Saturday, January 19, 2013

Kavithai


60 வயது அப்பாவிற்கு 80 வயதுக் குழந்தை

பாலூட்டிச் சீராட்டிப் பட்டுச்சேலை  தொட்டியிலிட்டு

தாலாட்டுப்  பாடிய இராகத்தை மறக்கமுடியவில்லை

ஓடிவிளையாடி ஓய்ந்து  வந்தருகில் அமர்ந்தபோது

உறங்கும்வரை  உடலை வருடியதை மறக்கமுடியவில்லை

பள்ளிசென்று படித்துவந்த எனக்கு பசிக்குமென்று

பல்சுவை உணவு  ஊட்டியதை மறக்கமுடியவில்லை

மழையில் நனைந்து காய்ச்சலில்  வீழ்ந்தபோது

மருந்து கசக்க இனிப்பூட்டியதை மறக்கமுடியவில்லை

பார்புகழும்  நன்மக்களாய்  வளர வேண்டுமென்று

புராணக் கதைகள்  நாளும் சொன்னதை  மறக்கமுடியவில்லை

தீபாவளி மட்டுமில்லை  எந்நாளும்  திருநாள்தான்

தினமும் புத்தாடை அணிவித்ததை   மறக்கமுடியவில்லை

கடைக்குச் சென்றால் அதுபிடிக்கும் இதுபிடிக்குமென

எல்லாம் வாங்கிக்  கொடுத்ததை மறக்கமுடியவில்லை

சின்னச்சின்ன ஆசைகள்  பெரிதாய் வளர்ந்தபோதும்  

சிணுங்காமல் நிறைவேற்றி மகிழ்ந்ததை மறக்கமுடியவில்லை

உங்களோடு வாழும் ஒவ்வொரு  நிமிடத்தையும்

மறக்கமுடியாத போழ்து இவையொன்றும் விந்தையில்லை

உண்மையும் ஒழுக்கமும் அன்னைதந்த அருஞ்சீதனம்

உலகறிவும்  ஒப்புரவும் அப்பாதந்த  பரிசுப்புத்தகம்  

நேர்மை  கற்றேன் தலைநிமிர்ந்து  வாழ்கிறேன்

வாழையடி      வாழையாய்    செழித்து வளர்கிறேன்  

சான்றோர்பலர்கூடிவந்து  வாழ்த்தப்  பெற்றேன்  

எங்களுக்காக   நீங்கள்     வாழ்ந்தது போதும்

உங்களுக்காக    நான்வாழ அனுமதி கொடுங்கள்

ஏனெனில்  எனக்கு  அன்னையும் பிதாவும்  வேண்டும்

என்னைவிட்டு   நீங்காது   என்றைக்கும் வேண்டும்

No comments:

Post a Comment