Monday, September 10, 2012

Vethith thanimangal- Chemistry


வேதித் தனிமங்கள்- கால்சியம்- பிரித்தெடுத்தல் 1808 ல் மின்னார் பகுப்பு மூலம் தூய கால்சியத்தைப் பிரித்தெடுத்து கண்டுபிடித்த பெருமைக்குரியவர் சர் ஹம்ரி டேவி என்பாராவர்.சோடியம்,பொட்டசியத்தைக் கண்டுபிடித்ததும் இவரே.கிராபைட்டினால் ஆன தொட்டியில் உருகிய கால்சியம் குளோரைடுடன் எளிதில் உருகுவதற்காக கல்சியம் புளூரைடையும் சேர்த்து,கிராபைட் தொட்டியை நேர்மின் வாயாகவும் இரும்புத் தண்டை உருகிய குழம்பில் அமிழ்த்தி எதிர்மின் வாயாகவும் கொண்டு மின்னார் பகுப்பு செய்வர்.அப்போது கால்சியம் இரும்புத் தண்டில் தொடர்ந்து படிக்கிறது.இரும்புத் தண்டை மெல்ல மெல்ல மேலுயர்த்த கால்சியம் உறைந்து ஒரு படிகத் துண்டாக வளர்ச்சி பெறுகிறது.இத் தண்டை ஒட்டி அதன் புறப்பரப்பில் உறைந்துள்ள கால்சியம் குளோரைடு உட்புறத்திலுள்ள கால்சியம் ஆக்ஸிசனேற்றம் பெறுவதைத் தடுக்கிறது நேர்மின் வாயில் வெளிப்படும் குளோரின் வளிமம் வெளியேறி காற்றோடு கலக்கிறது. இத் தனிமத்தின் பெயர் லத்தீன் மொழி வரவு.கால்க்ஸ்(Calx)என்றால் அம் மொழியில் சுண்ணாம்பு என்று பொருள். பண்புகள் கால்சியம் வெண்மையான,பளபளப்புடைய ஓரளவிற்கு மிதமான கடினத் தன்மை கொண்ட உலோகமாகும். தொழில் ரீதியாக கால்சியம் ஆக்சைடை அலுமினியத்துடன் சேர்த்து உருக்கி கால்சியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கின்றார்கள். கால்சியம் ஒரு கார மண் உலோகமாகும்.உலோக நிலையில் கால்சியம் தனித்துக் காணப்படவில்லை.என்றாலும் அதன் கூட்டுப் பொருட்கள் பூமியில் பெருமளவு கிடைக்கின்றன.கால்சியத் தாதுக்கள்,கார்போனைட்,கால்சைட்,அரகோனைட் ஆகவும்,மார்பிள்,ஐஸ்லாண்டு படிவு,சுண்ணாம்புக்கல்(lime stone),சாக்கட்டி ஆகவும் கிடைகின்றன.சல்பேட்டாக ஜிப்சமாகவும்,புளூரைடாக புளூரோ படிவுகளாகவும் இயற்கையில் காணப்படுகின்றான்.இவை தவிர கால்சியம் பாஸ்பேட்டாக எலும்புகளில் உறைந்துள்ளது.இது ஆற்று நீரிலும்,சுனை நீரிலும்,எரிமலைக் குழம்பின் வீழ்படிவுப் பாறைகளிலும் சேர்ந்துள்ளது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் கால்சியம் ஐந்தாவதாக உள்ளது . இதன் வேதிக் குறியீடு Ca ஆகும்.இதன் அணு வெண் 20,அணு நிறை 40.08 அடர்த்தி 1550 கிகி/கமீ,உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 1124 K,1713 K ஆகும்.கால்சியத்தைக் காற்றில் எரிக்கும் போது சிவப்பு ஒளியுடன் எரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரைடு கலவையைத் தருகிறது.இது ஆக்சிஜனில் மிகப் பிரகாசமாய் எரிகிறது.இது பெரும்பாலான அலோகங்களுடன்(non-metal)நேரடியாகக் கூடுகின்றது.நீரில் மெதுவாகக் கரைந்து,அமிலங்களில் விரைந்து கரைந்து நைட்ரஜனைத் தருகின்றது.. நீரின் கடினத் தன்மை பெரும்பாலான குடிநீரில் கால்சியம் எதோ ஒரு உப்பாக கரைந்திருக்கிறது. .இது நீருக்கு ஒரு கடினத் தன்மையை வழங்கிவிடுகிறது. நீர் கடினத் தன்மை கொண்டிருந்தால் அதில் சோப்பு நுரை தருவதில்லை.கடினத் தன்மையில் இரு வகையுண்டு-தற்காலியக் கடினத் தன்மை,நிரந்தரக் கடினத் தன்மை.தற்காலியக் கடினத் தன்மை கால்சியம் அல்லது மக்னீசியத்தின்பை கார்பனேட்டுக்களினால் உண்டாகிறது. .நீரைக் கொதிக்க வைத்தும்,கால்சியம் ஹைட்ராக்சைடு எனப்படும் சுண்ணாம்பு நீரை ச் சிறிதளவு சேர்த்தும் இவ்வகைக் கடினத் தன்மையை நீக்கலாம்.தேவைக்கு அதிகமாகச் சுண்ணாம்பு நீரைச் சேர்க்கும் போது அது நீரில் கரைந்து மீண்டும் நீருக்குக் கடினத் தன்மையை அளித்து விடுகிறது. நிரந்தரக் கடினத் தன்மை நீரில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசியத்தின் குளோரைடுகள்மற்றும் சல்பேட்டுகளினால் ஏற்படுகின்றது.நீரில் சோடியம் கார்பொனேட்டைச் சேர்த்து அதில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசிய உப்புக்களைக் கரைவுறா கார்பொனேட்டுகளாக மாற்றி வீழ்படியச் செய்து அகற்றி விடுவார்கள்.ஜியோலைட்(zeolite) எனப்படுகின்ற அலுமினோ சிலிகேட்டுகளினாலும் இதைச் செய்ய முடியும். கடின நீர் சலவைக்கும் ,நீராவிக் கலன்களில் கொதிக்க வைப்பதற்கும் உகந்ததில்லை.சாயத் தொழில்,காகிதம் மற்றும் சக்கரை ஆலைகளுக்கு கடின நீர் பயன் தருவதில்லை.

No comments:

Post a Comment