Thursday, March 21, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -செலினியம் -கண்டுபிடிப்பு

1817 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலாரான பெர்சியஸ் மற்றும் கான் ,ஒரு முறை ஒரு கந்தக அமில ஆலையைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது ,செம்பழுப்பு நிறத்தில் ஒரு வீழ்படிவு இருப்பதைக் கண்டனர் .ஊது குழாய் சுவாலையால் சூடூட்ட அந்த வீழ்படிவு முள்ளங்கி வாசனையைப் பரப்பி பொலிவுடன் ஒரு உலோக வண்டலை உண்டாக்கியது .இதற்கு டெல்லூரியம் காரணமாக இருக்கலாம் என முதலில் நம்பினார் .ஏனெனில் டெல்லூரியமும் ஏறக்குறைய இது போன்ற வாசனையை ஏற்படுத்தக் கூடியது .கந்த அமில ஆலையின் கழிவுகளை முழுமையாக ஆராய்ந்து இறுதியில் டெல்லூரியத்தை ஒத்த ஒரு புதிய தனிமத்தை க் கண்டுபிடித்தனர் .அதுவே செலினியம் எனப்பட்டது .

செலினஸ் என்றால் கிரேக்க மொழியில் சந்திரன் என்று பொருள் .டெல்லூரியம் என்ற பெயர் பூமி என்ற பொருள்படும் டெல்லஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்தது .செலினியத்தின் வேதிப் பண்புகள் டெல்லூரியத்தைப் போலிருந்ததால் அதற்குச் சந்திரன் என்ற பொருள் தரும் கிரேக்கச் சொல்லைத் தேர்வு செய்தனர் .

செலினியம் பிற உலோகங்களின் கந்தகக் கனிமங்களோடு சேர்ந்து காணப்படுகின்றது .வெள்ளி ,செம்பு ,ஈயம் போன்ற உலோகங்களோடு இணைந்து கிடைக்கின்றது .பூமியின் மேலோட்டுப் பகுதியில் 1 கிராம் பொருளில் செலினியம் 0.004-0.9 மைக்ரோகிராம் என்ற அளவில் கிடைக்கின்றது .செலினியம் தாவரங்கள் ,விலங்குகள் ,நீர்நிலைகளில் கூடக் கிடைக்கின்றது . விலங்குகளில் 20 மைக்ரோ கிராம் /கிராம் ,தாவங்களில் 0.02-4.00 மைக்ரோ கிராம்/கிராம் நிலக்கரியில் 0.1-4 மைக்ரோ கிராம் /கிராம் கடல் நீரில் சராசரியாக 0.09 மைக்ரோ கிராம்/லிட்டர் என்ற அளவிலும் கிடைக்கின்றது .செலினியம் படிக உருவ மற்றதாகவோ ,படிகமாகவோ பெறமுடியும் .படிக உருவற்ற செலினியம் பொடியாக இருக்கும் போது சிவப்பாகவும் ,கண்ணாடி உலோக (metalic glass) நிலையில் கருப்பாகவும் இருக்கின்றது .ஆறுமுகிப் படிக செலினியம் சாம்பல் நிறத்தில் நிலையாக இருக்கின்றது .ஒற்றைச் சாய்வு (Monoclinic) நிலைப்படிகம் செஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றது .

பண்புகள்

Se என்ற வேதிக் குறியீட்டுட ன் கூடிய செலினியத்தின் அணுவெண் 34,அணு நிறை 78.96 அடர்த்தி 4810 கிகி /கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 493.2 K ,961.2 K ஆகும் .

செலினியம் ஓரளவு நச்சுத் தன்மை கொண்டது .இதன் நச்சுத் தன்மை ஆர்செனிக்கை விடக் குறைவு. இந்த உலோக நச்சுக்கள் வரம்பு மீறும்போது புற்று நோயைத் தூண்டவல்ல காரணிகளாக உள்ளன .இதயத்தைச் செயலிழக்கச் செய்யவும் செய்கின்றது .நிலக்கரியில் செலினியம் கந்தகத்துடன் சேர்ந்துள்ளது .நிலக்கரியை எரிப்பதினால் செலினியம் ஆக்சைடு வளிமண்டலத்தில் சேர்ந்து இறுதியாக நிலத்தில் வீழ்படிகின்றது இது செலினிய மாசுக்குக் காரணமாகின்றது .

உருகு நிலைக்குக் கீழ் செலினியம் ஒரு நேர் வகை (P-type) குறைக்கடத்தியாக உள்ளது .ஒளி உமிழ் டையோடு களில் இது பெரும்பங்கு ஏற்றுள்ளது .

பயன்கள்

செலினியத்தின் முக்கியமான பயன்களுள் ஒன்று செலினிய மின் கலமாகும்.இது ஒளி மின் கடத்தல் (Photo conductive effect) விளைவு அல்லது ஒளி மின்னழுத்த விளைவு (Photo voltaic effect) காரணமாக இரு வகைப்படும் .ஒளி ஒரு குறைக்கடத்தியில் விழும் போது தன்னிச்சை மின் பொதிமங்களின் கூடுதல் எண்ணிக்கையின் விளைவாக அதன் மின்கடத்தும் திறனை அதிகரிக்கும். இது ஒளி மின்கடத்தல் விளைவாகும் .இந்த மின்கலத்தில் செலினியம் சல்பைடு,காட்மியம் சல்பைடு போன்ற ஒளி உணர்வு மிக்க பொருட்கள் பயன்தருகின்றன .இவை கதிர் வீச்சுக்களை அறியும் ஆயகருவிகளிலும் ,தெரு விளக்குக்கான மின் சாவிகளாகவும் பயன்படுகின்றன .செலினியத்தாலான ஒளி மின் கடத்தி மின்கலத்தில் ஒரு புற மின்னியக்கு விசை செயல்படுத்தப் படுகின்றது .செலினியத்தின் மின்தடை விழும் கதிர்வீச்சின் செறிவுக்கு ஏற்ப மாறுவதால் சுற்றிலுள்ள மின்னோட்டத்தின் அளவு விழும்கதிர்வீச்சின் செறிவை அளவிடும் இயற்பியல் கூறாகின்றது .திரைப் படத் துறையில் இது ஒளிமானியாகவும் பயன்படுகின்றது .

ஒளி மின்னழுத்த விளைவில் ஒளி விழும் போது நேர் வகை மற்றும் எதிர் வகைப் பொருட்களின் இடைத்தளத்தில் ஒரு மின்னழுத்தம் தோன்றுகின்றது .இது அவ்வகை மின்கலத்தில் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றது .சூரிய மின்கலங்கள் இத்தகையதே .

செலினியத்தின் மற்றொரு பயன்பாடு செலினியம் மின் வகைத் திருத்திகளாகும்.(Rectifiers).நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) முறையிலும் ,கண்ணாடிகளில் நிறம் நீக்கவும்,அதற்கு மாணிக்கக் கற்கள் போல சிவப்பு நிறமூட்டவும் ஒளிப்படப் பதிவு முறையில் பயன்படும் ஒரு பொடியில் சேர்மானமாகவும்,எவர் சில்வர் உற்பத்தி முறையில் ஒரு சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுகின்றது .

மண்ணில் செலினியத்தின் சார்புச் செழிப்பு அம்மண்ணின் கார-அமிலத் தன்மையை வரையறுக்கும் PH மதிப்பைப் பொறுத்திருக்கின்றது .               செலினேட் சேர்மங்கள் நீண்ட நெடுக்கைக்கு உட்பட்ட PH மதிப்புடைய நிலத்திலும்,செலினைட் குறைந்த PH மதிப்புடைய நிலத்திலும் செழிப்புற்றுள்ளன.செலினைட்டுகள் பொதுவாக நிலத்தால் எளிதாக உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.செலினேட்டுக்கள் அப்படி உட்கிரகித்துக் கொள்ளப்படுவதில்லை பயிரினங்களில் சில வகையான செலினியச் சேர்மங்கள் எளிதில் ஆவியாகக் கூடிய கரிமச் சேர்மங்களாக மாறிக் கொள்கின்றன .கோதுமை,அரிசி,கரும்பு முள்ளங்கி ,காரட் ,டர்னிப் ,பட்டாணி ,உருளை மற்றும் தக்காளி போன்ற பொருட்களில் செலினியம் சிறிதளவு அடங்கியுள்ளது.வெள்ளைப் பூண்டில் 30 மிகி /கிலோ என்ற அளவில் செலினியம் உள்ளது.செலினியம் மிகச் சிறிய சிறிய அளவில் நமக்குத் தேவைப்படுகின்றது.தேவைப்படும் அளவை விடச் சற்றே கூடுதலெனினும் அது உயிருக்கே உலைவைத்துவிடும் .குறைந்த அளவில் நண்பனாகவும் கொஞ்சம் மீறிய அளவில் பகைவனாகவும் நிலை மாறிவிடும் .

No comments:

Post a Comment