய நாடுகளிலும் இந்தச் சதவீதம் நம்மைவிட பல மடங்கு
அதிகமாக இருக்கிறது. என்னதான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ,இப்போக்குநம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடியது .இப்படிப்பட்ட உள்ளார்ந்த
புறத் தாக்குதல்களை எதிர்கொள்ள அதற்கு ஈடான உள்ளார்ந்த அக முயற்சி தேவையாய் இருக்கிறது .இன்றைய இந்தியச் சூழலில் இதை ஒவ்வொரு மாணவர்களும் தாங்களாகவே செய்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் .

இந்திய மாணவர்களின் நிலைக்கு ஒருவர் பல காரணங்களை தக்க
எடுத்துக்காட்டுகளுடன் கூறிவிடமுடியும். என்றாலும் அதைக் களைந்து
ஓர் இனிமையான சூழலை ஏற்படுத்திவிட முடியாது. ஒரு சிக்கல் பல
பிரச்சினைகளுடன் பிணைந்திருப்பதினால் இது பிறருடைய ஈடுபாடின்றி
மாணவர்கள் தாங்களாகவே ஒரு இயற்கையான முடிவெடுத்து தீர்மாணிக்கவேண்டியதாக இருக்கிறது .

* முதலாவது நமது கல்வியின் தரம் - இது எவ்வளவுதான் மாற்றத்திற்கு
உள்ளானாலும் உலகத் தரத்தை எட்டவில்லை என்பதே உண்மை .
பெரும்பாலும் கல்வி ,ஏன் உயர் கல்வி கூட அடிப்படிகளுடனேயே
முடிந்து விடுகிறது. அதன் செயலாக்கம் பற்றிய வளர்ச்சிப் பாதையை
ஒவ்வொருவரும் தன்னார்வத்தால் மட்டுமே ஓரளவு தெரிந்து கொள்ள முடியும் .
இதற்க்கான வாய்ப்பும் நமது கட்டமைப்பில் மிகவும் குறைவு . தவிரவும்
ஒருவரிடத்தில் இருக்கும் அபரிதமான திறமையை வெளிப்படுத்த
உதவுவர்களைவிட அமுக்கி விட நினைப்பவர்களே அதிகம் .

* இரண்டாவது அடிப்படியே தெரியாமல் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுவதும் ,மொழியின் பயன்பாடு சரியாக அறியாது ஒன்றிப் புரியாமல் தெரிந்து கொண்டு பின் அதை மறந்துபோவதும் ,முறையான கல்வி,தகுதி ஏதுமில்லாமல் ,அரசியலிலும் ,மக்களை ஏமாற்றும் மறைமுகத்
தொழிலிலும் ஈடுபட்டு,எளிதாக விரைவாக ,கட்டுப்பாடு ,தட்டுப்பாடு
ஏதுமின்றி பொருள் ஈட்டும் முறையில் கொண்டுள்ள ஈர்ப்பு
போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம் .

பெரும்பாலான மாணவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்ற நினைப்பே ஓர் இந்திய இளைஞனை மிகவும் பலவீனப்படுத்திவிடுகிறது . தங்களுக்குத் தானே ஆறுதல் கொள்ள இது அவர்களுக்கு அனுகூலமாக இருக்கிறது.

பிற நாடுகளைப் போல இந்தியாவும் உலக அரங்கில் வீறு நடை போட
வேண்டும் என்பது இன்றைக்கு மனதளவில் இல்லாமல் வெறும் வாயளவில் எல்லோராலும் பேசப்படுகின்ற மொழியாக உள்ளது.
மாணவர்களே ஒன்றைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் . இது நிச்சியமாக
இன்றையச் சூழலில் நம் அரசியல்வாதிகளின் கைகளில் இல்லை . ஏனெனில் அவர்கள் பேசுவது ஒன்று செய்வது வேறொன்று . அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்பது
அவர்களுக்காவது தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது .
இது நிச்சியமாக இன்றைய சூழலில் ஆசிரியர்களின் கைகளில் கூட இல்லை .ஏனெனில் இன்றைக்கு கல்விக்காக கல்வியைச் சொல்லிக் கொடுக்கும் நிலை இல்லை . முழுமையாக
அர்பணித்துக் கொண்ட ஆசிரியர்கள் யாரும் இல்லாதது ஒரு பெரும் குறை சிலருடைய வழிகாட்டுதல் முன்னேறுவதற்கு உதவலாம் ,என்றாலும்  பெரும்பாலும் மாணவர்களால்
புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன ,அல்லது அதில்
நம்பிக்கை கொண்டு பின்பற்றத் தவறிவிடுகிறார்கள் .
இது நிச்சியமாக இன்றையச் சூழலில் பெற்றோர்களின்
கைகளில் இல்லை. ஏனெனில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுப்பதோடு தன கடமை முடிந்து விட்டது என்று
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய ஈடுபாட்டை சுருக்கிக் கொண்டுவிடுகிறார்கள் .நேரமில்லை என்றோ ,அது பற்றி
ஏதும் தெரியாது என்றோ பல நேரங்களில் பலவாறு காரணம்
சொல்லப்பட்டாலும் ,உறுதியில்லா மனமில்லை என்பதே உண்மை நிலையாகும்.இது உண்மையில் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஓரிருவர் எடுத்துக்கட்டுகளாக உருவானாலே போதும். அடுத்தடுத்து
பல மாணவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள முன்வருவார்கள்

அன்புடன்

காவேரி

No comments:

Post a Comment