Tuesday, June 4, 2013

sonnathum sollaathathum

சொன்னதும் சொல்லாததும்  .




விஞ்ஞானிகளிடம் காணப்படும் ஒரு பொதுவான பண்பு கிடைக்கும் வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வதோடு  மேலும் மேலும் புதிய வாய்ப்புகளைத் தேடுவதாகும்.இதற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர் பௌலி (Wolfgang Pauli) என்ற இயற்பியல் அறிஞராவார்.இவர் ஆஸ்திரியாவில் 1900 ல் பிறந்து சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று 1958 வரை வாழ்ந்த விஞ்ஞானி.இவர் அர்னால்ட் சொம்மர்பெல்டு என்ற அணுவியல் அறிஞரிடம் ஆராய்ச்சி செய்தவர்,மாக்ஸ் போன்னுடன் இணைந்து பணியாற்றியவர்.இவர் தன்னுடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கு தன் பெயரையே அடைமொழியாக வைத்துள்ளார்.பௌலி தவிர்க்கை விதி (Pauli exclusion Principle),பௌலி அணிகள்(Pauli Matrices),பௌலி விளைவு(Pauli effect),பௌலி சமன்பாடு(Pauli equation),பௌலி குழுமம்(Pauli group) பௌலி விலக்கம்(Pauli repulsion) போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் 

அது சரியில்லை,இருந்தும் அது தப்பாகவும் இல்லை (It is not right, it is not even wrong)  என்று பௌலி கூறுவார்.இந்த எண்ணமே அவருடைய தவிர்க்கை விதிக்கு வித்தானது.இதற்காக 1945 ல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார்.குவாண்டம் கொள்கையில் ஆர்வம் கொண்டிருந்ததால் பிற்காலத்தில் அவரால் அத்துறையில் முத்திரை பதிக்க முடிந்தது .தவிர்கை விதி(exclusion principle) மற்றும் சார்பிலா தற்சூழற்சி(Non-relativistic spin) போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .1930 ல் நியூட்ரினோ (neutrino) என்ற ஒரு புதிய அடிப்படைத் துகளை அனுமானத்தின் அடிப்படையில் தெரிவித்தார்.இது மின்னூட்டமில்லாதது,ஓய்வு நிலை நிறை இல்லாதது ஆனால் எலெக்ட்ரானைப் போல தற்சுழற்சி மட்டும்  கொண்டது .இப்படிப் பண்புகளைக் கொண்ட ஒரு துகளைச் சோதனை வாயிலாகக் கண்டறியவே முடியாது என்றும் கூறினார் .இத் துகளைக் கண்டுபிடித்து மெய்ப்பிப்பவர்களுக்கு பெட்டி நிறைய உயர் வகை ஒயின் தருவதாக உலக விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார் .25 ஆண்டுகளுக்குப் பிறகு 1956 ல் கோவான் (C.I.Cowan) குழுவினரால் இது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது 

No comments:

Post a Comment