Wednesday, January 30, 2013

Mind Without Fear


Mind Without Fear

முன்னேற்றப் பாதையில் பயம் என்பது நாம் நம்மைப் பற்றி சரியாக அறிந்தும் புரிந்தும் வைத்திருக்காததின் விளைவே .நம்மை மிகைப்படுத்தி மதிப்படுவதாலும் ,மிகவும் தாழ்வாக மதிப்படுவதாலும் பயம் மனதில் தொற்றிக்கொள்கிறது முன்னேறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் போது தேவையில்லாத பயம் ஒரு தடையாக இல்லாமலிருக்க ஒவ்வொரு முறையும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய சில அறிவுரைகள் இருக்கின்றன." நான் சாதிக்கப் பிறந்தவன் ,சாதிக்க வேண்டும் சாதித்தே ஆகவேண்டும் ,சாதனையை முடிக்கும் வரை இதில் பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.பிறந்தோம்,எதோ வாழ்ந்தோம் பின் ஒரு சுவடுமில்லாமல் இறந்தோம் என்றில்லாமல் மறைவிற்குப் பிறகும் இந்த உலகம் நம்மைப் பற்றி நினைக்க வேண்டும். அதுவே தோன்றிற் புகழோடு தோன்றுதலாகும் .நானும் அப்படி வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெறவேண்டும்" இப்படி அறிவுறுத்திக் கொள்ளும் போது முன்னேற்றப் பாதையில் சோர்வுற்று திசை மாறுவதை நாம் தவிர்த்துக் கொள்ளமுடியும் .இந்த வழிமுறையை எல்லோரும் அறிவார்கள் என்றாலும் நடைமுறைப்படுத்திப் பயன் துய்ப்பவர்கள் வெகு சிலரே.அதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தனக்குத் தானே அறிவுரை சொல்லிக்கொள்ளும் முழுத் தகுதியுடையவர்களாக இருப்பதில்லை .

நாம் மற்றவர்களுக்காவே வாழும் போது சாதனை படைப்பது என்பது இயல்பாகவே நம் வாழ்கையில் நிகழ்ந்து விடுகிறது.மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் சிந்தனையில் இடம் பெற்றிருந்தால் முன்னேற்றப் பாதையில் தேவையில்லாத பயம் வருவதில்லை.ஆர்வம் குறையாமலிருந்தால் அதாவது குறிக்கோளில் தடுமாற்றம் இல்லாமலிருந்தால் சாதனையைத்தேடி ஒருவர் போகவேண்டியதில்லை ,சாதனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவரைத் தேடிவரும். எல்லோரும் மற்றவர்களுக்காக வாழும் போது உலகில் எல்லோரும் சுகமாய் வாழ்கின்றார்கள் .ஆனால் எல்லோரும் தங்களுக்காக மட்டுமே வாழ நினைக்கும் போது பலர் வாழ வழியின்றி துன்பப் படுகின்றார்கள்.எல்லோரும் துன்பமின்றி வாழும் போது தனி ஒருவருக்குத் துயர் வரக் காரணமில்லை.சிலர் சுகமாகவும்,சிலர் சோகமாகவும் வாழும் நிலை நிலைப்படும் போதுதான் சுகத்தை நிலைப்படுத்திக் கொள்ள சிலரும் அதே சுகத்தைப் பெற சிலரும் போராடுகின்றார்கள்.பகைமை வளர இதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது.புரியாத பகைமை நிலையான பயத்திற்கு ஒரு காரணம் என்பதால் வாழ்க்கை முழுவதையும் பயத்திலேயே 
வீ ணடித்துவிடுகின்றோம்.சாதனைகள் மலர அங்கே வழியில்லாது போகின்றது

No comments:

Post a Comment