Friday, March 8, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 1

கல்வி என்பது ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கு அவர்களே எழுதிக் கொள்ளும் முன்னுரை, வாழ்க்கைக்காகச் சேமிக்கும் மூலதனம் . கல்வி பள்ளிக்கூடத்தில் பெறுவது மட்டுமில்லை , அதை நூல்களைப் படித்தும், அனுபவத்தில் வழியாகவும், சான்றோர்கள் சொல் கேட்டும்  பெறமுடியும்.வாழ்க்கையில் எல்லோரும் சமமான திறமைசாலிகளாக இல்லாதிருப்பதற்கு  படிக்கும் போது கற்றலில் ஏற்படும் குறைபாடுகளே காரணமாக இருக்கின்றது.
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, சிலர் நன்றாகப் படிப்பார்கள், சிலர் அப்படி இல்லை. சிலர்  தேர்வுகளில் 100 க்கு 100  வாங்குவார்கள்  சிலர் குறைவான மதிப்பெண் வாங்குவார்கள், அதில் ஜீரோ வாங்குபவர்கள் கூட இருப்பார்கள்.    இதற்கான காரணத்தை  நாம் சுயமாகச் சிந்தித்து அறிய வேண்டும்.. இல்லாவிட்டால் மாணவர்கள் தங்கள்  வாழ்க்கையைத்  தாங்களே பாழாக்கிவிடக் காரணமாகி விடுவார்கள் .
பிறக்கும் போது எல்லோரும் சமம் . யாரும் பட்டாடையோடும் , பருத்தி ஆடையோடும் விதவிதமான  ஆபரணங்களோடும்  பிறப்பதில்லை .எல்லோருக்கும் அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள் ,இரண்டு கண்கள் ,காதுகள் , ஒரு மூளை  ஒரு இதயம்  தான் . இவை அறிவை வளர்த்துக் கொள்ளத் தேவையான உணர் கருவிகள் மட்டுமல்ல , வளர்ந்த பின்  வாழ்க்கையை நெறிப்படுத்திக்  கொள்ள பயன்தரும் உபகரணங்களுமாகும், அப்படியென்றால் மனிதர்களுக்குள் வேறுபாடு எப்படி  ,எங்கிருந்து வந்தது ?
வளரும் போது நாம் தத்தெடுத்துக் கொள்ளும் எண்ணங்களே  நம் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன .ஆம், நம் எண்ணங்களே நம் வாழ்க்கையாகிவிடுகின்றது.  நம் எண்ணங்களே உறவுகளைத் தருகின்றன , நண்பர்களைத் தருகின்றன ,முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன , மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருகின்றன. நல்லெண்ணங்கள் நல்ல வாழ்க்கைக்கும் , தீய எண்ணங்கள் தீய வாழ்க்கைக்கும்  அடிப்படையாகின்றன. 
ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும் தீர்மானிக்கின்ற அவருடைய எண்ணங்களின் பதிவுகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன.பெற்றோர்களால் உருவாகும் குழந்தைகளுக்கு பெற்றோர்களே முதல் நிலை வழிகாட்டிகளாக இருக்கின்றார்கள் .எண்ணப் பதிவேட்டில் முதலில் எழுதுவது பெற்றோர்களே.சுதந்திரம்,கண்டிப்பு,ஆளுமை,சுறுசுறுப்பு, சோம்பல் .புத்தகம் வாசித்தல், படிப்பில் ஆர்வம்,படைப்பாற்றல்  இப்படி எல்லாவற்றிற்கும் மூளையில் எண்ணங்களின் பதிவுகளுக்கு  பிள்ளையார் சுழி   போடுவது பெற்றோர்களே. உணர்கருவிகளைப் பயன்படுத்தி எண்ணங்களை வரவு  செய்ய  முடியும் என்பதைக் கற்றுக்கொண்ட பின் ஒவொருவரும் பிறர் உதவியின்றி சுயமாகவே எண்ணங்களை புதுப்பித்துக் கொள்கின்றார்கள். பெற்றோர்களால் எழுதப்பட்ட எண்ணங்கள் திருத்தப்படுவது இந்த கால கட்டத்தில் தான்.  குழந்தைகள்  தானாக எந்த வழிகாட்டலும் இன்றி எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவதற்கு முன்னரே பெற்றோர்கள்  நல்ல எண்ணங்களை அவர்கள் எண்ணத்தில்  விதைத்து விடவேண்டும் .இதில் ஏற்படும் கால தாமதத்தால்  பாதிப்புக்கள்  ஏற்படும்  வாய்ப்புக்கள் அதிகம்.  எண்ணங்கள் திருத்தப்படும் போது மனம் எதைத் தேர்வு செய்கின்றது என்பதை பொறுத்து   திசை  மாறிப் போகும் சூழ்நிலை ஏற்படுகின்றன  கணப்பொழுது இன்பங்களினால் கிடைக்கும் மயக்கத்திற்கு அடிமையாகி விடும் போது எண்ணங்கள் எல்லாம் தீயனவாகி விடுகின்றன.  இந்த நிலைக்கு பெரிதும் காரணமாக இருப்பது தீய நண்பர்களின் சகவாசமே . என்றாலும் அவரவர் மனமே இதற்கு அடைப்படைக் காரணமாகின்றது .ஏனெனில் ஒன்றை ஏற்றுக்கொள்வதும்  ஏற்றுக்கொள்ளாதிருப்பதும் அவரவர்  மனமே. இதில் ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக மனம் ஒருவருக்கு நல்ல நண்பனாகவும் வேறு சிலருக்கும் உள் எதிரியாகவும் அமைந்து விடுகின்றது , ஒரு மாணவன் சிறந்த  மாணவனாக இருக்க வேண்டுமானால் அவன் மனதால் ஆளப்படுபவனாக  இருப்பதை விட மனதை ஆள்பவனாக இருக்க வேண்டியது  அவசியம். மனதை ஆள்பவன் மட்டுமே வாழ்க்கையில்  அடைய நினைத்த உச்சத்தை எட்டுகின்றான். உலகை ஆளும் தகுதியைப் பெறுகின்றான்.

1 comment:

  1. ஐயா அருமையான அறிவுரைகள். இந்த பதிவுகளை என் மகள் பள்ளி குழுமத்தில் பகிர நான் பயன்படுத்தலாமா?

    ReplyDelete