Wednesday, March 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 12

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
எப்போதும் வகுப்பில் ஒரு முக்கியமானவனாக இருக்க வேண்டும் என்று விருப்பப்படுங்கள். இது உங்களுடைய சுய மதிப்பை உயர்த்திக் கொள்ள வழி வகுக்கும் . இதற்கு  கல்வியில் முதல் மாணவனாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. கல்வி என்பது அகத் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் பொதுவான அறிவுரைகளின் தொகுப்பு . அது ஒவ்வொருவரும் அவர்களுடைய  எதிர்காலத்திற்காகச் செய்யும் மூலதனம் .கல்வியால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது நிச்சியமான வழிமுறைகளுள் ஒன்று . ஆனால் வாழ்க்கை என்பது வெறும் கல்வியால் மட்டுமே ஆவதில்லை . அறிவுப் பூர்வமான கல்வியில் சிறந்து விளங்கினால் பின்னர் ஆக்கப்பூர்வமான செயல்களில் சிறந்து விளங்க  முடியும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கல்வி. திறமையின் பயனுறு திறனை அதிகரிக்க கல்வி துணை செய்கின்றது . கடின உழைப்பை  எளிமையாக்கிக் கொள்ளவும்  , அதிக நேரத்தை சுருக்கிக் கொள்ளவும்  கல்வியால் மட்டுமே முடியும் . வாழ்க்கை என்பது தனக்குத் தானே உதவிக்கு கொண்டு பிறருக்கு உதவுவதற்கும்  அதைத் தொடர்ந்து செய்வதற்கும்  தன்னைத் தானே தகுதிப் படுத்திக்  கொள்ளும் வழி முறை.
சக  மாணவர்களோடு நட்போடு பழகுங்கள்.நட்புக்கு  இனிய சொற்கள் எப்போதும் அழகு. ஒருவர்க்கொருவர் உதவிக்  கொள்வது நட்பை வலுப்படுத்தும் . ஆனால் உதவியை எதிர்பார்த்து உதவி செய்யாதீர்கள் . உதவி ஒருநாளும் பண்டமாற்றுப் பொருளில்லை உங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்யத் தயங்காதீர்கள் . செய்யப்படும் எந்த உதவியும் மறக்கப்படுவதில்லை . மாறாக அது பல மடங்காகி பேருதவியாய் மீண்டு வரும்.  உங்களுக்குத் புரிந்ததை அவர்களுக்குப் புரியாததைச் சொல்லிக் கொடுங்கள், உங்களுக்குப் புரியாததை ,அவர்களுக்குப் புரிந்ததைக் கேட்டுது தெரிந்து கொள்ளுங்கள். சேர்ந்து படிக்கும் போது ஒருவர்க்கொருவர் புரிதலை வளப்படுத்திக் கொள்ள முடிகின்றது. மதிப்பெண்களுக்காகப் படிக்காமல் தகுதி மேம்பாட்டிற்காகப் படியுங்கள். ஒருவருடைய ஐயங்கள் தவறாக அல்லது  கேலிக்குரியதாகக் கூட இருக்கலாம் . அதற்காக ஐயத்துடனே படிப்பத்தைத் தொடராதீர்கள். ஐயங்கள் புரிதலை மட்டுப்படுத்தி விடும்.ஒரு முட்டாள் புத்திசாலித்தனமான பதிலிலிருந்து  தெரிந்து கொள்வதை விட ஒரு மேதை முட்டாள் தனமான கேள்வியிலிருந்து அதிகம் புரிந்து கொள்வான்  என்று கூறுவார்கள் . அதனால் ஐயங்களை போக்கும் உங்கள் கேள்வி முட்டாள்தனமாக இருக்குமோ என்று கவலைப்படாதீர்கள்.
 நட்பின் இலக்கணத்தை மீறாமல் நடந்து கொள்ளுங்கள் ,வாழ்க்கை முழுதும் தொடரும் போது பரிபூர்ண ஒத்துழைப்புக்கு வழி இருப்பதால் , மகத்தான சாதனைகள் புரிய இயற்கையாகவே வாய்ப்பு ஏற்படுகின்றது. நல்ல நட்பை இழந்தவர்கள் சாதனை புரிய கிடைக்கும் இயற்கை வாய்ப்புக்களை இழக்கிறார்கள்.சேர்ந்து விளையாடுங்கள்.ஒருவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுவதை விட்டுவிட்டு மகிழ்ச்சி கொள்ளுங்கள் . ஏனெனில் நண்பர்களின் திறமை என்பதும் ஒருவரது நம்பிக்கைக்குரிய பலமாகும் . அதிக அளவில் நல்ல நண்பர்களைக்  கொண்டவர்கள் தங்களால் முடியாத எத்தகைய செயலையும் செய்து முடித்து விடுகின்றார்கள் நண்பர்கள்  தவறான வழிகளில் சென்றால் திருத்துங்கள் . நீங்கள் தவறான வழியில் சென்றால்  திருந்துங்கள் .

No comments:

Post a Comment