Tuesday, January 22, 2013

Kavithai


இறைவா எனக்கொரு வரம்தர வேண்டும்

 

இறைவா எனக்கொரு வரம்தர வேண்டும்

இல்லையென்று சொல்லாது நலம்தர வேண்டும்

பொல்லாங்கு செய்யும் பொருளேதும் வேண்டாம்

இல்லற சுகத்திற்கு பெண்ணொன்றும் வேண்டாம்

 

இறைவா எனக்கொரு வரம்தர வேண்டும்

இல்லையென்று சொல்லாது நலம்தர வேண்டும்

வசதிநிறைந்த அடுக்குமாடி வீடு வேண்டாம்

அசதிநீங்கத் தூங்க பட்டுமெத்தை வேண்டாம்

 

இறைவா எனக்கொரு வரம்தர வேண்டும்

இல்லையென்று சொல்லாது நலம்தர வேண்டும்

காலடியில் பணம்கொட்டும் பதவி வேண்டாம்

உழைப்பின்றிக் கிடைக்கும் பரிசு வேண்டாம்

 

இறைவா எனக்கொரு வரம்தர வேண்டும்

இல்லையென்று சொல்லாது நலம்தர வேண்டும்

எல்லோரும் இனிதாய் வாழ நல்வழியில்லை

ஏமாற்றிப் பிழைக்க மனம் விரும்பவில்லை

 

துன்பமின்றி இன்பமில்லை என்பது இயற்கை

துன்பமே இனியென்றால் ஏனிந்த வாழ்க்கை

பிறந்து மறுபடி வாழ்ந்தாலும் மாற்றமில்லை

பிறந்துஇறந்தது வாழ்ந்த பிறவிகள்  போதும்

 

மீண்டும் பிறவாநிலை ஒன்றே வேண்டும்

மண்ணில் கலந்து தாய்மடியில் தூங்கவேண்டும்

இறைவா எனக்கொரு வரம்தர வேண்டும்

இல்லையென்று சொல்லாது நலம்தர வேண்டும்

No comments:

Post a Comment