Wednesday, January 23, 2013

Creative thoughts


 
அன்பு

இயற்கை மனிதனுக்குத் தந்த அணிகலன் அன்பு மட்டும்தான் .நாம் தான் அதை விட்டுவிட்டு திருநீறு,நாமம்,சிலுவை சுன்னத் என்று வேண்டாத அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கின்றோம். அதில் நமக்கு இருக்கின்ற நம்பிக்கை வேறு ,வழிவழியாக வரப் பெற்றது. அணிகலன் உடலில் இருப்பதை விட மனதில் இருப்பது நல்லது .மனதில் அணிகலன் இல்லாமல் உடலில் எவ்வளவு அணிகலன்கள் இருந்தும் என்ன பயன் ?

மக்கட்தொகை பெருகப்பெருக நெருக்கத்தினால் மனிதர்கள் நெருங்கி வந்தாலும் மனம் என்னவோ விலகிச் செல்கிறது.மனிதநேயம் நலிவடைந்து கொண்டே வருகிறது அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனை மேலும் எதிரியாகப் பார்க்கின்றான் என்று பொருள். அளவில்லாத ஆசைகள்,வேண்டாத ஆசைகள்,விபரீதமான ஆசைகள், விளையாட்டான ஆசைகள் என ஆசைகள் கிளைவிட்டுப் பெருகிக் கொண்டே போவதால் மனிதநேயம் நலிவடைந்து வருகிறது .

பிரபஞ்சத்தின் மூலமே நேசிப்பு என்ற அன்புதான் .ஓர் அணு மற்றோர் அணுவை நேசித்ததின் விளைவுதான் மூலக்கூறு .மூலக்கூறுகள் ஒன்றையொன்று நேசித்ததின் விளைவுதான் இப்பேரண்டத்தின் உருவாக்கம்.

அன்பு அகமனதைத் தூண்டிவிடக் கூடிய ஒரு வலிமையான நெம்புகோல் ..

ஓர் உயிருக்கு ஆயிரமாயிரம் ஜென்மங்கள் உண்டு.அடுத்தடுத்த ஜென்மங்களில் ஓர் உயிர் அதே உயிரினமாகப் பிறக்கக் கூடிய வாய்ப்புகள் மிக அரிது .தொடரும் ஜென்மங்களில் ஓர் உயிர் பலதரப்பட்ட உயிரினங்களாகப் பிறந்து வாழ்ந்து மடிகின்றது.ஒரு ஜென்மத்தின் மறைவு மறு ஜென்மத்தின் பிறப்பிற்காகவே.வெவ்வேறு ஜென்மங்களில் வெவ்வேறு உயிரினமாகப் பிறப்பதால் எல்லா உயிரினங்களையும் நாம் நேசிக்கவேண்டும்.கொல்லாமையைப் போற்ற வேண்டும். நாம் இப்போது விலங்கினங்களை நேசிக்காவிட்டால் நாம் அதே விலங்கினமாகப் ஜென்மம் எடுக்கும் போது நம்மை யார் நேசிப்பார்கள் .முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் தானே பல்கிப் பெருகி பின் ஜென்மத்தில் நம் மீது பாயும்.

 

No comments:

Post a Comment