Tuesday, December 18, 2012

creative thoughts


வெற்றி

 *ஆண்,பெண் ,சிறியவர்,பெரியவர், கற்றவர் கல்லாதவர் பணக்காரர் ,ஏழை -யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மகத்தான சக்தி ஒளிந்து கொண்டிருக்கிறது .ஒருவருடைய வாழ்கையின் வெற்றி என்பது இந்த உள்ளூரும் சக்தியை வெளிக்கொணர்வதுதான் .

*ஒருவன் தனிச் சிறப்பான ஒரு படைப் பாற்றலைப் பெற்றுத் திகழ்கின்றான் என்றால் அவன் நிச்சியம் பல தோல்விகளைச் சந்தித்துக் களைப்படையாமல் கடந்து வந்தவனாக இருப்பான் .

*இடைத் தோல்விகளுடன் துவண்டு போய்  முயற்சிகளை நிறுத்திக் கொண்டு விட்டால் வெற்றிக்கு ஒரு வேகத் தடையை  நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டது போலாகும் ..தடையகற்றும் மாற்று வழி முறைகளைப் பற்றி ஆராய திறமைகளை வளர்த்துக் கொள்ளாததின் பின் விளைவே இந் நிலையாகும்

* தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடுவது நேரத்தையும் ஆற்றலையும் இழப்பதாகும் .பயன் தராத விவாதங்களிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வது வெற்றிக்குப் பாதி வழி வகுத்த மாதிரி .

*வெற்றிக்குத் தேவையானவற்றுள் ஒன்று சலனமற்ற மனம் .மனம் சலனப் பட்டுக் கொண்டே இருந்தால் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்ற முடிவே எடுக்கப் படாமல் செயலே தொடங்கப்படாது .தொடங்கப் படாத செயல்களுக்கு வெற்றியென்பதே இல்லை .

*  வெற்றி பெற்றவர்களின் வாழ்கையில் வாழ்க்கைக்கும் தோல்விக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது.தோல்வியைச் சந்திக்காமல் யாரும் வெற்றியைத் தொட்டதில்லை .அது மட்டுமன்று சாதனையாளர்களுக்கு வெற்றியை விட தோல்விகளே நல்ல படிப்பினை ஊட்டி யிருக்கிறது .

*வெற்றி என்ற சொல்லில் வெறியும் உள்ளடங்கியிருக்கிறது .கவனமில்லாவிட்டால் போதையில் நிலை குலைந்து போய்விடலாம் .

*ஒவ்வொருவரும் போராடிப் பல முறை தோற்றுப் போயிருக்கின்றார்கள் .இதற்குக் காரணம் உண்மையான எதிரி யார் என்று தெரியாமலேயே போராடியதாகும் .

*நியாயத்திற்கு வெற்றி என்று போராடாமல் தன் கருத்துக்கு வெற்றி என்று போராடுவதால் பெரும்பாலான போராட்டங்கள் பித்தலாட்டங்களாகி விடுகின்றன .

*ஆழ் கடலில் மேடுகளும் உண்டு,உயர்ந்த மலைகளும் உண்டு. இது இயற்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் தோல்விகளில் வெற்றிகளும் உண்டு வெற்றிகளில் தோல்விகளும் உண்டு .இது மேலே இது கீழே என்பதெல்லாம் பூமியில் இருக்கும் வரைதான் .பூமியை விட்டு வெளியேறிவிட்டால்,பரந்த பிரபஞ்ச வெளியில் அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. அதைப் போலத்தான் வெற்றியும் தோல்வியும்.எல்லாம் ஒப்பீடுகளின் தாக்கங்கள்

*உன்னுடைய வாழ்கையில் நிகழும் மாற்றங்கள் எல்லாம் தன்னிச்சையாக விளைபவை என்று எண்ணுவதற்கே பழக்கப் பட்டு விட்டதால் நிகழும் மாற்றங்களுக்கு நீ ஒருபோது காரணமாக இருப்பதில்லை என்றே நினைக்கின்றாய். ஆனால் அது உண்மையில்லை. பெரிய அளவிலான மாற்றங்கள் குறுகிய காலத்தில் கூட நிகழக் கூடும் .அதற்கு நீயே கூட காரணமாக இருக்க முடியும்.

*கீழே விழுந்து கிடக்கும் பொருள் தானாக நிலை மாற்றம் பெறுவதில்லை ,அதற்கு ஒரு புறத் தூண்டுதல் அவசியமாக இருக்கிறது.கீழே கிடக்கும் கல் எந்நாளும் அப்படியே இருக்கிறது. ஆனால் ஒரு விதை தன் முயற்சியால் நெடிய மரமாக வளர்கிறது. மாற்றங்கள் நிகழ வேண்டுமானால் ஒன்று நீங்கள் திறமைகளை வளர்த்து வைத்திருக்க வேண்டும் ,தானாகக் கீழே விழும் குண்டைப் போல அல்லது சுயவிருப்பத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள பிறரின் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும் கீழே கிடக்கும் விதையை போல.

*தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதே .ஒரு சிறு விதையின் வீழ்ச்சிதான் விருட்சத்தின் எழுச்சி .இலை உதிர நுனி உயரும் .வீழ்வதும் ,வீழ்ந்து எழுவதும் ,எழுவதும் ,எழுந்து வீழ்வதும் இயற்கை.உனக்கொன்று தெரியுமா .வீழ்வது வெட்கமல்ல ,வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்..

*மலை உடைந்தால் மண்ணெல்லாம் பொன்னாகும் .மனம் உடைந்தால் எண்ணமெல்லாம் புண்ணாகும் .

No comments:

Post a Comment