Wednesday, September 15, 2010

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்-


அன்பான இந்தியப் பெருங்குடி மக்களே,

கடவுள்,மதம்,மொழி போல ஜாதகமும் யாரால்,எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட
முடியாது .இது சமுதாய நலம் கருதிய மக்களின் கற்பனைப்
படைப்பே அன்றி அறிவியல் கலந்த கண்டுபிடிப்பில்லை.
பொய் என்று தெரிந்தும், பொய்யான ஒன்றை நம் முன்னோர்கள் வலுக்கட்டாயமாகப் போதித்து வந்திருக்கின்றார்கள் என்றால்
அந்தப் பொய்யில் எதோ ஒரு மெய் பொதிந்திருக்கவேண்டும் .
மெய்யை மறைத்துவிட்டு பொய்யை மெய்யாக்கி காட்டியதற்குக்
காரணம் சமுதாய நலனே .எண்ணங்களின் ஆதிக்கத்தினால்
சோர்வுற்ற உள்ளங்களின் உணர்வுகளைப் புதுப்பித்து மீண்டும்
இயல்பாக வாழத் தூண்டுவதற்காக நம் முன்னோர்கள்
கண்டுபிடித்த வழி முறைகளுள் ஒன்றே ஜாதகம் . சாப்பிட
அடம் பிடிக்கும் தன குழந்தைக்கு வான வீதியில் நீந்தி ஓடும்
நிலாவை ஒரு விளையாட்டுப் பொருளாகக் காட்டி ஊட்டும்
தாயின் அதே மனப்போக்குத்தான் இதிலும் வெளிப்படுகிறது..சின்ன அனுகூலம் கூட மலையளவு நம்பிக்கையும் ,மனதில் தைரியமும் ஏற்படுத்தும் என்ற உளவியல் கோட்பாடு
இது போன்ற அணுகுமுறைகளுக்கு அடிப்படையாக உள்ளது.

அறிவியல் கண்ணோட்டத்தில் ஜாதகம் என்பது வெறும்
புள்ளியியல் கொள்கைதான் . இது வாய்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டது . இதன்படி ஜாதகக் கணிப்பு நூற்றுக்கு நூறு உண்மையாக அல்லது பொய்யாக இருக்கமுடியாது .
வாய்ப்புக்களைப் பாதிக்கக்கூடிய காரணிகளை அறியாதிருந்தால் ஜாதகத்தில் சரிபாதி மெய்யாகவும் மீதிப்பாதி பொய்யாகவும்
இருக்கும் எனலாம் . ஜாதகத்தில் உண்மையான காரணிகள்
ஏதுமில்லை என்பதால் அதன் உண்மை நிலையும் அதுதான்.

இது ஏறக்குறைய ஒற்றையா ,இரட்டையா விளையாட்டைப்
போலத்தான் . எவ்வளவு முறை விளையாடினாலும்
வெற்றியும் ,தோல்வியும் சரி பாதிதான். ஒருவர் பெறக்கூடிய
சில கூடுதல் வெற்றிகளும் ,தோல்விகளும்
தற்செயலானவைகளே அன்றி அதற்கோர் அறிவியல்
விளக்கம் கற்பிக்க முடியாது. அப்படியிருக்க பூமியில்
நெருக்கமாக கூடி வாழும் மக்களின் எதிகாலத்தை அறிந்து
கூறும் திறன் வெகு தொலைவுகளில் உள்ள சூரியக்
கோள்களுக்கு உள்ளது என்று கூறினால் அது எப்படி
ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையாகும் ?பூமியின் எதிகாலத்தையே
தீர்மானிக்கமுடியாத கோள்கள் ,பூமியில் வாழும் பல கோடிக்கோடி உயிரினங்களின் எதிகாலத்தை எப்படி வேறுபடுத்திப் புலப்படுத்திக்
காட்ட இயலும் ?

நாம் ஏமாறத் தயாராக இருந்தால் , ஏமாற்றுபவர்களுக்கு அவர்கள்
பணி வெகு சுலபமாகிவிடும் .சிந்திக்கவேண்டியது நாம்தானே
ஒழிய அவர்கள் இல்லை.

நம் சிந்தனைக்கு எவை முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன
என்பதை முதலில் சிந்தியுங்கள் ,ஒரு தெளிவு பிறக்கும்
என்று நம்புகிறேன் .

அன்புள்ள

காவேரி

1 comment:

  1. pseudo-science என்று ஒரு வார்த்தை இருக்கிறது. இதை வாதத்தினால் வெல்ல முடியாது. ஜாதகம் அந்த வார்த்தைக்குள் வருகிறது.

    ReplyDelete