Monday, December 31, 2012

Sonnathum Sollaathathum-9

 
 


சொன்னதும் சொல்லாததும்-9

இருளகற்றும் மெழுகுவர்த்தியின் துயர் துடைக்க மின்னிழை விளக்குகள் கண்டறியப்பட்ட காலம் .சாதாரண உலோக இழைகளின் வழியே மின்சாரம் பாயும் போது ஏற்படுகின்ற உயர் வெப்பத்தினால் உலோக இழை சிவந்து எங்கும் ஒளி சிந்துகிறது .பெரும்பாலான உலோக இழைகள் உயர் வெப்பம் தாளாது விரைவிலேயே உருகிப் போய் மின் விளக்கு அடிக்கடி அணைந்து போய்விடுவதால் மெழுகுவர்த்திக்கு மாற்றாக வந்த மின்னிழை விளக்கே ஒரு பிரச்சனையாக விளங்கியது .இதற்கு உயர் வெப்பத்தைத் தாங்க வல்ல மின்தடைமிக்க உலோக இழைகளை ஆராய்ந்து கண்டறிய வேண்டியது அவசியமாக இருந்தது .மின்னிழை விளக்கிற்கு எந்த உலோகத்தாலான அல்லது கலப்பு உலோகத்தாலான இழை உகந்ததாக இருக்கும் என்பதைக் கண்டறிய ஏறக்குறைய 7000 முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடி இறுதியில் வெற்றி பெற்றவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன் .இவரைப் பற்றித் தெரியாத ஒருவர் கூட இவ்வுலகில் இருக்க முடியாது அந்த அளவிற்கு அவர் அவரை பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார் .டங்ஸ்டன் என்ற உலோகத்தாலான இழை மின்னிழை விளக்கிற்கு மிகவும் பொருத்தமானது என்பது எடிசன் தந்த பல

பயனுள்ள கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகும் .மனந்தளராமல் 7000 முறை எடிசன் முயன்று போராடியிருக்காவிட்டால் அன்றைக்கு வந்த ஒளிவிளக்கு இன்றைக்குக் கூட கிடைக்காமற் போயிருக்கலாம் .மின்னிழை விளக்கைக் கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் எடிசன் 6999 முறை தோல்விகளையும் இறுதியாக ஒரு முறை வெற்றியும் பெற்றார் .பல தோல்விகளைச் சந்தித்த பின்னரே அவருக்கு வெற்றி கைகூடியது .அதனால் வெற்றியைப் பெற பொறுமையாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று .உண்மையில் ஒரு சரியான மின்னிழை விளக்கைக் கண்டுபிடிக்க எடிசனுக்கு ஒரு முயற்சிதான் தேவைப்பட்டது .ஆனால் அந்தச் சரியான மின்னிழை விளக்கை உருவாக்க எந்தெந்த உலோக இழைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்குத்தான் 6999 முறை தேவைப்பட்டது.அதனால் எல்லா முயற்ச்சிகளுமே அவருக்கு வெற்றிதான்.இறுதி வெற்றிக்குத் துணை நின்ற துணை வெற்றிகள் .எடிசன் இது பற்றிக் குறிப்பிடும்போது " முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில் அதுதான் இரண்டாவது சோதனையைச் செய்யத் தூண்டியது" என்றார் .

இதிலிருந்து நாம் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வெற்றியை நோக்கிச் செல்லும் பயணத்தில் இடைவரும் தோல்விகள் எல்லாம் தோல்விகளே இல்லை. வெற்றியை எட்ட உதவும் ஏணிப்படிகள் .அவை புகட்டும் அறிவினால் மட்டுமே காலை அடுத்த படியில் பாதுகாப்பாக எடுத்து வைக்க முடியும். வெற்றியைத் தொட்டுவிடலாம் என்று நினைத்து தாவினால் தவறி விழுந்து அடிபடவேண்டி வரலாம் .சரியான பாதை எது என்று தெரிந்து கொள்ள முயலும் போது தவறான பாதைகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே முழுமையான வெற்றிக்கு உறுதி கூறும்

 

No comments:

Post a Comment