Sunday, September 23, 2012

Kavithai


நேர்மையும் வெல்லும்

வயதான மன்னனுக்கு வந்தது மனக்கவலை

வாரிசு நாடாள பிள்ளை பிறக்கவில்லையென்று  

மக்கள் வருந்தினால் மன்னனிடம் செல்வர்

மன்னன் கவலைகொண்டால் யாரிடம் சொல்வர்

வழி காண வரவழைத்தான் அரசகுருவை

மொழி வேண்டி நின்றான் பலதடவை

மதிமிகு வீரனைத் தேர்ந்து தத்தெடுத்து  

மன்றத்தில் முடிசூட்டி மன்னனாய் அமர்த்தலாம்

வஞ்சகரிடம் நாடு வசப்பட்டு வருந்தலாகாதென்று

வழிசொன்ன அரசகுரு விதியும் சொன்னார்

மறைவிற்கு முன்பே முடிசூட்டுவிழாவை

முன்னின்று கண்குளிரக் கண்டு மகிழ  

வித்தை பல கற்றோரை வரவழைத்து

வடிகட்டி சிலரைத் தேர்வுசெய்தான்

மண்ணாள வந்த மாநிலத்து மறவர் கையில்

மாங்கொட்டை ஒன்று கொடுத்து அவரவர்

வீட்டுத் தோட்டத்தில் மரம் வளர்க்கச் சொன்னான்

வந்து பார்க்கும் நாளில் மரத்தின் செழிப்பே

மாற்றமில்லாத் தீர்ப்பை முடிவு செய்யுமென்றான்

மாமரம் ஒருவர் வீட்டிலும் முளைக்கவில்லை

வந்த வாய்ப்பு விலகிப் போய்விடுமென்று

விலைக்குச் செடி வாங்கி வீட்டில் நட்டனர்

மாதங்கள் உருண்டு செல்ல ஒருநாள்

மள்ளர் வளர்த்த மாமரங்களை மன்னனும்

வளமை கண்டு வர வலம் வந்தான்

வீரிய விதை விரைந்து வளர்ந்ததென

மெய்யின்றிப் பொய்யாய் எல்லோரும் எடுத்தியம்ப

மாசிலா மனத்தோன் ஒருவன் மட்டும்

விதைத்த விதை விளையவில்லை என்று

வருந்தி வருந்தி உண்மை சொன்னான்

மேதகை இவனே இனி மேய்ப்பவனும் இவனே

மன்னனும் அக்கணமே மனதில் முடிவு செய்தான்

வெந்து போன விதைகள் எப்படி முளைக்கும்

விவரம் மன்னன் மட்டுமறிந்த  இரகசியம்

நல்லவன் ஒருவன் நாடாண்டால் நாட்டிற்கு

நலமே விளையும் என்னாளுமென்று

நன்னாளில் சான்றோர்கள் எங்கும் சூழ்ந்திருக்க

நேர்மையாளனுக்கு முடிசூட்டி முத்தமிட்டான்  

No comments:

Post a Comment