Friday, March 29, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 16

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
மாணவப் பருவத்திலேயே பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்வது நல்லது. .தவறுகளைத் திருத்திக் கொண்டு சிறந்த போச்சாளனாக உருவாக இது தொடர்ச்சியான  அனுபவத்தைத் தரும். இதற்கு நண்பர்களுடன்  உலக நடப்புக்களை மனம்விட்டுப் பேசலாம். பாடம் சம்பந்தமான விஷயங்களை கலந்துரையாடல்  மூலம் ஐயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். இது கூச்சத்தைப் போக்கி எந்தச் சூழ்நிலையிலும் பேசுவதற்கான தைரியத்தைத் தரும் . சொல்லவேண்டிய கருத்தை பிறருக்குத் தெளிவாகப் புரியச் சொல்லும் தன்மையை இது வழங்குகின்றது . இது பணிபுரியும் போது தனக்கு க் கீழ் வேலைசெய்யும் அலுவலர்களிடம் செய்யவேண்டிய வேலைகளைத் தெளிவாகச் சொல்லி வேலை வாங்குவதற்கு பயனளிக்கும் . பேச்சுத் திறமை மொழிப் புலமையை வளர்க்கின்றது. மொழிப் புலமை பேச்சுத் திறமையை வளர்க்கின்றது .மொழிப் புலமை அதிகரிக்கும் போது ,  முன்னோர்களின் இலக்கிய படைப்புக்களில் ஆர்வம் ஏற்பட்டு  நன்னெறிகளை உள்வாங்கிக் கொள்ளும்  வாய்ப்புக் கிடைக்கின்றது .பேச்சுத் திறமை பல அறிஞர்களின் நட்பை அறிமுகம் செய்வதால்  வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல புதிய வாய்ப்புக்கள்  கிடைக்கின்றன . வட மாநிலங்களில் , வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடுபவர்கள் பிற மொழிகளில் புலமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இரண்டு மொழிகள் தெரிந்த மனிதன் இரண்டு உழைப்பாளிக்குச் சமம். ஒப்பிட்டால்  சிந்திக்க அவனுக்கு இரண்டு மூளைகள்,செயல்பட நான்கு கைகள்.
வெறும் விதாண்டா வாதம் பேச்சுத் திறமையாகிவிடாது. சமுதாய நியாயங்களுக்கு உட்பட்டுப்  பொருள் பட பேசுவது சமுதாயத்தில் நன்மதிப்பைத் தரும் ..        சித்திரமும் கைப்பழக்கம்  செந்தமிழும் நாப்பழக்கம்  என்று சான்றோர்கள் கூறுவார்கள். பயிற்சி எடுத்துக் கொள்ளக்  கொள்ள பேச்சுத் திறமை தானாக வளரும் என்பது இவர்கள் அறிவுரை. இலக்கியச் சிந்தனைகள் எடுத்துக்காட்டுகளுக்கு உதவும்.  பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள , நன்னூல்களை அடிக்கடி படிக்கவேண்டும். மேடைப் பேச்சாளர்கள் எப்படிப் பேசுகின்றார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து ,மொழி நடை, ,குரலில் ஏற்ற இறக்கம். உடல் மொழி , நகைச் சுவை , உட்கருத்து , போன்ற உட்கூறுகளை  கற்றுக் கொள்ள வேண்டும் .  
நண்பர்களுடன் மட்டுமின்றி ,பெற்றோர்கள்,. உறவினர்களிடமும் மனம்விட்டுப் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதிரிகள் இல்லை. வாழ்க்கையின் இறுதி வரை பிள்ளைகளின்  வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்து கொண்டே இருக்கும் உயிர்த் தோழர்கள் . பிரச்சனை எதுவானாலும் அதைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை வளர்த்துக் கொள்ளுங்கள் . இப்படி எல்லோரிடமும் பேசிப் பழகுவது  , ஊமைத்தனம்  மறைந்து எந்தச் சூழ்நிலையிலும் பேசும் தைரியத்தைத் தரும் . இன்றைக்கு மாணவர்கள் கைபேசி, கணனி போன்ற தொழில்நுட்பக் கருவிகளுடன் மணிக்கணக்கில் உறவாடுவதால் நண்பர்களையும், உறவுகளையும் இழந்து வருகின்றார்கள். பேச்சு த் திறமை வளராமல் போவதற்கு இது ஒரு காரணமாக இருக்கின்றது 

No comments:

Post a Comment