Wednesday, March 20, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி? - 6

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஒரு மாணவன் கல்வியை இழந்தான் என்றால் அது அவனுக்கு மட்டும் இழப்பு , ஆனால் நல்லொழுக்கத்தை இழந்தான் என்றால் அது அவன் இருக்கும் சமுதாயத்திற்கே இழப்பு. ஒழுக்கமின்மையால் ஏற்படும் இழப்பு கல்லாமையால் ஏற்படும் இழப்பை விடப் பல மடங்கு அதிகம்.ஒழுக்கமில்லாத ஒருவருடைய முன்னேற்றம் அவருக்கு வேண்டுமானால் முன்னேற்றமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது உறுதிச் சமநிலையில் இல்லாத (unstable equilibrium) ஒரு முன்னேற்றமாகவே இருக்கும். அது நுண் கிருமிகளை போல விரைந்து பரவி  தீவிரமாகி சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சீரழித்து விடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.நல்லொழுக்கத்தைப் போற்றுவதால் ஒருவர் தன்னோடு தன் இனத்தரையும்,  சமுதாயத்தையும் வளப்படுத்த முடியும்.  ஒருவர் முன்னேறுவது மற்றவர்களை முன்னேற்றுவதற்குத்தான்  என்பது இயற்கை . இயயற்கையின் விசாலமான நடைமுறைகளிலிருந்தே இதை நாம் கற்றுத் தெளிய முடியும் . பெரும்பாலான மாணவர் தோல்வியடைவது , திறமையின்மையாலோ , அறிவின்மையாலோ இல்லை. மாறாக சுய விருப்பமின்மையாலும், முறையான வழிகாட்டுதல் இல்லாமையாலும் . அர்ப்பணிப்பு இன்மையாலும் , ஒழுக்கமின்மையாலும்  தான். இவை சமுதாயத்தில் மிகுந்து வருவதால் மாணவர்கள் ற்றிக்கொள்ள வாய்ப்பாக அமைகின்றது. நல்லொழுக்கம் உறுதியாக இருந்தால் சமுதாயத்தில் மிகுந்து வரும் எதிர்மறைக் காரணிகளை எளிதாக, வெகு இயல்பாக கட்டுப்படுத்தி விட முடியும்.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க எல்லோருக்கும்  எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கம்  பொதுவாக எளிமையானதாகவே (S for Simple)  இருக்கும். ஏனெனில் ஒழுக்கம் காரணமாக ஒருவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாடுகளை அவரே ஏற்றுக்கொள்வது என்பது எப்போதும் எளிமையானதே. கட்டுப்பாடுகள் போலியாக இருக்கும் போது ஒழுக்கம் கடினமாகி விடுகின்றது  அலைபாயும் மனதின் சுய விருப்பத்தைப் பொறுத்து அது எளிமையானதாகவோ அல்லது கடுமையானதாகவோ தோற்றம் தரலாம் .தீய ஒழுக்கங்களை மறைமுகமாகப் பின்பற்றி ஒழுகுவதற்கு ஒரு வலிமையான காரணம் எப்படி உள்ளுக்குள் இருக்கின்றதோ அதைப்போல நல்லொழுக்கங்களையும் வெளிப்படையாகப் பின்பற்றி ஒழுக மனதால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு காரணம் உறுதியாக இருக்கவேண்டும் .அப்போது தான் மன மாற்றமின்றி  வாழ்க்கை  முழுதும் நல்லொழுக்கங்களை மட்டும் பின்பற்றி ஒழுக முடியும் .நல்லொழுக்கம் சமுதாயத்தில் வாழும் மற்றவர்களுக்கு ஒரு நல்வழிகாட்டியாகவும் புதியவர்களுக்கு முன் மாதிரியாகவும் இருந்தால்  சாகாத சமுதாயத்தில்  வாழும் மக்களுக்கு ஒரு நிரந்தரமான பாதுகாப்பாக இருக்கும் . அந்த வாக்குறுதியே நலமான சமுதாயத்தின் உண்மையான அறிகுறி.     

No comments:

Post a Comment