Wednesday, March 6, 2013

Mind without fear


Mind without fear

சின்னக் குழந்தையாக இருந்த போது மனதில் கொஞ்சம் கூட பயம் இல்லாதிருந்தது .உடல் வலிமையோ , நுண்ணறிவோ ,தற்காப்பு முறைகளோ ஏதுமில்லாமல் தன்னைவிடப் பெரியவர்களை எதிர்க்கும் தைரியம் இருந்தது .ஆனால் வளர வளர மனதில் பயம் தொற்றிக் கொண்டுவிடுகின்றது .இந்த பயம் ஏன் ,எப்படி வந்தது ?

மனம் ஒரு காலி மனையிடம் போல.அதில் தனக்கென கொள்கையால் ,எண்ணங்களால் ஒரு கட்டிடத்தை எழுப்பிக் கொள்ளாதவரை,அங்கே அத்துமீறி பிரவேசிப்பவர்கள் அதிகம் இருப்பார்கள்.புறத் தாக்குதல்களினால் ஏற்படும் பாதிப்பே மனதில் பயத்தை உட்புகுத்திவிடுகின்றது. பெற்றோர்கள் இருக்கும் தைரியத்தால் ஒரு குழந்தை பயம் இல்லாதிருக்கிறது. பெற்றோர்களை விட்டுத் தனித்து வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் பலத்தை இழக்கும் நிலை ஏற்படுகின்றது.

எல்லோரும் ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க முடியாது என்பதால் வளரும் போது அறியாமையும் அதிகரிக்கின்றது. எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .எது தேவையோ அதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.எதிர்காலத்தில் தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது சரிவரத் தெரியாததால் இந்த அறியாமையை எவராலும் தவிர்த்துக் கொள்ள முடிவதில்லை .இது ஒரு பலவீனத்தை ஏற்படுத்தி விடுகின்றது . இருந்த பலமும் போய் புதிதாய் பலவீனமும் சேர பயம் விரைவாய் மனதில் குடியேறி விடுகின்றது .

பயம் என்பது ஒரு வகையான ஒட்டுண்ணி .நம்பிக்கையை வளர விடாமல் அதன் மீதே படருவதால் நம்பிக்கையை காலப் போக்கில் இழந்துவிடுகின்றோம்.

No comments:

Post a Comment