Wednesday, March 20, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 5

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
குழந்தையாய் வளரும் போது கற்றுக் கொள்ளும் ஒழுக்கமே பிற்காலத்தில் மனிதனாய் சமுதாயத்தில் வாழும் போது தொடர்கின்றது . இவை ஒரு மரத்தின் ஆணி வேர் போன்றது. மாணவனாய் கல்வி கற்றுக் கொள்ளும் போதும் , பெற்றோர்களின் அறிவுரைகளாலும் , பட்டறிவினாலும், சுய சிந்தனைகளின் எழுச்சியால் நல்லொழுக்கமும் , தீய ஒழுக்கமும்  பற்றிக் கொள்கின்றன . இவை ஒரு மரத்தின் சல்லி வேர் போன்றது .காரணத்தோடு தீய ஒழுக்கங்கள் திருத்தப்படாவிட்டால் , அவை சுயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு . வாழ்க்கை  முழுதும் தொடரும்  நிலையே ஏற்படும் . திருத்துதல் என்பது  தேவையற்ற களைகளை வேரோடு பிடுங்கி எறிதல் போன்றது. செடியாக இருக்கும் போது அப்படிச் செய்வது எளிது. அதுவே மரமாக வளர்ந்து விட்டால் வேரோடு பிடுங்கி எறிவது எளிதல்ல. 
ஒழுக்கம் என்பது வளரும் ஒரு மரத்தின் வேர் போன்றது. மரம் வளர்வதற்கும் பூத்துக் காய்ப்பதற்கும்   மட்டுமல்ல சாய்ந்து விடாமல் காப்பதும் இந்த வேரே. இந்த வேர் மண்ணுக்கு அடியில் இருப்பதால் நம் கண்களுக்குத் தெரிவதில்லை . அது போல ஒருவரின் உண்மையான ஒழுக்கமும் அவர் எண்ணத்திற்குள் இருப்பதால் பிறரால்  முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை.இன்றைக்கு ஒருவருடைய ஒழுக்கம் அக மற்றும் புற ஒழுக்கம் என  இரண்டு வகைகளின் கலப்பாக இருக்கின்றது -   சமுதாயத்திற்காக வெளிப்படைத் தன்மை மிகுந்த போலியான  புற ஒழுக்கம் தனக்காக  வெளிப்படைத் தன்மையற்ற மறைவான ,நிரந்தரமான அக ஒழுக்கம்.வளரும் போது நமக்கு நாமே ஏற்றுக்கொண்ட ஒழுக்கங்களே சமுதாயத்தில் வாழும் போது வெளிப்படுத்த தோன்றுகின்றன .
குழந்தைகள் கல்வி கற்று அதிகமாய்ச்  சம்பாதிக்க வேண்டும் ,உயர் பதவி வகிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளும் அளவில்லாத முயற்சியில் ஒரு சிறிதளவு கூட நல்லொழுக்கங்களை பிறழாது ஒட்டி ஒழுக வேண்டும்    என்று அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் தன் பிள்ளைகள்  சீரழிந்து வரும் சமுதாயத்தில் பிழைத்து வாழ நல்லொழுக்கங்களை விட கொஞ்சம் தீய ஒழுக்கங்களும் தேவை என்ற தன்னம்பிக்கையை வளர்ந்துக் கொண்டுள்ளார்கள்.அதனால் தீய ஒழுக்கங்களை கற்றுக் கொள்ளும் பிள்ளைகளுக்கு  திருத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போகின்றது. தீய ஒழுக்கம் மிகுந்த சமுதாயம் ஒரு சில தீயவர்களுக்கு வேண்டுமானால் தாற்காலியமான நலம் பயக்கலாம் ஆனால் வளரும்  சமுதாயத்திற்குப் பாதுகாப்பற்றது , சாகாத சமுதாயத்திற்கு நிரந்தரமான நலமே பாதுகாப்பானது என்பதை இவர்களாக உணர கல்வியில் ஒரு மாற்றத்தை ஆசிரியர்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.   

No comments:

Post a Comment