Saturday, March 30, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 17

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
உங்கள் பேச்சு கேட்போருக்கு ஏதாவதொரு வகையில் பயன் தரத் தக்கதாக இருக்கவேண்டும். அப்போது தான் உங்கள் பேச்சு கவனிக்கப்படும். பயனில்லாத பேச்சுக்கள் பிறரால் காதுகொடுத்துக் கேட்கப்படுவதில்லை. அது தொடரும்போது ஒருவர் தன சுய மதிப்பை இழக்கநேரிடும்.
மதிப்பூட்டிய  கருத்தாழமிக்க  பேச்சு (Value added speech) மிக முக்கியம். அதைப் பழகிக் கொள்ளாவிட்டால் சராசரி மனிதனைப் போல நாமும் வாழ்ந்து விட்டுப் போக நேரிடும்.பொதுவாக பெரும்பாலானோரின் பேச்சு 5 % வீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மீதி 95 % பயனற்றவையாகவே இருக்கும். அதனால் யாருக்கும் யாதொரு பயனும் விளைவதில்லை. இந்த 95 % ல் 2௦ சதவீதம் தவிர்க்க இயலாதது. மீதி 80 சதவீதம் தேவையில்லாதது. இந்த 80 % குறைத்துக் கொண்டால் பேச்சு பயனுள்ளதாக,எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்கும். எவ்வளவுக்  கெவ்வளவு நம் சொல்லும்,செயலும் பயனுள்ளதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு நம்முடைய மதிப்பு சமுதாயத்தில் அதிகமாக இருக்கும்.
வெற்றிகரமான பேச்சாளராக உருவாவது எப்படி என்பதை  success  என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களே சுட்டிக் காட்டுவதாக சிப் ஹீத் ( Chip Heath) மற்றும் டென் ஹீத் (Den Heath) எழுதிய Made to  stick  என்ற சுய முன்னேற்றத்திற்கான நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் .வெற்றியின் ரகசியம் வெற்றிக்கான ஆங்கில வார்தைக்குள்ளேயே இருப்பதை வாழ்க்கையில் வெற்றி பெறத்  துடிக்கும் இளைஞர்கள் உணரத்  தவறுவதில்லை.
s  என்றால் பொருளைக் குறிக்கும் subject
முதலில் எதைப் பற்றி பேசப் போகின்றோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். இதற்கு முன் கூட்டியே அதை பற்றி தெரிந்து வைத்திருக்கவும் ,தயார் செய்து கொள்ளவும் வேண்டும். அது பற்றி ஒன்றும் தெரியாமல் , முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ,எல்லாம் தெரிந்தது போலப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் .அது ஒருவருடைய அறியாமையை விரைவில் வெளிப்படுத்திக் காட்டிவிடும் .ஒருவர் தன் சுய மதிப்பை இழப்பதற்கு  அவரே காரணமாகி விடுகின்றார் .
யாருக்காகப் பேசுகின்றோம் , எவ்வளவு நேரம் பேசுகின்றோம் என்பதைப் பொறுத்து  கருத்துக்களையும், செய்திகளையும் கூறவேண்டும் .மாணவர்கள்  என்றால் குறைந்த அளவு , அறிஞர்கள் என்றால் கொஞ்சம் புள்ளி விவரங்கள் . ஒரே செய்தியை காரணமில்லாமல்  மீண்டும் மீண்டும் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் .
 U என்றால்  பயன்தரு தன்மை , பயன்பாட்டுடைமையைக் குறிக்கும்  utility ,usefulness
வித்தியாசமாகச் சிந்திப்பதில்லை தவறில்லை என்றாலும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களினால் பயனில்லை. வித்தியாசமாகச் சிந்தித்தால் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறையையும் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் பொருளாதாரச் சிக்கனமுள்ளதாக இருக்கவேண்டும். பழையனவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கவும்,புதிய அனுகூலங்களைத் தருமாறும் இருக்கவேண்டும். கருத்துக்கள் முரண்பாடாக இருந்தால் எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டிவரும் . முரண்பாடு அவசியம் என்று நினைத்தால் அதற்கான வலுவான காரணத்தையும் கூறவேண்டும். பொதுவாக எல்லோருக்கும் ஏற்புடைய கருத்துக்களைக் கூறுவதே நல்லது.   புதிய கருத்துக்கள் பின் வரும் சமுதாயத்தினருக்கு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். 
S என்றால்  எதிர்பாராதது என்ற பொருள் தரும் Unexpected
இதற்கு யாருக்கும் தெரியாத புதிய செய்திகளைச் சொல்லவேண்டும் என்று அர்த்தமில்லை. பழைய செய்தியையே புதிய தோற்றத்‌தில், கோணத்தில்,'நச்'சுன்னு மனதில் பதியுமாறு சொல்ல வேண்டும். பட்டிமன்றத்‌தில் பேசுபவர்களைக் கவனித்தால் இந்த அணுகு முறை உங்களுக்கு கைவசப்படும்.புதுமைப்படுத்தி செய்திகளைச் சொல்லும் போது கேட்போரை வெகு எளிதில்,இயல்பாக எவ்விதக் கூடுதல் முயற்சியுமின்றி கவரமுடிகின்றது. எதிர்பாராமல் கிடைக்கின்ற நன்மை அதிக மகிழ்ச்சியைத் தரும். அது போல எதிர்பாராத செய்திகளும் மனதில் இனிய தாக்கத்‌தை ஏற்படுத்தும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் கேட்போருக்கு ஆர்வம் வருவதில்லை.
பெரும்பாலான இளைஞர்கள் சமூக,சரித்திர நாவல்களை விட துப்பறியும் நாவல்களை அதிகம் படிக்க விரும்புகின்றார்கள். இதற்குக் காரணம் அதில் தான் எதிர்பாராத திருப்பங்கள்,போராட்டங்கள் எல்லாம் இருக்கும். நெடுந்தொடர் நாடங்களில். ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன்(Suspense) முடிப்பார்கள். எனென்றால் அப்போதுதான் அந்தத் தொடரை மக்கள் மறுநாளும் பார்க்க வேண்டும் என்று ஆர்வப்படுவார்கள் என்பதைப் போல நம்முடைய பேச்சிலும் திடீர் திருப்பங்கள் இருக்க வேண்டும்
C (1) என்றால்  தெளிவு  மற்றும் உறுதியான என்ற பொருள் கூறும் Clear and concrete
சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாகவும்,புரியும்படியாகவும் இருக்கவேண்டும். பிறரால் புரிந்து கொள்ள முடிந்தால் மட்டுமே அதனால் பயன் இருக்கும். பயன் இருந்தால் மட்டுமே உங்களுடைய பேச்சை பிறர் ஆர்வத்துடன் கேட்பார்கள். சொல்வதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள். அப்படிச் சொல்ல வேண்டுமானால் சொல்லவேண்டிய கருத்துக்களில் தெளிவும், புலமையும் இருக்கவேண்டும். அதுவே ஒருவருடைய  பேச்சுக்கு உயிர் மூச்சாகின்றது. குழப்பம் இருக்குமானால், இரு வேறுபட்ட சிந்தனைகள் பேச்சிலும் வெளிப்பட்டு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். எனவே சட்டியை முதலில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். சட்டி என்பது இங்கே உங்கள் மூளை.உங்கள் விருப்பத் துறை சார்ந்த விஷயங்களை உங்கள் மூளையில் சேமித்து வையுங்கள். திரும்பத்  திரும்ப நினைவுபடுத்தி கருத்துக்களை மெருகூட்டிக் கொள்ளுங்கள் . தொடர்ந்து பொது மக்களுக்கான நூல்களையும் செய்தித் தாள்களையும் படிக்கும் பொழுது தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும் .
C (2) என்றால் நம்பகத்தன்மை கொண்ட என்ற பொருள் தரும்  credible
C என்றால்  confidence (நம்பிக்கை), clarity .compitable (முரண்பாடின்றி ஏற்றுக்கொள்ளுதல்) என்றாலும் நம்பகத் தன்மை முக்கியமானது. சொல்லும் எந்தக் கருத்துக்கும் ஒரு நம்பகத் தன்மை இருக்கவேண்டும் .இதற்கு இயல்வாழ்க்கைச் சான்றுகள், பொன் மொழிகள், பழமொழிகள்,இலக்கிய வரிகள். அறிஞர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை எடுத்தாளலாம். நம்பகத் தன்மைக்காக புள்ளி விவரங்களைக் கூறலாம் என்றாலும் அது கேட்போரின் தகுதியைப் பொருத்தது. பொது மக்கள் என்றால் புள்ளி விவரங்கள் அதிகம் தேவையில்லை. தொழிநுட்ப வல்லுநர்கள் என்றால் தேவையான புள்ளி விவரங்களும் இருக்கலாம்.
E என்றால்  (தனிச்சிறப்பானது) extraordinary , (வசீகரமானது) enchanting என்று குறிப்பிட்டாலும் (உணர்ச்சிமயமானது ) emotional முக்கியமானது.
நம்முடைய பேச்சு மற்றவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அது உயர்வாகக் கருதப்படும். எந்த சினிமா நம் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றதோ அது நீண்ட நாட்களுக்கு நம் மனத்தை விட்டு அகழுவதில்லை.
நம்முடைய உணர்ச்சி மற்றவர்களின் உணர்ச்சியோடு ஒத்ததிர்ந்து போக குரலில் ஏற்றத் தாழ்வுகள் ,இடைவெளி இருக்க வேண்டும்.
S என்றால் Story
எந்தக் கருத்தைக் கூறினாலும் அதைக் கேட்போர் உள்வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழி அக்கருத்தை வழியுறுத்தி ஒரு கதையைப் புனைந்து கூறுவதுதான். உண்மைச் சம்பவங்கள் ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் அதிகமாக அழுத்தமாக இருக்கும்.
S என்றால் Sense of humour
நகைச்சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. கதையை நகைச்சுவை உணர்வோடு கூறினால் அது நல்ல பலனை அளிக்கும். பட்டிமன்றங்களில் பேச்சாளர்கள் நகைச் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பேச்சு யாருக்காக இருந்தாலும் சுருக்கமாக(Short) , எளிமையாக (Simple) இருக்க வேண்டும். சொல்வதை எப்போதும் புரியும்படிச் சொல்லுங்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை அடுக்குமொழியில் அள்ளிவிடாதீர்கள். தெரிந்ததை மட்டும் சொல்லுங்கள். தெரியாததை பற்றி மூச்சு விடாதீர்கள் . சொல்வதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப் பழகிக்கொள்ளுங்கள் .விளக்கம் கேட்கப்படும் போது மட்டும் விவரம் கூறுங்கள் .கூடுதல் செய்திகள் தனக்குத் தெரியும் என்பதற்காகச் சொல்வதை விட்டுவிடுங்கள். தேவையற்ற செய்திகளைச் சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பின்னர் முக்கியமான செய்திகளைச் சொல்ல நேரம் கிடைக்காமல் போய் விடலாம்.

No comments:

Post a Comment