Sunday, June 30, 2013

Creative thoughts

Creative thoughts
மிக விரைவாக எடுக்கப்பட்ட முடிவுகள் உறுதியாக இருப்பதில்லை .மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுகளும் உதவியாக இருப்பதில்லை .

பழைய வழங்கங்களுக்கு ஆணி வேர் ஆழமாக ஊடுருவியிருக்கும்.எளிதில் பட்டுப்போய் விடுவதில்லை .

தவறான கருத்துக்களிலும் கொள்கைகளிலும் காரணம் புரியாமல் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுவிட்டால் சுயமாகச் சிந்திக்கும் திறனை காலப்போக்கில் இழந்துவிடுவோம்.மரபு வழியிலான பழக்க வழக்கங்களைக் கூட காரணமறிந்து ஏற்றுக்கொள்வது ஒருவகையில் நல்லதுதான்.
கற்பது உட்பட எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்காகத்தான் அறிந்து கொள்கின்றோம் ,புரிந்து கொள்வதற்காக இல்லை.இதுவே நம் முன்னேற்றத்திற்கு நாமே போட்டுக்கொண்ட முதல் முட்டுக்கட்டை .

உதவி கேட்டுப் பெறுவது தவறல்ல.ஆனால் ஒருவரின் இரக்கத்தையே தன்  வாழ்வாதரமாகக் கொள்ள நினைப்பதுதான் தவறு .

சாகா வரத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான் மனிதர்களுள் ஏராளம் .ஆனால் அப்படியொரு வரம் கொடுக்க மனிதர்களால் படைக்கப்பட்ட எந்தக் கடவுளுக்கும் சக்தியில்லை .ஒருவர் தன் மனவலிமையால் நேர்மையாக ,ஒழுக்கத்தோடும் கட்டுப்பாடோடும் வாழ்ந்து வந்தால் வாழ்நாளை கொஞ்சம் நீட்டிக் கொள்ளலாம் என்பது மட்டுமே உண்மை .

இறப்பை விரும்புகின்றோமோ இல்லையோ எல்லோரும் பிறந்தவுடன் அந்த புனிதமான முடிவை நோக்கித்தான் வாழ்கைப் பயணத்தை தொடங்குகின்றார்கள்.எவ்வளவு முறை திசை மாறிப் பயணித்தாலும் அந்தப் புனிதத்தை நோக்கியே பாதை செல்கிறது .


கடல் நீர் ஆவியாகி ,மழை மேகமாகி ,வானத்தில் உலகத்தை வலம் வந்து ,ஓங்கிய மலையில் மோதியதால் பொத்துப் போய் சுமந்து சென்ற நீரையெல்லாம் மழையாகப் பொழிந்து .,மலைச் சரிவில் வேகமெடுத்து .ஆறாய்ப் பெருகி ,நிலத்தில் நகர்வலம் வந்து,எல்லா உயிரினங்களும் இனிதே வாழ பூமியை வளப்படுத்திவிட்டு இறுதியில் கடலில் போய்ச் சேருகின்றது ,மனித வாழ்க்கைப் பயணம்போல .இயற்கையின் இந்த நீர் சுற்று மனித வாழ்கையின் மெய்ப்பொருளைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது .

No comments:

Post a Comment